Tuesday, April 29, 2014

கதை ஒளி – ஓர் அறிமுகம்

கதை ஒளி – ஓர் அறிமுகம்

“கதை சொல்லடா தமிழா” என்னும் குறூப் முகநூலில் கண்ணதாஸ் காசிநாதர் மற்றும் அவரது நண்பர்களால் இயக்கப்படுகிறது. அதில் நானும் ஒரு அங்கத்தவராக இருப்பது மகிழ்வு தருகிறது. அதில் கதைகளை எழுதி வந்த அவர்கள் தற்போது “கதை ஒளி” மூலம் கதை சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதுவரை சுமார் 100 க்கு மேற்பட்ட கதைகளை சொல்லியுள்ளனர்.

கதை சொல்வதும் ஒரு கலை. அது மக்களுக்கான கலையாக இருக்க வேண்டும். முன்னாள் போராளியும், புரட்சிகர சிந்தனையும் கொண்ட கண்ணதாஸ் காசிநாதர் இந்த “கதை ஒளி” யில் மக்களுக்கு பயன் உள்ள படைப்புகளை கொடுப்பார் என நம்புவோம்.

“மலைகளை அகற்றிய மூடக் கிழவன்” கதையைக் கூறியே படிப்பறிவற்ற கோடிக் கணக்கான பரந்துபட்ட சீன மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் தோழர் மாசேதுங் பெற்றார். இன்றும்கூட அந்த மக்கள் மத்தியில் இருந்து மாசேதுங் புகழை யாராலும் அழிக்க முடியவில்லை. அதேபோல் தமிழகத்தில் ஜெயா அம்மையார் மற்றும் கலைஞர் கருணாநிதி போன்றோர் சிறிய கதைகளை சொல்லியே தங்கள் தொண்டர்களை வழி நடத்தி வருவதை நாம் காணலாம்.

“ஒரு பூங்காவில் தனித்து இருந்த அந்த தொழிலாளி பெரு மூச்சு விட்டான். அவனை ஸ்டாலினின் உளவுப்படை கைது செய்தது. அவர் அரசியல் பேசினான் என குற்றம் சுமத்தப்பட்டது.” இது ரஸ்சியாவில் ஸ்டாலின் இரும்புத்திரை ஆட்சி என்பதற்கு அந்தக் காலத்தில் முதலாளித்துவ கட்சிகளால் பரப்பப்பட்ட பிரபல்யமான ஒரு கதை.

இந்த கதையே பின்னர் புலிகள் காலத்திலும் மாற்றிக் கூறப்பட்டது. அதாவது கிளிநொச்சியில் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனை பொட்டரின் புலனாய்வு துறை கைது செய்தது. அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சாப்பிடும் நேரம் தவிர வாய் திறந்து விட்டான் என்பது. இது புலிகளின் பிரதேசத்தில் பலிகளுக்கு எதிராக பே முடியாது என்பதற்கு கிண்டலாக கூறப்பட்ட ஒரு பகிடி.

இப்படி சிறிய கதைகள் மிகப் பெரிய அரசியலை கூறுவதற்கு பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் இங்கு கதை ஒளியில் கூறப்படும் கதைகள் அந்தளவுக்கு அரசியலை கொண்டிருக்காவிடினும் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்றளவில் நிச்சயம் பாராட்டலாம்.

“கதை சொல்வது படிப்பறிவற்ற பாமர மக்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே. எனவே முகநூலிலும், யுரியுப்பிலும் கதை சொல்வதால் என்ன பயன்? இது பாமர மக்களுக்கு சென்றடையுமா?” என்ற கேள்விகளும் விமர்சனங்களும் எழலாம். ஆனால் இது நாளடைவில் நல்ல கதைகள் உருவாகுவதற்கும், அது பரந்து பட்ட மக்களுக்கு சென்றவடைதற்கும் நிச்சயம் வழி கோலும் என நம்பலாம்.

கதை ஒளி ஸ்தாபகர் கண்ணதாஸ் காசிநாதருக்கும் அவரது நண்பர்களுக்கும் எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment