Saturday, May 25, 2024

நான் காட்லிக் கல்லூரியில் படித்தபோது

நான் காட்லிக் கல்லூரியில் படித்தபோது கரவெட்டியில் இருந்து துன்னாலை ஊடாக சயிக்கிளில் பருத்தித்துறைக்கு செல்வதுண்டு. அப்போது எம்முடன் துன்னாலையில் இருந்து புலோலிவரை பாலகுமார் எம்முடன் வருவார். அவர் அப்போது புலோலியில் இருந்த கிராமிய வங்கியில் பணிபுரிந்தார். அப்போது ஒருநாள் அவ் வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. அதன் பின்பு பாலகுமாரையும் நாம் காணவில்லை. அந்த வங்கிக்கொள்ளையில் பாலகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக அவரை பொலிசார் தேடுவதாக பின்னர் அறிந்தோம். அதனால் அவர் இந்தியா சென்று தலைமறைவாக இருந்து வந்தார். பின்னர் மருதையாற்றில் தோழர் தமிழரசன் நடத்திய வெடி குண்டு சம்பவத்தின் பின்னர் என்னை சந்திக்க வேண்டும் என்று அவசர செய்தி ஒன்றை பாலகுமார் அனுப்பியிருந்தார். அதனால் அவரை சென்னை மெரினா கடற்கரையில் சந்தித்தபோது என்னையும் எனது சக தோழர் நெப்போலியனையும் கொல்லுமாறு இந்திய உளவுப்படை தம்மிடம் கேட்டிருப்பதாக கூறினார். “நான் அந்த பாவத்தை செய்ய மாட்டேன். ஆனால் எம்மில் இருக்கும் சிலரை நம்ப முடியாது. கவனமாக இருக்கவும்” என அவர் கூறினார் அவர் கூறிய தகவலை உடன் தோழர் நெப்போலியனுக்கு தெரியப்படுத்த முடியவில்லை. ஏனெனில் நெப்போலியன் அப்போது மலையகத்தில் இருந்தார். அங்கு அவர் மலையக விடுதலை முன்னணி (ULO)என்ற அiமைப்பை உருவாக்கி அதில் பல மலையக இளைஞர்களை திரட்டி போராடிக் கொண்டிருந்தார். அவ்வேளை தோழர் நெப்போலியனை இந்திய உளவுப்படையின் உத்தரவுக்கிணங்க ஈரோஸ் இயக்கத்தினர் கொன்றார்கள். பாலகுமார் எச்சரித்திருந்தும்கூட தோழர் நெப்போலியனை காப்பாற்ற முடியாமற்போனது வேதனையே. குறிப்பு – பாலகுமாரின் கருத்துகள் நூலாக வெளிவந்துள்ளது. நூல் வெளியீடு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment