Tuesday, April 30, 2024

முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட

"முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட எழுந்து நின்று சாவது மேலானது" - சே 2 சீட்டுக்கு கட்சியை அடகு வைப்பதைவிட கொள்கைக்காக தனித்து நின்று தோற்பது மேல்.

இந்த வாரம் முருகன் , பயஸ், ஜெயக்குமார்

இந்த வாரம் முருகன் , பயஸ், ஜெயக்குமார் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மூவரும் வெளிநாடு செல்ல விரும்பியிருந்தனர். ஆனாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை இலங்கைக்கு இந்திய அரசு அனுப்புகிறது. வேறு வழியின்மையால் அவர்கள் இவ் வழியிலாவது விடுதலை பெறட்டும். இலங்கையில் இருந்து அவர்கள் விரும்பிய வெளிநாடு செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். மாறாக, இந்திய அரசு மறைமுகமாக இலங்கை அரசு மூலம் அவர்களுக்கு எந்தவித இடைஞ்சலையும் கொடுக்கக்கூடாது.

ஆடு ஜீவிதம்

• ஆடு ஜீவிதம் மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஒருவர் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றிய படம். இப்படத்தை பார்க்கும்போது எமது நாட்டு மூதூர் சிறுமி ஒருத்தி சவூதியில் மரண தண்டனை பெற்றது நினைவுக்கு வருகிறது. இதைப்போன்று கொடுமையானது ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய, கனடா நாடுகளுக்கு சென்ற பயணக்கதைகள். ஏஜென்சிகளால் அழைத்துச் செல்லப்படும்போது வழியில் பனியில் உறைந்து மரணமானவர்கள், கடலில் மூழ்கி மரணமானவர்கள் என்று மறக்க முடியாத பல கதைகள் உண்டு. ஈழத் தமிழரின் இக் கதைகள் யாராவது நாவலாக எழுதுவார்களா? அது திரைப்டமாக்கப்படுமா?

முருகன், பயஸ், ஜெயக்குமார் மூவரும்

முருகன், பயஸ், ஜெயக்குமார் மூவரும் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை பெற்று கொழும்பை வந்தடைந்துள்ளனர். மகிழ்ச்சி மற்றும் ஆறுதல்.

எது நடக்க வேண்டும் என்று விரும்பினோமோ

எது நடக்க வேண்டும் என்று விரும்பினோமோ அது நடந்துவிட்டது. 33 வருட சிறைவாழ்வு முடிவுக்கு வந்தது. மூவரின் விடுதலைக்கும் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

தோழர் புகழேந்தி. இவர் வழக்கறிஞர் மட்டுமல்ல

தோழர் புகழேந்தி. இவர் வழக்கறிஞர் மட்டுமல்ல தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுக்கும் உணர்வாளரும்கூட. அதனால்தான் சாந்தன் உடலை கொண்டு வந்து தாயாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரை சந்தித்து அழுத முருகனின் தாயாரிடம் “உங்கள் மகனை கொண்டு வந்து ஒப்படைப்பேன்” என உறுதியளித்தார். உறுதியளித்தபடி முருகனை அழைத்துவந்து தாயாரிடம் ஒப்படைத்துவிட்டார். அதன்மூலம் ஒரு தாயின் 33 வருட கனவை நிறைவேற்றியுள்ளார்.

1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால்

1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் சிறப்புமுகாம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போதுதான் தமிழ் மக்கள் பலரின் கவனத்தை சிறப்புமுகாம் பெற்றுள்ளது. அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏழு தமிழரில் நாலு ஈழத் தமிழர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டதே. அதுவும் சாந்தன் மரணம் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து தமிழ் மக்கள் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் இருந்து பலரும் குரல் எழுப்பியதால் முருகன், பயஸ், ஜெயக்குமார் விடுதலை பெற்றுள்ளனர். ஆனாலும் சிறப்புமுகாம் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவரும் விடுதலை பெற நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

இவர்கள் பயங்கரவாதிகளும் இல்லை.

இவர்கள் பயங்கரவாதிகளும் இல்லை. இவர்கள் தீவிரவாதிகளும் இல்லை. ஆனாலும் இந்த 20 கூலி உழைப்பாளிகளும் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்களை கொன்றவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள் . தமிழ்நாட்டில் “நாம் அனைவரும் திராவிடர்கள்” என்று சொல்லி தமிழரை ஆளும் தெலுங்கர்கள், ஆந்திராவில் இத் தமிழரை திராவிடர்களாக பார்க்கவில்லையே? அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே? மாறாக, இந்த தமிழருக்காக குரல் கொடுப்பவர்களை “தமிழ் இனவெறியர்” என முத்திரை குத்துகின்றனர். என்னே கொடுமை இது? குறிப்பு - ஆந்திராவில் 20 கூலித் தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் 07.04.2015 ஆகும்.

ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி!

• ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி! 1971ம் ஆண்டு ஜேவிபி அமைப்பு இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. பல கிராமங்களை சில மாதங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் இந்தியாவின் இந்திரா காந்தி அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தது. அப்போது இலங்கை மற்றும் இந்திய ராணுவத்தால் 8000 ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே சிங்கள ராணுவம்தான் 1971ல் மன்னம்பெரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது. கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அவரை நிர்வாணப்படுத்தி ரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கொன்றனர். ஜேவிபி மீண்டும் 1989ல் ஆயுதப் போராட்டம் முன்னெடுத்தது. அப்போது இதே சிங்கள ராணுவம் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது. வேடிக்கை என்னவெனில் அப்போது இந்த படுகொலைகளுக்கு நீதிகோரி ஜ.நா சென்றவர் மகிந்த ராஜபக்சாவே. அதே மகிந்த ராஜபக்சாவே பின்னர் முள்ளிவாயக்காலில் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்தார். இன்று ஜேவிபி அமைப்பு பலம் பொருந்திய பெரிய அமைப்பாக மீண்டும் வளர்ந்து இருக்கிறது. அடுத்த ஜனாதிபதியாக ஜேவிபி தலைவர் அனுரா வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன? முதலாவது, ஜேவியால் மீண்டும் எழ முடியுமாயின் தமிழ் மக்களால் ஏன் மீண்டும் எழ முடியாது? இரண்டாவது, ஜேவிபி இன்று தேர்தல் பாதையை பயன்படுத்தினாலும் அவர்கள் இதுவரை ஆயுதப் போராட்டம் தவறு என்றோ அல்லது அதை தாம் கைவிட்டதாகவோ அறிவிக்கவில்லை. மூன்றாவதாக, தமது தலைவர் ரோகண விஜயவீரா எப்படி இறந்தார் என்பது தெரியாத நிலையிலும் அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை மக்களுக்கு உடன் தெரிவித்தார்கள். நான்காவதாக, தமது தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற முழு உண்மைகளையும் கண்டறிந்தார்கள். அவற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள். ஜந்தாவதாக ஜேவிபி அமைப்பும் “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டே இலங்கை அரசு கொன்றது. ஆனால் அவர்கள் அதற்காக பயந்து அடங்கி இருக்கவில்லை. மாறாக தமது கொல்லப்பட்ட மாவீரர்களுக்காக வருடம்தோறும் பகிரங்கமாக நினைவு அஞ்சலி செய்கிறார்கள். தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக போராடி இழப்புகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு அமைப்பு உள்ளது என்பதே.

நினைவு அஞ்சலிகள்!

• நினைவு அஞ்சலிகள்! பெரியார் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96வது வயதில் 06.04.2021 யன்று காலமானார். நான் சிறை மற்றும் சிறப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை தொடர்ந்து எட்டு வருடங்களாக தனது சிந்தனையாளன் இதழை இலவசமாக அனுப்பி உதவினார். அதுமட்டுமன்றி அவ் இதழில் சிறப்புமுகாமில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பிரசுரித்து அம்பலப்படுத்தியிருந்தார். நான் அவரை ஒருமுறை நேரில் சந்தித்தபோது தனக்கு “யாழ்ப்பாணம் தேசவழமைச்சட்டம்” நூல் வேண்டும் எனக் கேட்டிருந்தார். அது மிகவும் பழைய நூல் என்பதால் யாழ்ப்பாணத்தில் பிரதி எதுவும் அப்போது கிடைக்கவில்லை இந்நிலையில் கொழும்பு தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனத்தில் இருந்த பிரதியின் போட்டோ கொப்பி அவருக்கு கொடுத்தேன். அப் பிரதியைக் கண்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நூலைப் பெறுவதற்கு தான் நீண்ட நாட்கள் முயற்சி செய்து வந்ததாக கூறினார். அவர் எந்தளவு தூரம் ஈழத் தமிழர்கள் குறித்து தேடல்களை செய்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று ஆகும். இறுதிவரை உறுதியான ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய ஐயா ஆனைமுத்து அவர்களுக்கு நினைவு அஞ்சலிகள்.

உனக்கான அரசியலை நீ பேசவில்லை எனில்

உனக்கான அரசியலை நீ பேசவில்லை எனில் நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய் -லெனின் தமிழ்த்தேசிய அரசியலை நாம் பேசவில்லை எனில் நாம் வெறுக்கும் ஆரிய மற்றும் திராவிட அரசியலால் ஆளப்படுவோம்

குத்துச்சண்டை போட்டியில் ஒருவர்

குத்துச்சண்டை போட்டியில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. பத்து எண்ணுவதற்குள் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் தோல்வி அடைந்ததாக கருதப்படும் தோல்வி அடைந்தவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவரை வெற்றி பெற்றவர்கள் ஒருபோதும் வெற்றியை அனுபவிக்க முடியாது. செய்தி – மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கமாட்டோம் - சிங்கள ராணுவ தளபதி

டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898)

டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898) இலங்கையில் டாக்டர் கோவூர் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. என்றும் நினைவில் கொள்ள வேண்டியது. அவர் இந்தியாவில் சாய்பாபாவின் புட்டபர்த்திக்கே சென்று சவால் விட்டவர். சாய்பாபாவின் புட்டபர்த்தி வாசலில் நின்று அங்கு வந்த பக்தர்களுக்கு பாபா போன்று விபூதி எடுத்துக் கொடுத்தாராம் கோவூர் அவர்கள். அப்பாவி பக்தர்கள் இவர் இன்னொரு பாபா என்று நினைத்து அவரை வழிபட்டார்களாம். அவர்களிடம் கோவூர் தான் செய்தது மந்திரம் அல்ல, வெறும் தந்திரமே என்றும் பாபாவும் இதையே செய்வதாகக் கூறினாராம். பக்தர்களுக்கு தனது மோசடிகள் தெரிந்துவிடுமோ என அஞ்சிய பாபா தனது செல்வாக்கு மூலம் பொலிசாரைக் கொண்டு கோவூரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம். மந்திரத்தால் தாலி வரவழைக்கும் பாபா மந்திரத்தால் “கொண்டா” மோட்டார் சைக்கிள் வரவழைத்துக் காட்டுவாரா? என்பதே கோவூர் பாபாவுக்கு விட்ட சவால். அதை பாபா ஒருபோதும் நிறைவேற்றவில்லை. அவரது “மனக் கோலங்கள்”, “கோர இரவுகள்” என்னும் புத்தகங்களை வீரகேசரி பிரசுரமாக அன்று வெளியிடப்பட்டவை. அதிக அளவில் விற்கப்பட்டவை. இதில் அவர் தான் சிகிச்சை அளித்த நோயாளிகளின் கதைகளைக் கூறியிருக்கிறார். பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நோயாளிகளை அவர் தனது கிப்னோடிச சிகிச்சை மூலம் சுகப்படுத்தியிருக்கிறார். இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் அயராது பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கிறார். இன்றும் இலங்கையில் மட்டுமல்ல எம்மவர்களுக்கு லண்டன், கனடாவிலும் பேய் பிசாசு பிடிக்கிறதாம். இங்கும் பில்லி சூனிய கூத்துகள் அரங்கேறுகின்றன. எனவே இதற்கு எதிராக ஆயிரம் கோவூர்களின் பணி அவசியமாகிறது

தோழர் மாறனை நினைவு கூருவோம்!

•தோழர் மாறனை நினைவு கூருவோம்! 11.04.2024 தோழர் மாறனின் 36 வது ஆண்டு நினைவு தினம் ஆகும். தோழர் மாறன் சென்னையில் வாழ்ந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டார். இறுதியில் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று மரணம் அடைந்தார். 1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது. இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது இந்திய அரசின் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாகவும் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறக் கோரியும் கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது. அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார். தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார். இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். தோழர் மாறன் அவர்களுடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை. தியாகி முத்துக்குமாரை அறிந்த அளவிற்கு தோழர் மாறனை ஈழத் தமிழர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமே. . இனிமேலாவது தோழர் மாறன் அவர்களின் அர்ப்பணிப்பை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். தோழர் மாறன் நினைவை போற்றுவோம். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம்

மூக்கணாங்கயிறு மாற்றுவதால்

மூக்கணாங்கயிறு மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை ஜனாதிபதிகள் மாறினாலும் தமிழர் மீதான அராஜகம் குறைவதில்லை. முன்னாள் போராளி ஒருவர் எந்தவித காரணமும் கூறாமல் ,என்ன வழக்கு என்பதும் தெரிவிக்காமல் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடும் கண்டனங்களை தெரிவிப்போம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என குரல் கொடுப்போம்.

தோழர் மாறனை சந்தித்த

தோழர் மாறனை சந்தித்த அந்த முதல் நாள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. மறக்க முடியாத அனுபவம் அது. திருவல்லிக்கேணியில் இருந்த உதமுக அலுவலகத்தில் தோழர் பொழிலனை சந்தித்தேன். அப்போது அருகில் நின்ற மாறனை அவர் அறிமுகப்படுத்தினார். உடனே மாறன் என் கையை பிடித்து குலுக்கிவிட்டு என்னை கட்டி அணைத்து என் முதுகை இறுக்கி தடவினார். “நம் ஆள்தான்” என மகிழ்ச்சியாக கூறினார். இதைக் கண்ட பொழிலன் முகம் மாறிவிட்டது. மிகவும் கோபத்துடன் மாறனை முறைத்து பார்த்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்ன விடயம் என பொழிலனிடம் கேட்டேன். “நீங்கள் பார்ப்பணரா என அறிவதற்கு உங்கள் முதுகில் பூணுல் இருக்கிறதா என தடவிப் பார்த்தார்” என கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சரி. பரவாயில்லை, எங்கள் நாட்டில் இப்படி பார்ப்பதில்லை” என்றேன். அப்புறம் நாம் பல விடயங்கள் பேசினோம். திரும்பி வரும்போது “ சாந்தி தியேட்டர் பஸ் தரிப்பில் பல பஸ் வரும்” எனக்கூறி அந்த இடத்தைக் காட்டுவதற்காக மாறனை துணைக்கு அனுப்பினார் பொழிலன். அவ்வாறு மாறனுடன் நடந்து வரும்போது எதிரில் இரு அழகான இளம் பெண்கள் சிரித்து பேசிக்கொண்டு வந்தனர். திடீரென்று மாறன் அவர்களை மறித்து கெட்ட வார்த்தைகளால் திட்டினார். மாறன் சென்னை தமிழ் பேசுவார். இது எனக்கு ஆரம்பத்தில் பாதிதான் புரியும். அதனால் கெட்ட வார்த்தையில் ஏதோ திட்டுகிறார் என்று மட்டுமே புரிந்தது. எனக்கு மாறன் திடீரென்று பெண்களை திட்டியது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் அந்த பெண்கள் எதுவும் நடக்காததுபோல் சாதாரணமாக கடந்து சென்றது. ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள் என மாறனிடம் கேட்டேன். அதற்கு அவர் “ இவளுகள் பாப்பாத்திகள். எமது எதிரிகள்” என்றார். அத்தோடு “ பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால் பாம்பை விட்டுவிடு. பார்ப்பாணை அடி. ஏனெனில் பாம்பைவிட பார்ப்பாண் விஷம் “ என்றார். எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. “என்ன இருந்தாலும் தயவு செய்து என்னுடன் வரும்போது இப்படி நடந்து கொள்ளாதீர்கள்” என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் “ தோழர், இது எமது பல நூற்றாண்டு வலி. இதை நீங்கள் ஒருநாள் புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

நான் விமானம் மூலம் இலங்கை

நான் விமானம் மூலம் இலங்கை திரும்புவதற்காக திருச்சியில் சில நாட்கள் தோழர் மாறனுடன் தங்கியிருந்தேன். அப்போது ஒருநாள் திருச்சி வானொலி நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் மாறன். அங்கு வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரியும் வடிவேல் ராவணன் என்ற நபரை எனக்கு அவர் அறிமுகப்படுத்தினார். ஈழத்தில் இந்திய ராணுவம் செய்யும் அராஜகத்தை மூடி மறைத்து இந்திய அரசு தரும் பொய் செய்திகளை படிக்கும்போது தனக்கு கடுங் கோபம் வருவதாகவும் தன் கையில் ஒரு குண்டு கிடைத்தால் இப்பவே இந்த வானொலி நிலையத்தை தகர்ப்பேன் என ஆவேசமாக வடிவேல் ராவணன் கூறினார். ஆனால் இதே ராவணன்தான் பின்னர் அப்ரூவராக மாறி எம்மை எல்லாம் காட்டிக்கொடுக்கப்போகிறார் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. சில வருடங்களின் பின்னர் நான் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருந்தபோது மறியல் போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு உள்ளே வந்த ராவணன் என்னை சந்தித்தார். பொலிசாரின் சித்திரவதைக்கு பயந்து அப்புரூவராக மாறி வாக்குமூலம் கொடுத்துவிட்டேன். ஆனால் வழக்கு விசாரணை வரும்போது நான் மாற்றி கூறுவேன் என்றார். அதேபோல் பசுபதி பாண்டியனுக்காக மறியல் போராட்டம் செய்து டாக்டர் ராமதாஸ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோது என்னை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் “காட்டிக்கொடுக்கும் நபரான வடிவேல் ராவணனை எப்படி உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ராவணன் வாக்குமூலம் கொடுத்தது தவறுதான். ஆனால் விசாரணை வரும்போது யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டார்” என்று உறுதி அளித்தார். ஆனால் வழக்கு விசாரணையின்போதும் வடிவேல் ராவணன் பொலிசாருக்கு ஒத்துழைத்து வாக்குமூலம் கொடுத்தார். இதனால் எமது தோழர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால் இங்கு எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இதே வடிவேல் ராவணன் இப்பவும் பாமக கட்சியில் இருப்பதுடன் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் அளித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ். ஆனால் நல்லவேளை மக்கள் ஒவ்வொரு முறையும் இந்த வடிவேல் ராவணனை தோற்கடித்தே வருகிறார்கள்.

தோழர் மாறன் எங்கே

தோழர் மாறன் எங்கே எம் இனிய தோழர் எங்கே செத்தாரோ மாண்டாரோ எமக்கொரு சேதி தெரியல்லையே செத்த இடத்திலே இரண்டு செங்கொடி நாட்டிருக்கோம் அவர் மாண்ட இடத்திலே சிவப்புமல்லி பூத்து குலுங்கட்டும் குறிப்பு- இந்திய அரசின் செவிட்டு காதுக்கு கேட்பதற்கு உரத்துக் கத்திய தோழர் மாறனின் 36வது நினைவு தினம்.(11.04.2024)

தமிழ்த்தேசியம் சாதி ஒழிப்பை

தமிழ்த்தேசியம் சாதி ஒழிப்பை முன்வைக்கவில்லை என்றும் அம்பேத்காரிய வழியில் அதிகாரத்தை கைப்பற்றி சாதியை ஒழிக்கப்போவதாக அருண் சித்தார்த் கிளப்கவுசில் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பிற்கான “மீன்சுருட்டி அறிக்கை”யை முன்வைத்துள்ளார். அதில் அம்பேத்காரியம் மற்றும் பெரியாரிய வழியில் சாதியை ஒழிக்க முடியாது என்பதையும் மார்க்சிய சிந்தனையில் தமிழ்த்தேசிய விடுதலை மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்பதை விளக்கியுள்ளார். அம்பேத்காரியத்தை பின்பற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தோழர் தமிழரசன் முன்வைத்த மீன்சுருட்டி அறிக்கையை சரியானது , சிறப்பானது என பாராட்டியுள்ளார். அதுமட்டுமன்றி தனக்கு தோழர் தமிழரசன் தொடர்பு கிடைத்திருந்தால் தான் அவருடன் சேர்ந்து இயங்கியிருப்பேன் என்றும் கூறியுள்ளார். எனவே தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் அருண் சித்தார்த், தோழர் தமிழரசன் முன்வைத்த சாதி ஒழிப்பு அறிக்கை பற்றி பதில் அளிப்பாரா? கீழ்வரும் இணைப்பில் தோழர் தமிழரசனின் மீன்சுருட்டி அறிக்கையை படிக்கலாம். https://tholarbalan.blogspot.com/2024/04/blog-post_10.html

சிலர் எம்மை "திராவிடர்" என்கின்றனர்.

சிலர் எம்மை "திராவிடர்" என்கின்றனர். சிலர் எம்மை "இந்து" என்கின்றனர் ஆனால் சீமான் எம்மை “நாம் தமிழர்” என்கிறார். அதனால்தான் அவர் அதிகம் விமர்சிக்கப்படுகின்றார்.

நான் தோழர் மாறனுடன்

நான் தோழர் மாறனுடன் திருச்சியில் தங்கியிருந்த வேளை ஒரு நாள் பெண்ணாடம் சென்று புலவர் கலியபெருமாளை சந்தித்தேன். நான் ஊர் திரும்பும் விடயத்தை கூறி விடை பெறுவதற்காக சென்றிருந்தேன். என்கூட மாறனும் வந்திருந்தார். அப்போது புலவர் தன் அருகில் இருந்த ஒரு இளைஞரைக் காட்டி அவருக்கு ஊருக்கு போகுமுன் சில பயிற்சிகளை வழங்க முடியுமா எனக் கேட்டார். அந்த இளைஞர் பெயர் இளங்கோ. அவர் கரூரைச் சேர்ந்தவர். கொடைக்கானலில் குண்டு வெடித்து மாறன் இறந்தபோது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர் இந்த இளைஞர் இளங்கோ. புலவர் கேட்டுக்கொண்டபடி தோழர்கள் மாறன், இளங்கோ இருவருக்கும் புலவரின் தோட்டத்திற்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் பயிற்சி வழங்கினேன். அப்போது எமக்கு காவலுக்கு ஒரு துடிப்பான இளைஞரை புலவர் நியமித்திருந்தார். அவரை அன்று ஒருநாள்தான் நேரில் பார்வையிட்டிருந்தேன். ஆனால் இன்று வரையும் அவர் என் நினைவில் இருக்கிறார். ஏனெனில் அவர் பெயர். ஆம் அவர் பெயர் லெனின். இந்த லெனின்தான் பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படை தளபதியாகி காவல் நிலையங்களை வெடிகுண்டு வீசி தகர்த்தவர். முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது குண்டு வெடித்து இந்த தோழர் லெனின் மரணமானார்

ஜாலியன் வாலா படுகொலைகளும்

•ஜாலியன் வாலா படுகொலைகளும் ஈழத் தமிழர் படுகொலைகளும் 13.04.1919 யன்று பிரித்தானிய ராணுவத்தால் ஜாலியன்வாலாபாக்கில் 379 அப்பாவி இந்திய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைகளின் 105வது நினைவு தினம் இன்று ஆகும். இதே போன்று 1988ல் இந்திய ராணுவத்தால் யாழ் மருத்துவமனை படுகொலைகள், யாழ் பிரம்படி படுகொலைகள், வல்வை படுகொலைகள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக 4 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து பிரதமர் தெரேசா வருத்தம் தெரிவித்துள்ளார். முழு இந்தியர்களும் குறிப்பாக சீக்கியர்கள் உறுதியாக இருந்தமையினால் வேறு வழியின்றி இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இப்போது எம் மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் இதேபோல் ஈழத் தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்தமைக்காக இந்திய பிரதமர் வருத்தம் தெரிவிப்பாரா என்பதே. இந்திய பிரதமர் தெரிவிக்கிறாரோ இல்லையோ ஆனால் எம்மவர்களே சிலர் ஓடிவந்து “ராஜீவ் காந்தியைக் கொன்றதை மறந்து இந்தியா எப்படி வருத்தம் தெரிவிக்கும்?” என்று எழுதுவார்கள். இவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை செய்த ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்துக்கே சென்று ஒரு சீக்கியர் படுகொலை செய்தார். அந்த சீக்கியருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அந்த சீக்கியரின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வந்து அவரை “தியாகி” என்று கௌரவப்படுத்தினார். இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டிருந்தும்கூட இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தாலும் அதனைக் காரணம் காட்டாமல் இந்திய பிரதமரும் ஈழத் தமிழர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். எப்படி இந்திய மக்கள் உறுதியாக இருந்தது இங்கிலாந்து பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைத்ததோ அதேபோன்று தமிழ் மக்களும் உறுதியாக இருந்து இந்திய பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும். இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இந்தியா முழுவதும் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் கொல்லப்பட்டனர். இச் சீக்கிய மக்களின் படுகொலைகளுக்காக இந்திய பிரதமர் மோடி அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார். சீக்கிய மக்களிடம் வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள் இதுவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.

தோழர் தமிழரசன் !

• தோழர் தமிழரசன் ! (14.04.2024 யன்று தோழர் தமிழரசனின் 79வது பிறந்த தினம் தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன் என்றார் மாமேதை காரல் மாக்ஸ் அதேபோன்று, தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர் தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர் இறுதியில் தமிழ் மக்களுக்காவே தன் உயிரை அர்ப்பணித்தவர் ஆம். அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு “மா, மா” என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று. தமிழக மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா. ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா. வெள்ளைக்காரன் 350 கோடி ரூபாவை வசூலித்தபோது தம்மை அடிமைகளாக உணர்ந்து விடுதலைக்கு போராடிய தமிழ் இனம் இப்போது 85000 கோடி ரூபா வசூலிக்கப்படும்போது தான் சுதந்திரமாக இருப்பதாக கருதுகிறது. ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை. தமிழக தமிழர் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் உணர்ந்து சுட்டிக்காட்டியவர் தோழர் தமிழரசன் அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார். இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்

சித்திரையல்ல தமிழர் புத்தாண்டு.

சித்திரையல்ல தமிழர் புத்தாண்டு. தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு. இதையே இனி வழக்கமாக்கி கொள்வோம்

யார் இந்த தோழர் தமிழரசன்?

•யார் இந்த தோழர் தமிழரசன்? 14.04.1945 யன்று பிறந்த தோழர் தமிழரசன் 01.09.1987 யன்று தனது 42வது வயதில் தமிழக உளவுப்படையினரால் கொல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தால் (14.04.2024) இன்று தனது 79 பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். பொறியியல் படிப்பை படித்த தமிழரசன் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ மக்களுக்கான போராட்ட வாழ்வை விரும்பி ஏற்றார். அதனாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார். தன் உயிர் பிரியும் அந்த இறுதிக் கணத்தில்கூட அவர் மக்களை நேசித்தார். அதனாலேயே அவர் தன் கையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தாமல் மௌனித்தார். அவர் விரும்பியிருந்தால் கையில் இருந்த கிரினைட் குண்டை வீசி தப்பிச் சென்றிருக்க முடியும். அவர் நினைத்திருந்தால் கையில் இருந்த சப் மிசின்கன் மூலம் பலரை சுட்டுக் கொன்றிருக்க முடியும். தன் இறுதிக்கணம்வரை மக்களை நேசித்த அத் தமிழரசனை, சதி செய்து கொன்றவர்கள் அவரை “பயங்கரவாதி” என்றார்கள். தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையை நசுக்கிவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள். இன்று இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு தமிழக இளைஞனும் தன்னை தோழர் தமிழரசனாகவே நினைத்துக்கொள்கிறான். இன்று யாரும் தோழர் தமிழரசனை மறுத்து விட்டு தமிழ்த் தேசியம் பேசிவிட முடியாது. இதுதான் தோழர் தமிழரசனுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?

•இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது? தோழர் தமிழரசன் தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதால் இந்திய அரசு அஞ்சுகிறது என்கிறார்கள். அப்படியென்றால், வேறு பலர் தமிழ்த் தனிநாடு கேட்டிருக்கும்போது தமிழரசன் மீது மட்டும் ஏன் அஞ்சுகிறது? என்று கேட்டால் தமிழரசன் தனிநாடு கேட்டது மட்டுமன்றி அதை அடைய ஆயுதப் போராட்ட பாதையை தேர்ந்தெடுத்தமையே காரணம் என்று பதில் தருகிறார்கள். அப்படியென்றால பல கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறிவரும்போது ஏன் தமிழரசன் மீது மட்டும் அஞ்ச வேண்டும்? என்று கேட்டால், மற்ற கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறினாலும் அவர்கள் தேர்தல் பாதையில் பயணிக்கின்றனர். ஆனால் தமிழரசன் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை நடைமுறையில் கொண்டிருந்தார். இதுவே தமிழரசன் மீது மத்திய மாநில அரசுகள் அஞ்சுவதற்கு காரணம் என்கிறார்கள். ஆம். உண்மைதான். அதனால்தான் இந்திய அரசு தனது உளவுப்படைகள் மூலம் சதி செய்து தோழர் தமிழரசனைக் கொன்றது. ஆனாலும் தமிழரசன் இறந்து 37 வருடங்களுக்கு பின்னரும் இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது. தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. சிறையில் அடைத்தவர்களுக்கு ஜாமீன்கூட வழங்க மறுத்து வருகிறது. தோழர் தமிழரசன் போஸ்டர் ஒட்டினால் பொலிசை விட்டு கிழிக்கிறது. கூட்டம் போட அனுமதி கேட்டால் தர மறுக்கிறது. தோழர் தமிழரசன் பற்றி புத்தகம் எழுதினால் மிரட்டுகிறது. புத்தகத்தை வெளியிடுபவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. தமிழ்நாடு விடுதலைப்படைப் போராளி காலம்சென்ற தோழர் பசுபதி வீட்டுக்குச்;சென்று அவரின் வயதான தாயாரைக்கூட பொலிசார் மிரட்டியுள்ளனர். தோழர் தமிழரசனுக்கு சிலை வைக்க நிலம் வழங்கக்கூடாதென்று அந்த வயதான தாயாரிடம் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர். ஏன் இந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது? ஏனெனில் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரிலிருந்து ஆயிரக் கணக்கான தமிழரசன்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே இந்திய அரசு அஞ்சுவதற்கு காரணமாகும்!

மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்! • மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்! • மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்! தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்! 1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார். உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார். எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது. அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர். பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர் தமிழரசன் கூறுமுன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள். என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள். இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார். குறிப்பு-ஏப்-14 தோழர் தமிழரசன் 79வது பிறந்த தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள்பதிவு ஆகும்.

தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீரப்போவதில்லை

தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீரப்போவதில்லை இந்த வரி கோத்தா போய் ரணில் ஜனாதிபதியாக வந்தபோது ஜேவிபி கூறியது. இதே வரியை இப்போது ஜேவிபியின் அநுராவிற்கு தமிழ் மக்கள் கூறினால் அதற்கு அவர்கள் பதில் என்ன? மகிந்தா கோத்தா மற்றும் ரணில் போன்று இல்லாமல் தான் வித்தியாசமான ஆட்சியை தருவேன் என ஜேவிபி கூறுகின்றது. தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் வித்தியாசமான ஒரு ஆட்சியை ஜேவிபி எப்படி கொடுக்கப் போகின்றது? தமிழ் மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும் ஜேவிபி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்பே அந்த சுயநிர்ணய உரிமையை பாவித்து பிரிந்து செல்ல வேண்டாம் சேர்ந்து செயற்படுவோம் என ஜக்கியத்திற்காக தமிழ் மக்களிடம் கேட்க முடியும். ஆனால் தமிழ் மக்களுக்கு சமவுரிமை உண்டு என்று கூறும் ஜேவிபி இதுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை. ஜேவிபி அமைப்பானது தோழர் சண் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஒரு அமைப்பு. தோழர் சண் அவர்கள் ஜேவிபி அமைப்பை ஒரு இனவாதக்கட்சி என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஜேவிபியினரிடம் வினவியபோது தாம் ஒரு தமிழரின் நிழலுக்காவது தீங்கிழைத்ததாக காட்ட முடியுமா என கேட்கின்றனர். தமிழ் மக்களின் ஆதரவையும் ஜக்கியத்தையும் ஜேவிபி உண்மையில் விரும்புகின்றது எனில் இந்த பதில் போதுமானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்தவிட்டு சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதையும் ஜேவிபி புரிந்துகொள்ள வேண்டும்.

புலவர் மற்றும் தமிழரசன் பற்றிய தேடல்

புலவர் மற்றும் தமிழரசன் பற்றிய தேடல் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால் அவர்களுடன் தொடர்புகொண்ட இரு ஈழத் தமிழர்கள் பற்றி இங்கு பதிவிட விரும்புகிறேன். ஒருவர் தோழர் நெப்போலியன். இவர் யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் பிறந்தவர். இவர் 1983ல் பெண்ணாடத்தில் புலவர் மற்றும் தமிழரசன் நடத்திய மாநாட்டில் பங்குபற்றியிருந்தார். அதன்பின்பு மதுரை அருகில் வாடிப்பட்டியில் தமிழரசன் மற்றும் அவரது தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கினார். அதனால் இந்திய உளவுப்படைகளின் உத்தரவுக்கிணங்க 1986ல் மலையகத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். இன்னொருவர் தோழர் ராயு. இவர் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர்தான் தமிழரசன் மேற்கொண்ட அரியலூர் மருதையாற்றுப்பால வெடி குண்டிற்கு கூட இருந்து உதவியவர். இவரையும் பொன்பரப்பி சம்பவத்தில் தமிழரசனுடன் சேர்த்துக் கொல்வதற்கு உளவுப்படை திட்டமிட்டிருந்தது. ஆனால் சயிக்கிளில் செல்வதால் தேவையில்லை எனக்கூறி தமிழரசன் இவரை அழைத்துச் செல்லவில்லை. அதனால் உயிர் தப்பினார். இவர் 10.07.2012 யன்று மட்டக்களப்பில் காலமானார். வரலாற்றில் தோழர் தமிழரசன் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் அவருக்கும் அவர் மேற்கொண்ட தமிழ்நாடு விடுதலைக்கும் உதவிய இந்த இரு ஈழத்தமிழர்களும் கூடவே நினைவு கூரப்பட வேண்டும்.

இன்று இந்தியாவில் உள்ள அனைத்து

இன்று இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த பாதையே காரணமாக இருக்கிறது. இந்த பாதை இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா நிம்மதியாக இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அதுபோல அன்று அந்த ரயிலில் டிக்கட் பரிசோதகர் இருந்திருந்தால் இன்று தமிழ்நாடு நிம்மதியாக இருந்திருக்கும் என உங்களுக்கு தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂

ஈழத்தில் பல இயக்கங்கள் இருந்ததும்

ஈழத்தில் பல இயக்கங்கள் இருந்ததும் அவற்றில் உட்கொலைகள் நடந்ததும் யாவரும் அறிந்த விடயமே. ஆனால் நான் இருந்த இயக்கத்தில் உட்கொலைகள் எதுவும் நிகழவில்லை. அதற்கு தோழர் தமிழரசன் வழி காட்டலும் ஒரு காரணம் என ஒருமுறை பதிவு செய்திருந்தேன். உடனே தமிழ்நாட்டு தோழர் தமிழ்முகிலன் “ அப்படியென்றால் தோழர் தமிழரசன் அமைப்பில் ஏன் உட்கொலைகள் நடந்தன?” என்று கேட்டார். தமிழரசன் அமைப்பில் எத்தனை உட்கொலைகள் நடந்தன? ஏன் நடந்தன? என்பன பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இவை யாவும் தமிழரசன் உயிரோடு இருந்த போது நடக்கவில்லை. அவர் இறந்த பின்பு நடந்ததாக கூறப்படுகிறது. தோழர் தமிழரசன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இப்படியான உட்கொலைகள் நடந்திருக்காது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் அதற்கு ஒரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோழர் தமிழரசனுடன் கூட இருந்த முக்கிய தோழர் ஒருவர் கடுமையாக முரண்பட்டு அமைப்பில் இருந்து விலகிச் சென்றார். போகும்போது அமைப்பு ஆயுதத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். அந்த தோழரின் உறவினர் ஒருவர் கியூ உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்தார். அதனால் அந்த தோழர் தம்மை காட்டிக் கொடுக்கக்கூடும் என மற்ற தோழர்கள் அஞ்சினார்கள். அதனால் அந்த விலகிச் சென்ற தோழர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் தோழர் தமிழரசனை வலியுறுத்தினார்கள். ஆனால் தோழர் தமிழரசன்; அந்த விடயத்தை சாதுரியமாக கையாண்டு எந்த விபரீதமும் ஏற்படாமல் தீர்த்தார். இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மருதையாற்று பாலத்தில் வெடிகுண்டு சம்பவம் நடந்தபோது மருதையன் தலைமையில் இயங்கிய மகஇக அமைப்பு அதனைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியது. ஈழத்தில் பல அமைப்புகள் இருந்தன. ஆனால் ஒரு அமைப்புகூட இன்னொரு அமைப்பு செய்த தாக்குதலை கண்டித்து போஸ்டர் ஒட்டியது கிடையாது. ஆனால் தன்னை புரட்சிகர இயக்கமாக கூறும் மகஇக வானது இன்னொரு புரட்சிகர இயக்கமான தோழர் தமிழரசன் அமைப்பினர் செய்த தாக்குதலை கண்டித்து போஸ்டர் ஒட்டி காட்டிக்கொடுத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து தோழர் தமிரசனிடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே தங்களை கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் இப்படி செய்துள்ளார்கள். அதை பெரிது படுத்தத் தேவையில்லை என்றார். அதுதான் தோழர் தமிழரசன்.

சில கேள்விகளும் பதில்களும்

• சில கேள்விகளும் பதில்களும் (1)இந்துக் கடவுள் இல்லை என்று கூறும் நடுநிலை நக்கிகள் இயேசு இல்லை, அல்லா இல்லை என்று கூறுவார்களா? நாம், இந்துக் கடவுள் இல்லை. அல்லா இயேசு இருக்கிறார்கள் என்று சொல்லவில்லையே. மாறாக எந்தக் கடவுளும் இல்லை என்றுதானே கூறுகின்றோம். (2) எப்போதும் இந்து மதத்தையே கண்டிக்கிறீர்கள். அதுபோல் ஏன் கிருத்தவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ கண்டிப்பதில்லை? முதலாவது, இந்து மதத்தை கண்டிப்பதற்கு மற்ற மதங்களை எல்லாம் கண்டித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இரண்டாவது, நாம் எம்முடைய நோய்க்குத்தான் மருந்து சாப்பிட வேண்டுமேயொழிய மற்றவர்களின் நோய்க்கு நாம் சாப்பிட முடியாது. நான் உட்பட தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவேதான் அதற்கு எதிராக அதிக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது. (3) இந்து சமயத்திற்கு மாற்றாக சைவ சமயத்தை தமிழர்கள் உயர்த்திப் பிடிக்கலாம்தானே? மாற்றுக் கருத்து என்பது ஒரு கருத்துக்கு பதிலாக இன்னொரு கருத்தைக் கூறுவது அல்ல. மாறாக இருக்கும் தவறான கருத்துக்கு மாற்றாக சரியான கருத்தை முன்வைப்பது. இதன் மூலமே சமூகம் முன்னோக்கி இயங்க வைக்க முடியும். எனவே இந்து சமயம் என்னும் தவறான கருத்துக்கு சைவசமயம் உரிய சரியான மாற்று இல்லை. கடவள் இருக்கிறார் என்பதற்கு இன்னொரு கடவுள் இருக்கிறார் என்பது மாற்று கருத்து இல்லை. மாறாக கடவுள் இல்லை என்பதே சரியான மாற்று ஆகும். ஆதலால், முருகன் எமது பாட்டன் என்றோ அல்லது சிவன் எமது முப்பாட்டன் என்றோ உயர்த்திப்பிடிப்பது தமிழ்தேசிய விடுதலைக்கு உதவப் போவதில்லை. மாறாக இந்திய அரசுக்கே அவை மறைமுகமாக உதவப் போகின்றன.

சென்னைக்கு அருகில் நான்கு பக்கமும்

சென்னைக்கு அருகில் நான்கு பக்கமும் கடலாலும் கடனாலும் சூழப்பட்டுள்ள 65610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு காணி விற்பனைக்கு உண்டு. விமான நிலையத்திலேயே இந்தி, சீன அறிவிப்பு பலகைகள் உண்டு. 😂

திராவிட தலைவர் வீரமணியால்

திராவிட தலைவர் வீரமணியால் அமைக்கப்பட்ட போராளியின் கல்லறை திராவிட மாடல் ஆட்சியில் கடந்த வருடம் இதே நாளில் இடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. அதன் இன்றைய நிலை என்ன? யாராவது விபரம் அறிந்தவர்கள் கூற முடியுமா?

ஆழ்ந்த இரங்கல்கள்

•ஆழ்ந்த இரங்கல்கள் பாலித தெவரபெரும மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும் பல்வேறு அரசியல் விமர்சனங்களை வைக்க முடியும். ஆனால் கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபோது அவர் உடனே வந்து தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் மறக்க முடியாதவை. குறிப்பாக கிணறுகளில் வெள்ள நீர் புகுந்து பாவிக்க முடியாத நிலையில் அவரே கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கொடுத்தது இன்றும் மக்கள் மனங்களில் உண்டு. அத்துடன் மத்துகம தோட்டத்தில் தமிழ் முதியவர் ஒருவர் இறந்தபோது தோட்ட நிர்வாகம் நீதிமன்றம் மூலம் மயானத்தில் எரியூட்ட விடாமல் தடுத்தது. இதை அறிந்த பாலித தெவரபெரும அவர்கள் உடனே அந்த இடத்திற்கு சென்று இறந்த தமிழ் முதியவரின் உடலை தானே சுமந்து சென்று தகனம் செய்ய வழி வகுத்தார். அவர் ஒரு சிங்கள அரசியல் தலைவர். ஆனாலும் அவர் தமிழ் மக்களுக்கு இவ்வாறு உதவி செய்தமை மறக்க முடியாதவை. நினைவு கூரப்பட வேண்டியவை.

இலங்கையில் பிரிந்து செல்வதற்கான உரிமை

இலங்கையில் பிரிந்து செல்வதற்கான உரிமை மாகாணசபைக்கு இல்லை. இந்தியாவில் பிரிந்து செல்வதற்கான உரிமை மாநிலங்களுக்கு இல்லை. இந்த ஒன்றிணைப்பு சுதந்திரமானது இல்லை என்று லெனின் கூறுகின்றார். இதையே தமிழ்த்தேசியவாதிகள் கூறினால் அவர்களை பிரிவினைவாதிகள் என்று (போலி)கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர்.

அன்னை பூபதியின் மரணம்!

அன்னை பூபதியின் மரணம்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? அன்னை பூபதி தனது 56 வயதில் 19.03.1988 யன்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 யன்று அவர் மரணமடைந்தார். அன்னைபூபதி ஒரு சாதாரண தமிழ்பெண். அவர் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடினார். ஆனாலும் காந்தி தேசம் என்று கூறப்பட்ட இந்திய அரசு அவரின் போராட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை. மாறாக அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளை கைது செய்து மிரட்டியது. இவ்வாறு அன்னை பூபதியைக் கொன்றவர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி வடக்கு கிழக்கில் காந்தி சிலைகளை நிறுவுகிறார்கள். ஆனால், அன்னை பூபதி தன் மரணத்தின் மூலம் எமக்கு இரண்டு பாடங்களை கற்பித்துள்ளார். முதலாவது, இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது. இரண்டாவது, அகிம்சை போராட்டம் தீர்வை பெற்று தராது என்பது. இந்த இரண்டு பாடங்களையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் நினைவில் கொள்ளல் வேண்டும். இதுவே அன்னை பூபதிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். குறிப்பு - 19.04.2024 அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் ஆகும்

பொதுவாக தூக்கத்தில்தான் கனவு வரும்

பொதுவாக தூக்கத்தில்தான் கனவு வரும் ஆனால் இவர்கள் கனவு தூங்கவிடாமல் துரத்துகிறது. படுத்திருப்பவனுக்கு பாய் மட்டுமே சொந்தம் உட்கார்ந்திருப்பவனுக்கு நாற்காலி மட்டுமே சொந்தம் ஆனால் ஒடுபவனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் இவர்கள் ஒடுகிறார்கள். எனவே வெற்றி இவர்களுக்கு விரைவில் சொந்தமாகும் வெற்றியை விட தோல்வி சிறந்தது. ஏனெனில் தோல்வி வெற்றிக்கான பாடத்தை கற்றுத் தருகிறது. அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றியை பற்றி சிந்திப்பார்கள் ஆனால் “நாம் தமிழர்” அடுத்த சந்ததியைப் பற்றி சிந்திக்கிறார்கள். அவர்கள் எதோ ஒரு சிறு கல்லை உடைத்துக் கொண்டிருப்பதாக மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆரியம் , திராவிடம் என்னும் இரு மலைகளை உடைத்துக்கொண்டிருந்தார்கள் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது.

உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது

உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது மேலெழுந்துவிடாமல் தடுக்கிறது என்றால் அதற்காக வருத்தப்படாதே. ஏனெனில் நீ அவர்களைவிட உயரத்திற்கு செல்லப்போகிறாய் என்று அர்த்தம்.

முள்ளிவாய்க்கால் அவலம்!

•முள்ளிவாய்க்கால் அவலம்! பசியை போக்க உயிரை பணயம் வைத்து கஞ்சிக்காக வரிசையில் காத்திருந்த காலம் அது. கஞ்சிக்காக வரிசையில் காத்து நின்ற போது வெடித்து சிதறிய எறிகணையில் சிதறி வீழ்ந்தவர் போக, மிஞ்சியவர் எஞ்சிய கஞ்சிக்காக மீண்டும் வரிசையில் நின்ற காலம் அது.

நினைவஞ்சலிகள்

• நினைவஞ்சலிகள் கருணாரட்ணம் அடிகளார் ஒரு கிருத்தவ பாதிரியார். அவர் இறுதிக் காலங்களில் வன்னியில் மனிதவுரிமை பணிகளில் ஈடுபட்டு வந்தார். 20.04.2008 யன்று ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் இவர் கொல்லப்பட்டார். நாளை அவருடைய 16வது நினைவு தினம் ஆகும். கருணாரட்ணம் அடிகளார் எனது கரவெட்டி கிராமத்தை சேர்ந்தவர். அதனால் அவரை எனக்கு சிறுவயது முதல் தெரியும் . 1984ல் ஒருநாள் இராணுவம் யாழ் நகர வீதியில் சென்ற பலரை சுட்டுக் கொன்றது. அதில் கருணாரட்ணம் அடிகளாரும் எதிர்பாராத விதமாக சுடப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களின் உடலை ராணுவம் தன் வண்டியில் எடுத்துச் சென்று முகாமில் எரிக்க திட்டம் போட்டிருந்தது. அவ்வாறு எடுத்துச் செல்லும்போது கருணாரட்ணம் அடிகளார் உடலில் உயிர் இருப்பதைக் கண்ட ராணுவ வீரன் ஒருவன் அவர் கழுத்தில் தொங்கிய சிலுவை மாலையை கண்டு ( ஒருவேளை அவ் ராணுவ வீரனும் கிருத்தவராக இருக்கக்கூடும்) அவரை இழுத்து வீதியில் எறிந்து விட்டு சென்று விட்டான். கழுத்தில் சூடுபட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கருணாரட்ணம் அடிகளாரை ஊர் மக்கள் எடுத்துச் சென்று யாழ் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் வன்னியில் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதவுரிமை பணிகளில் ஈடுபட்டு வந்தார். எனக்கு அவரது பணி ஆச்சரியம் தரவில்லை. எனெனில் அவரது சுபாவமே அதுதான். யாராவது அவர் கண் முன்னால் வேதனைப்பட்டால் அவரால் பொறுக்க முடியாது. அத்தகையவரை ராணுவம் கண்ணிவெடி வைத்து கொன்றுவிட்டதை அறிந்தபோது உண்மையிலே மிகவும் கவலை அடைந்தேன். அவர் ஒரு கிருத்தவ பாதிரியார். அதுவும் மனிதவுரிமை பணிகளில் ஈடுபடும்போது சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார். ஆனால் இதுவரை போப்பாண்டவரோ அல்லது எந்தவொரு கிருத்தவ அமைப்போ அவர் கொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்கவில்லை.

வெல்லாத ஆரியர் வென்ற கதை இது

வெல்லாத ஆரியர் வென்ற கதை இது வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே - பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் (21.04.2024)

ஒரு எலும்பிற்காக

ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை ஒருபோதும் நாயாக்கிக் கொள்ளமாட்டான் - வியட்நாம் பழமொழி

அடுத்த சந்ததி வெறுமனே

அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்துவிடாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஓயாது.

வன்மையான கண்டனங்கள்

•வன்மையான கண்டனங்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆதரவான “ராவணா” ஊடகம் தடுக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. ஊடகத்தை தடுப்பதன் மூலம் தமிழ்த்தேசிய வளர்ச்சியை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பட்டுவிட்டது என்று நினைத்திருக்கும்போது சிறு துளி மழை பட்டதும் முளைத்தெழும் அறுகம்புல் போல, தமிழ்த் தேசியத்திற்கான ஊடகங்களும் முளைத்துக்கொண்டே இருக்கும். புதிதாக முளைத்தெழுந்த ராவணா 2 .0 விற்கு எமது ஆதரவை தெரிவிப்போம்

ஒரு கேள்வியும் பதிலும்

•ஒரு கேள்வியும் பதிலும் கேள்வி – புலிகள் திமுக வை எதிர்த்து போராடவில்லை. இருந்தும் 200 ரூபா உபிஸ் ஏன் புலிகள் மீது அவதூறு செய்கின்றனர்? பதில் - ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.

பல காலமாக விடை தெரியாத வினாக்களுக்கு

பல காலமாக விடை தெரியாத வினாக்களுக்கு விடையாக கடவுளை கூறிவருகிறான் மனிதன். ஆனால் அறிவியல் வளர்ச்சியானது அவ் வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடித்து வருவதால் கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறார். அவ்வாறான கண்டு பிடிப்புகளில் மிகவும் முக்கியமானது டார்வினின் கூர்ப்புவிதி. மனிதனை கடவுளே படைத்தார் என்று மதங்கள் யாவும் கூறிவந்த நிலையில் மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் என்று முதன் முதலில் கூறியவர் டார்வின். தனது உயிருக்கு மதவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி தனது கண்டு பிடிப்பை சுமார் பத்து வருடங்கள் வெளியிடாமல் இருந்தார். இன்று உலகில் மதிக்கப்படும் மிகப்பெரிய தத்துவஞானி காரல் மார்க்ஸ். அவர் தனது “மூலதனம்” படைப்பை டார்வினுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். இதில் இருந்தே அறிவியல் உலகில் டார்வின் எந்தளவு மதிக்கப்படுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுமார் 150 வருடங்கள் கழித்து கிருத்தவ மத போப்பாண்டவர் அவர்கள் டார்வினுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். கொடுமை என்னவென்றால் இன்றும்கூட பிள்ளையார்தான் பிள்ளை தருவதாக நம்பி பல பெண்கள் அரச மரத்தை சுற்றி சுற்றி வருகின்றனர். இது குறித்து பெரியார் அவர்கள் “ பிள்ளை வேணுமென்றால் அரச மரத்தை சுற்றாதே. புருசனை சுற்று” என்று கூறினாராம். அதற்கு மதவாதிகள் “பிள்ளை கொடுப்பது புருசன் என்றால் பெரியாருக்கு ஏன் பிள்ளை இல்லை?” என்று கேட்டார்களாம். இது எந்தளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. நான் அறிந்ததையே எழுதியுள்ளேன். ஆனால் அறிவியல் எல்லா வினாக்களுக்கும் விடை காணும்போது கடவுள் அற்றுப் போய்விடுவார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பு – 19.04.2024 டார்வின் அவர்களின் நினைவுதினம்

மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்!

•மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்! மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் 22.04.1870 நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தோழர் லெனின் ருஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி ருஸ்சிய புரட்சியை வென்றெடுத்து உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின் முதலாளி வர்க்க கொடுமைகளை ஒழிக்க பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப்பிடிக்க ஆயுதப் போராட்டத்தின் மூலமான புரட்சி அவசியம் என நிரூபித்தவர் தோழர் லெனின் தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று உலகப்புரட்சி பேசிய ரொக்ட்சியை தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின் தன் வாழ்நாள் முழுவதும் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தியவர் தோழர் லெனின். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளிவர்க்க ஜக்கியத்திற்கு வழி அமைத்தவர் தோழர் லெனின் தேசிய இனப்பிரச்சனைக்கு சுயநிர்ணய உரிமையை தீர்வாக முன்வைத்து சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின் இறந்தும்கூட எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்குகிறார் தோழர் லெனின். அதனால்தான் ருஸ்சிய அருங்காட்சியத்தில் இருக்கும் அவர் உடலை அழித்து புதைக்க வேண்டும் என்று எதிரிகள் கோருகிறார்கள். உலகம் உள்ளவரை தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமன்றி தேசிய இனங்களினாலும் நன்றியுடன் நினைவு கூரப்படுவார். மாபெரும் ஆசான் தோழர் லெனின் முன்வைத்த புரட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

தோழர் லெனினும் பிரதமர் மோடியும்

•தோழர் லெனினும் பிரதமர் மோடியும் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனினை சந்திப்பதற்கு அமெரிக்க பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றிருந்தார். பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த ரைஸ் வில்லியமுக்கு அவருக்கான சந்திப்பு நேரம் வந்திருந்தபோதும் கதவு திறக்கப்படவில்லை. இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நேரம் தவறாமையில் மிகவும் கறாராக இருப்பவர் தோழர் லெனின். சரி, யாரோ மிக மிக முக்கிய பிரமுகர் லெனினுடம் விவாதித்து கொண்டிருக்கிறார் என்று அந்த அமெரிக்க பத்திரிகையாளர் நினைத்தார். அரைமணி, ஒரு மணி, ஒன்றரை மணி ஆயிற்று. கதவு திறக்கவில்லை. லெனினுடன் இவ்வளவு நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் முழு அதிகாரம் பெற்ற அந்த தூதர் யாரோ? என்பதே அப் பத்திரிகையாளரின் கேள்வியாக இருந்தது. கடைசியில் கதவு திறந்தது. அவரது அறையில் இருந்து வெளியே வந்தவரைப் பார்த்ததும் அனைவரும் அசந்து போய்விட்டார்கள். ஏனெனில் வெளியே வந்தவர் பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட ஒரு ஏழை விவசாயி. லெனினுடைய அறைக்குள் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றார். அவரிடம் லெனின் சொன்னார், " உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏழை விவசாயி தம்போவ் பகுதியை சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி அவருடைய கருத்துகளை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. இதனால் நேரத்தை மறந்துவிட்டேன்." என்று சொன்னார் இவர்தான் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனின். அதேவேளை இந்திய பிரதமராக இருக்கும் மோடியையும் நினைத்து பார்க்கிறேன். கடந்த வருடம் பல மாதமாக டில்லியில் விவசாயிகள் போராடினார்கள். அதில் என்பதுக்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனாலும் பிரதமர் மோடியின் மனம் இரங்கவில்லை. விவசாயிகளை சந்திப்பதற்கு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை. நடிகைகளுக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க முடிந்த மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது கொடுமைதான். முதலாளிகளுக்காக அயராது பாடுபடும் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக பாடுபடுவார் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான். ஆனாலும் லெனின் காட்டிய வழி விவசாயிகளுக்கு இருக்கிறது. அவர்கள் அதில் பயணம் செய்து மோடிகளை தூக்கி எறிவார்கள். இது நிச்சயம்.

இன்று உலக புத்தக தினம் (23.04.2024)

•இன்று உலக புத்தக தினம் (23.04.2024) “புரட்சியில் துப்பாக்கிகளைவிடப் பெரிய ஆயுதம் புத்தகங்களே” என்று ரஸ்சிய புரட்சியை மேற்கொண்ட தோழர் லெனின் கூறினார். உண்மைதான். வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் பூரணத்துவம் பெறுகின்றான். எனவே அதற்கு புத்தகங்கள் மிகவும் அவசியமாகின்றன. எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்றார் சே குவாரா அதுவும் உண்மைதான் என்பதை ஈழத்தில் கண்டோம். முதலில் யாழ்ப்பாணம் நூலகம் இலங்கை அரசால் எரிக்கப்பட்டது. பின்னர் தமிழர்கள் எரிக்கப்பட்டார்கள். எமது தமிழ் சமூகத்தில் புத்தகங்களுக்கும் வாசிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் புத்தகதினம் வரும்போது இந்த புத்தக வாசிப்பிற்காக நாம் சிறப்புமுகாமில் நடத்திய போராட்டங்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை வழங்கப்படுகிறது. றேடியோ கேட்க அனுமதிக்கப்படுகிறது. ரிவி பார்க்க அனுமதிக்கப் படுகிறது. புத்தகம் படிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் துறையூரில் இருந்த சிறப்புமுகாமில் இவை எதுவுமே எமக்கு அனுமதிக்கப்படவில்லை. அன்றைய தமிழக அரசு சிறப்புமுகாமில் இவற்றை தராதது மட்டுமன்றி எமது சொந்த செலவில் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்க மறுத்தது . நாம் வேறு வழியின்றி எமக்கு சாப்பாடு பார்சல் கட்டி வரும் பேப்பர்களை படித்தோம். இதனை அறிந்த கியூபிராஞ் அதிகாரிகள் உடனே எமக்கு புரியாத மலையாள பத்திரிகைகளில் சாப்பாடு கட்டி தர ஏற்பாடு செய்தார்கள். இதனால் வேறு வழியின்றி பத்திரிகை படிக்க அனுமதிக்குமாறு கோரி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அதன் பின்னரே அனுமதி தரப்பட்டது. எமது சொந்த செலவில் புத்தகம் படிப்பதற்கே 14 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தமையை இன்றும் நினைத்து பார்க்கிறேன். ஆனாலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. எமது இளைஞர்கள் மத்தியில் இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. நூல்கள் வெளிவருவது குறைந்து வருகிறது. வெளிவரும் நூல்களும் மிகக் குறைந்தளவே அச்சிடப்படுகின்றது. நூல் வெளியீட்டு விழாக்களிலும்கூட சுமார் இருபது முப்பது பேர்களே கலந்து கொள்கின்றனர். அதுகூட வடையும் தேநீரும் வழங்கியே அழைக்க வேண்டியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி புத்தகங்களின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் தோன்றுகிறது. எதுவானாலும் வாசிக்கும் பழக்கத்தை நாம் எம் மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் வாசிப்பதன் மூலமே மனிதன் பூரணத்துவம் அடைகிறான். (கீழே உள்ள படம் சிறப்புமுகாமில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு என்னை ஆஜர் செய்ய அழைத்துச்சென்றபோது எடுத்தது (1996)

இவர்கள் ஏன் தமது பதவியை இளையவர்களுக்கு

இவர்கள் ஏன் தமது பதவியை இளையவர்களுக்கு வழங்க மறுக்கின்றனர்? கட்டையில் போகும்வரை பதவியில் ஒட்டியிருக்க ஏன் விரும்புகின்றனர்?

கடந்த வாரம்தான் லண்டனில்

கடந்த வாரம்தான் லண்டனில் தமிழர் வர்த்தக சந்தை நடைபெற்றது. ஆனால் இன்று புலம்பெயர் வர்த்தகர்கள் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று சுமந்திரன் கூறியுள்ளார். முதலில் புலம்பெயர் தமிழர்களை தாயக அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றவர் இப்போது புலம்பெயர் வர்த்தகர்களை கூறுகின்றார். யாராவது ஒரு வர்த்தகர் தவறாக நடந்திருந்தால் அதை சுட்டிக்காட்டி கண்டிக்க வேண்டும். மாறாக அனைத்து புலம்பெயர் வர்த்தகர்களையும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருங்கள் என கூறுவது தவறு. புலம்பெயர் தமிழர்களையும் வர்த்தகர்களையும் ஒன்றிணைத்து அவர்களை பயன் உள்ள வகையில் தாயக தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதுவே ஒரு தாயக அரசியல் தலைவரின் கடமையாக பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து புலம்பெயர்ந்தவர்களை ஒதுங்கியிருங்கள் என்று கூறுவது தவறு. இது கண்டிக்கத்தக்கது. சுமந்திரன் லண்டன் வரும்போது அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்தச் சென்று உபசரிப்பவர்களும் வர்த்தகர்கள்தான். அவர்களையும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருங்கள் என்கிறாரா சுமந்திரன்?

J.பேபி

•J.பேபி மனநிலை பாதிக்கப்பட்ட மகனை எந்த தாயும் சுமையாக நினைப்பதில்லை. பராமரிக்காமல் ஒதுக்குவதில்லை. ஆனால் தாய் மனநிலை பாதிக்கப்பட்டால் பிள்ளைகள் சுமையாக நினைக்கின்றனர். பராமரிக்காமல் ஒதுக்குகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் தவறுதலாக கல்கத்தா சென்று விடுகிறார். பிள்ளைகள் தம் தவறை உணர்ந்து கல்கத்தா சென்று தாயை மீட்டு வருவதே இப் படத்தின் கதை. இது ஒரு உண்மை கதை. நன்கு படமாக்கியுள்ளார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட தாயாக ஊர்வசி சிறப்பாக நடித்துள்ளார். நல்ல படம். முடிந்தால் ஒருமுறை பாருங்கள்.

1994ல் நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தேன்.

1994ல் நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது தமிழ்நாட்டில் ஜெயா அம்மையார் ஆட்சி நடைபெற்றது. அவ்வேளை கல்வி அமைச்சர் ஒருமுறை சேலத்திற்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்பதற்காக மாணவர்கள் நீண்டநேரம் வெய்யிலில் காத்திருக்க வைப்பட்டனர். இதனால் சில மாணவர்கள் மயக்கமுற்று விழுந்துவிட்டனர். இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்;பலையை தோற்றுவித்தது. அதையடுத்து “மாணவர்களை அரசியல் நிகழ்வில் பங்குபற்ற வைக்கலாமா?” என்றதொரு கட்டுரை போட்டியை தினமணி பத்திரிகையில் ஆசிரியர் மாலன் அறிவித்தார். மாணவர்களை அரசியலில் பங்குபற்ற வைக்க வேண்டும். இன்னும் அதிகமாக பங்குபற்ற வைக்க வேண்டும் என நான் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். எல்லோரும் மாணவர்களை பங்குபற்ற வைக்கக்கூடாது என கட்டுரை எழுதிய நிலையில் நான் பங்குபற்ற வைக்க வேண்டும் என்று எழுதியதோடு எனக்கு அதில் முதல் பரிசும் கிடைத்தது. நான் எனது அக் கட்டுரையில் ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டியிருந்தேன். இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் ஒருவர் ரஸ்சியாவுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் ஒரு சிறுவர் பாடசாலையையும் காணச் சென்றார். அங்கிருந்த வெள்ளைநிற மாணவர்கள் எவ்வித கூச்சமும் தயக்கமும் இன்றி சகஜமாக தன்னுடன் பழகியது அவருக்கு ஆச்சரியம் கொடுத்தது. அதுமட்டுமன்றி அவர் அவ் மாணவர்களின் அறிவுதிறனை சோதிக்க விரும்பி “இரண்டு ரூபா பொருள் ஒன்றை நாலு ரூபாவுக்கு விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?” என கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள் ஆறு மாதம் தண்டனை கிடைக்கும் என கூறினார்கள். ஆம். அப்போது ஸ்டாலின் தலைமையில் சோசலிச ஆட்சி ரஸ்சியாவில் நடைபெற்றது. அங்கு இவ்வாறு பொருட்களை அதிக விலையில் விற்பது குற்றம். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் குழந்தைகள் எப்படிப்பட்ட சமூகத்தில் வளர்க்கப்படுகிறார்களோ அதையே அவர்கள் பிரதிபலிப்பார்கள். எனவே சமூகம் அமைதியாக வாழ மதம் தேவை என்று நினைப்பது தவறு. மாறாக அதற்குரிய கல்வி மற்றும் அரசே தேவை.

தந்தை செல்வா அவர்கள் பெரியாரை சந்தித்து

தந்தை செல்வா அவர்கள் பெரியாரை சந்தித்து ஆதரவு கோரியபோது பெரியார் ஆதரவு வழங்க மறுத்துவிட்டார். அதேபோன்று மாணவர் பேரவை தலைவர் சத்தியசீலன் அவர்கள் பெரியாரை சந்தித்து ஆதரவு கோரியபோதும் பெரியார் ஆதரவு வழங்க மறுத்துவிட்டார். ஆனால் பெரியார் மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த வீரமணி அவர்கள் அதரவு வழங்கினார். அவர் புலிகளுக்கு உதவிகளும் வழங்கினார். வீரமணி மட்டுமன்றி கௌத்தூர் மணி, கோவை ராமகிருஸ்ணன், ஆனைமுத்து போன்ற திராவிட இயக்க தலைவர்களும் ஆதரவு வழங்கினர். மற்ற எல்லா திராவிட இயக்க தலைவர்களும் ஈழத் தமிழருக்கு ஆதரவு வழங்கிய நிலையில் பெரியார் மட்டும் ஆதரவு வழங்க மறுத்தது ஏன்? குறிப்பு – நாளை (26.04.2024) தந்தை செல்வா அவர்களின் 47வது நினைவு தினம்.

மறக்க முடியாத நாள் 27.04.2009

மறக்க முடியாத நாள் 27.04.2009 கடற்கரையில் மனைவி மற்றும் துணைவி சகிதம் கலைஞர் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த நாள். போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று அவர் அறிவித்த பின்னரே நாற்பதாயிரம் ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். இதுபற்றி கேட்டபோது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார்

இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள்.

இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள். இதே நாளில்தான் ஈழ பிரச்சினையை ஒட்டி மு.கருணாநிதி இடைவேளை உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தை குறித்து எள்ளலுடன் பிரபஞ்சன் "இரண்டு உணவு இடைவெளிக்குள் ஒருவர் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறாரென்றால் இந்தியாவில் அனைவரும் ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதமிருக்கின்றனர்." என்றார் எழுத்தாளர்கள், தங்களுக்கான குறுகிய எல்லைவட்டத்திலிருந்து வெளியே வந்து, சமுதாயத்தில் மக்களின் துயர்நீக்க ,அதில் பங்கு கொண்டு குரல்கொடுக்கவேண்டும் என்று கூறிய பிரபஞ்சன் அவர்கள், தன் இறுதிகாலம் வரை தமிழ்நாட்டின் உரிமைகள், மற்றும் ஈழதமிழ் உறவுகளின் விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களை ஆதரித்து பேசியும் எழுதியும் விழிப்புணர்வை ஏற்படுத்திய மக்களின் எழுத்தாளர். பிரபஞ்சன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.

நவகிரகங்களின் உச்சம் பெற்றவர்

நவகிரகங்களின் உச்சம் பெற்றவர் அல்லது உடம்பெல்லாம் மச்சம் உள்ளவர் என்பார்களே அதற்கு இந்த உலகில் சிறந்த உதாரணம் இந்த நித்தியானந்தாவே. முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு சொர்க்கத்தில் 72 மனைவிகள் கிடைக்கும் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ ஆனால் பூமியில் 720 பெண்களுடன் சொர்க்கத்தை அனுபவிப்பவர் இந்த நித்தியானந்தா. இதை நாம் கூறினால் “அவருக்கு பல்லு இருக்கு பக்கோடா தின்கிறார். நீ ஏன் பொறாமைப்படுகிறாய்?” என்பார்கள் ஆனால் எனது கேள்வி என்னவெனில் இத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் எப்படி இவரால் இப்படி சிரித்துக்கொண்டிருக்க முடிகிறது? 😂

கலைஞர் ஊழல் வழக்கில் சிக்கியபோது

கலைஞர் ஊழல் வழக்கில் சிக்கியபோது அவருக்காக பணம் வாங்காமல் வழக்காடியவர் ஈழத் தமிழர் ஜி.ஜி.பொன்னம்பலம் என்பது, ஈழத் தமிழரை “அகதி நாய்களே” என்று திட்டும் திமுக உபிஸ்களுக்கு தெரியுமா?

கலைஞர் உண்ணாவிரதம் இருந்து

கலைஞர் உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தினார் என்று அவர்கள்தான் எழுதுகிறார்கள். போர் நிறுத்தப்படவில்லை. அதற்கு பிறகுதான் 40ஆயிரம் அப்பாவி தமிழர் கொல்லப்பட்டனர் என்ற உண்மையை நாம் கூறினால் உடனே “அகதி நாயே கலைஞரை ஊ - பாவிட்டால் உனக்கு தூக்கம் வராதா” என கேட்கிறார்கள் அப்புறம் அவர்களே கலைஞர் நான்கு நாட்களில் ஈழத் தமிழருக்கு விடுதலை பெற்றுக்கொடுத்ததாக போஸ்டர் அடிக்கின்றனர் அதற்கு “கலைஞர் பெற்றுக்கொடுத்த விடுதலை எது? அது இப்ப எங்கே இருக்கு?” என நாம் கேட்டால் “அகதி நாயே இன்னொரு நாட்டு அரசியலை ஏன் பேசுகிறாய் உன் நாட்டு மகிந்தவை ஊ-பு” என்கிறார்கள். இதுகூடப் பரவாயில்லை.ஈழத் தமிழரைக் கொன்ற திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும் அந்த 32 அமைப்புகளிடம் என்ன இப்படி பேசுகிறார்களே என்று கேட்டால் “உஷ்! பாஜக உள்ளே வந்திடும்” என்கிறார்கள். என்ன கொடுமை இது?

கலைஞர் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து

கலைஞர் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்டால், கலைஞர் கதை வசனம் எழுதி சம்பாதித்தது என்று பதில் தருகிறார்கள். கலைஞர் கதை வசனம் எழுதி வெளிவந்த படங்கள் 54 என்கிறார்கள். அப்படியென்றால் ஒரு படத்திற்கு 835 கோடி ரூபா அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த காலத்தில் ஒரு படத்தின் மொத்த பட்ஜெட்டே ஒரு கோடி ரூபா வருவதில்லை. அப்படியிருக்க கலைஞருக்கு எப்படி 835 கோடி ரூபா கொடுத்திருக்க முடியும்? இதைக்கேட்டால் சீமானுக்கு வீட்டு வாடகை கட்ட பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறார்கள். கலைஞருக்கு எப்படி 45000 கோடி சொத்து வந்தது என்ற கேள்விக்கு சீமானுக்கு வாடகைப் பணம் எங்கிருந்து வருகின்றது என்பது உரிய பதில் இல்லை கூறினால் உடனே திராவிட மொழியில் திட்டுகிறார்கள். நான் தமிழன். எனக்கு திராவிட மொழி தெரியாது என்றால் நீ ஏன்டா நம்ம நாட்டு அரசியல் பேசுகிறாய் என்கிறார்கள். அவர்கள் இலங்கையில் வந்து மகிந்த ராஜபக்சாவுடன் கைகுலுக்கி பல்லாயிரம் கோடி ரூபாவை முதலீடு செய்யலாம். ஆனால் ஒரு தமிழன் தமிழ்நாட்டில் எப்படி அவர்கள் சொத்து சேர்த்தார்கள் என்பதைக் கேட்கக்கூடாதா? இது என்ன நியாயம்? ஆனால் உண்மையில் கலைஞர் குடும்ப சொத்து பற்றி கேட்டது நானோ அல்லது ஈழத் தமிழரோ இல்லை. கேட்டிருப்பவர் இந்தியர். அதுவும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. எனவே இனியாவது திட்டாமல் ஒழுங்காக பதில் சொல்லுங்கள் உடன்பிறப்புகளே.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “சரிகமப” நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து மலையகத்தைச் சேர்ந்த இந்திரஜித் அவர்களுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

நம் மத்தியில் வாழ்ந்த

நம் மத்தியில் வாழ்ந்த நம் வரலாற்று நூலகம் ஒன்று நம்மை விட்டு மறைந்துள்ளது. அவருடைய சில பணிகள் குறித்து விமர்சனம் இருப்பினும் அவரது இன உணர்வில் என்றுமே சந்தேகம் ஏற்பட்டதில்லை. இறுதிவரை உறுதியுடன் எமக்காக குரல் கொடுத்தவர் இனி அந்த கலகக்குரைல கேட்க முடியாது. அடங்கிவிட்டது. ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த குழந்தைகள் இருவரும்

இந்த குழந்தைகள் இருவரும் ஆசியாவின் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்தது எப்படி? இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய லாபத்தை இவர்களுக்கு கொடுத்த அந்த வியாபாரம் என்ன? 90ல் அண்ணா சாலையில் எம் கண் முன்னே ஒரு சிறிய வீடியோ கடை வைத்திருந்தனர். இன்று அவர்களின் மகள் ஒரு கிரிக்கட் டீமையே வாங்கி நடத்துகிறார். அதெப்படி? குறிப்பு – உடன்பிறப்புகள் சினங்கொள்ள வேண்டாம். சும்மா தெரிந்துகொள்வதற்காகத்தான் கேட்டேன்.

ஒரு சர்வாதிகார நாட்டில்

ஒரு சர்வாதிகார நாட்டில் இருவர் பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்தார்களாம். அப்போது ஒருவர் பெருமூச்சு விட்டாராம். அருகில் இருந்த மற்றவர் உடனே நீண்டதொரு பெருமூச்சு விட்டாராம். உடனே இருவரையும் பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டதாம். இருவரும் அரசுக்கு எதிராக அரசியல் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதாம். இது ஒரு சர்வாதிகார நாட்டின் கொடுமையைக் குறிக்கும் ஜோக் தான். ஆனால் இது இப்ப உண்மையில் இலங்கையில் நடக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் பெண் போராளி ஒருவர் “ முகநூலில் முன்புபோல் எழுத முடியவில்லை. புலனாய்வாளர்கள் கண்காணிக்கின்றனர்” என தெரிவித்திருந்தார். அடுத்து இலக்கியவாதி ஒருவர் நூல் வெளியீடு ஒன்றை செய்தமைக்காக அழைத்து விசாரிக்கப்பட்டிருந்தார். இதைவிட முன்னாள் போராளி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு அவர் மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லாவற்றையும்விட தமிழ் மக்கள் இறந்த தம் உறவுகளை நினைவுகூர இனி அனுமதிக்கப்போவதில்லை என ராணுவ தளபதி மிரட்டியுள்ளார். தேர்தல் வர இருக்கின்ற இந்நிலையில் அதுபற்றி கவலைப்படாமல் சிங்கள அரசு அடக்குமுறையை ஏவி விடுகின்றது. இதற்குரிய பதிலை தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் நிச்சயம் தெரிவிப்பார்கள். ஆம். எமது விடுதலைக்காக நாம் எதையும் சந்திப்போம் என்பதை எம் எதிரிக்கு புரிய வைப்போம்.

கடந்த வருடம் பாஜக தலைவர்

கடந்த வருடம் பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் புகழ்ந்தார். இந்த வருடம் அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை தந்த காங்கிரஸ் திமுக கூட்டணியை ஆதரிக்கிறார். அதுவும் “ஈழத் தமிழருக்கு கலைஞர் இழைத்த துரோகம்” என நூல் எழுதியவர், அப்புறம் எப்படி அந்த துரோக திமுகவை ஆதரிக்கிறார்? பாஜக ஒரு பாசிச இந்துத்துவா கட்சி என்பதை இப்பதான் அறிந்து கொண்டாரா? அப்படியென்றால் அந்த பாசிச பாஜக வை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்ததே கலைஞரும் அவரது திமுகவும் தான் என்பதை அறியாதவரா? வயதான காலத்தில் ஏன் இந்த தடுமாற்றம்?

முதல்வர் ஜெயா அம்மையார்

முதல்வர் ஜெயா அம்மையார் ஓய்வெடுக்க ஊட்டிக்கு சென்றபோது, ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு ஊட்டியில் உல்லாசமா என ஒரு பாடகர் பாடினார். இப்போது அந்த பாடகர் கோபாலபுரத்து அடிமையாகிவிட்டாரா? அல்லது, பாடினால் பாஜக உள்ளே வந்திடுமா? இதைக் கேட்டால் என்னை சங்கி B டீம் என்று முத்திரை குத்துவார்கள். எதற்கு வம்பு? பேசாமல் இருப்போம்.😂

மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள். உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்

Sunday, March 31, 2024

வெள்ளைக்கார அரசை விரட்ட

வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் , கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர். நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம்.

நினைவு கூர்வோம்!

நினைவு கூர்வோம்! தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன், சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் மார்ச் - 23 ஆகும். இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி.

நாதியற்றவனாக இருக்கிறேன்...

நாதியற்றவனாக இருக்கிறேன்... புகலிடக் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை! இதயம் இருக்குமாயின் இடம் கொடுங்கள் இறப்பதற்கு முன் வாழ்ந்துவிட்டு போகிறேன். ஒரு நாளாவது (இந்திய) குடிமகனாக! -விக்டர் செ இந்த (ஈழ) அகதியின் குரல் திராவிட முதல்வரின் செவிக்கு எட்டுமா?

அமைதியான கடல்

அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை. போராட்டம் இன்றி இனத்திற்கான சிறந்த தலைமை உருவாகுவதில்லை.

நிச்சயம் வெற்றி பெறுவோம்”

நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இவர்களிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே தொடர்ந்து இவர்களை முன்னோக்கி செல்ல வைக்கிறது என்றோ ஒருநாள் நிச்சயம் தமது இலக்கை அடைவார்கள். இது உறுதி

சாத்தான் ஓதும் வேதம்!

•சாத்தான் ஓதும் வேதம்! நூல்கள் எழுதுவதன் மூலம் நிரபராதி ஆகிவிட முடியாது. நீதிமன்ற விசாரணைகளே முடிவு செய்ய வேண்டும்.

பன்றி பல குட்டிகளை போடலாம்

பன்றி பல குட்டிகளை போடலாம் ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் நிலம் அதிர்கிறது. அதிர்வுகளை ஏற்படுத்தும் “நாம் தமிழர்”

ஆழ்ந்த இரங்கல்

•ஆழ்ந்த இரங்கல் கடந்த வாரம் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றி தன் தொண்டுகள் பற்றி கூறியிருந்தார். குறிப்பாக வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை கூறி பலரின் பாராட்டைப் பெற்றார். சிறந்த சிரிப்பு நடிகர் , இந்த வாரம் இப்படி ஒரு செய்தியை கொடுத்து கவலை கொள்ள வைத்திட்டாரே?

அடேய்! யாரு பார்த்த வேலையிடா இது?

அடேய்! யாரு பார்த்த வேலையிடா இது? என்ன இருந்தாலும் அவர் தமிழக முதல்வரடா! 😂😂

எம் வீட்டில் திருட வந்தனர்

“எம் வீட்டில் திருட வந்தனர் நாம் “திருடன்” “திருடன்” என்று கத்தினோம் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி எம்மை கைது செய்து சிறையில் அடைத்தனர்” - கவிஞர் அறிவுமதி செய்தி - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் கைதானவர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர்.

முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது

முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்து போவான் இனப்படுகொலைக்கு நீதிகோரி புலம்பெயர் சமூகத்தின் அடுத்த தலைமுறையும் போராட ஆரம்பித்துவிட்டது.

சாராயம் இல்லை

சாராயம் இல்லை பிரியாணி இல்லை ஆனாலும் கூட்டம் தானாக சேர்கிறது. வோட்டுக்கு பணம் இல்லை எந்த கட்சியுடனும் கூட்டு இல்லை ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அதிகரிக்கின்றது. நம்பிக்கை தரும் “நாம் தமிழர்”

தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின்

"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 30ம் ஆண்டு நினவு நாள் 29.03.2024 ஆகும். 19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார். தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். குறிப்பு- தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது . இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்துரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2016/03/blog-post_33.html

உலகப்புகழ்பெற்ற “தாய்” நாவலை

உலகப்புகழ்பெற்ற “தாய்” நாவலை எழுதிய மார்க்சிம் கார்க்கி அவர்களின் பிறந்த தினம் இன்று.(28.03.1868) இலக்கியம் என்பது போராட துணிந்தவனை உந்தி தள்ளுவதாக இருக்க வேண்டும் என்று மார்க்சிம் கார்க்கி கூறினார். அதனால்தான் அவர் ரஸ்சிய புரட்சிக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து புரட்சியாளர்களுக்கும் உத்வேகம் தரக்கூடிய தாய் நாவலை படைத்தார். எமது ஈழப் போராட்ட வரலாற்றிலும் பல தாய் கதைகள் உண்டு. ஆனால் அதை எழுத ஒரு மார்க்சிம் கார்க்கி இன்னும் எம்மிடம் தோன்றவில்லை.

எந்தவொரு கருத்துக்கணிப்பும்

எந்தவொரு கருத்துக்கணிப்பும் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் என்று கூறவில்லை எனினும் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் ஏன் நாம் தமிழர் கட்சிக்கு அதிக நெருக்கடிகளை கொடுக்கின்றன? பாஜகவும் திமுகவும் ஏன் நாம்தமிழர் கட்சியை அதிகம் விமர்சிக்கின்றன? நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத்தை முன்வைப்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்கும்? ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழத்தேசியத்தை எதிர்க்கும் என்பது இதுதானா? இந்நிலையில் கடந்த தேர்தலைவிட ஒரு வோட்டு அதிகமாக பெற்றாலே நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும். அது நடக்கும்.

எம் வாழ்வில் நாம் கண்ட

எம் வாழ்வில் நாம் கண்ட மறக்க முடியாத நாடகம் குறிப்பு – 27.03.2024உலக நாடக தினத்தை முன்னிட்டு.

செய்தி – உலக உருண்டைக்கு

செய்தி – உலக உருண்டைக்கு தண்ணீர் ஊற்றுவதன்மூலம் உலகத்தை குளிர்விக்க முடியும் என சாமியார் ஒருவர் தெரிவிப்பு. சாமி! பிளீஸ், யாழ்ப்பாணத்தில் நம்ம ஊர் கரவெட்டி பக்கமாக தண்ணீர் ஊற்றுங்க. 32C வெப்பமாம். தாங்க முடியவில்லை என்கிறார்கள். 😂😂

செய்தி - ஈழத் தமிழ் அகதிகளுக்கு

செய்தி - ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுப்போம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் இருட்டு வந்திட்டாலே சின்ராசு பாட ஆரம்பித்துவிடுவான் என்பதுபோல் தேர்தல் வந்திட்டாலே திராவிட முதல்வர் உருட்ட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஈழஅகதிகளுக்கு வாக்குறுதி அளிப்பதும் தேர்தல் முடிந்த பின்பு அதை மறந்துவிடுவதும் திமுக வின் வழக்கமாகும். கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, 40 வருடமாக தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்பதையாவது கூறுங்கள் பிளீஸ். எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்றும் அவருக்கு தமிழ் இன உணர்வு இல்லை என்று காட்டுவதற்காக கலைஞர் 1984ம் ஆண்டு ஈழ அகதிச் சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்தார். கனிமொழி ஒரு தம்பி வேண்டும் என்று கேட்டதாகவும் இனி அந்த சிறுவன் கனிமொழிக்கு தம்பியாக இருப்பான் என்றும் கலைஞர் கூறினார். அந்த அகதிச் சிறுவனுக்கு மணி என்று பெயரும் வைத்தார். ஆனால் இப்போது அந்த மணி எங்கே என்று தெரியவில்லை. சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வரும் என அஞ்சி ஸ்டாலின் அந்த சிறுவனை கொன்றுவிட்டதாக ஸ்டாலினுடன் கூட இருந்த பரிதிஇளம்வழுதி கூறினார். தயவு செய்து இப்பவாவது அந்த அப்பாவி அகதிச் சிறுவன் எங்கே என்பதை கூறுங்கள் தமிழக திராவிட முதல்வரே!

தண்ணீரை திராட்சைரசமாக

தண்ணீரை திராட்சைரசமாக மாற்றிய தேவனும் தேவையில்லை தண்ணீரில் நடக்கும் இறைவனும் தேவையில்லை செங்கடலை இரண்டாக பிளந்த ரட்சகரும் தேவையில்லை மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்த தெய்வமும் தேவையில்லை தன் தேவாலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளையாவது செயலிழக்க வைக்கும் கடவுளே தற்போது தேவை

படம்-1 தமிழின விடுதலைக்காக

படம்-1 தமிழின விடுதலைக்காக போராடி பல வருடம் சிறையில் வாடிய புலவர் கலியபெருமாள் வீடு. படம் -2 தன்னைத்தானே உலகத் தமிழின தலைவர் என அழைத்துக்கொண்ட கலைஞர் குடும்பத்தின் வீடு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதில் யார் தமிழினத்தவருக்கானவர் என்று.

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இந்தியா காரணமா? இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார். மைத்திரி கூறியிருப்பது உண்மைதான். ஆனால் இதை பதவிலியில் இருக்கும்போது கூறாமல் இப்போது ஏன் கூறுகின்றார்?

Friday, March 22, 2024

பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!

•பாராட்டுகளும் வாழ்த்துக்களும்! 13 வயதில் 31 கிலோ மீட்டர் பாக்குநீரிணை கடலை எட்டு மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த சிறுவன் தன்வந்த் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அன்று தாய் பார்வதி அம்மாள்

அன்று தாய் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பினார் முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று தன் மகனை ஒருமுறையேனும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என 33 வருடமாக காத்திருந்த தாய்க்கு உயிரற்ற மகன் உடலை அனுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த இரண்டு தாய்களின் பெயரை இனி உச்சரிக்கும்போதெல்லாம் இவர்கள் சிந்திய கண்ணீருக்கு காரணமானவர்களின் பெயரையும் வரலாறு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.

ஆசையோடு தேசம்காண

ஆசையோடு தேசம்காண இருந்தவருக்கு எமனானது இந்திய அதிகாரம் உயிரோடு வந்தவரை உயிறற்று அனுப்பி வைத்துள்ளது பாரதம் சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக்குறியீடு" - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை.

தன் மகன் உயிரோடு வருவான்

தன் மகன் உயிரோடு வருவான் என 33 வருடமாக காத்திருக்கும் இத் தாய் ஞாயிறு அன்று தன் மகனின் உயிரற்ற உடலை காண்கையில் நாம் என்ன சொல்லி தேற்றுவது? இவரது மகன் மரணம் இந்திய அரசின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “ஈழத் தமிழர் அனாதைகள் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம்” என்றார் தாம் ஆட்சிக்கு வந்தால் 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் அவர்களை சிறப்புமுகாமில் அடைத்து "மாரடைப்பு மரண விடுதலை" அளிப்பார் என்று நினைக்கவில்லையே..

இருவரும் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் ஒருவர் ஈழத் தமிழர் சாந்தன் இன்னொருவர் தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழர் சீனிவாசன் கடந்த 28.02.2024யன்று மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர் சாந்தன் சிகிச்சை பலனின்றி மரணமானதாக தமிழக அரசு அறிவித்தது. சாந்தன் மரணமான அதே 28ம் திகதி 2009ல் ஈழத் தமிழர்களுக்காக சீனிவாசன் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி 02.03.2009ல் இறந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இங்கு கவனிக்க வேண்டியது 2009, 2024ல் தமிழக அரசாக இருந்தது திமுக. ஈழத் தமிழருக்காய் தன்னை ஆகுதியாக்கிய சீனிவாசனுக்கு நாளை 15வது நினைவுதினம் ஆகும். அவருக்கு எமது நினைவஞ்சலிகள்.

சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு

சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பு என நான் எழுதியிருந்தேன். அப்போது சில திமுக உடன்பிறப்புகள் சிறப்புமுகாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என்னை திட்டினார்கள். இப்போது முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமன்றி நடைப்பயிற்சி செய்யக்கூட விடாமல் சிறப்புமுகாமில் சித்திரவதை செய்து வருகிறது தமிழக அரசு என்று கூறியிருக்கிறார். இப்போது இங்கு நான் கேட்க விரும்புவது, எடப்பாடிக்கும் சிறப்புமுகாம் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று தெரியவில்லை என திமுக வினர் கூறப்போகின்றார்களா? எடப்பாடி அவர்கள் கூறியிருப்பது யாவும் உண்மைதான். ஆனால் இதைக்கூற அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது ஏனெனில் அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த சிறப்புமுகாம் சித்திரவதைகள் இருந்தன. இன்று ஸ்டாலின் எப்படி சிறப்புமுகாம் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரோ அதேபோன்றுதான் எடப்பாடி அவர்களும் ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் இருந்தார். இவர்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது நீலிக் கண்ணீர் வடிப்பதும் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழர் தாயகம் முழுவதும் தேசிய துக்கதினமாக அனுட்டிக்க பல பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒன்று திரண்டு தமிழ் மக்கள் செலுத்தும் அஞ்சலி என்பது இந்திய அரசுக்கு தமிழ் மக்களின் பதிலாக அமையட்டும்.

ஊருக்குபோய் தன் தாயின் கையால்

ஊருக்குபோய் தன் தாயின் கையால் ஒரு குவளை கஞ்சி குடிக்க வேண்டும் என்பதே சாந்தனின் கடைசி ஆசையாக இருந்தது. தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதே சாந்தன் தாயாரின் 33 வருட ஆசையாக இருந்தது. இரக்கமற்ற இந்திய அரசு இவர்களின் ஆசையை நிறைவேற்றவில்லை. எத்தனை தடைகள். அத்தனையும் தாண்டி மக்கள் சாந்தன் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்று தாயிடம் ஒப்படைக்கின்றனர். மக்கள் அளித்துள்ள இந்த பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்துகொள்ளட்டும். மற்ற மூவரையுமாவது உயிரோடு அவர்கள் விரும்பும் நாடு செல்ல அனுமதிக்கட்டும்.

சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார்.

சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார். உயிரற்ற உடலாகவாவது சென்று சேர்ந்துவிட்டார் என ஆறுதல் கொள்வதா? அல்லது உயிருடன் அனுப்பிவைக்காதது குறித்து இந்திய அரசு மீது கோபம் கொள்வதா? தூக்கு தண்டனையே அதி உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது. ஆனால் சாந்தன் அதைவிட கொடிய தண்டனையை அனுபவித்துள்ளார். இதனை அவர் தமிழ் மக்களுக்காகவே அனுபவித்தார். எனவேதான் தமிழ் மக்களும் அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகின்றனர். இனி ஒவ்வொரு வருடமும் இந் நாளில் சாந்தனை மட்டுமன்றி சாந்தன் மரணத்திற்கு காரணமானவர்களையும் சேர்த்தே வரலாறு நினைவு படுத்தப் போகிறது.

சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து

சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார் தங்கை. சாந்தன் உயிருடன் வந்தால் எப்படி வரவேற்க விரும்பியிருந்தாரோ அத்தகைய ஒரு வரவேற்பை சாந்தன் உடலுக்கு கொடுத்து தன்னை தேற்றுகிறார் தங்கை. அழுது ஓய்ந்துவிட முடியாத ஆறாதத் துயரம் இது.

உலகில் மரணித்த போராளிகள் எல்லாம்

உலகில் மரணித்த போராளிகள் எல்லாம் வேதனைகளை அனுபவித்து மடிந்தவர்களே. அவர்கள் அனுபவித்த வேதனைக்கு சற்றும்குறையாத வேதனையை அனுபவிப்பவர்கள் அவர்களைப் பெற்ற தாய்மார்கள். ஆனால் மரணித்த போராளிகளை தியாகிகள் என்று நினைவுகூறும் வரலாறு அத் தாய்மார்களை அப்படி நினைவுகூர்வதில்லை. தாயின் கையால் ஒரு கவளம் சோறு தின்ன வேண்டும் என்றே சாந்தன் விரும்பினார். சாந்தனின் அந்த கடைசி விருப்பத்தை வாய்க்கரிசி போட்டு நாளை நிறைவேற்றப்போகிறார் தாய். 33 வருடமாக தன் மகனைக் காண காத்திருக்கும் தாய் மகனின் உயிரற்ற உடலைக் காண நேருவது மிகப் பெரிய துயரம். அக் கொடுங் துயரத்தை அனுபவிக்கும் இத் தாயை நாம் என்ன சொல்லி தேற்றுவது?

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள். தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் 04.03.1924 ஆகும். புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார். வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.

எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ

எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ அந்த மண்ணில் சாந்தனை விதைத்துள்ளார் அவரது தாய். தவறி விழும் விதையைக்கூட முளைத்தெழ வைக்கும் மண் தனக்காக போராடியவரை ஏமாற்றிவிடுமா என்ன? நிச்சயம் ஓராயிரம் சாந்தன்களை முளைத்தெழ வைக்கும்.

என்றும் நினைவில் கொள்வோம்!

என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் 05.03.2009

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும். கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் , ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.

சாந்தனை புதைத்து அதன் ஈரம்

சாந்தனை புதைத்து அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்த இடியை இறக்கியுள்ளது இரக்கமில்லாத தமிழக அரசு. மற்ற மூவரையும் இலங்கை அனுபுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. அவர்கள் இலங்கை திரும்புவதற்குரிய அனுமதியை இலங்கை தூதரகத்தில் கோரினால் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் தனித்தனியாக நீதிமன்றத்தை அணுகினால் பரிசீலிக்கப்படும் எனகூறி உயர்நீதிமன்றம் சாந்தன் வழக்கை முடித்துவிட்டது. சாந்தனுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. வழக்கம்போல் சாந்தனுக்குரிய நீதியை மத்திய மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிமன்றமும் மூடி மறைத்துவிட்டது. இப்போது விடயம் என்னவென்றால் முருகன் நளினி இருவரும் பிரித்தானியாவில் இருக்கும் தம் மகளிடம் சென்று வாழ விரும்புகின்றனர். இவர்கள் பிரித்தானியா செல்ல விரும்புவது உலகத்திற்கே தெரியும். ஆனால் தெரியாதமாதிரி மத்திய மாநில அரசுகள் மட்டுமன்றி உயர்நீதிமன்றமும் சேர்ந்து நாடகமாடுகின்றன. 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தவர் ஸ்டாலின். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துமகூட் நாலு ஈழத் தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தார். இந்தியா ஒரு ஜனநாயகநாடு என்றும் இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றனர். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று 7 தமிழர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் தமிழக முதல்வரைப் பொறுத்தவரையில் “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஆனால் ஈழத் தமிழரைத் தவிர” என்று கருதுகிறார். நாலு தமிழர்களையும் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தே அவர்களை சிறப்புமுகாமில் அடைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால் வழக்கம்போல் இந்த வாக்குறுதியையையும் அவர் காப்பாற்றவில்லை.

முருகன் லண்டனில் உள்ள தன்

முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். ஆனால் தமிழக அரசு அவரை லண்டன் செல்ல அனுமதி வழங்காமல் இலங்கைக்கு அனுப்ப முயல்கிறது. இதுதான் சட்ட நடைமுறை என்று சிலர் தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கின்றனர். அவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன் இதே ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விக்கி மற்றும் ஆதிரை. இவர்கள் மீதான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது இவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து ஜரோப்பிய நாடொன்றுக்கு சென்று அங்கு வாழ்ந்து வருகிறார்கள். எனவே ராஜீவ் வழக்கில் வைக்கப்பட்டிருந்த விக்கி ஆதிரை ஆகியோர் வெளிநாடு செல்ல சட்ட நடைமுறை அனுமதிக்கும் என்றால் முருகன் செல்ல ஏன் அனுமதிக்க முடியாது? எல்லாவற்றுக்கும் மேலாக முருகன் ஒரு இந்து. அவர் இப்போது ஒரு சாமியார் போல் ஆகிவிட்டார். உலகில் உள்ள இந்துக்கள் அனைவரின் மீதும் அக்கறை கொள்வதாக கூறும் இந்திய அரசு முருகன் மீது ஏன் அக்கறை கொள்ளவில்லை? இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் அவர்கள் "இந்து" முருகனுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?

நினைவஞ்சலிகள்!

• நினைவஞ்சலிகள்! சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார். சிங்கள ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியரின் கிளைமோர் தாக்குதலில் 06.03.2008 யன்று சிவநேசன் கொல்லப்பட்டார். அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் அவர் கொல்லப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை. தமது சக பாராளுமன்ற உறுப்பினரின் கொலைக்கே இதுவரை நீதி பெறாத தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களின் படுகொலைகளுக்கு நீதி பெற்றுத் தருவார்கள் என எப்படி நம்புவது?

என் கணவரை உயிரோடு விடுதலை செய்யுங்கள்”

“என் கணவரை உயிரோடு விடுதலை செய்யுங்கள்” ஜெயக்குமாரின் மனைவி உருக்கமான வேண்டுகோள். தமிழக அரசு இரக்கம் காட்டுமா? அல்லது சாந்தன் போன்று மாரடைப்பு மரண விடுதலையை அளிக்கப் போகிறதா?

நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள்

•நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள் நடிகை பெத்து ராஜ்க்காக குரல் கொடுப்பார்களா? நடிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்குமான உறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. நடிகை பெத்து ராஜ்க்கு மதுரையில் மால் ஒன்றை உதயநிதி வாங்கிக்கொடுத்ததாக முன்னர் ஒரு செய்தி வந்தது. இப்போது நடிகை பெத்துராஜ்க்கு துபாயில் ஒரு வீட்டை அமைச்சர் உதயநிதி வாங்கிக் கொடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. நடிகை திரிஷா பற்றி செய்தி வந்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்த சேரன் போன்றவர்கள், இப்போது நடிகை பெத்து ராஜ் பற்றிய செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர்? உதயநிதி அமைச்சராக இருக்கிறார். காவல்துறை அவர்களின் கையில் இருக்கிறது. ஏன் இச் செய்தியை கூறிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? சவுக்கு சங்கர் கூறியது உண்மை என்றால் உதயநிதிக்கு இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது? கலைஞர் 36 படத்திற்கு கதைவசனம் எழுதி 45000கோடி ரூபா சம்பாதித்தார் என்று கூறுவதுபோல் உதயநிதி நாலு படத்தில் நடித்து இத்தனை கோடி சம்பாதித்தார் என்று கூறப்போகிறார்களா?

பெண் விடுதலை குறித்து !

பெண் விடுதலை குறித்து ! பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை மட்டுமல்ல இன விடுதலையும்கூட இல்லை. ஆனாலும் இன விடுதலை குறித்து பேசுபவர்கள் எந்தளவு தூரம் பெண் விடுதலை குறித்து பேசுகிறார்கள்? ஐனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே எண்ணிக்கையில் அதிகம். அப்படியென்றால் ஐனநாயக முறைப்படி பெண்கள் கையில்தானே அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லையே? வரலாற்றில் பெண்கள் எப்போதும் இப்படி இருந்தில்லை என்றும் இடையில்தான் இவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் பெண் எப்போது அடிமையானாள்? அவள் ஏன் அடிமையாக்கப்பட்டாள்? வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூக வடிவமே இருந்திருக்கிறது. இச் சமூக வடிவத்தில் ஆணைவிடவும் பெண்ணிற்கே கூடுதல் அதிகாரம் இருந்துள்ளது. பெண்ணே குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான பணியைச் செய்ததன் காரணமாக குடும்பத்தின் தலைமை பெண்ணிடமே இருந்தது. குழந்தைகள் தாயின் வழியிலேயே அடையாளம் காணப்பட்டனர். சமுதாயத்தின் அக் கால கட்டத்தில் திருமணமோ அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ சமூக கட்டுப்பாடாக இருக்கவில்லை. இதன் பொருள் அவர்கள் பாலியற் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தனர் என்பது அல்ல. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் ஆதிக்கம் பெண்ணிடமே இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரும்போது ஆணே(தந்தை) சமூக குழும வீட்டை நீங்கிச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகள் தாயுடனேயே இருந்தன. சமுதாயத்தின் இக் காலகட்டத்தில் உற்பத்திக் கருவிகளான அம்பு, வில், ஈட்டி போன்றன பொதுவானதாக முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருந்தன. அதாவது உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருக்கவில்லை. மந்தைகள், காணிகள் போன்ற உற்பத்தி வசதிகளும் இருக்கவில்லை. தனியார் உடமையாக எதுவும் இல்லாததால் ஒரு தந்தை தன் குழந்தைக்கு விட்டுச் செல்ல எதுவும் இருக்கவில்லை. உற்பத்தி சக்திகளின் விருத்தியின் விளைவாக உற்பத்திக் கருவிகளின் உடமை தனியார் கைக்கு மாறியது. அதன்பின் பணத்தின் திரட்சியும் மூலதனமும் உருவாகின. இந்த நிலையில் ஆண் தனது தனியுடமை தனது மனைவிக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு போவதை விரும்பினான். இதுவே ஒருதார மணம் நடைமுறைக்கு வந்த அடிப்படை. இந்த ஒருதார மணம் என்பது பெண்ணுக்குரியதாக இருந்ததேயொழிய ஆணுக்கு அல்ல. பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமாக மாறியது. ஆண் ஆதிக்கத்திற்கு வந்தான். இந்த ஆண் ஆதிக்க நிலை முடிவுக்கு வருமா? பெண் விடுதலை பெறுவாரா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில்

1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் இந்த தினமே உலக மகிளிர் தினமாகும் இந்த அமைப்பில் முதலாளிகளுக்கு இலாபத்தை தருகிற வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது. இதன்படி பெண்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது. இதை கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்றார் ரோசா லக்சம்பேர்க் பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது? பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும். உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும். அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம். ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும். அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு. முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது. ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை. ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு

செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார் சிறீதரன் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 33 வருடமாக மௌனமாக இருந்தவர் இப்போது அதுவும் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கோரியுள்ளார். இதற்கு காரணம் சாந்தன் மரணமும் அதையடுத்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்தியா மீதான கோபம். இனியாவது மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்து மக்களின் கோபத்தை தணிக்க இந்திய அரசு முன்வரவேண்டும்.

சாந்தன் உடலை ஊருக்கு எடுத்துச் சென்று

சாந்தன் உடலை ஊருக்கு எடுத்துச் சென்று தாயாரிடம் ஒப்படைத்திருக்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி அப்போது சாந்தன் பல நாட்களாக கழுத்தில் கட்டியிருந்த மாலையையும் தாயாரிடம் ஒப்படைத்துள்ளார். சாந்தனின் தாயார் வழக்கறிஞரின் காலில் விழுந்து என் மகனுக்கு நான் செய்யாத கடமை எல்லாம் நீங்கள் செய்துள்ளீர்கள்” என்று அழுதுதிருக்கிறார். “உங்கள் மகன் சாந்தனை உயிருடன் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றேன். முடியாமற் போய்விட்டது” என்று கூறி அழுதிருக்கிறார் வழக்கறிஞர். மூன்று நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று அருகில் இருந்து அவதானித்த முன்னாள் பெண் போராளி ஒருவர் பதிவு செய்கிறார். வழக்கறிஞரின் இந்தப் பணியை பாராட்டி கௌரவித்துள்ளது யாழ் ஊடக மையம். சாந்தன் மரண நிகழ்வில் பங்கு பற்றிய முருகன் தாயார் எப்படியாவது என் மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் என வழக்கறிஞரின் கரங்களை பிடித்து கெஞ்சுகிறார். வழக்கறிஞர் புகழேந்தி வெறும் வழக்கறிஞர் மட்டுமல்ல. அவர் ஒரு தமிழ்த் தேசிய உணர்வாளர். அதுவும் தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்த்தேசிய விடுதலையை நேசிப்பவர். அதனால்தான் அவர் நான் இந்தியனாக வரவில்லை. தமிழனாக கூறுகின்றேன் “ சாந்தன் மரணத்திற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் இரண்டுமே பொறுப்பு” என பகிரங்கமாக யாழ்ப்பாணத்தில் கூறினார். அவர் சிறப்புமுகாமில் உள்ளவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து உதவி வருகிறார். நான் எழுதிய சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் நூலுக்கு அணிந்துரையும் எழுதியிருக்கிறார். கொடுமை என்னவென்றால் சாந்தன் விடுதலை தாமதத்திற்கு இந்த வழக்கறிஞர்தான் காரணம் என்று ஒருவர் ஆதாரம் இன்றி அவதூறு செய்கிறார். இந்த நபர் யார் என்று பார்த்தால் நாலு சங்கிகளை வைத்து டில்லியில் கூட்டம்போட்டுவிட்டு இந்திய அரசு தமிழீழம் பெற்று தரப்போகிறது என்று கூறித்திரிபவர். இந்திய உளவுப்படையினரை திருப்திப்படுத்துவதற்காக சாந்தன் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் மீது சேறு பூசும் இந்த நாய்களுடன் கடிபடுவதைவிட அவற்றுக்கு வழி விடுவதே மேல்.

கஞ்சாவை விற்றார் .

கஞ்சாவை விற்றார் . பிடித்து சிறையில் போட்டார்கள். கஞ்சாவுடன் சேர்த்து பக்தியை விற்றார். இப்போது மகான் என்கிறார்கள் கடவுள் சிவனுக்கு தமிழ் தெரியாது என்று கூறிய கன்னட ஆசாமி. சிவராத்திரி வந்தால் கஞ்சாவை போட்டிட்டு இந்தாள் ஆடுற ஆட்டம் தாங்க முடியவில்லை. ஸ்டாலின் சார்! பிளீஸ், இந்தாளை பிடிச்சு உள்ளே போடுங்க.

தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில்

தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில் பசு மாடு ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இதை கவனித்த கோயில் யானை “ஏன் இந்தளவு வேகமாய் ஓடுகிறாய்?” என கேட்டது. அதற்கு அந்த பசு மாடு “ தெருவில் திரியும் நாய்களை பிடிக்க வண்டியுடன் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்” என்றது. இதைக் கேட்ட யானை ஆச்சரியத்துடன் “ நீதான் நாய் இல்லையே. நீ பசு மாடுதானே? நீ ஏன் ஓடுகிறாய்?” என கேட்டது அதற்கு அந்த பசுமாடு “ நான் பசுமாடுதான். ஆனால் அவர்கள் என்னை பிடித்தால் நான் நாய் இல்லை பசு என்பதை நிரூபிக்க 33 வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் ” என்றது. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது. இது ஒரு நகைச்சுவை கதைதான். ஆனால் இதைவிட நகைச்சுவையானது தமிழ்நாடு பொலிசாரின் நிஜக்கதைகள். இப்போது சாந்தன் இறந்த பின்பு குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை வழக்கில் இணைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபடுகிறது. இதைக் கேட்ட சிலர் இப்படியும் நடக்க முடியுமா என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு தருகிறேன் . தமிழ்நாட்டில் கிருபன் என்பவர் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம். அவர் மோட்டார் சயிக்கிளில் வருவதாகவும் அவரை கைது செய்யும்படி வயலர்ஸ்சில் பொலிஸ் கமிஷனர் அறிவித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் ஒருவர் வீதியால் அப்போது மோட்டார் சயிக்கிளில் வந்த ஒரு ஈழத் தமிழரை மறித்தார். அவரிடம் பெயர் என்ன என்று கேட்டபோது அவர் தன் பெயர் நிருபன் என கூறியிருக்கிறார். உடனே அந்த பொலிசார் இவர்தான் அந்த கிருபன் என நினைத்து கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த நிருபன் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஒரு முன்னாள் ரெலோ இயக்க போராளி. அப்போது இவர் இயக்கத்தில் இருந்து விலகி சென்னை திருவொற்றியூரில் பெற்றோல் விற்பனை நிலையம் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். தான் கிருபன் இல்லை, நிருபன் என்று அவர் எவ்வளவோ முறை கூறியும் பொலிசார் அதை கேட்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் உண்மையான கிருபன் கைது செய்யப்பட்ட பின்பும்கூட இவரை பொலிசார் விடுதலை செய்யவில்லை. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ரெலோ இயக்க போராளியான இவரை புலி இயக்க போராளி என்றுகூறி பல வருடங்களாக சிறையில் அடைத்துவிட்டார்கள். பல வருட சிறை மற்றும் சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்த அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் தற்போது ஜரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார். குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை அடைப்பது, கிருபனுக்கு பதிலா நிருபனை அடைப்பது தமிழக பொலிசாரின் வழமையே.

தமிழால் வாழ்ந்தவர் பலர்

தமிழால் வாழ்ந்தவர் பலர் தமிழுக்காக வாழ்ந்தவர் சிலரே அந்த சிலருள் பாவலேறு பெருஞ்சித்திரனார் ஒருவர் அவர் இருந்தவேளை அவரின் அருமை தெரியவில்லை ஆனால் இப்போது அவர் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. அதுதான் அவர் சம்பாதித்த சொத்து தமிழும் தமிழரும் இருக்கும்வரை அவர் பெயரும் உச்சரிக்கப்படும் பெண்களை கவிதை எழுத வைத்தது திராவிட இயக்கமே என்று வைரமுத்து போல் கூறி பரிசுகளும் பதவிகளும் பெற்றிருக்க முடியும். ஆனால் அவரோ ராஜிவ்காந்தி வயிறு வெடித்து சாக வேண்டும் என்று அறம்பாடி சிறைத் தண்டனையை அனுபவித்தார். ஏன் அவரை திராவிடமும் ஆரியமும் விரும்புவதில்லை என்பது இப்போது புரிகிறதா?

தமிழர் , தமிழ்நிலத்தில்

தமிழர் , தமிழ்நிலத்தில் அமைந்துள்ள தம் கடவுளை வணங்க முடியவில்லை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக்கூட தூக்கி எறிகிறார்கள் சிங்கள பொலிஸ். எம்மவர் கையில் எம் நிலம் கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த பிரச்சனை இருக்கவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? தமிழர் தம் கடவுளை வணங்குவதற்குகூட தமிழரிடம் அதிகாரம் இருக்க வேண்டும். பூநகரியில் சீன கம்பனி , இறால் கம்பனிக்கு உதவுவதை ஏன் எதிர்க்கவில்லை என தமிழ் தலைவர்களிடம் கேட்ட இந்திய தூதர் இது பற்றி கேட்கமாட்டாரா? தமிழ்க் கிருத்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் சிஙகள பௌத்த பேரினவாதிகளுக்கு எதிராக போராட மாட்டாரா?

ஆண்டவரின் வளர்ச்சி!

•ஆண்டவரின் வளர்ச்சி! பாவம். எப்படி இருந்த மனிதர். இப்படி ஆயிட்டாரே? ஊழலை ஒழிக்க மையம் ஆரம்பித்தவர் ஒற்றை எம்.பி சீட்டுக்காக ஊழல் திமுக வில் ஐக்கியமாயிட்டாரே?

ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து

ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து ஜெயா அம்மையார் தமிழக முதல்வராக இருந்தநேரம் அவரது சட்ட அமைச்சராக இருந்தவர் கிருஸ்ணசாமி. இந்த சட்ட அமைச்சர் 1991ல் ஒருநாள் மதுரை சிறைக்கு வந்து கைதிகளை பார்வையிட்டார். அப்போது என்னருகில் வந்தபோது “இவர் ஒரு ஈழப் போராளி. கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்” என சிறை ஜெயிலர் கூறினார். உடனே சட்ட அமைச்சர் மிகுந்த கோபத்துடன் “ இனி ஈழத் தமிழருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்காது. உங்கள் நெடுமாறனிடம் கூறுங்கள். ஈழத் தமிழரை ஆதரிக்க வேண்டாம் என்று” என்னைப் பார்த்து ஏசினார். ஆனால் வேடிக்கை என்னவெனில் பின்னர் இவரது இதே ஜெயா அம்மையார் ஈழத் தமிழரை ஆதரித்தது மட்டுமன்றி ராஜீவ் காந்தி வழக்கில் இருந்த ஏழு தமிழரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். நெடுமாறன் அவர்கள் ஆரம்பம் முதல் ஈழத் தமிழர்களையும் புலிகளையும் உறுதியாக ஆதரித்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்த விடயமே. இதனால் அவர் பல வழக்குகளை சந்தித்து பல வருடங்டகள் சிறையும் அனுபவித்தவர். மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை ஒருநாள் நெடுமாறன் அவர்கள் என்னை பார்வையிட வந்திருந்தார். அன்று நான் சிறைக் கண்காணிப்பாளருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தமையினால் அதைக் காரணம் காட்டி அவருக்கு பார்வையிட அனுமதிக்கவில்லை. அக் காலத்தில் சிறை மற்றும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு மாதா மாதம் நூறு ரூபா பணம் உதவியளித்து வந்தார் நெடுமாறன் அவர்கள். அதன்படி அவர் எனக்கும் பணம் உதவி செய்ய முன்வந்தார். ஆனால் நான் “எனக்கு நிறைய தோழர்கள் உதவி செய்கிறார்கள். எனவே எந்த உதவியும் இன்றி இருப்பவர்களுக்கு இந்த உதவியை வழங்குங்கள் “ என்று கூறினேன். பின்னர் எனது வழக்கில் நான் நிரபராதி என்று திண்டுக்கல் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தபோது தமிழக அரசு என்னை சிறப்புமுகாமில் அடைத்தது. அப்போது இதை அறிந்த நெடுமாறன் அவர்கள் சிறப்புமுகாமில் இருந்து விடுதலைபெற ஏதாவது சட்ட உதவி வேண்டுமா எனக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இவ்வாறு பல தடவைகள் எனக்கு உதவ முன்வந்தவர் நெடுமாறன் அவர்கள். அதனை நான் இங்கு நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். ஆனால் நெடுமாறன் அவர்கள் இப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் மீண்டும் வந்து ஈழம் பெற்று தரப்போகிறார் என்றும் கூறிவருவது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு கூறுவது ஈழத் தமிழருக்கு எந்த நனமையும் தராது என்பது நன்கு தெரிந்தும் ஏன் அவ்வாறு கூறி வருகின்றார் என்பது புரியவில்லை. எனினும் அவர் ஈழத் தமிழருக்கு அளித்து வந்த ஆதரவை மறக்க முடியாது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

போராட்டம் வெற்றி பெறட்டும்

போராட்டம் வெற்றி பெறட்டும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற வழி பிறக்கட்டும்! ஒன்று சேர்வோம்! ஒருமித்து குரல் கொடுப்போம்!! எமது மண்ணில் எமது கடவுளை நாம் வணங்குவதற்குரிய உரிமையை பெற தொடர்ந்து போராடுவோம்!!

கஞ்சா அடிச்சா சிரிப்புதானே வரும்

கஞ்சா அடிச்சா சிரிப்புதானே வரும் அதெப்படி சிரிப்பு நடிகருக்கு அழுகை வருகிறது? 😂😂

போதைபொருள் கடத்தல் மேட்டர் வந்ததும்

போதைபொருள் கடத்தல் மேட்டர் வந்ததும் மணல் கடத்தல் நபரை மறந்துவிட்டார்கள் சிறையில் கிடந்து வாடுவதைவிட இவர் அப்பூரூவராக மாறி காட்டிக் கொடுக்கலாமே?

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் தமது சொந்த செலவில் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் உடனே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதன்படி முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டு வருகிறார். ஆனால் தமிழக அரசு அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை இலங்கைக்கு அனுப்ப உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது. இந்தியாவில் உள்ள ஈழத் தமிழரை பலவந்தமாக அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என உயர்மன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்தவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள். தமிழக அரசின் இந்த சட்டவிரோத போக்கை கண்டிக்க வேண்டியவர்கள் இதுதான் சட்டநடைமுறை என தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கிறார்கள். இதே ராஜிவ் காந்தி வழக்கில் மரண தண்டனை பெற்றவர்களில் ஒருவர் ரங்கன். உச்சநீதிமன்றம் இவரது மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. அப்போது இவர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி லண்டன் வந்தார். லண்டனில் அவர் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகையில் 2012ல் மரணமடைந்துள்ளார். இங்கு எனது கேள்வி என்னவெனில் இதே ராஜிவ் காந்தி வழக்கில் இருந்த ரங்கன் லண்டன் வந்து வாழ இடங்கொடுத்த சட்டநடைமுறை இப்போது எப்படி முருகனுக்கு மறுக்கிறது? ஒரே காரணம்தான். அப்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கவில்லை.

புலவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு

புலவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு புலவரின் நினைவு இல்லத்தில் சாந்தனின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்கார்த்தி அவர்கள் சாந்தனின் படத்தை திறந்து வைத்துள்ளார். இந்திய மத்திய மாநில அரசுகளின் நீதியற்ற செயலால் உயிரிழந்த சாந்தன் எனக் குறிப்பிட்டு வரலாற்றுக்கு கடத்தியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

கை தட்டு பெறுவதற்கு

கை தட்டு பெறுவதற்கு குரங்கு பல விதங்களில் குட்டிக்கரணம் போட வேண்டும். ஆனால் புலி நடந்தாலே போதும். குறிப்பு – மன்னிக்கவும். பிரதமர் மோடியை குரங்குடன் ஒப்பிடுவதாக கருத வேண்டாம். உதாரணம் ஊனமானவை.😂

முதல் இந்தி எதிர்ப்பு மொழிப் போரில்

முதல் இந்தி எதிர்ப்பு மொழிப் போரில் உயிர்நீத்த இரண்டாம் ஈகி தாளமுத்து நினைவுநாள் 12.03.1939

வாரிசு அரசியலுக்கு

வாரிசு அரசியலுக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு தமிழ்நாட்டிலும் ஏற்படுமா?

பேச்சுவார்த்தைக்காக செல்லும்

பேச்சுவார்த்தைக்காக செல்லும் ஒரு தூதுவரை சுட்டுக்கொல்ல முடியுமா? அதுவும் அமைதிப்படை என்று வந்தவர்கள் செய்ய முடியுமா? சென்னையில் சிறை வைக்கப்பட்டிருந்த போராளி ஜொனியை தூதுவராக அழைத்துச் சென்று வன்னியில் இந்திய ராணுவம் நயவஞ்சகமாக கொன்ற தினம் 13.03.1988

உலகில் எந்த நாட்டில் இருந்தும்

உலகில் எந்த நாட்டில் இருந்தும் ஒரு இந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் ஈழத் தமிழ் இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது. இதுதான் இந்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமைச்சட்டம். ஏனெனில் ஈழத் தமிழரை இந்துக்களாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறிவரும் காசி ஆனந்தன், இந்திய அரசுக்காக ஈழத்தில் சிவசேனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தம், இருவரும் இனி என்ன கூறப்போகிறார்கள்? குறிப்பாக அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டியவர்கள் பதில் தருவார்களா?

சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி.

சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி. அவரின் உதவியாளர் போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக வரலட்சுமி NIAயினால் விசாரிக்கப்பட்டுள்ளார். தன் மகளை காப்பாற்றுவதற்காகவே சரத்குமார் பாஜகவில் ஜக்கியமாயுள்ளதாக பஞ்சாயத்து வந்துள்ளது. நாட்டாமைக்கே பஞ்சாயித்தா?

கமல், சரத்குமார் போன்றவர்கள்

கமல், சரத்குமார் போன்றவர்கள் எல்லாம் தனித்து கட்சி நடத்த முடியாமல் திமுக விலும் பாஜகவிலும் சரணடைவதை பார்க்கும்போது, எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் அடிபணியாது தனித்து நிற்கும் நாம்தமிழர் கட்சியினர் பாராட்டுக்குரியவர்களே. அவர்கள் இதுவரை வெற்றிபெறவில்லையே என வருந்த வேண்டியதில்லை. அவர்கள் தனித்து நிற்பதே வெற்றிதான்.

எந்தவொரு நீண்ட இரவுக்கும்

எந்தவொரு நீண்ட இரவுக்கும் விடிவு உண்டு என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஈழத் தமிழரின் 40 வருட அகதி வாழ்விற்கு ஒரு முடிவு வராதா?

நாலு திருடர்கள் ஒன்று சேர்ந்து தமக்குதாமே

நாலு திருடர்கள் ஒன்று சேர்ந்து தமக்குதாமே "பொலிஸ்" என பெயர் வைத்துக்கொண்டார்களாம். அப்புறம் இனி யாரும் தம்மை கைது செய்ய மாட்டார்கள் என எண்ணிக்கொண்டார்களாம். நம்புங்கள்! திமுகவில் எல்லாமே ஜனநாயக முறைப்படியே நடக்கிறது. வாரிசு முறையில் அல்ல.😂

இருவரும் ஈழத்தமிழர்கள்

இருவரும் ஈழத்தமிழர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட ஒருவர் வெடுக்குநாறி மலையில் ஈழத் தமிழரின் வணங்கும் உரிமைக்காக போராடுகிறார். இன்னொருவர் ஈழத் தமிழரின் கடவுளை வழிபடும் உரிமையை மறுக்கும் ஜனாதிபதியுடன் சேர்ந்து கிரிக்கட் பார்க்கிறார். இதில் யார் தமிழ்மக்களுக்கானவர்?

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14,

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார். கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன. மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன

மனிதனால் ஒரு புழுவைக்கூட உருவாக்க முடியாது.

மனிதனால் ஒரு புழுவைக்கூட உருவாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுள்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். ஒரு பாடசாலையை உருவாக்கினால் அதில் ஆயிரம் ஆயிரம் கல்விமான்கள் உருவாகுவார்கள். ஆனால் ஒரு கோயில் கட்டினால் அதன் முன் ஆயிரம் பிச்சைக்காரர்கள்தான் உட்காருவார்கள். “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும் - லெனின்

வெடக்குநாறிமலை சிவன் ஆலயத்தில்

வெடக்குநாறிமலை சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் உண்ணாவிரதம் ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் சென்னை ஆளுநர் மாளிகையில் விருந்து.

மார்க்ஸைப் படி

மார்க்ஸைப் படி லெனினைப் படி அப்புறம் அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு விளக்கு பிடி 4 சீட்டும் 25 கோடி ரூபா பணமும்தான் இலட்சியமென்றால் கட்சியை கலைச்சிட்டு திமுகவிலேயே சேர்ந்துடுங்க.

உச்சநீதிமன்றத்தால் விடுதலையான

உச்சநீதிமன்றத்தால் விடுதலையான ஏழு தமிழரில் ஒருவரான ரவிச்சந்திரன் அவர்களின் காரா புத்தக நிலைய திறப்புவிழா நடைபெற்றுள்ளது. ரவிச்சந்திரன் அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். உச்சநீதிமன்றத்தால் விடுதலையான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கடந்த 15 மாதங்களாக சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களால் தமிழ்நாட்டில் எந்தவித சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படவில்லை. ஆனால் முருகன், ஜெயக்குமார், பயஸ் ஆகியோரை வெளியில் விட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. இத்தனைக்கும் முருகனின் மனைவி நளினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஜெயக்குமாரின் மனைவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். மனைவியுடன் சேர்ந்துவாழ கணவனை அனுமதிக்க வேண்டும் என்பது உலக மரபு. ஆனால் அதையும்கூட ஏற்றுக்கொள்ள தமிழக அரசு தயாராக இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள். அதுவும் ஈழத் தமிழர்கள்.

ஒரு டவுட்!

ஒரு டவுட்! ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் கூட இருந்த அமீரை இத்தனை கேள்வி கேட்ட ஊடகங்கள் உதயநிதியைவும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியையும் ஏன் கேள்வி கேட்கவில்லை?

நினைவஞ்சலிகள்!

•நினைவஞ்சலிகள்! தனித் தமிழர் சேனைத் தலைவர் நகைமுகன் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும்.(14.03.2016) நகைமுகன் அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வாளர் மட்டுமன்றி உறுதியான ஈழத்தமிழர் ஆதரவாளரும்கூட. விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டவர். சிவசேனைத் தலைவர் பால்தக்ரே அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்க இவரே காரணம் என்றும் கூறப்பட்டது. 1991ல் ராஜிவ் காந்தி மரணத்தின் பின் ஈழத் தமிழரை ஆதரிக்க பலரும் அஞ்சிய சூழலில் இவர் தைரியமாக ஈழத் தமிழரை ஆதரித்தார். “பாயும்புலி பண்டார வன்னியன்” என்னும் இதழ் நடத்தி வந்தார். அதில் தமிழ் நாட்டில் ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து எழுதினார். குறிப்பாக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த என் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்

எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து

எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் வரம் என்பார்கள். அது எனக்கு நிறைய கிடைத்து வருவது மகிழ்ச்சியே. சிறுவயதில் அர்ச்சனை செய்து விபூதியை தாயார் என் நெற்றியில் பூசும்போது அன்று என் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொள்வேன். அதன்பின்னர் பெரியவனான பின்பு பிறந்த நாள் பற்றி ஒருபோதும் அக்கறை கொண்டதில்லை. ஒருமுறை நான் வேலுர் கோட்டையில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது (1992ம் ஆண்டு) அங்கு இருந்த காயம்பட்ட புலிப் போராளிகளால் எனது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கரப்பந்தாட்டப்போட்டி நடத்தி கொண்டாடினார்கள். இறுதியாக இரண்டு கண்ணும் இரண்டு கையும் அற்ற ஒரு போராளி எனக்கு புட்டும் பலாப்பழமும் பிறந்தநாள் பரிசாக தந்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இந்த வாழ்த்துக்கள் எனக்கு மகிழ்சியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.அவை தொடர்ந்து பயணிக்க துணைபுரிகின்றன.

ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக

ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக இன்னொரு நாட்டில் வாழும் அதே இனம் தீக்குளித்து மரணிப்பது என்பது ஒரு அதிசய வரலாறுதான். அந்த அதிசய வரலாற்றை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தாய் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 16 பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். 2009ல் இதே நாளில் (17.03.2009) ஈழத் தமிழருக்கு ஆதரவாக யுத்தம் நிறுத்தம் கோரி இருவர் தீக்குளித்து மரணம் அடைந்தார்கள். ஒருவர் அரியலூரைச் சேர்ந்த ராசசேகர். இன்னொருவர் கடலூரைச் சேர்ந்த நா. ஆனந்து. இவர்களுடைய தியாகம் மறக்க முடியாதது. ஈழத் தமிழர்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியது. ஆனால் இவர்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிர் தியாகம் செய்தும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. இவர்களது போராட்டத்திற்கோ அல்லது உயிர் தியாகத்திற்கோ இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. 8 கோடி தமிழர் அருகில் இருந்தும் வெறும் இரண்டு கோடி பேர் கொண்ட சிங்கள அரசு அஞ்சவில்லை அதற்கு ஓரே காரணம் அந்த 8 கோடி தமிழரிடம் அதிகாரம் இல்லை. மாறாக 8 கோடி தமிழரும் அடிமையாக இருப்பதால்தான் இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. சரி. அப்படியென்றால் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்? ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். இதை நான் கூறுவதாக கருத வேண்டாம். தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து போராட்டம் நடத்திய தோழர் தமிழரசன் கூறியிருக்கிறார்.

ஆயுதம் ஏந்திப் போராடுவதை

ஆயுதம் ஏந்திப் போராடுவதை “பயங்கரவாதம்” என்று கூறிய காந்திதேசம் என்னும் இந்தியாவின் அரசு, அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்திற்கு அளித்த மதிப்பு என்ன?

உனக்கான சுதந்திரத்தையும்,

"உனக்கான சுதந்திரத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள்" - மால்கம் எக்ஸ்

இன்று இவரின் பிறந்தநாள்

இன்று இவரின் பிறந்தநாள் இது இவரின் வாழ்வில் மறக்க முடியாத பிறந்தநாளாக இருக்கும் தமிழரின் வழிபாட்டு உரிமைக்காக போராடுவதும் அதற்காக சிறையில் அடைபட்டுக்கிடப்பதும் அச் சிறையிலேயே பிறந்தநாளை கழிக்க நேருடுவதும் பிறந்த நாளில் கணவர் சிறையில் என்பது மனைவிக்கு நிச்சயம் வருத்தம் தரும் கோவிலுக்கு வழிபடச் சென்ற தந்தை ஏன் இன்னும் வரவில்லை என்ற ஏக்கம் பிள்ளைகளுக்கு இருக்கும் இவர்களுடைய நிலம் இவர்களுடைய கோவில் இவர்களுடைய கடவுள் இவற்றை விற்றவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் இவற்றுக்கு இவர்கள் இன்று விலை கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

எங்களைப்போல் தமது விடுதலைக்காக

எங்களைப்போல் தமது விடுதலைக்காக போராடும் ஒரு இனம். அதுமட்டுமல்ல எமது போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கிவரும் இனம். பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தொடரும் அவர்கள் போராட்டம் வெல்லட்டும். குர்து இன மக்கள் விடுதலை பெற எமது வாழ்த்துகள்! அவர்களின் ஆண்டு பிறப்பு 20.03.24