Tuesday, April 29, 2014

கதை ஒளி – ஓர் அறிமுகம்

கதை ஒளி – ஓர் அறிமுகம்

“கதை சொல்லடா தமிழா” என்னும் குறூப் முகநூலில் கண்ணதாஸ் காசிநாதர் மற்றும் அவரது நண்பர்களால் இயக்கப்படுகிறது. அதில் நானும் ஒரு அங்கத்தவராக இருப்பது மகிழ்வு தருகிறது. அதில் கதைகளை எழுதி வந்த அவர்கள் தற்போது “கதை ஒளி” மூலம் கதை சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதுவரை சுமார் 100 க்கு மேற்பட்ட கதைகளை சொல்லியுள்ளனர்.

கதை சொல்வதும் ஒரு கலை. அது மக்களுக்கான கலையாக இருக்க வேண்டும். முன்னாள் போராளியும், புரட்சிகர சிந்தனையும் கொண்ட கண்ணதாஸ் காசிநாதர் இந்த “கதை ஒளி” யில் மக்களுக்கு பயன் உள்ள படைப்புகளை கொடுப்பார் என நம்புவோம்.

“மலைகளை அகற்றிய மூடக் கிழவன்” கதையைக் கூறியே படிப்பறிவற்ற கோடிக் கணக்கான பரந்துபட்ட சீன மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் தோழர் மாசேதுங் பெற்றார். இன்றும்கூட அந்த மக்கள் மத்தியில் இருந்து மாசேதுங் புகழை யாராலும் அழிக்க முடியவில்லை. அதேபோல் தமிழகத்தில் ஜெயா அம்மையார் மற்றும் கலைஞர் கருணாநிதி போன்றோர் சிறிய கதைகளை சொல்லியே தங்கள் தொண்டர்களை வழி நடத்தி வருவதை நாம் காணலாம்.

“ஒரு பூங்காவில் தனித்து இருந்த அந்த தொழிலாளி பெரு மூச்சு விட்டான். அவனை ஸ்டாலினின் உளவுப்படை கைது செய்தது. அவர் அரசியல் பேசினான் என குற்றம் சுமத்தப்பட்டது.” இது ரஸ்சியாவில் ஸ்டாலின் இரும்புத்திரை ஆட்சி என்பதற்கு அந்தக் காலத்தில் முதலாளித்துவ கட்சிகளால் பரப்பப்பட்ட பிரபல்யமான ஒரு கதை.

இந்த கதையே பின்னர் புலிகள் காலத்திலும் மாற்றிக் கூறப்பட்டது. அதாவது கிளிநொச்சியில் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனை பொட்டரின் புலனாய்வு துறை கைது செய்தது. அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சாப்பிடும் நேரம் தவிர வாய் திறந்து விட்டான் என்பது. இது புலிகளின் பிரதேசத்தில் பலிகளுக்கு எதிராக பே முடியாது என்பதற்கு கிண்டலாக கூறப்பட்ட ஒரு பகிடி.

இப்படி சிறிய கதைகள் மிகப் பெரிய அரசியலை கூறுவதற்கு பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் இங்கு கதை ஒளியில் கூறப்படும் கதைகள் அந்தளவுக்கு அரசியலை கொண்டிருக்காவிடினும் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்றளவில் நிச்சயம் பாராட்டலாம்.

“கதை சொல்வது படிப்பறிவற்ற பாமர மக்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே. எனவே முகநூலிலும், யுரியுப்பிலும் கதை சொல்வதால் என்ன பயன்? இது பாமர மக்களுக்கு சென்றடையுமா?” என்ற கேள்விகளும் விமர்சனங்களும் எழலாம். ஆனால் இது நாளடைவில் நல்ல கதைகள் உருவாகுவதற்கும், அது பரந்து பட்ட மக்களுக்கு சென்றவடைதற்கும் நிச்சயம் வழி கோலும் என நம்பலாம்.

கதை ஒளி ஸ்தாபகர் கண்ணதாஸ் காசிநாதருக்கும் அவரது நண்பர்களுக்கும் எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு.

அன்பான தமிழ் மக்களே!

சித்திரையல்ல தமிழர் புத்தாண்டு.
தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு.
இதையே இனி வழக்கமாக்கி கொள்வோம்.

அமெரிக்காவில் கறுப்பர்களை மட்டுமல்ல அவர்களது கருப்பு நாய்களையும் சுடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு?

• அமெரிக்காவில் கறுப்பர்களை மட்டுமல்ல
அவர்களது கருப்பு நாய்களையும்
சுடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு?

அமெரிக்க நீதி மட்டுமல்ல
உலக நீதியும் இதுதானோ?

நம்புங்கள்!
அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு
அமெரிக்கா ஒரு சுதந்திர நாடு
அமெரிக்கா ஒரு மனிதாபிமான நாடு
அங்கு ஒரு நாயைச் சுடுவதாக இருந்தாலும்
நன்கு விசாரித்தே சட்டப்படியே சுடுவார்கள்!

https://www.facebook.com/photo.php?v=808757975820572&set=vb.109191125777264&type=2&theater
Wrażliwe osoby niech nie oglądają tego filmu. Policjant w USA zastrzelił psa. W tej sytuacji wszystko jest bez sensu - właściciel psa drażniący policję ostentacyjnym filmowaniem ich pracy, aresztowanie (wszystko na to wskazuje, że bezprawne...See more

காங்கிரசைவிட எந்தக் கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்துள்ளது? – சோனியா காந்தி கேள்வி.

காங்கிரசைவிட எந்தக் கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்துள்ளது? – சோனியா காந்தி கேள்வி.

அமைதிப்படையை அனுப்பி

ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்றது

பல தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது

கோடிக் கணக்கான சொத்துகளை சேதப் படுத்தியது

இலங்கை இனவெறி அரசுக்கு தொடர்ந்து உதவி வருவது

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு துணை நின்றது

இவ்வாறு தமிழ் இன அழிப்பை மேற்கொள்வது “நன்மை” என்றால்

அதிக நன்மை செய்தது காங்கிரசு என்பதில் சந்தேகம் இல்லை.

அதனால் தமிழக மக்களே!

காங்கிரசுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும்
இலங்கை தமிழர்களை அழிப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என்பது மட்டுமல்ல
தமிழக மீனவரைக் கொல்வதற்கு வழங்கும் ஆதரவு என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இந்த தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்பதை விட
காங்கிரசு தோற்க வேண்டும் என்பதை மறந்து விடாதிர்கள்.
நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் தீர்ப்பை எதிர்பார்த்து இலங்கை தமிழ் மக்கள் காத்து இருக்கிறார்கள்.

விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி இலங்கையில் நடத்தக் கூடாது. ஆனால் இலண்டனில் நடத்தலாம். இது என்ன நியாயம்?

• விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி
இலங்கையில் நடத்தக் கூடாது. ஆனால்
இலண்டனில் நடத்தலாம்.
இது என்ன நியாயம்?

புரட்சிப் புயல் வைகோ அவர்களே!

புலத்தில் கச்சேரிகள் நடக்கலாம்.
குத்தாட்டம் நடக்கலாம். ஆனால்
தாயகத்தில் நடந்தால் துரோகம் என்கிறீர்கள்.
புலத்து தமிழனுக்கு ஒரு நியாயம்
தாயக தமிழனுக்கு இன்னொரு நியாயமா?


அன்று இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது அதனைக் காட்டாத தமிழக தொலைக்காட்சிகள்,

அன்று இலங்கையில் தமிழ் இனம் அமிக்கப்பட்டபோது அதற்கு எதிராக வாய் திறக்காத தென்னிந்திய கலைஞர்கள்,

இன்று கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வந்து புலத்தில் தமிழனிடம் பணம் பறிக்க முயலுகின்றனர்.

புலத்து தமிழர்களே!

என்ன நிகழ்ச்சி பார்க்க வேண்டும்?
எங்கு சென்று பார்க்க வேண்டும்?
எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும்?
என்பதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விடயங்களாக இருக்கலாம.
அதில் தலையிட எமக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம.

ஆனால் உங்களுக்கு சொல்ல ஒரு விடயம் எம்மிடம் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி டிக்கட் ஆகக் குறைந்த விலை இலங்கை ருபாயில் சுமார் 5000.

இந்த 5000 ரூபா இருந்திருந்தால்,

வன்னியில் இரண்டு சிறுவர் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியிருக்க மாட்டார்கள்!

வன்னியில் ஒரு தாய் பசிக் கொடுமையால் தன் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றிருக்கமாட்டார்!

இப்படி பல உதாரணங்களை உங்களுக்கு காட்ட முடியும்.
இனி முடிவு உங்கள் கையில்

இப்படியான குப்பை நிகழ்ச்சிகளை பகிஸ்கரித்து அந்த பணத்தை தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு கொடுத்து உதவப் போகிறீர்களா? அல்லது

தாயகத்தில் உள்ள உறவுகள் எக் கேடு கெட்டாலும் பரவாயில்லை, இந்த தென் இந்திய குப்பைகளுக்கே அள்ளிக் கொடுக்கப்போகிறீர்களா?

சிந்திப்பீர்!
நல்ல முடிவு எடுப்பீர்!
தாயக உறவுகளுக்கு நம்பிக்கை கொடுப்பீர்!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

• நீங்கள் உங்கள் மாளிகையில் வளர்த்த கிளிகள் பறந்து விட்டதே என்று கவலை கொண்டீர்களாம். ஆனால் மக்களோ சமாதனாப் புறா வராமல் போய் விட்டதே என்று கவலை கொள்வதை தாங்கள் அறிவீர்களா?

• பறந்து சென்ற உங்கள் கிளிகளை அதிகாரிகள் தேடிக் கண்டு பிடித்துவிட்டார்களாம் என அறிந்து நிம்மதி பெரு மூச்சு விட்டோம். ஏனென்றால் உங்கள் கிளிகளும் காணாமற் போனதற்கு லண்டனில் உள்ள புலிகள் காரணம் என்று கூறிவிடுவீர்களோ என பயந்துவிட்டோம். ஆனால் மக்கள் விரும்பும் சமாதானப் புறவை யாராவது தேடிக் கொடுப்பார்களா என மக்கள ஆவலுடன் காத்து இருப்பதை தாங்கள் அறிவீர்களா?

• நீங்கள் முதன் முதலில் பதவியேற்ற போது லண்டனில் உங்களை சந்த்தித்த தமிழர்கள் சிலரிடம் “தமிழீழம் தவிர அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் புலிகள் எனக்கு அவசாசம் தருகிறார்கள் இல்லையே” எனக் கூறினீர்கள். ஆனால் இப்போது புலிகள் அற்ற ஜந்து ஆண்டுகள் உங்கள் முன் இருந்தும் எந்த ஒரு தீர்வையும் நீங்கள் முன்வைக்கவில்லையே? அது ஏன் என்று கூறுவீர்களா?

• தமிழ்மக்கள் புலி ஆதரவாளர்களை தவிர்த்து, தமிழீழத்தைக் கைவிட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பை தேர்தல் மூலம் தெரிவு செய்து உங்களிடம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ மீண்டும் புலிகள் என கோசம் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

• “ஆனையிறவில் இருக்கும் இராணுவ முகாம் ஒரு நாள் அம்பாந்தோட்டைக்கு மாறும். அன்று இதே ராணுவம் சிங்கள மக்களைக் கொல்லும்” என்று டெலோ இயக்க தலைவர் தங்கத்துரை அன்று கூறினார். அதேபோல் இன்று உங்கள் குண்டர் படை அம்பாந்தோட்டைக்கு வந்த ஜ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களையே அடித்து விரட்டியதையை நாம் கண்டு கொண்டோம்.

• நீர்கொழும்பில் குடிதண்ணீரில் நஞ்சு கலக்க காரணமான இந்திய கம்பெனிக்கு எதிராக சிங்கள மக்கள் போராடியபோது இந்தியாவுக்காக உங்கள் ராணுவம் சிங்கள மக்களைக் கொன்றதை கண்டோம்.

• நீங்கள் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றியதாக கூறுகிறீர்கள். ஆனால் உண்மை என்னவெனில் முன் எப்போதும் விட இப்போதுதான் இலங்கை ஏகாதிபத்தியத்திற்கு அதிக அளவில் விற்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு விற்கப்பட்டுவிட்டது.

• 1983க்கு முன்னர் இலங்கையில் இந்திய முதலீடு என்பது வெறும் 12 வீதமே. ஆனால் இன்று இந்திய முதலீடு என்பது 90 வீதம். அதாவது உள்ள மொத்தம் 700 வெளிநாட்டு கம்பனிகளில் 652 இந்திய கம்பனிகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தினால் அதிக இலாபம் அடைந்திருப்பது இலங்கை மக்கள் அல்ல இந்தியா மட்டுமே என்பது இதில் இருந்து தெரியவில்லையா?

• பிரபாகரன்களும் புலிகளும் தானாக உருவாவதில்லை. இலங்கை அரசின் தவறுகளே அவைகள் உருவாகுவதற்கு காரணம் என்று உங்கள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்கா கூறினார். அப்படியென்றால் இன்று மீண்டும் புலிகள் உருவாகிறார்கள் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் அதற்கும் உங்கள் அரசுதானே காரணமாகும். அப்படியிருக்க எதற்காக அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுகிறீர்கள்?

• அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதன் நியாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அடக்குமறை மூலம் ஒரு இனத்தின் சுதந்திர உணர்வை அழித்துவிட முடியாது என்பதை உலக வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

“தூசிகள் துடைக்காமல் அகலாது. இறுதிவரை போராடாமல் வெற்றி கிடைக்காது” என்று தோழர் சண் கூறியிருக்கிறார்.

இன்றைய இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதே.

இலங்கை அரசின் அடக்கு முறைக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றினைந்து போராடுவோம்.

இறுதி வெற்றி உறுதி எமக்கு

சிவசேனை தாமதமான ஆனால் தவிர்க்க முடியாத ஒரு விமர்சனம்!

சிவசேனை
தாமதமான ஆனால் தவிர்க்க முடியாத ஒரு விமர்சனம்!

இது
ஈழத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட
ஈழத் தமிழர்களால் நடிக்கப்பட்ட
ஈழத் தமிழரால் இயக்கப்பட்ட
இலண்டனில் எடுக்கப்பட்ட
ஒரு இந்தியப் படம்.

தென் இந்தியப் படங்களுக்கு நிகராக எடுக்க வேண்டும் என்ற ஆவலில்
இன்னொரு தென்னிந்திய படமாகவே எடுக்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றமே!

கதை என்று பார்த்தால்
அன்றைய எம்.ஜி. ஆர் படங்கள் போல
பின்பு வந்த ரஜனி படங்கள் போல
இன்றைய விஜய் படங்கள் போல
தாயைக் கொன்றவனை மகன் பழிவாங்கும் கதை.

ஆனால் இந்தக் கதையை லண்டனில் தமிழர் வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களுடன் இணைத்து சொல்லியிருப்பது கொஞ்சம் வித்தியாசம் மட்டுமல்ல சற்று “திரில்”லிங்காவும் உள்ளது. பாராட்டுகள்.

தமிழ்நாட்டு சந்தையை எதிர்பார்த்து கதாபாத்திரங்கள் தமிழக தமிழ் பேச வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் என்னதான் தமிழக தமிழ் பேசினாலும் சரி, அல்லது தமிழக படம் போல் எடுத்தாலும்கூட ஈழத் தமிழர் படங்களை “கோடம்பாக்கம்” வரவேற்றக்போவதில்லை என்பதே கசப்பான உண்மை.

“கோடம்பாக்கம்” சினிமா இந்தியன் என்ற ரீதியில் தெலுங்கனை வரவேற்கும். மலையாளிகளை வரவேற்கும். ஏன் கன்னடனைக் கூட வரவேற்கும். ஆனால் ஈழத் தமிழனை ஒருபோதும் வரவேற்காது. இதுதான் இத்தனை கால வரலாறு. இதனை உடைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

தென்னிந்திய சினிமா மட்டுமல்ல தென்னிந்திய தொலைக்காட்சிகளும் அதே அணுகுமுறையையே கடைப்பிடிக்கின்றன. உலகத் தமிழர்களின் தொலைக்காட்சி என்று சன் டிவி சொல்லும். ஆனால்; அதன் உலகத் தமிழர் என்பது இந்திய தமிழர் மட்டுமே. கலைஞர் டிவி க்கு அருகில் ஈழத் தமிழன் படைப்பு மட்டுமல்ல ஈழத் தமிழனே கூட நெருங்க முடியாது. ஈழத் தமிழர்களின் குரல் என வேடம் போடும் விஜய் டிவி கூட இதுவரை ஒரு ஈழத் திரைப்படத்தை ஒளிபரப்பியதில்லை. ஏன் என்று கேட்டால் தரம் நன்றாக இல்லையாம்.

எனவே ஈழத் தமிழர்கள் தென்னிந்திய சந்தையை நம்பி அவர்களுக்காக படம் பண்ணி அவர்களின் ஆங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்காமல் அவர்கள் எம்மை திரும்பிப் பார்க்கும் வண்ணம் தனித்துவமான படங்களை எடுப்பதே பொருத்தமாகும்.

அமெரிக்க கொலிவூட் படங்களுக்கு நிகராக ஈரானிய படங்கள் அமைவது போல்
உலக கவனத்தைத் திருப்பும் பாலஸ்தீன படங்களைப் போல்
ஈழத் திரைப்படங்களும் அமைய வேண்டும்.

ஈழத் தமிழர்கள் அதனைக் குறிக்கோளாகக் கொண்டு படங்களை தயாரிக்க வேண்டும்.

ஆம். ஈழத் தமிழர்களால் முடியும்.
அந்த நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.

எழுவர் விடுதலை தாமதமா? அல்லது தடுக்கப்படுகிறதா?

எழுவர் விடுதலை
தாமதமா? அல்லது தடுக்கப்படுகிறதா?

எழுவர் விடுதலை மீண்டும் ஒரு முறை தடுக்கப்பட்டிருக்கிறது.
எத்தனை முறை தடுத்தாலும் அவர்கள் விடுதலை பெறுவது தவிர்க்க முடியாதது.

ஆம். தமிழ்மக்களின் போராட்டம் அவர்களை நிச்சயம் விடுதலை செய்யும்.

எழுவர் விடுதலையை கலைஞர் தடுத்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.

ஏன் ஜெயா பரோலில் விடுதலை செய்யலாம்தானே என இன்னும் சிலர் கேட்கின்றனர்.

ஆனால் இவர்களை எல்லோரும் இந்த விடுதலையை எதிர்ப்பவர்கள் சோனியாவின் மத்திய அரசே என்பதை மறந்துவிடுகின்றனர். அல்லது மறைத்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் ஒரு பகுதியே.
அதுவும் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியே.
அதில் ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது
மிகப் பெரும் முட்டாள் தனமே.

• பேரறிவாளனை விசாரித்த அதிகாரியே அவர் ஒரு அப்பாவி என்று கூறிய பின்பும் அவரை விடுதலை செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்?

• ஏ.கே 47 வைத்திருந்த சஞ்சய் தத்திற்கு இதுரை 3 முறை பரோல் லீவு வழங்கிய மத்திய அரசு பற்றரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு பரோல் லீவு வழங்க மறுப்பது ஏன்?

• பட்டப்பகலில் கூலிக்கு கொலை செய்த சங்கராச்சாரிக்கு ஒரு நீதி. பேரறிவாளனுக்கு இன்னொரு நீதி. இதுதான் இந்திய அரசின் நீதியா?

எழுவர் விடுதலையில் எற்படுத்தப்படும் தாமதம் தமிழ்நாடு விடுதலை குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிறது.

Saturday, April 12, 2014

இனம்” படத்தின் மீதான எதிர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம்!

• “இனம்” படத்தின் மீதான எதிர்ப்பு
ஒரு தவறான முன்னுதாரணம்!
இது பலவீனத்தின் வெளிப்பாடு!

இலங்கை, இந்திய அரசுகள்
பல திரைப்படங்களை தடை செய்துள்ளன. 
பல நூல்களை தடை செய்துள்ளன.
பல பாடல்களை தடை செய்துள்ளன.
அப்போதெல்லாம் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றோம்.

இன்று “இனம்” படம் மீது எதிர்ப்பு தெரிவிப்பதும்
அதனை ஓடவிடாமல் தடை செய்வதும் வெட்கக் கேடானது.

எமது இன உணர்வு பலவீனமானது அல்ல. அது மிகவும் பலமானது.
ஓரு “இனம்” மட்டுமல்ல 100 “இனம்” படம் வந்தாலும் அதனை உடைத்துவிடமுடியாது.

ஏன் “இனம்” படத்தை தடை செய்ய வேண்டும்?
ஏன் எங்களால் சிறந்த இன உணர்வுப் படங்களை எடுக்க முடியாது?

கலாச்சாரக் காவலர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

ஆயிரம் மலர்கள் மலரட்டும்
நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்.

மக்களுக்கான கலை
மக்களுக்கான இலக்கியம்
மக்களுக்கான சினிமா படைப்போம்.

அதுவே புரட்சியை முன்னெடுக்க துணை செய்யும்.

“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா?

• “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா?

"கசப்பான உண்மைகளையும் மறைக்காமல் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியை பெற்று தருவார்கள்"- வியட்நாம் தந்தை கோசிமின்

26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசி மின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார்.

ஆனால் இன்று மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூறிவருகிறார்கள்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது

(1) தமிழ் மக்களை பிரபாகரன் வருகைக்காக காத்து இருக்க வைக்கின்றது.

(2) தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு தலைமை உருவாவதைத் தடுக்கிறது.

(3) தமிழ் மக்கள் இன்னொரு போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தடுக்கிறது.

(4) கோத்தபாயா “புலிகள் இருக்கிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய உதவுகிறது.

(5) மகிந்த ராஜபக்ச இதனைக் காட்டி தேர்தலில் தொடர்ந்து வெல்ல வழி செய்கிறது.

(6) ஜ.நா வில் புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள் என்றும் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த இடம் அளிக்கிறது.

(7) தமிழ் மக்கள் பல்லாயிரம் பேரைக் கொல்ல கொடுத்துவிட்டு தான் மட்டும் தப்பி சென்றுவிட்டார் என பிரபாகரன் மீது சிலர் விமர்சனம் செய்ய இடம் கொடுக்கிறது.

(8) தனது மகன், மகள், மனைவி எல்லாரும் இறந்துவிட தான் மட்டும் தப்பிச் செல்லும் அளவிற்கு பிரபாகரன் சுயநலமானவரா? என சிலர் கேட்டு கொச்சைப்படுத்த வைக்கின்றது.

(9) பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது இலங்கை இந்திய அரசின் நோக்கங்களுக்கே அதிகம் துணை செய்கிது.

(10) மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. நட்டமே அதிகம்.

பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு உதவவில்லை. மாறாக அது எதிரிக்கே அதிகம் துணை செய்கிறது.

மக்களை நம்புவோம்.
மக்களுக்கு உண்மைகளை கூறுவோம்.
மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் .

தமிழக கட்சிக்கு பிரபாகரன் தலைவராக முடியுமா?

தமிழக கட்சிக்கு பிரபாகரன் தலைவராக முடியுமா?
தமிழக கட்சி தமிழீழம் பெற்றுத் தர முடியுமா?

"ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்"- தந்தை பெரியார்.

"தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதே தமிழீழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும்"- தோழர் தமிழரசன்.

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தமிழக கட்சிகளுக்கு ஒரு ஆசானாக இருக்கலாம். அல்லது வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால் அவர் ஒருபோதும் தமிழக கட்சிகளுக்கு தலைவராக இருக்க முடியாது. அவரைத் தலைவராக கூறுவது அரசியல் அறிவீனமாகும்.

தமிழீழம் வேண்டுமாயின் அதற்கு ஈழத் தமிழர்களே போராட வேண்டும். அதற்கு தமிழக தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கலாம். உதவிகள் செய்யலாம். ஆனால் தமிழக கட்சி போராடி தமிழீழம் பெற்று தரப் போவதாக கூறுவது சாத்தியமற்றதாகும்.

தமிழகத்தில் இருந்து தமிழீழத்திற்காக போராட விரும்புவோர் தமிழ்நாடு விடுதலைக்காக போராடலாம். ஏனெனில் தமிழ்நாடு விடுதலை பெற்றால் அடுத்த விநாடியே தமிழீழம் தானாக விடுதலை பெறும் .

• தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்காக போராட விரும்புவோர் தமிழ்நாடு விடுதலையை முன்னெடுக்க தயங்குவது ஏன்?

• தமிழீழ ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்போர் தமிழ்நாடு விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க மறுப்பது ஏன்?

• ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரனை புகழ்பவர்கள் தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசன் பெயரைக்கூட உச்சரிக்க தயங்குவது ஏன்?

• முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்தவர்கள் அதில் தோழர் தமிழரசனுக்கு இடம் வழங்க மறுத்தது ஏன்?

“தமிழீழம் உருவானால் அது தமிழக தமிழர்களுக்கு ஒரு எழுச்சியைக் கொடுக்கும். அவர்கள் தனிநாடு கேட்டு போராடுவார்கள். தமிழ்நாடு உடைந்தால் இந்தியா சுக்கு நூறாக உடைந்துவிடும். எனவேதான் இந்தியா தமிழீழம் உருவாக விடாமல் தடுக்கிறது” என்று சிலர் இந்திய தலையீட்டுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம், “இலங்கை தமிழர்களைத் தொடர்ந்து இந்திய அரசு நசுக்கினாலும் தமிழகம் கொந்தளிக்கும். தனிநாடு கேட்டு போராட்டம் ஆரம்பிக்கும்” என்பதைக் காட்ட வேண்டும். இதுவே இலங்கையில் இந்திய தலையீட்டை தடுத்து நிறுத்த வழி செய்யும்.

“யாதும் ஊரே” என்ற ஆவணப் பட திரையிடல் நிகழ்வு

 லண்டனில் ஈஸ்ட்காமில் இன்று (05.04.2014) மாலை 6.00 மணிக்கு “யாதும் ஊரே” என்ற ஆவணப் பட திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.

வழக்கமான இலக்கிய நிகழ்வுகள் போல் அல்லாது மண்டபம் நிறைந்த மக்களுடன் இவ் நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க நன்றி.

தமிழில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் லண்டனில் உள்ள மக்களுக்கு எந்தளவு பயனள்ளதாக அமையும் எனத் தெரியவில்லை. ஏனெனில் ஆங்கிலத்தில் பல ஆவணப்படங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் உள்ள மக்களுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக அமையும் என நம்பலாம்.

இந்த ஆவணப்படம் லண்டன் அருங்காட்சியத்தின் வரலாற்றைக் குறிக்கிறதா அல்லது மதங்களின் வரலாற்றைக் குறிக்கிறதா அல்லது அதனூடாக தமிழ் மக்களின் வரலாற்றைக் குறிக்கிறதா என்ற குழப்பம் காணப்படுகிறது. அடுத்து வரும் தொடர்கள் இந்த குழப்பத்தை போக்கும் என நம்பகிறோம்.

மக்களின் வரலாற்றை மதங்களின் வரலாற்றினூடாக பார்ப்பதிலும் அந்த மக்கள் கொண்ட உழைப்பு மற்றும் பயன்படுத்திய உற்பத்திக் கருவிகளினூடாக பார்க்கும் மாக்சியப் பார்வையே சரியான விஞ்ஞானப் பார்வையாகும். இதனை ஆவணப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

அடுத்து கம்போடியாவில் இருக்கும் அங்கவாட கோயில் பற்றி ஆவணப்படம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அதிக பொருட் செலவு பிடிக்கும். மேலும் அது தற்போது எந்தளவு முக்கியமானது என்பதும் கேள்விக் குறியே. எனவே பயன் உள்ள விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இந்த ஆவணப் பட தயாரிப்பாளர்கள் லண்டனில் இருப்பதால் இலங்கை மலையக மக்களின் வரலாற்றை ஆவணப்படமாக்குவது சாத்தியமானது, மற்றும் தேவையானதும்கூட என் நாம் கருதுகிறோம்.

இலங்கையில் உள்ள மலையக தமிழ்மக்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அவர்கள் சந்தித்த துன்பங்கள் மரணங்கள் ஏராளம். இது கொடிய துன்பியல் வரலாறு. அதனை யாரும் இதுவரை ஆவணமாக்கவில்லை. இது குறித்த பல ஆதாரங்கள் லண்டன் அருங்காட்சியத்தில் உள்ளது. எனவே அதனை ஆவணமாக்கி முன்வைத்தால் அந்த மக்கள் மட்டுமல்ல வரலாறும் நினைவில் கொள்ளும்.

அதனை செய்ய முன்வருவார்களா?

டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898)

• இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898)
• என்றும் அவரை நினைவில் கொள்வோம்!

தமிழகத்தில் தந்தை பெரியார் போன்று இலங்கையில் டாக்டர் கோவூர் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. என்றும் நினைவில் கொள்ள வேண்டியது.

டாக்டர் கோவூர் அவர்களை நான் 1975களில் நெல்லியடி மத்திய மாகாவித்தியாலய மைதானத்தில் நடந்த “மனோ இரவு” என்னும் நிகழ்வில் கண்டேன். மேடையில் நின்ற அவர் ஏதோ சில வார்த்தைகளை கூறினார். அப்போது கீழே நிகழ்வு பார்த்தக்கொண்டிருந்த சிலர் மயங்கினார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து மயக்க நிலையிலேயே அவர்கள் ஆடவும் பாடவும் செய்தார். பின்னர் அவர்களின் மயக்க நிலையை போக்கினார். இதன் மூலம் “கிப்னோடிச” முறையை அவர் எமக்கு அறிமுகப்படுத்தினார்.

அவரது இந்த செய்கை அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை எனக்கு கொடுத்தது. அப்போது அவர் இந்தியாவில் சாய்பாபாவின் புட்டபர்த்திக்கே சென்று சவால் விட்டவர் என்று எனது தந்தையார் கூறியது எனக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

சாய்பாபாவின் புட்டபர்த்தி வாசலில் நின்று அங்கு வந்த பக்தர்களுக்கு பாபா போன்று விபூதி எடுத்துக் கொடுத்தாராம் கோவூர் அவர்கள். அந்த அப்பாவி பக்தர்கள் இவர் இன்னொரு பாபா என்று நினைத்து அவரை வழிபட்டார்களாம். அவர்களிடம் கோவூர் தான் செய்தது மந்திரம் அல்ல, வெறும் தந்திரமே என்றும் பாபாவும் இதையே செய்வதாகக் கூறினாராம்.

பக்தர்களுக்கு தனது மோசடிகள் தெரிந்துவிடுமோ என அஞ்சிய பாபா தனது செல்வாக்கு மூலம் பொலிசாரைக் கொண்டு கோவூரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம். மந்திரத்தால் தாலி வரவழைக்கும் பாபா மந்திரத்தால் “கொண்டா” மோட்டார் சைக்கிள் வரவழைத்துக் காட்டுவாரா? என்பதே கோவூர் பாபாவுக்கு விட்ட சவால். அதை பாபா ஒருபோதும் நிறைவேற்றவில்லை.

கோவூர் பற்றி மேலும் அறியும் எனது ஆர்வம் அவரது “மனக் கோலங்கள்”, “கோர இரவுகள்” என்னும் புத்தகங்களைப் படிக்க வைத்தன. இவை வீரகேசரி பிரசுரமாக அன்று வெளியிடப்பட்டவை. அதிக அளவில் விற்கப்பட்டவை. இதில் அவர் தான் சிகிச்சை அளித்த நோயாளிகளின் கதைகளைக் கூறியிருக்கிறார். பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நோயாளிகளை அவர் தனது கிப்னோடிச சிகிச்சை மூலம் சுகப்படுத்தியிருக்கிறார். இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் அயராது பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கிறார்.

இன்றும் இலங்கையில் மட்டுமல்ல எம்மவர்களுக்கு லண்டன், கனடாவிலும் பேய் பிசாசு பிடிக்கிறதாம். இங்கும் பில்லி சூனிய கூத்துகள் அரங்கேறுகின்றன. எனவே இதற்கு எதிராக ஆயிரம் கோவூர்களின் பணி அவசியமாகிறது.

தோழர் மாறன் நினைவு நாள்.(11.04.1988)

• இன்று தோழர் மாறன் நினைவு நாள்.(11.04.1988)
• ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த தமிழக தமிழர்
• அவருக்கு ஈழத் தமிழர் சார்பாக வீர வணக்கங்கள்.

தோழர் மாறன் சென்னையில் பிறந்தவர். தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டவர். 1988ல் இடம்பெற்ற கொடைக்கானல் டி.வி டவர் வெடி குண்டு சம்பவத்தில் வீர மரணம் அடைந்தவர்.

அவருடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை.

1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது. இது அனைவரும் அறிந்ததே!

ஆனால் இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. அவ் வேளை இதனைக் கண்டித்து தி.மு.க தலைவர் கருணாநிதி டி.வி பெட்டியை உடைத்து தமது எதிர்ப்பைக் காட்டினார்.

தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது ஈழத் தமிழர்களுக்கு தனது ஆதரவை எப்போதும் உறுதியாக காட்டி வந்திருக்கிறது. அது தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி 1986ல் மருதையாற்று பாலத்தில் குண்டு வைத்தது. பின்னர் இந்திய அரசின் பொயப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாக கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது. அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார்.

தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார்.

இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வீர வணக்கத்தையும், அஞ்சலிகளையும் செலுத்துகிறோம்.