Wednesday, July 24, 2013

மங்கை அக்கா! நீங்கள் நீடூழி வாழ்க.

மங்கை அக்கா! நீங்கள் நீடூழி வாழ்க.

கடந்த சனிக்கிழமை லண்டன் மாநகரில் அழகிய தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் மண்டபம் நிறைந்த கூட்டத்தினர் மத்தியில் காலம் சென்ற தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் பாரியார் மங்கையர்கரசி அக்கா அவர்கள் தனது 80வது பிறந்த நாளை மிகுவும் குதூகலத்துடன் கொண்டாடினார்.

அக்கா! உங்களின் இனிமையான குரலில் பாடல்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு போராடப் புறப்பட்ட பல இளைஞர்கள் மாண்டுபோய்விட்டார்கள். உங்களை நம்பிய மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் முள்ளிவாயக்காலில் பலியாகிவிட்டார்கள். அந்த கொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டு தமிழகத்தில் பலர் தீக்குளிக்கின்றனர். அந்த ரத்தம் காயுமுன்னர் உங்களுக்கு இப்படி ஒரு ஆடம்பர பிறந்தநாள் விழா தேவைதானா? இது பாதிக்கப்பட்ட மக்கள் பலரின் மனதைப் புண்படுத்தும் என்பதை எப்படி கவனத்தில் கொள்ளாமல் விட்டீர்கள்?

இன்னும்கூட பலர் சிறையில் வாடுகின்றனர். சில முன்னாள் பெண் போராளிகள் வாழ வழியின்றி விபச்சாரம் செய்வதாகக்கூட செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் உங்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவைதானா? உங்கள் பிறந்தநாள் செலவை இப்படியான போராளிகளுக்கு உதவி செய்து மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்டியிருக்கலாம் அல்லவா?

அக்கா! “சிங்களவனின் தோலை உரித்து செருப்பை தைக்க வேண்டும்” என்று அன்று நீங்கள் பேசிய உணர்ச்சிப் பேச்சைக் கேட்டு போராட வந்த இளைஞர்களில் நானும் ஒருவன். ஆனால் நீங்களோ யுத்தம் முடிந்ததும் நாட்டுக்கு சென்று முதன் முதலாக உங்கள மக்கள் மாண்ட முள்ளிவாய்க்காலுக்கு செல்லவில்லை. அல்லது முள்ளிவேலிக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. மாறாக இறந்த சிங்கள பொலிஸ்காரனின் வீட்டுக்கு சென்று அவரைப் பாராட்டியதோடு “சிங்களவர்கள் நல்லவர்கள்” என்று வேற அறிக்கை விட்டீர்கள். இந்த வார்த்தைகளை முன்னரே கூறியிருந்தால் பல தமிழ் இளைஞர்கள் இறக்காமல் தப்பியிருப்பார்களே?

அக்கா! தரப்படுதலுக்கு எதிராக எல்லா மாணவர்களும் போராட வேண்டும் என்று உசுப்பேத்திவிட்டு உங்கள் மகனுக்கு மட்டும் மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் எடுத்துக்கொடுத்தீர்கள். அதுமட்டுமா 36 இயக்கங்கள் இருந்தும் அது போதாது என்று படித்துக்கொண்டிருந்த உங்கள் மகன் தலைமையில் ஒரு இயக்கம் ஆரம்பித்தீர்கள். அதற்கு மலேசியா எல்லாம் சென்று நிதி சேகரித்தீர்கள். ஆனால் இப்போது ஆயுதப் போராட்டத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?

உங்களை குறை காண வேண்டும் என்பதற்காக இவற்றை நான் எழுதவில்லை. மாறாக ஆடம்பரமான பிறந்தநாள் விழாக்களை கொண்டாடி மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்ட வேண்டாம். தமிழ்நாட்டில் பலர் எமக்காக விழாக்களை, கொண்டாட்டங்களை தவிர்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நல்ல முன் உதாரணத்தை காட்ட வேண்டிய நீங்களோ அது பற்றி அக்கறையின்றி இருப்பது கவலை தருகிறது. எனவேதான் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன். உங்களால் அந்த மக்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் தயவுசெய்து அந்த மக்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ளாதீர்கள்.

No comments:

Post a Comment