Wednesday, December 31, 2014

நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயம்!

 நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயம்!
செய்தி- காந்தியைக் கொன்ற கொட்சே சிறந்த தேச பகத்தர்- பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் மாகாராஜ் தெரிவிப்பு
மாகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே தேச பக்தராம்.
ஆனால் பல அப்பாவி தமிழர்களை கொல்வதற்கும்
பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதற்கும்
காரணமான ராஜீவ் காந்தியைக் கொன்ற தனு பயங்கரவாதியாம்.
நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயமும்?
பகத் சிங் வெடி குண்டு வீசினால் அது சுதந்திர போராட்டம்
ஆனால் ஈழப் போராளிகள் குண்டுவைத்தால் அது பயங்கரவாதம்
நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயமும்?
40 அயிரம் அப்பாவி தமிழர்களைக் கொன்ற
600 தமிழக மீனவர்களைக் கொன்ற
மகிந்த ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு
ஆனால் நம்பி வந்த அகதிகள் சிறப்புமுகாமில் அடைப்பு
நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயமும்?

அப்துல் ரவூப் தியாகத்தை போற்றுபவர்கள் தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?

 அப்துல் ரவூப் தியாகத்தை போற்றுபவர்கள்
தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?
1995ம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர் அப்துல் ரவூப் அவர்கள்.
1988ம் ஆண்டு ஈழத்தில் இந்திய படைகள் செய்த கொடுமைகளுக்கு எதிராக கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்து வீர மரணம் அடைந்தவர் தோழர் மாறன்.
அப்துல் ரவூப் போலவே தோழர் மாறனும் ஈழத் தமிழர்களுக்காகவே தனது உயிரை தியாகம் செய்தவர். இருவருடைய தியாகங்களும் போற்றப்படவேண்டியவை. ஆனால்,
• அப்துல் ரவூப் இன் தியாகத்தை போற்றுவோர் தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?
• அப்துல் ரவூப் நினைவாக மாணவர் பாசறை அமைத்துள்ள “நாம்தமிழர்” சீமான் அவர்கள் தோழர் மாறன் பெயரைக்கூட உச்சரிக்க தயங்குவது ஏன்?
• அப்துல் ரவூப் ற்கு அஞ்சலி செலுத்திய வைகோ அவர்கள் இதுவரை தோழர் மாறனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?
• முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அப்துல் ரவூப்க்கு நினைவுச் சின்னம் வைத்த அய்யா நெடுமாறன் அவர்கள் தோழர் மாறனுக்கு நினைவு சின்னம் வைக்க மறுப்பது ஏன்?
• அப்துல் ரவூப் தியாகத்தை மதிப்பளித்த புலிகள் இயக்கம்கூட தோழர் மாறன் தியாகத்தை மதிப்பளிக்க தவறியது ஏன்?
இனியாவது
தோழர் மாறனை நினைவு கூருவோம்.
தோழர் மாறன் தியாகத்தை போற்றுவோம்
தோழர் மாறனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!

• ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

• ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!
பாகிஸ்தான் குழந்தைகளுக்கு ஒரு நியாயம்!
செஞ்சோலை குழந்தைகளுக்கு இன்னொரு நியாயம்?
இது என்ன நியாயம் ஜனாதிபதி அவர்களே?
செஞ்சோலையில் குழந்தைகளை கொன்ற நீங்கள்
பாகிஸ்தான் குழந்தைகள் கொலையை கண்டிப்பது
கசாப்பு கடைகாரன் காருண்ய மாநாடு நடத்துவது போல் இருக்கிறது!
செஞ்சோலையில் இருந்த குழந்தைகளை குண்டு வீசிக் கொன்ற உங்களால் எப்படி கொஞ்சம்கூட கூச்சமின்றி பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக கண்டனம் செய்ய முடிகிறது?
இதைவிட “இலங்கை ராணுவம் எந்த பொது மகனையும் கொல்லவில்லை” என்று வேறு அண்மையில் கூறியுள்ளீர்கள்.
அப்படியென்றால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40ஆயிரம் அப்பாவி தமிழர்களும் தங்களைத் தாங்களே சுட்டு இறந்தார்களா?
1989ல் 60 ஆயிரம் சிங்கள மக்களை கொன்றது ராணுவம் என்றும் அதற்கு எதிராக ஜ.நா வரை சென்று மனுக் கொடுத்தீர்களே! அதை மறந்துவிட்டீர்களா?
அல்லது அத்தனை பேரும் முள்ளிவாய்க்கால் தமிழர்கள்போல் தங்களைத் தாங்களே சுட்டு இறந்தவர்கள் என இப்போது கண்டு பிடித்திருக்கிறீர்களா?
1971ல் 4ஆயிரம் ஜே.வி.பி இளைஞர்களை கொன்றது யார்? அவர்களும் தாங்களாகவே இறந்தவர்களா?
கதிர்காமத்தில் மன்னம்பெரி என்ற யுவதியை பாலியல் வல்லுறவு செய்து பெண் உறுப்பில் குண்டை வெடிக்கவைத்து கொலை செய்தவர் யார்?
அவரே தன்னை பாலியல் வல்லுறவு செய்து அவரே தன் உறுப்பில் குண்டை வெடிக்கவைத்தாரா?
வரவர உங்கள் நகைச்சுவைக்கு அளவேயில்லாமற் போய்விட்டது ஜனதிபதி அவர்களே!
இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக உங்களின் இந்த பேச்சு அமைந்துவிட்டது.
இதற்குரிய பரிசை மக்கள் உங்களுக்கு ஜனவரி 8ம் திகதி கண்டிப்பாக தருவார்கள்.

செய்தி- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்த உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்- வைகோ வேண்டுகோள்.

செய்தி- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்த உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்- வைகோ வேண்டுகோள்.
வைகோ அவர்களே!
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மரணம் தொடர்பான உண்மைகள் வெளியிடப்பட வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானதே. அதேபோல் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளையும் தாங்கள் நியாயமாக வெளியிட வேண்டும் அல்லவா!
பிரபாகரன் இருக்கிறார். அவர் மீண்டும் வந்து தமிழீழம் பெற்று தருவார் என்று எப்படி உங்களால் தொடர்ந்து கூறமுடிகிறது?
பிரபாகரன் இருக்கிறார் என்று தாங்கள் கூறுவதன் மூலம் அவர் மரணத்தில் இந்திய அரசின் பங்களிப்பை தமிழக மக்கள் உணர்ந்து கொள்வதை தடுக்கிறது அல்லவா?
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது அவர் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் ஆயிரக் கணக்கான மக்களை எல்லாம் பலி கொடுத்துவிட்டு அவர் மட்டும் தப்பியோடிய ஒருவர் என்ற அவமானத்தை கொடுக்கிறது அல்லவா?
இறுதி கணம்வரை உங்களை நம்பிய பிரபாகரனுக்கு துரோகம் செய்ய எப்படி உங்களுக்கு மனம் இடங்கொடுக்கிறது?
தயவு செய்து இனியாவது மக்கள் முன் பிரபாகரன் பற்றிய உண்மைகளை கூறிவிடுங்கள். தொடர்ந்து பொய் கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்.

இயேசு பிரானே!

இயேசு பிரானே!
இவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள்.
இவர்கள் பாவங்களை மன்னிக்காதீர்கள்!
முள்ளிவாய்க்காலில் 40 அயிரம் அப்பாவி மக்களை கொன்ற மகிந்தவின் இரத்தம் தோய்ந்த கைகளை கொஞ்சம்கூட கூச்சமின்றி குலுக்கிறார் பாப்பரசர்.
அதுமட்டுமன்றி இலங்கைக்கு விஜயம் செய்து மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கு உதவவும் விரும்புகிறார்.
ஜ.நா மனிதவுரிமைக் கமிசனே மகிந்தவை போர்க்குற்றவாளி என்று விசாரிக்க விரும்புகிறது. ஆனால் பாப்பரசர் மகிந்தவுக்கு உதவுகிறார் எனில் என்ன அர்த்தம்?
மகிந்த ராஜபக்ச கிருத்தவ தந்தை கருணாகரன் அடிகளாரைக் கொன்றார்.
பல கிருத்தவ தேவாலயங்கள் மீது குண்டு வீசினார்.
இன்றும்கூட ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட தமிழ் பெண்ணுக்காக நியாயம் கேட்ட மன்னார் ஆயர் மிரட்டப்படுகிறார்.
இத்தனைக்கும் பிறகும் மகிந்தவுக்கு பாப்பரசர் உதவ விரும்புகிறார் எனில் அவரும் அறிந்தே பாவம் செய்கிறார் அல்லவா?

டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்
இலங்கையில் மாசேதுங் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர் தோழர் சணமுகதாசன் அவர்களும் அவரது தலைமையில் இயங்கிய கம்யுனிஸ்ட் கட்சியுமே.
இலங்கையில் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப் பாதையை முன்வைத்தது மகத்தான மாசேதுங் சிந்தனைகளே.
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் ஆயுதப் போராட்ட பாதையை தெரிவு செய்யவும் பெரும் பங்கு வகித்தது மாசேதுங் சிந்தனைகளே.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை இலங்கைஅரசு “பயங்கரவாதிகள்” என்றழைத்தது. தமிழர்விடுதலைக்கூட்டணி “பொடியன்கள்” என்றழைத்தது. ஆனால் மாவோயிஸ்ட் தலைவரான தோழர் சண்முகதாசனே தமிழ் இளைஞர்களை முதன் முதலாக “போராளிகள்” என்று அழைத்தவர்.
அதுமட்டுமல்ல அவர் இதை ஜந்து கட்சி கூட்டத்தில் சிங்கள தலைவர்கள் மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
யாழ்குடாநாட்டில் இருந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்கள் மாவோயிச சிந்தனைவாதிகளே.
இலங்கையில் மாவோயிஸ்ட்டுகள் எதுவும் செய்யவில்லை என்று இன்று பேசுவோர் இவ் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆயுத எழுத்து (நாவல்)

• ஆயுத எழுத்து (நாவல்)
ஒரு புலிப் போராளியின் ஒப்புதல் வாக்குமூலம்?
புலிகள் அமைப்பில் பல வருடங்களாக முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய சாத்திரி என்பவர் எழுதி வெளிவந்திருக்கும் நாவல் “ஆயுத எழுத்து”
இதுவரை ஈழப் போராட்டம் குறித்து சில நாவல்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஈழப் போராட்டம் பற்றிய நாவலாகவே வந்துள்ளது. ஈழப் போராட்டத்தில் அக்கறையுள்ளவர்கள் படிக்க வேண்டிய நாவல்களில் இதுவும் ஒன்று.
இதுவரை மாற்று கருத்தாளர்களால் புலிகள் அமைப்பு மீது முன்வைக்கப்பட்ட கருத்துகள் பல புலிகள் அமைப்பில் இருக்கும் சாத்திரி என்பவரால் இந் நாவலில் கூறப்பட்டிருக்கிறது. எனவே இது ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக கருத இடம் அளிக்கிறது.
உண்மை பெயர்களுடன் உண்மை சம்பவங்களை எழுதிவிட்டு எதற்காக நாவல் என குறிப்பிடுகிறார்; என்று புரியவில்லை? ஒருவேளை ஏதாவது சட்ட சிக்கல் வருமா என அஞ்சினாரா தெரியவில்லை?
• புலிகள் அமைப்பே துர்க்கை அம்மன் கோவிலில் கொள்ளையடித்தது.
• புலிகள் அமைப்பே பிரான்சில் கஜன், நாதன் ஆகியோரைக் கொன்றது.
• புலிகள் அமைப்பு ஆயுதங்களுக்காக போதைப் பொருள் கடத்தியது.
• புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார்.
இவ்வாறு பல செய்திகள் எழுதப்பட்டிருப்பது புலிகள் புனிதமானவர்கள் என நம்புவோருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் சாத்திரி அவர்கள் இவற்றிற்கு தேவையான ஆதாரங்களுடன் விபரமாக எழுதியுள்ளார்.
புலிகள் பலமாக இருக்கும்போது ஏன் இவற்றை தெரிவித்து நாவல் எழுதவில்லை என சிலர் கேட்கலாம். ஆனால் அப்போது எழுதவில்லை என்பதற்காக இப்போது எழுதக்கூடாது என்றோ அல்லது எப்போதும் எழுதக்கூடாது என்று அர்த்தம் இல்லையல்லவா!
புலிகளின் தவறுகள் தொடர்பாக உரையாடுவதற்கும் இனங் கண்டு கொள்வதற்கும் இந் நாவல் மூலம் சாத்திரி அவர்கள் பங்களித்துள்ளார். அந்த வகையில் அவரது பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியதே.
ஈழப் போராட்டம் குறித்து நிறைய எழுத்துக்கள் வரவேண்டும். அவை ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தீர்மானிக்கவிருக்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகள்!

ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தீர்மானிக்கவிருக்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகள்!
பெரும்பான்மையின சிங்கள வாக்குகள் இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளே இம்முறை தீர்மானிக்கவிருக்கின்றன.
யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதைவிட யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதே தமிழ்மக்களின் தெரிவாக இம்முறை உள்ளது.
தமிழ்மக்களின் சார்பாக பேரம் பேசியிருக்கக்கூடிய தமிழ்தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனையுமின்றி மைத்திரியை ஆதரிக்க தீர்மானித்திருப்பதன் மூலம் மீண்டும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
சிறையில் இருப்பவர்களின் விடுதலை குறித்தாவது தமிழ்தேசியகூட்டமைப்பு நிபந்தனை விதிக்க தவறியிருப்பது அவர்களது சுயரூபத்தை அம்பலப்படுத்துகிறது.
சிங்கள கட்சியான ஜே.வி.பி கூட மொத்த வடமாகாணமே சிறைக்கூடமாக இருக்கிறது என பகிரங்கமாக கூறுகிறது. ஆனால் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னை கூறிக்கொள்ளும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து கூட பேச மறுக்கிறது.
இதுவரை யுத்த வெற்றியை காட்டி பிரச்சாரம் செய்து வந்த ஜனாதிபதி மகிந்த அவர்கள் இம் முறை அது பயன்படாது என்று தெரிந்து கொண்டமையினால் இந்திய நடிகர்களை காட்டுகிறார். சல்மான்கான் மட்டுமல்ல சாருக்கானையே அனுப்பி வைத்தாலும்கூட மோடியின் விருப்பம் நிறை வேறப்போவதில்லை. மகிந்த வெற்றி பெற போவதில்லை.
மகிந்த கும்பல் அச்சுறுத்துவார்கள். மிரட்டுவார்கள். முடியாது போனால் கலவரத்தைகூட உருவாக்குவார்கள். தமது வெற்றிக்காக எந்த முனைவரையும் போக தயாராக இருப்பார்கள். ஆனால் இறுதியில் வேறுவழியின்றி தோல்வியை தழுவுவார்கள். ஏனெனில் மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள்.

Friday, December 26, 2014

ஸ்டாலின் பற்றிய பிரச்சனையின் மீது

 ஸ்டாலின் பற்றிய பிரச்சனையின் மீது
ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்க கடிதத்தின் மீதான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் இரண்டாவது விமர்சனம்.
“மக்கள் தினசரி” “செங்கொடி” பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்கள் (செப் 13.1963 )

ஸ்டாலின் பற்றிய பிரச்சனை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. அது ஒவ்வொரு நாட்டிலும் அனைத்து வர்க்கங்களிடையேயும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரச்சனையாகும். பல்வேறு வர்க்கங்களும் அவற்றின் அரசியல் கட்சிகளும் குழுக்களும் வௌ;வேறு கண்ணோட்டங்களில் இன்றைக்கு பெரும் விவாதத்திற்குள்ளாகிய ஒரு விடயமாக அது இருக்கின்றது. இந்தப் பிரச்சனைக்கு இறுதிமுடிவு இந்த நூற்றாண்டில் அடைய இயலாது எனத் தோன்றுகிறது. ஆனால் இப் பிரச்சனையில் சர்வதேச உழைக்கும் வர்க்கம் மற்றும் புரட்சிகர மக்களின் பெரும்பான்மையினரிடையே கிட்டத்தட்ட ஒரு ஏகோபித்த உடன்பாடு இருக்கிறது. அதாவது அவர்கள் ஸ்டாலினை முழுவதுமாக மறுப்பதை அங்கீகரிக்கவில்லை. மாறாக மேலும் மேலும் அவரது நினைவைப் போற்றிப் பேணி வளர்த்து வருகின்றனர். ரஸ்சிய நாட்டின் விடயத்திலும்கூட இதுவே உண்மை. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான எங்களது கருத்து வேறுபாடு என்பது மக்களின் ஒரு பகுதியினருடனானதாகும். புரட்சிகர இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர்களையும் இக் கருத்துக்கு இணங்கச் செய்துவிட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் இதுவே.

“தனி நபர் வழிபாட்டை எதிர்ப்பது” என்ற சாக்கில் தோழர் குருசேவ் ஸ்டாலினை முழுவதுமாக மறுத்த போது அவர் (குருசேவ்) மிகவும் தவறாகவும் உள்நோக்கம் கொண்டவராகவும் இருந்தார் என்று சீனக் கம்யுனிஸ்ட் கட்சி எப்போதும் கருதி வந்திருக்கிறது.
இந்த தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டம் என்பது தலைவர்கள், கட்சி, வ ர்க்கம், பொதுமக்கள் ஆகியோருக்கிடையிலான பரஸ்பர உறவு பற்றிய முழுமை பெற்ற லெனின் போதனைகளை மீறுவதாகும் என்றும் ஜனநாயக மத்தியத்துவம் என்ற கம்யுனிசக் கொள்கையின் அடிப்படைகளையே அழிப்பதாகும் என்றும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஜீன் 14 தேதியிட்டு தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்க கடிதம் கொள்கை வழிப்பட்ட எங்கள் வாதங்களுக்கு பதில் எதுவும் சொல்வதைத் தவிர்க்கிறது. ஆனால் வெறுமனே சீனக் கம்யுனிஸ்ட் கட்சியை “தனிநபர் வழிபாட்டின் ஆதரவாளர்கள்”,“ஸ்டாலினுடைய தவறான கருத்துக்களைக் கூவி விற்பவர்கள்” என்று முத்திரை குத்துகிறது.

மென்~;விக்குகளை எதிர்த்துப் போராடியபோது லெனின் சொன்னார் “கொள்கை ரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒரு வாதத்திற்கு பதில் சொல்லாமல் அவன் மீது இரக்கம் காட்டுவதாக சொல்வது விவாதிப்பதாக பொருளாகாது. மாறாக  அவதூறு செய்ய முயல்வது ஆகும்”. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி தனது பகிரங்க கடிதத்தில் காட்டியுள்ள மனப்பான்மையானது மென்~;விக்களுடைய மனப்பான்மையுடன் துல்லியமாகப் பொருந்துவதாகும்.

பகிரங்கக் கடிதமானது விவாதத்திற்கு பதிலாக அவதூறு செய்வதை மேற்கொண்ட போதிலும் நாங்கள் கொள்கை ரீதியான விவரங்கள் மூலமாகவும் மறுக்க முடியாத உண்மைகள் மூலமாகவும் அதற்கு பதில் அளிக்க விரும்புகிறோம்.

மாபெரும் ரஸ்சிய நாடு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முதல் அரசாக இருந்தது. துவக்கத்தில் இந்த நாட்டின் அரசாங்கம் மற்றும் கட்சியின் தலைசிறந்த தலைவராக லெனின் இருந்தார். லெனினுடைய மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் அவ்வாறு இருந்தார்.

லெனினுடைய மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் ரஸ்சிய நாட்டின் கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவராக ஆனது மட்டுமல்ல சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் ஆனார்.

அக்டோபர் புரட்சியினால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் சோசலிச அரசு தோன்றி 46 ஆண்டுகள்தான் ஆகின்றன. இதில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இந்த அரசின் தலை சிறந்த தலைவராக ஸ்டாலின் இருந்தார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வரலாற்றிலும் சரி, சர்வதேச கம்யுனிச இயக்க வரலாற்றிலும் சரி, ஸ்டாலினுடைய செயல்பாடுகள் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.

ஸ்டாலினை எவ்வாறு மதிப்பிடுவது, ஸ்டாலினைப் பற்றி என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என்பது ஸ்டாலினை மட்டுமே மதிப்பிடும் ஒன்றல்ல, மிக முக்கியமாக, லெனின் மறைவில் இருந்து சர்வதேச கம்யுனிச இயக்கம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வரலாற்று அனுபவங்களை எவ்வாறு தொகுப்பது என்ற பிரச்சனையாகும் என்ற நிலையை சீனக் கம்யுனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது.

ரஸசிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது பேராயத்தில் தோழர் குருசேவ் ஸ்டாலினை முழுவதுமாக மறுதலித்தார். சர்வதேச கம்யுனிச இயக்கம் முழுவதையும் பாதிக்கக்கூடிய இந்த கொள்கைரீதியான பிரச்சினையைப்பற்றி அவர் முன்கூட்டியே சகோதரக் கட்சிகளிடம் கலந்தாலோசிக்கத் தவறினார்.

ஆனால் பிறகு அக் கட்சிகளின் மீது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றைத் திணிக்க முயற்சி செய்தார். ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைமையின் கருத்திலிருந்து மாறுபட்ட வகையில் ஸ்டாலின் பற்றிய மதிப்பீட்டுக்கு வந்தவர்களை “தனிநபர் வழிபாட்டின் பாதுகாவலர்கள்” என்றும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுபவர்கள் என்றும் வர்ணிக்கப்பட்டனர். ஆனால் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் வரலாற்று அனுபவத்தின் சர்வதேச முக்கியத்துவத்தையோ அல்லது சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் தலைவராக ஸ்டாலின் இருந்தார் என்ற வரலாற்று உண்மையையோ யாரும் மறுக்க முடியாது. இதன் விளைவாக ஸ்டாலின் பற்றிய மதிப்பீடு சர்வதேச கம்யுனிச இயக்கம் முழுவதையும் பாதிக்கக்கூடிய ஒரு முக்கிய கொள்கைப் பிரச்சனையாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியானால் பிற சகோதரக் கட்சிகள் ஸ்டாலினைப் பற்றிய யதார்த்தமான ஆய்வையும் மதிப்பீட்டையும் மேற்கொள்வதை ரசிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் எந்த அடிப்படையில் அனுமதிக்க மறுக்கிறார்கள்?

ஸ்டாலினுடைய சிறப்பு அம்சங்களையும் குறைபாடுகளையும் பற்றி முழுமையான விஞ்ஞானரீதியான ஆய்வை வரலாற்றுப் பொருள்முதவாத அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு, ஸ்டாலினை முழுவதுமாக மறுதலிக்கக்கூடிய அகவயமான பண்பாடற்ற கருத்து முதல்வாத வரலாற்று ஆய்வு முறையையும் தான்தோன்றித்தனமான வரலாற்று புரட்டலையும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.

ஸ்டாலின் சித்தாந்த மற்றும் சமூக வரலாற்று வேர்களைக் கொண்ட தவறுகளைச் செய்தார் என்பதை சீனக் கம்யுனிஸ்ட் கட்சி இடைவிடாது கூறி வந்துள்ளது. ஸ்டாலின் உண்மையாகவே புரிந்த தவறுகளை விமர்சிப்பது அவசியம். அடிப்படையில்லாமல் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அல்ல. மேலும் ஒரு சரியான நிலைப்பாட்டில் இருந்து சரியான முறைகளில் அது செய்யப்பட வேண்டும். ஆனால் நாங்கள் ஸ்டாலின் பற்றிய முறையற்ற விமர்சனத்தையும் தவறான நிலைப்பாட்டில் இருந்து தவறான முறைகளில் செய்யப்படும் விமர்சனத்தையும் இடைவிடாது எதிர்த்து வந்துள்ளோம்.
லெனினுடைய வாழ்க்கைக் காலத்தில் ஸ்டாலின் ஜாரிசத்தை எதிர்த்துப் போராடினார். மார்க்சியத்தை பிரச்சாரம் செய்தார். லெனின் தலைமையிலான போல்~;விக் கட்சியின் மத்திய கமிட்டியின் உறுப்பினர் ஆன பிறகு 1917 புரட்சிக்கு வழிவகுத்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். அக்டோபர் புரட்சிக்கு பிறகு அவர் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பலன்களை பாதுகாக்க போராடினார்.

லெனின் மறைவுக்கு பிறகு உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளை எதிர்த்து தீர்மானகரமாகப் போராடுவதிலும் உலகின் முதல் சோசலிச அரசை பாதுகாப்பதிலும் உறுதிப்படுத்துவதிலும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியையும் ரஸ்சிய மக்களையும் அவர் வழி நடத்தினார்.

சோசலிச தொழில் மயமாக்கல் பாதை, விவசாயக் கூட்டுப்பண்ணை முறை ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதிலும் சோசலிச மாற்றம் சோசலிச கட்டுமானம் ஆகியவற்றில் பெரும் வெற்றிகளை ஈட்டுவதிலும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியையும் ரஸ்சிய மக்களையும் அவர் வழி நடத்திச் சென்றார்.

பாசிச எதிர்ப்பு யுத்தத்தின் மாபெரும் வெற்றிக்கான கடுமையான நெடிய போராட்டத்தில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியையும் ரஸ்சிய மக்களையும் ரஸ்சிய ராணுவத்தையும் அவர் வழி நடத்திச் சென்றார்.

பல்வேறு வகை சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும், டிராட்ஸ்கியவாதிகள,; ஜீனோவாதிகள், புகாரின்வாதிகள் மற்றும் பிற முதலாளித்துவ ஏஜென்டுகள் ஆகிய லெனிய விரோதிகளுக்கு எதிராகவும் நடந்த போராட்டத்தில் ஸ்டாலின் மார்க்சிய- லெனியத்தைப் பாதுகாத்து வளர்த்தார்.

அழிக்க முடியாத மார்க்சிய- லெனிய படைப்புகளாக விளங்கும் ஏராளமான கோட்பாட்டு ரீதியான படைப்புகள் மூலமாக ஸ்டாலின் சர்வதேச கம்யுனிச இயக்கத்திற்கு நிரந்தரமான பங்களிப்பை செய்துள்ளார்.

சீனமக்கள் உட்பட அனைத்து மக்களின் புரட்சிகர போராட்டங்களுக்கு பெருமளவு உதவக் கூடிய பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு முற்றிலும் பொருந்திய அயலுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் ரசிய கட்சி மற்றும் அரசாங்கத்தை ஸ்டாலின் வழி நடத்தினார்.

ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அனைத்து எதிர்ப் புரட்சியாளர்களின் இணக்கமற்ற எதிரியான ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை வழி நடத்திச் செல்வதில் வரலாற்றுப் பேரலைகளின் முன்னனியில் நின்றார்.
ஸ்டாலினுடைய நடவடிக்கைகள் மாபெரும் ரசிய கம்யுனிஸ்ட் கட்சியின், மாபெரும் ரசிய மக்களின் போராட்டங்களுடன் மிக நெருக்கமாகவும் உலக முழுவதிலுமுள்ள மக்களின் புரட்சிகர போராட்டங்களுடன் பிரிக்க முடியாத வகையிலும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்டாலினுடைய வாழ்க்கை ஒரு மாபெரும் மார்க்சிய- லெனியவாதியின் வாழ்க்கையாகும். ஒரு மாபெரும் பாட்டாளி வர்க்க புரட்சியாளரின் வாழ்க்கையாகும்.

ஒரு மாபெரும் மார்க்சிய-லெனினியவாதியும், பாட்டாளி வர்க்கப் புரட்சியாளருமாகிய ஸ்டாலின் ரஸ்சிய மக்களுக்கும் சர்வதேச கம்யுனிச இயக்கத்திற்கும் மகத்தான பணி புரிந்துள்ள அதே வேளையில் சில தவறுகளையும் செய்துள்ளார் என்பது உண்மையே. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தனக்கு முன்னுதாரணமாக பின்பற்றி செல்ல எதுவும் இல்லாத காலத்தில் ஸ்டாலின் இழைத்த சில தவறுகள் கொள்கை ரீதியானவை. ஒரு சில தவறுகள் நடைமுறைப் பணிகளின் போக்கில் இழைக்கப்பட்டவை. சில தவர்க்கப்பட்டிருக்கக் கூடியவை. சில மிக அரிதாகவே தவிர்க்கப்பட்டிருக்க முடியும்.

தனது சிந்தனை முறையில் ஸ்டாலின் ஒரு சில பிரச்சனைகளில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்திலிருந்து விலகி இயக்க மறுப்பியல் மற்றும் அகநிலைப் போக்கிற்கு இரையானார். அதன்விளைவாக சில சமயங்களில் யதார்த்தத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகிச் சென்றார்.

கட்சியின் உள்ளேயும் வெளியேயும் நடந்த போராட்டங்களில் ஒரு சில சமயங்களில் ஒரு சில பிரச்சனைகளில் இயல்வாகவே மாறுபட்டுள்ள இரண்டுவகையான முரன்பாடுகளை –அதாவது நமக்கும் எதிரிக்கும் உள்ள முரண்பாட்டையும் மக்களுக்கிடையே உள்ள முரண்பாட்டையும் அவர் போட்டுக் குழப்பிவிட்டார். மேலும் அவற்றைக் கையாள்வதில் தேவைப்படும் வேறுபட்ட முறைகளையும் குழப்பிக் கொண்டார். ஸ்டாலின் எதிர்ப்புரட்சியை நசுக்குவதில் ஈடுபட்டபோது தண்டிக்கப்படவேண்டிய பல எதிர்புரட்சியாளர்கள் உரிய தண்டனையைப் பெற்றார்கள். அதே சமயத்தில் சில நிரபராதிகளும் தவறாக தண்டிக்கப்பட்டார்கள். 1937லும் 1938லும் எதிர்ப் புரட்சியாளர்களை நசுக்குவதை பெருமளவில் விரிவாக்கும் தவறு நிகழ்ந்தது. கட்சி மற்றும் அரச அமைப்புகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அவர் பாட்டாளிவர்க்க ஜனநாயக மத்தியத்துவத்தை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதை அவர் மீறினார்.

சகோதரக்கட்சிகள் மற்றும் நாடுகளது உறவுகளைக் கையாள்வதில் அவர் சில தவறுகளைப் புரிந்தார். சர்வதேச கம்யுனிச இயக்கத்திலும் அவர் சில மோசமான ஆலோசனைகளை வழங்கினார். இத் தவறுகள் சர்வதேச கம்யுனிச இயக்கத்திற்கும் ரஸ்சிய நாட்டுக்கும் சில இழப்புகளை ஏற்படுத்தின.
ஸ்டாலினுடைய தகுதிகளும் தவறுகளும் வரலாற்று ரீதியான புறநிலை யதார்த்த வகைப்பட்டவை. இரண்டையும் ஒப்பிடும்போது அவருடைய நிறைகள் அவருடைய தவறுகளைக் காட்டிலும் மிகுதியானவை என்பதைக் காணமுடிகிறது. அவர் பிரதானமாக சரியானவராக இருந்தார். அவருடைய தவறுகள் இரண்டாம் பட்சமானவையாகவே இருந்தன. ஸ்டாலினுடைய சிந்தனைகளையும் பணிகளையும் ஒட்டுமொத்தமாக தொகுத்து பார்க்கும்போது ஒவ்வொரு நேர்மையான கம்யுனிஸ்ட்டும் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுக்கு மதிப்பு கொடுத்து ஸ்டாலினிடம் இருந்த பிரதானமானவற்றை முதலில் கவனிப்பான். எனவே ஸ்டாலினுடைய தவறுகள் சரியான வகையில் மதிப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டு களையப்படும்போது ஸ்டாலினுடைய வாழ்க்கையில் பிரதானமாக இருந்தவற்றை பாதுகாப்பதும் ,அவர் பாதுகாத்து வளர்த்த மார்க்சிய-லெனியத்தைப் பாதுகாப்பதும் அவசியமாகும்.

இரண்டாம் பட்சமானவையாக மட்டுமே இருந்த ஸ்டாலினுடைய தவறுகள் வரலாற்றுப் படிப்பனையாக எடுத்துக் கொள்ளப்படுமாயின் அது பயனள்ளதாக இருக்கும். ரஸ்சியா மற்றும் பிற நாடுகளது கம்யுனிஸ்டுகள் அந்த தவறுகளை மீண்டும் இழைக்காமலிருப்பதற்கு அல்லது தவறுகளை குறைத்துக் கொள்வதற்கு இந்தப் படிப்பினைகள் எச்சரிக்கையாகப் பயன்படும். நேர்மறை மற்றும் எதிர் மறையானவரலாற்றுப் படிப்பினைகள், அவை வரலாற்று உண்மைகளைத் திரித்துப் புரட்டாமலும், சரியாகத் தொகுத்தும் , உறுதிசெய்யப்பட்டும் இருப்பின் அவை அனைத்து கம்யுனிஸ்டுக்களுக்கும் பயனுள்ளவையாக இருக்கும்.

பல தவறுகள் இருப்பினும் மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளராக இருந்த பெபல், ரோசாலுச்சம்பர்க் போன்றவர்களுடன் மார்க்சியவாதிகளின் அணுகுமுறை, இரண்டாவது அகிலத்தின் திரிபுவாதிகளுடனான அணுகுமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று லெனின் பல சமயங்களில் சுட்டிக்காட்டினார். மார்க்சியவாதிகள் இவர்களுடைய தவறுகளை மறைக்கவில்லை. மாறாக அத்தகைய உதாரணங்கள் மூலமாக “அவற்றை எவ்வாறு தவிர்ப்பது, புரட்சிகர மார்க்சியத்தின் கடும் தேவைகளுக்கு எவ்வாறு ஈடுகொடுப்பது” என்பதைக் கற்றுக்கொண்டார்கள். அதற்கு மாறாக திரிபுவாதிகள் பெபல் மற்றும் ரோசாலுக்சம்பர்க்கின் தவறுகளைப் பற்றி “கூவினார்கள்” “கொக்கரித்தார்கள”;. திரிபுவாதிகளைக் கேலி செய்த லெனின் இந்த விடயத்தில் ஒரு ரஸ்சிய பழங்கட்டுக்கதையை மேற்கோள் காட்டினார். “ சில சமயங்களில் கழுகுகள் கோழிகளைக் காட்டிலும் தாழ்வாகப் பறக்கலாம். ஆனால் கோழிகள் ஒருபோதும் கழுகுகளின் உயரத்திற்கு பறக்கமுடியாது.” பெபலும் ரோசாலுக்சம்பர்க்கும் “மாபெரும் கம்யுனிஸ்டுகள்” மேலும் அவர்களுடைய தவறுகளுக்கு பின்பும் “கழுகுகளாகவே” திகழ்ந்;தார்கள். அதே சமயத்தில் திரிபுவாதிகள் “உழைக்கும் வர்க்க இயக்கத்தின் கொல்லைப்புற சாணக் குவியலிடையே “கோழிகள்” கூட்டமாக இருந்தனர்.

பெபல் மற்றும் ரோசாலுக்சம்பர்க்கின் வரலாற்று பாத்திரங்கள் எந்த வழியிலும் ஸ்டாலினுடைய பாத்திரத்துடன் ஒப்பிடப்பட முடியாதவை. ஸ்டாலின் ஒரு வரலாற்று சகாப்தம் முழுவதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் மாபெரும் தலைவராக இருந்தார். அவரைப்பற்றி மதிப்பிடும்போது அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

ஸ்டாலினைப் பாதுகாப்பதாக சீனக் கம்யுனிஸ்ட் கட்சி மீது ரஸ்சியக் கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆம் , நாங்கள் ஸ்டாலினைப் பாதுகாக்கவே செய்கிறோம். குருசேவ் வரலாற்றை திரித்து ஸ்டாலினை முழுவதுமாக மறுதலிக்கும்போது இயல்பாகவே நாங்கள் சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் நலன்களையொட்டி ஸ்டாலினைப் பாதுகாக்க வேண்டிய தவிர்க்க முடியாத வரலாற்றுக் கடமையை ஏற்றுள்ளோம்.

ஸ்டாலினை ஆதரிக்கும்போது சீனக் கம்யுனிஸ்ட் கட்சி அவருடைய சரியான பகுதியை ஆதரிக்கிறது. அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட முதல் பாட்டாளி வர்க்க அரசின் புகழ்மிக்க வரலாற்றுப் போராட்டத்தை ஆதரிக்கின்றது. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் புகழ் மிக்க வரலாற்றை ஆதரிக்கின்றது. உலக முழுவதுமுள்ள உழைக்கும் மக்களிடையே சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் மதிப்பைப் பாதுகாக்கின்றது. சுருங்கக் கூறின் அது மார்க்சிய- லெனியக் கொள்கையையும் நடைமுறைகளையும் ஆதரிக்கிறது. சீனக் கம்யுனிஸ்டுகள் மட்டும் இதை செய்து கொண்டிருக்கவில்லை. மார்க்சிய-லெனினியத்தின் மீது பற்றுறுதி கொண்ட அனைத்து கம்யுனிஸ்டுக்களும் அனைத்து உறுதி மிக்க புரட்சியாளர்களும் அனைத்து நேர்மையான உள்ளம் கொண்ட மக்களும் இதையே செய்து வருகிறார்கள்.

ஸ்டாலினை ஆதரிக்கும் வேளையில் நாங்கள் அவருடைய தவறுகளை ஆதரிக்கவில்லை. நீண்ட காலத்திற்கு முன்பே சீனக் கம்யுனிஸ்டுகள் ஸ்டாலினுடைய தவறுகளில் சிலவற்றின் நேரடி அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு சமயத்திலோ அல்லது மற்றொரு சமயத்திலோ சீனக் கம்யுனிஸ்ட் கட்சியில் எழுந்த தவறான இடது மற்றும் வலது சந்தர்ப்பவாதப் பாதைகளில் சில ஸ்டாலினுடைய ஒரு சில தவறுகளின் தாக்கத்தினால் எழுந்தவை என்பது அப்பாதைகள் தோன்றுவதற்கான சர்வதேச அடிப்படைகள் ஆகும். 1920ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 30ம் ஆண்டுகளிலும் 40ம்ஆண்டுகளின் துவக்கத்திலும் மத்தியிலும் தோழர்கள் மாசேதுங், லியோசோ~p ஆகியோர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சீன மார்க்சிய-லெனியவாதிகள் ஸ்டாலினுடைய தவறுகளின் செல்வாக்கை எதிர்த்தனர். அவர்கள் படிப்படியாக இடது மற்றும் வலது சந்தர்ப்பவாதப் பாதைகளைக் களைந்து இறுதியில் சீனப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.

ஆனால் ஸ்டாலினால் முன்வைக்கப்பட்ட சில தவறான கருத்துக்கள் சீனத் தோழர்கள் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையாளப்பட்டதற்கான பொறுப்பினை சீனர்களாகிய நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே இடது மற்றும் வலது சந்தர்ப்பவாதத்தற்கு எதிரான தனது போராட்டத்தில் எங்களது கட்சி தவறிழைத்த தனது சொந்த தோழர்களைத்தான் விமர்சித்ததே தவிர ஒருபோதும் ஸ்டாலின் மீது பழியைப் போடவில்லை. தவறையும் சரியையும் பிரித்துப் பார்ப்பதும், தகுந்த படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதும், புரட்சிகர இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதும்தான் எங்கள் விமர்சனத்தின் நோக்கமாக இருந்தது. நாங்கள் தவறிழைத்த தோழர்களை தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று மட்டும்தான் கேட்டுக்கொண்டோம். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் தங்கள் ஒளிவு மறைவான, சீர்குலைவு நடவடிக்கைகளுக்காக ரகசிய குழுக்களை கட்டியமைக்கவில்லையெனில் தங்கள் சொந்த நடைமுறை அனுபவத்தால் படிப்படியாக கற்றுக்கொள்ளும்வரை காத்திருந்தோம். எங்கள் முறையே உட்கட்சி விமர்சனம் மற்றும் சுய விமர்சனத்தின் சரியான முறையாகும். நாங்கள் ஜக்கியத்திற்கான விருப்பத்திலிருந்து தொடங்கி விமர்சனம் மற்றும் போராட்டங்களின் வழியாக ஒரு புதிய அடிப்படையிலான ஒரு புதிய ஜக்கியத்தை வந்தடைந்தோம். இவ்வாறு நல்ல விளைவுகள் பெறப்பட்டன. இந்த முரண்பாடுகள் மக்களுக்;கிடையிலான  முரண்பாடுகளே, எதிரிகளுக்கும் நமக்கும் உள்ள முரண்பாடுகள் அல்ல என்று நாங்கள் கருதினோம். எனவே மேற்கூறிய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

தோழர் குருசேவும் பிற ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் இருந்து ஸ்டாலினைப் பற்றி எத்தகைய மனப்பான்மையைப் பெற்றிருக்கிறார்கள்?

அவர்கள் ஸ்டாலின் வாழ்க்கையைப் பற்றியும,; பணிகளைப் பற்றியும் ஒட்டுமொத்த வரலாற்று ரீதியான மற்றும் விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வினைச் செய்யாமல், சரி தவறுகளை வேறுபடுத்திப் பார்க்காமல், அவரை முழுவதுமாக மறுதலித்துள்ளார்கள். அவர்கள் ஸ்டாலினை ஒரு தோழராக மதிக்கவில்லை. மாறாக ஒரு எதிரியாகப் பார்க்கிறார்கள்.
அனுபவங்களைத் தொகுப்பதற்கு அவர்கள் விமர்சன, சுயவிமர்சன முறையைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக அனைத்து தவறுகளுக்கும் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார்கள். அல்லது தாங்கள் ஒரு தலைப்பட்சமாக கண்டு பிடித்த தவறுகளுக்கு ஸ்டாலினைக் காரணமாக குறிப்பிட்டார்கள்.

அவர்கள் உண்மைகளையோ, ஆதாரபூர்வமானவற்றையோ முன்வைக்கவில்லை. மாறாக, ஸ்டாலினுக்கு எதிராக மக்கள் மனதை நச்சுப் படுத்தும் பொருட்டு அவர் மீது கீழ்த் தரமான தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுத்தார்கள்.

குருசேவ் ஸ்டாலினை ஒரு “கொலைகாரன்” என்றும் ஒரு “குற்றவாளி” என்றும் ஒரு “கொள்ளைக்காரன்” என்றும் ஒரு “சூதாடி” என்றும் “பயங்கர இவான”; போன்ற ஒரு “கொடுங்கோலன்” என்றும் ரஸ்சிய வரலாற்றிலே மிகப்பெரிய “சர்வாதிகாரி” என்றும் ஒரு “மடையன்” என்றும் ஒரு “முட்டாள்” என்றும் இன்ன பிற சொற்களால் அவதூறு செய்தார். இத்தகைய அசிங்கமான, அவக்கேடான, வன்மம் மிக்க வார்த்தைகளை நாங்கள் சுட்டிக்காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் அதேசமயம் இது எங்கள் தாளையும் பேனாவையும் அசிங்கப்படுத்திவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். குருசேவ் ஸ்டாலினை ரஸ்சிய வரலாற்றிலே மிகப்பெரிய “சர்வாதிகாரி” என்று அவதூறு செய்துள்ளார். அப்படியானால்  ரஸ்சிய மக்கள் முப்பதாண்டு காலம் ரஸ்சிய வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வாதிகாரியின் கொடுங்கோன்மையின் கீழ் வாழ்ந்தார்கள், சோசலிச அமைப்பு முறையின் கீழ் அல்ல என்று என்று இது பொருள்படவில்லையா? மாபெரும் ரஸ்சிய மக்களும் உலக முழுவதுமுள்ள புரட்சிகர மக்களும் இந்தப் பழிச் சொல்லை முற்றிலும் மறுக்கிறார்கள்.

குருசேவ் ஸ்டாலினை “பயங்கர இவான”; போன்ற ஒரு “கொடுங்கோலன்” என்று அவதூறு செய்துள்ளார். இது மாபெரும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியும் மாபெரும் ரஸ்சிய மக்களும் உலக முழுவதுமுள்ள மக்களுக்கு முப்பதாண்டு காலமாக வழங்கி வந்த அனுபவம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அனுபவமல்ல மாறாக ஒரு நிலப் பிரபுத்துவக் கொடுங்கோலன் ஆட்சியில் பெற்ற அனுபவம் என்று பொருள்படவில்லையா? மாபெரும் ரஸ்சிய மக்களும் ரஸ்சிய கம்யுனிஸ்டுகளும் உலக முழுவதுமுள்ள மார்க்சிய- லெனினியர்களும் இந்தப் பழிச்சொல்லை முற்றிலும் மறுக்கிறார்கள்.
குருசேவ் ஸ்டாலினை ஒரு “கொள்ளைக்காரன்” என்று அவதூறு செய்துள்ளார். இது உலகின் முதலாவது சோவியத் அரசு ஒரு நீண்ட கால அளவுக்கு ஒரு கொள்ளைக்காரனால் தலைமை தாங்கப்பட்டு வந்தது என்று பொருள்படவில்லையா? மாபெரும் ரஸ்சிய மக்களும் உலக முழுவதுமுள்ள புரட்சிகர மக்களும் இந்தப் பழிச் சொல்லை மறுக்கிறார்கள்.

குருசேவ் ஸ்டாலினை ஒரு “மடையன்” என்று அவதூறு செய்துள்ளார். வீர மிக்க புரட்சிகர போராட்டங்களை நடத்தியுள்ள ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி கடந்த பல பத்தாண்டுகளாக ஒரு மடையனை தனது தலைவராக கொண்டிருந்தது என்று இதனால் பொருள்படவில்லையா? ரசிய கம்யுனிஸ்ட்டுகளும் உலக முழுவதுமுள்ள மார்க்சிய- லெனினியர்களும் இந்த அவதூறை முற்றிலும் மறுக்கிறார்கள்.

குருசேவ் ஸ்டாலினை ஒரு முட்டாள் என்று அவதூறு செய்துள்ளார். இது பாசிச எதிர்ப்பு யுத்தத்தில் வெற்றியீட்டிய மாபெரும் ரஸ்சிய ராணுவம் ஒரு முட்டாளை தனது தலைமைத் தளபதியாக கொண்டிருந்தது என்று பொருள்படவில்லையா? புகழ் பெற்ற ரஸ்சிய கமாண்டர்களும் படை வீரர்களும் உலகின் பாசிச எதிர்ப்பு வீரர்கள் அனைவரும் இந்த அவதூறை முற்றிலும் மறுக்கிறார்கள்.

குருசேவ் ஸ்டாலினை ஒரு “கொலைகாரன்” என்று அவதூறு செய்துள்ளார். இது சர்வதேச கம்யுனிச இயக்கம் ஒருகொலைகாரனை பல பத்தாண்டுகளுக்கு தனது ஆசானாகக் கொண்டிருந்தது என்று பொருள்பட வில்லையா? ரஸ்சிய கம்யுனிஸ்டுகள் உட்பட உலக முழுவதுமுள்ள கம்யுனிஸ்டுக்கள் அனைவரும் இந்த அவதூறை முற்றிலும் மறுக்கிறார்கள்.
குருசேவ் ஸ்டாலினை ஒரு “சூதாடி” என்று அவதூறு செய்துள்ளார். இது புரட்சிகரமக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், எதிர்ப்புரட்சிக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் ஒரு சூதாடியை முன்னணியாளனாகக் கொண்டிருந்தார்கள் என்று பொருள் படவில்லையா? ரஸ்சிய மக்கள் உட்பட உலகின் அனைத்து புரட்சிகர மக்களும் இந்த அவதூறை முற்றிலும் மறுக்கிறார்கள்.

ஸ்டாலின் மீதான குருசேவின் இந்த அவதூறு மாபெரும் ரஸ்சிய மக்களை ஒட்டு மொத்தமாக அவமதிப்பதாகும். ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியை ஒட்டு மொத்தமாக அவமதிப்பதாகும். ரஸ்சிய ராணுவத்திற்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கும் சோசலிச அமைப்பு முறைக்கும் சர்வதேச கம்யுனிச இயக்கத்திற்கும் உலக முழுவதுமுள்ள புரட்சிகர மக்களுக்கும் மார்க்சிய- லெனினியத்திற்கும் ஒட்டு மொத்தமான அவமதிப்பாகும்.

இப்பொழுது அழுது புலம்பிக் கொண்டு மேசையைக் குத்தி தனது உச்சஸ்தாயியில் ஸ்டாலின் மீது அவதூறு பொழிந்து கூப்பாடு போடும் குருசேவ் ஸ்டாலின் காலத்தில் அரசு மற்றும் கட்சியின் தலைமையில் அங்கம் வகித்தாரே, அப்படியானால் அவர் தனக்கு என்ன தகுதியை வழங்கிக் கொள்கிறார்? ஒரு கொலைகாரனின் அல்லது கொள்ளைக்காரனின் கூட்டாளி என்ற தகுதியையா? அல்லது மடையன் அல்லது முட்டாள் என்ற அதே தகுதியையா?

ஸ்டாலின் மீதான குருசேவின் இத்தகைய அவதூறுகளுக்கும் ஏகாதிபத்தியவாதிகள் பல்வேறு நாடுகளில் உள்ள எதிர்ப் புரட்சியாளர்கள் கம்யுனிச கொள்கையை விட்டு ஓடிப்போனவர்கள் ஆகியோருடைய அவதூறுகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஸ்டாலின் மீது ஏன் இத்தனை கண் மூடித்தனமான வெறுப்பு? நீங்கள் ஏன் எதிரியை தாக்குவதைவிட மூர்க்கத்தனமாக அவரைத் தாக்குகிறீர்கள்?

ஸ்டாலினை அவதூறு செய்வதன் மூலம் குருசேவ் உண்மையிலேயே சோவியத் அமைப்பு முறையையும் அரசையும் காட்டுத்தனமாக தூற்றுகிறார். இந்த விடயத்தில் அவருடைய வார்த்தைகள் எந்த விதத்திலும் பலவீனமானவை அல்ல. மாறாக காவுட்ஸ்கி, ட்ராட்ஸ்கி, டிட்டோ, ஜிலால் போன்ற ஓடுகாலிகளுடையதைக் காட்டிலும்  உண்மையிலேயே கடுமையானவையாக இருக்கின்றன.

ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்கக் கடிதத்தின் கீழ் கண்ட பகுதியை மேற்கோள் காட்டி மக்கள் குருசேவைக் கேட்க வேண்டும். மாபெரும் லெனினுடைய கட்சியைப் பற்றி , சோசலிசத்தின் தாயகத்தைப் பற்றி , ஒரு சோசலிசப் புரட்சியை நிறைவேற்றுவதில் உலகில் முதலாவதாக இருந்த மக்களைப் பற்றி, சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் உள்நாட்டு எதிர்ப் புரட்சிக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் அதன் மாபெரும் சாதனைகளை உயர்த்திப் பிடித்த மக்களைப்பற்றி, கம்யுனிசத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் வீரசாகச அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டும், அர்ப்பணிப்பைக் காட்டிக்கொண்டும் இருக்கின்ற மக்களைப்பற்றி, உலக உழைக்கும் மக்களுக்கான தங்களின் சர்வதேசக்கடமையை நம்பிக்கையுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற மக்களைப்பற்றி எப்படி அவர்களால் இவ்வாறு சொல்ல முடியும்?

அவதூறின் அரசியல் முக்கியத்துவம் என்ற கட்டுரையில் லெனின் கூறினார் “அரசியல் அவதூறு பல சமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும் நிர்க்கதியையும் பேடித்தனத்தையும் அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்துவிடுகிறது”. ஸ்டாலினுடைய ஆவியினால் இடையறாது அலைக் கழிக்கப்படும் உணர்வைக் கொண்டிருக்கிற , ஸ்டாலினை அவமதிப்பதன் மூலம் தங்களது கொள்கை ஒட்டாண்டித்தனத்தையும், எரிச்சல் தரும் பேடித்தனத்தையும,; நிர்க்கதியான நிலையையும,; மூடி மறைத்து கொள்ள முயற்சிக்கிற ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு இது பொருந்தாதா?

ரஸ்சிய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் ஸ்டாலினை இவ்வாறு அவமதிப்பதை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் மேலும் மேலும் ஸ்டாலினுடைய நினைவைப் போற்றுகிறார்கள். ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் மக்களிடமிருந்து தங்களை மிக மோசமாக தனிமைப் படுத்திக் கொண்டுவிட்டார்கள். அவர்கள் தாங்கள் ஸ்டாலினுடைய அலைக்கழிக்கிற ஆவியினால் பயமுறுத்தப்பட்டுக்கொண்டிருப்பதாக உணருகிறார்கள். உண்மையில் அது ஸ்டாலினை முழுவதுமாக மறுக்கும் செயல்மீது பெரும் அதிருப்தி கொண்டுள்ள பரந்துபட்ட மக்களின் பயமுறுத்தலாக இருக்கிறது. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது பேராயத்தில் முன்வைக்கப்பட்ட ஸ்டாலினை முழுவதுமாக மறுக்கும் ரகசிய அறிக்கையை இதுவரை ரஸ்சிய மக்களும் சோசலிச முகாமில் உள்ள பிற மக்களும் தெரிந்து கொள்வதற்காக வெளியிடும் துணிவு இல்லை. ஏனெனில் அது உண்மையின் வெளிச்சத்தை தாங்க முடியாத மக்களை தீவிரமாக அந்நியப் படுத்திவிடக் கூடிய அறிக்கையாகும்.

சாத்தியப்பட்ட ஒவ்வொரு வழியிலும் ஸ்டாலினை இழிவுபடுத்தும் அதேவேளையில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் தலைவர்கள் ஜய்சனோவர், கென்னடி மற்றும் இவர்களைப் போன்றவர்களை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் போற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் ஸ்டாலினை பயங்கர இவானைப் போன்ற ஒரு கொடுங்கோலன் என்றும் ரஸ்சிய வரலாற்றிலே மிகப் பெரிய சர்வாதிகாரி என்றும் இழிவு படுத்துகிறார்கள். ஆனால் ஜய்சனோவரையும் கென்னடியையும் அமெரிக்க மக்களின் அறுதிப்பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்கள் என்று பாராட்டுகிறார்கள். அவர்கள் ஸ்டாலினை ஒரு மடையன் என்று இழிவு படுத்துகிறார்கள். ஆனால் ஜய்சனோவரையும் கென்னடியையும் விவேகமானவர்கள் என்று புகழ்கிறார்கள். ஒரு புறம் ஒரு மாபெரும் மார்க்சிய-லெனினியவாதியை, ஒரு மாபெரும் பாட்டாளி வர்க்க புரட்சியாளனை, சர்வதேச கம்யுனிஸ்ட் இயக்கத்தின் ஒரு மாபெரும் தலைவனை, அவர்கள் கீழ்தரமான முறையில் தாக்குகிறார்கள். மறுபுறம் ஏகாதிபத்தியத்தின் தலைவர்களை வானளாவப் புகழ்கிறார்கள். இந்த குறிப்பிடத்தக்க சம்பவங்களுக்கிடையிலான உறவு மார்க்சிய-லெனினியத்திற்கு துரோகமிழைத்ததன் தவிர்க்க முடியாத பின் விளைவாகத் தோன்றியது என்பதன்றி தற்செயலாக நிகழ்ந்தது என்று கருத ஏதேனும் வாய்ப்பு உண்டா?

குருசேவின் நினைவு குறுகியதாக இல்லாவிட்டால் அவர் 1937 ஜனவரியில் மாஸ்கோவில் நடந்த ஒரு மக்கள் அணிவகுப்பை நினைத்து பார்க்கட்டும். அந்த அணிவகுப்பில் ஸ்டாலினை தாக்கியவர்களை குருசேவ் மிகச் சரியாகவே கண்டனம் செய்து கீழ்க் கண்டவாறு பேசினார்.”தோழர் ஸ்டாலினுக்கு எதிராக கரம் உயர்த்துபவர்கள் நம் அனைவருக்கும் எதிராக உயர்த்துபவர்கள். உழைக்கும் வர்க்கத்திற்கும், மக்களுக்கும் எதிராக கரம் உயர்த்துபவர்கள். தோழர் ஸ்டாலினுக்கு எதிராக கரம் உயர்த்துவதன் மூலம் அவர்கள் மார்க்ஸ் எங்கெல்ஸ,; லெனின் ஆகியோரது போதனைகளுக்கு எதிராக கரம் உயர்த்துகிறார்கள்”. குருசேவ் தானே ஸ்டாலினை மாபெரும் தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய நண்பர் , போராட்ட தோழன் என்றும் ஒரு மாபெரும் மேதை ,ஆசான், மனித குலத்தின் தலைவர் என்றும் எப்பொழுதும் வெற்றியீட்டும் மாபெரும் ராணுவத் தளபதி என்றும் மக்களின் உண்மையான நண்பன் என்றும் தனது சொந்த தந்தை என்றும் திரும்ப திரும்ப பலவிதமாக புகழ்ந்துள்ளார்.

ஸ்டாலின் உயிரோடு இருந்த போது குருசேவ் கூறிய கருத்துக்களையும் ஸ்டாலின் இறந்த பிறகு குருசேவ் கூறிய கருத்துக்களையும் ஒருவர் ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலினைப் பற்றிய மதிப்பீட்டில் 180 டிகிரி தலை கீழாக அவர் மாறியிருப்பதை ஒருவர் காணாமலிருக்க முடியாது.
குருசேவ் ஞாபகசக்தி மிகவும் குறைவாக இல்லாதிருந்தால் அவர் நினைவு படுத்திப் பார்க்கட்டும். ஸ்டாலின் தலைமைக் காலத்தில் எதிர்ப் புரட்சியாளர்களை நசுக்குவதற்கு நடைமுறையிலிருந்த கொள்கையை கடைப்பிடிப்பதிலும் ஆதரிப்பதிலும் குறிப்பாக குருசேவ்தானே மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்பட்டார்.

1937 ஜீன் 6ம் நாள் மாஸ்கோ பிராந்தியத்தின் ஜந்தாவது கட்சி மாநாட்டில் குருசேவ் பிரகடனம் செய்தார். “நமது கட்சி துரோகிகளையும் காட்டிக் கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிசடைகள் அனைத்தையும் துடைத்தெறியும். இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்கமுடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும். நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்”.

1938ம் ஆண்டு ஜீன் 8ம் தேதி கீவ் பிராந்தியத்தின் நான்காவது கட்சி மாநாட்டில்  குருசேவ் அறிவித்தார். “யாகிர்கள், பலிட்ஸ்கியர்கள், லியுப்செங்கியர்கள், ஜாதொனஸ்கியர்கள் மற்றும் பிற கழிசடைகளும் போலந்து நில உடைமையாளர்களை உக்ரெய்னுக்குள் கொண்டுவர விரும்பினர். ஜெர்மன் பாசிஸ்டுக்களையும், நிலப்பிரபுக்களையும், முதலாளிகளையும் இங்கே கொண்டுவர விரும்பின. கணிசமான எண்ணிக்கையில் எதிரிகளை நாம் ஒழித்துக்கட்டியுள்ளோம். ஆயினும் இன்னும் எதிரிகள் அனைவரையும் ஒழித்துக்கட்டவில்லை. எனவே நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். முதலாளித்துவ முற்றுகை இருக்கும்வரை உளவாளிகளும், அழிவு வேலைக்காரர்களும் நமது நாட்டுக்குள் திருட்டுத்தனமாக அனுப்பப்படுவார்கள் என்ற தோழர் ஸ்டாலினுடைய வார்த்தைகளை நாம் நெஞ்சில் உறுதியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.”

ஸ்டாலின் காலத்தில் கட்சி மற்றும் அரசின் தலைமையில் இருந்த குருசேவ் எதிர்ப்புரட்சியாளர்களை நசுக்கும் கொள்கையை ஆதரித்து உறுதியாக நிறைவேற்றிய குருசேவ் அந்தக் காலத்தில் நடைபெற்ற எல்லாவற்றையும் ஏன் மறுத்துரைக்க வேண்டும்? தன்னை மட்டும் முற்று முழுக்க தூய்மையாக்கி காட்டிக்கொண்டு எல்லா தவறுகளுக்கும் ஸ்டாலின் மீது மட்டும் ஏன் பழியைச் சுமத்த வேண்டும்?

ஸ்டாலின் தவறான ஒன்றை செய்த போது அவர் தன்னைத்தானே விமர்சித்துக்கொள்ளும் தகுதியுடையவராக இருந்தார். உதாரணமாக சீனப் புரட்சிக்கு வழிகாட்டும் வகையில் சில தவறான அறிவுரைகளை அவர் வழங்கியிருந்தார். சீனப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். 1939ல் நடந்த ரஸ்சிய கம்யனிஸ்ட் (போல்~;விக்)கட்சியின் 18வது காங்கிரசில் அவர் முன்வைத்த அறிக்கையில் கட்சி அணிகளை தூய்மைப் படுத்தும் பணியில் தான் செய்த தவறுகளில் சிலவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் குருசேவ் என்ன செய்தார்? சுயவிமர்சனம் என்றால் என்ன என்பதையே அவர் கொஞ்சமும் அறியமாட்டார். அவர் செய்தது எல்லாம் அனைத்து பழியையும் மற்றவர்கள் மீது போட்டுவிட்டு சாதனைகள் அனைத்துக்கும் தானே சொந்தம் கொண்டாடியதுதான்.
நவீன திருத்தல்வாதம் வெறிகொண்டு திரியும் சமயத்தில் குருசேவின் இந்த அசிங்கமான நடவடிக்கைகள் நடந்ததில் ஆச்சரியம் இல்லை.

 மார்க்சியத்திற்கு துரோகம் இழைத்ததற்காக இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்வாதிகளை விமர்சித்து 1915ல் லெனின் சொன்னதைப் போன்று “வார்த்தைகள் மறக்கப்பட்டுவிடும். கொள்கைகள் இழக்கப்பட்டுவிடும். தத்துவங்கள் தூக்கியெறிப்பட்டுவிடும். அனைத்து தீர்மானங்களும் முறைப்படியான வாக்குறுதிகளும் கைவிடப்படும். இந்தக்காலத்தில் இது ஆச்சரியமளிப்பதாகவே இல்லை.”

ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமை ஸ்டாலினை முழுமையாக மறுதலித்ததின் மிகக்கடுமையான பின்விளைவுகளை ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசுக்கு பிறகு நடந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் முழுமையாக காட்டுகின்றன.

அது ஏகாதிபத்தியவாதிகளும் அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களும் மிதமிஞ்சி வரவேற்கத்தக்க ரஸ்சிய எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு தோட்டாக்களை வழங்கியுள்ளது. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசுக்குப்பிறகு வெகு குறுகிய காலத்திலேயே குருசேவின் ஸ்டாலின் எதிர்ப்பு ரகசிய அறிக்கையை ரசிய நாட்டிற்கும் கம்யுனிசத்திற்கும் எதிராக ஒரு உலகு தழுவிய பேரலையை உசுப்பிவிட ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஏகாதிபத்தியவாதிகளும,; அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களும், டிட்டோ கும்பலும், பல்வேறு ரகமான சந்தர்ப்பவாதிகளும,; ரஸ்சிய நாட்டை தாக்குவதற்கும,; சோசலிச முகாமை தாக்குவதற்கும,; கம்யுனிச கட்சிகளைத் தாக்குவதற்கும,; இந்த வாய்ப்பைத் தாவிப் பிடித்துக்கொண்டார்கள். இவ்வாறு பல சகோதரக் கட்சிகளும் நாடுகளும் கடும் சங்கடங்களில் தள்ளப்பட்டன.

ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்களால் ஸ்டாலினுக்கு எதிராக செய்யப்பட்ட வெறித்தனமான பிரச்சாரத்தினால் நீண்டகாலமாக அரசியல் சவங்களாக கிடந்த டிராட்ஸ்கியவாதிகள் மீண்டும் உயிர்பெற்று டிராட்ஸ்கிக்கு புனர்வாழ்வு கொடுக்க கூக்குரலிடுகின்றனர். 1961 நவம்பரில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 22வது பேராயத்தின் முடிவில் சொல்லிக் கொள்ளப்படும் நான்காவது அகிலத்தின் சர்வதேச செயலகம் ரஸ்சிய கம்யனிஸ்ட் கட்சியின் 22வது பேராயத்திற்கு அதன் புதிய மத்திய கமிட்டிக்கும் எழுதிய கடிதத்தில் ஸ்டாலினால் கொலை செய்யப்பட்டவர்களை கௌரவித்து ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என்று 1937ல் டிராட்ஸ்கி சொன்னார் என்று குறிப்பிட்டிருந்தது. அது மேலும் தொடர்ந்து “இன்று இந்த தீர்க்க தரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு உங்கள் கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிட்டது. இந்தக் கடிதத்தில் ஸ்டாலினால் பலி கொள்ளப்பட்டவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிறுவப்படும் நினைவுச் சின்னத்தின் மீது டிராட்ஸ்கியினுடைய பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என குறிப்பாகவே கோரப்பட்டுள்ளது. டிராட்ஸ்கியவாதிகள் தங்கள் மகிழ்ச்சியை மறைக்கவில்லை. ரஸ்சிய கம்யனிஸ்ட் கட்சியின் தலைமையால் தொடங்கப்பட்ட ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம் “டிராட்ஸ்கியத்திற்கு கதவு திறந்து விட்டுள்ளது” என்றும் “டிராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காவது அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாபெரும் உதவியை செய்திருக்கிறது” என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஸ்டாலினை முழுவதுமாக மறுத்ததற்கு வெளியில் சொல்லமுடியாத உள்நோக்கம் இருக்கிறது.
ஸ்டாலின் 1953ல் இறந்தார்.மூன்றாண்டுகளுப்பிறகு 20வது பேராயத்தில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் அவரை மூர்க்கத்தனமாக தாக்கினார்கள். அவர் மறைந்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு 22வது பேராயத்தில் மீண்டும் அதேபோல் செய்தனர். அவரது பூதவுடலை எடுத்து எரித்தனர். ஸ்டாலின் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலை திரும்பவும் தொடங்குவதன் மூலம் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் உலகெங்கிலுமுள்ள மக்கள் மத்தியிலும் ரஸ்சிய நாட்டில் உள்ள மக்கள் மத்தியிலும் அந்த மாபெரும் பாட்டாளிவர்க்க புரட்சியாளன் பெற்றுள்ள அழிக்க முடியாத செல்வாக்கினை துடைத்தெறிய முனைகிறார்கள். இதன் மூலம் திருத்தல்வாதப் பாதையை நடைமுறைப்படுத்துவதற்காக, ஸ்டாலின் பாதுகாத்து வளர்த்த மார்க்சிய-லெனினியத்தை மறுத்துவிட முனைகிறார்கள். அவர்களுடைய திருத்தல்வாத பாதை குறிப்பாக 20வது பேராயத்தில் தொடங்கி 22வது பேராயத்தில் முழுமையாக முறைப்படுத்தப்பட்டுவிட்டது. ஏகாதிபத்தியம், யுத்தம் மற்றும் சமாதானம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் , காலனி , அரைக்காலனி நாடுகளில் புரட்சி, பாட்டாளி வர்க்கக்கட்சி இன்னும் பிறவற்றின் மீதான மார்க்சிய-லெனினிய கொள்கைகளை அவர்கள் திருத்தியது ஸ்டாலினை அவர்கள் முழுவதுமாக மறுதலித்ததுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப் பட்டிருப்பதை நிகழ்ச்சிகள் மேலும் தெளிவாகக் காட்டுகின்றன.

“தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது” என்ற போர்வையில்தான் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமை ஸ்டாலினை முழுவதுமாக மறுக்க முயற்சிக்கிறது.

ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தலைமை பற்றிய கொள்கைகளிலும் கட்சி வாழ்க்கையிலும் லெனினிய மரபுகளை மீட்பதற்காக “தனி நபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை” தொடுக்கவில்லை. மாறாக அவர்கள் தலைவர்கள், கட்சி, வர்க்கம் மற்றும் மக்களுக்கிடையேயான பரஸ்பர உறவுகள் பற்றிய லெனினிய போதனைகளை மீறுகிறார்கள். கட்சியில் ஜனநாயக மத்தியத்துவக் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சி புரட்சிகரப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையகமாக உண்மையிலேயே பணியாற்ற வேண்டுமெனில் அது தலைவர்கள் ,கட்சி, வர்க்கம், மக்கள் ஆகியோருக்கிடையேயான பரஸ்பர உறவுகளைச் சரியாக கையாள வேண்டும். மேலும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மார்க்சிய- லெனினியவாதிகள் வலியுறுத்தி வருகிறார்கள். அத்தகைய ஒரு கட்சி கிட்டத்தட்ட ஒரு ஸ்திரமான தலைமைக் கருக்குழுவை பெற்றிருக்க வேண்டும். அத் தலைமை மார்க்சிய –லெனினிய சர்வ வியாபக உண்மையை புரட்சியின் பருண்மையான நடைமுறையுடன் இணைப்பதில் சிறந்தவர்களாக விளங்கும் புடம் போட்ட தலைவர்களடங்கிய ஒரு குழுவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைவர்கள் அவர்கள் உள்ள+ர் கமிட்டியைச் சார்ந்தவர்களாயினும் சரி , மத்திய கமிட்டியைச் சார்ந்தவர்களாயினும் சரி வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சிகர வெகுஜன இயக்கங்களின் போக்கில் மக்களிடமிருந்து தோன்றுகிறார்கள். அவர்கள் மக்களிடம் எல்லையற்ற விசுவாசம் கொண்டவர்கள். மக்களுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பவர்கள். மக்களின் எண்ணங்களை சரியான முறையில் ஒரு முனைப்படுத்தி அவற்றை செயல் படுத்துவதில் வல்லவர்கள். அத்தகைய தலைவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதிகள். மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அத்தகைய தலைவர்களைப் பெற்றிருப்பது ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாகும். பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்கான நம்பிக்கை இதில்தான் இருக்கிறது.

லெனின் மிகச் சரியாகச் சொன்னார்: “வரலாற்றில் எந்தவொரு  வர்க்கமும் தனது அரசியல் தலைவர்களை –ஒரு இயக்கத்தை கட்டி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லக் கூடிய புகழ்பெற்றுச் சிறந்த தனது பிரதிநிதிகளை –உருவாக்காமல் அரசியல் அதிகாரத்தை வென்றதில்லை.” அவர் மேலும் சொன்னார் “அனுபவமிக்க பெரும் செல்வாக்கு பெற்ற கட்சி தலைவர்களை பயிற்றுவிப்பது என்பது நீண்ட காலம் பிடிக்கக்கூடிய கடினமான பணியாகும். ஆனால் இதில்லாமல் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற அதன் ஒன்றுபட்ட விருப்பம் என்பது ஒரு வெற்றுச் சொல்லாகவே இருக்கும்.”
வரலாற்றில் மக்கள், தனிநபர் ஆகியோரது பாத்திரம் மற்றும் தலைவர்கள் , கட்சி, வர்க்கம், மக்கள் ஆகியவற்றின் பரஸ்பர உறவு பற்றிய மார்க்சிய-லெனினிய போதனைகளை எப்போதும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சி பின்பற்றி வந்திருக்கிறது. கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறது. நாங்கள் எப்போதும் கூட்டுத்தலைமையை கடைப்பிடித்து வந்திருக்கிறோம். அதே சமயத்தில் தலைவர்களின் பாத்திரத்தை சிறுமைப்படுத்துவதை எதிர்க்கிறோம். தலைவர்களின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில் தனி நபர்கள் நேர்மையற்ற முறையில் அளவுக்கு அதிகமாக புகழ்படுவதையும் அவர்களின் பாத்திரம் மிகைப்படுத்தப்படுவதையும் எதிர்க்கிறோம். 1949லேயே சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி தோழர் மாசேதுங்கின் ஆலோசனைப்படி கட்சி தலைவர்களின் பிறந்த நாட்களில் எந்தவிதமான பொது விழாக்கள் எடுப்பதையும் இடங்கள,; தெருக்கள், நிறுவனங்களுக்கு அவர்கள் பெயர் சூட்டப்படுவதையும் தடைசெய்யும் ஒரு முடிவை எடுத்துள்ளது.
இந்த முரண்பாடற்ற சரியான எங்களுடைய அணுகுமுறை ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைமையால் முன்வைக்கப்பட்ட தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்திலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டதாகும்.
தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை முன்வைக்கும் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்களது நோக்கம் அவர்கள் கூறுவதைப் போல ஜனநாயகத்தை வளர்ப்பதோ, கூட்டுத்தலைமையை நடைமுறைப்படுத்துவதோ, தனிநபர் பாத்திரம் மிகைப்படுத்துவதை எதிர்ப்பதோ அல்ல. மாறாக அவர்களுக்கு வேறு உள் நோக்கங்கள் இருக்கின்றன. அவர்களின் தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தின் உண்மையான சாரம்சம் என்ன?

ஒளிவுமறைவின்றிச் சொல்ல வேண்டுமானால் கீழ்கண்டவற்றைத் தவிர வேறொன்றுமில்லை.
1.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் கட்சியின் தலைவரான ஸ்டாலினை கட்சி அமைப்புக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும், பரந்துபட்ட மக்களுக்கும் எதிராக நிறுத்துவது.
2.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் பாட்டாளி வர்க்க கட்சியையும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும,; சோசலிச அமைப்பு முறையையும் களங்கப் படுத்துவது.
3.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்வது. மார்க்சிய-லெனினியத்திற்கு விசுவாசமாக இருக்கும் புரட்சியாளர்களைத் தாக்குவது. அதன் மூலம் திரிபுவாத சூழ்ச்சியாளர்களுக்கு கட்சி மற்றும் அரசு தலைமையைக் கைப்பற்ற பாதையமைத்துத் தருவது.
4.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் தோழமைக்கட்சிகள் மற்றும் நாடுகளது உள்விவகாரங்களில் தலையிடுவது. அவற்றின் தலைமையை தமது வசதிக்கேற்ப கவிழ்க்க முயல்வது.
5.தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற பெயரில் மார்க்சிய-லெனினியத்தை பின்பற்றும் சகோதரக்கட்சிகளை தாக்குவது. சர்வதேச கம்யுனிச இயக்கத்தை பிளவுபடுத்துவது.
குருசேவினால் தொடுக்கப்பட்டுள்ள தனிநபர் வழிபாட்டுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு வெறுக்கத்தக்க அரசியல் சதிச்செயலாகும். மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட ஒருவரைப்போல் “அவர் தன் இயல்பில் ஒரு சதிகாரர். அதே வேளையில் கோட்பாட்டாளன் என்ற முறையில் ஒரு அனாமதேயம்”.
ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்க கடிதம் தனிநபர் வழிபாட்டை நிராகரித்து அதன் பின் விளைவுகளை எதிர்த்து போராடும் வேளையில் அவர்கள் தகுதி வாய்ந்த பெருமைக்குரிய தலைவர்கள் மீது உயர்ந்த மதிப்பை வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது. இதன் பொருள் என்ன? இதன் பொருள் ஸ்டாலினை காலில் போட்டு மிதிக்கும் வேளையில் ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் குருசேவை வானளாவப் புகழ்கிறார்கள் என்பதாகும்.
அக்டோபர் புரட்சியின்போது இன்னும் ஒரு கம்யுனிஸ்ட் ஆகாமலும் உள்நாட்டு போரின்போது ஒரு கீழ்மட்ட அரசியல் பணியாளராகவும் இருந்த குருசேவை அவர்கள் செயலூக்கத்துடன் செம்படையை உருவாக்கியவர் என்று வர்ணிக்கிறார்கள்.
ஸ்டாலின்கிராட் போர்க்களத்தில் குருசேவின் குரலே அடிக்கடி கேட்டது என்றும் அவர் ஸ்டாலின்கிராட் வாசிகளின் ஆன்மாவாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லி அவர்கள் சோவியத் தேசபக்த யுத்தத்தின் தீர்மானகரமான மாபெரும் வெற்றிக்கு முழுவதுமாக குருசேவ்தான் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஏவுகணை மற்றும் அணு ஆயுத தளவாடங்களில் ஈட்டிய மாபெரும் சாதனைகளுக்கு குருசேவ்தான் காரணம் என்று கூறும் அவர்கள் குருசேவை விண்வெளித்தந்தை என்று அழைக்கிறார்கள். ஆனால் அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகள் தயாரிப்பதில் ரஸ்சியா அடைந்த வெற்றிகள் ரஸ்சிய விஞ்ஞானிகள் தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரஸ்சிய மக்கள் ஸ்டாலின் தலைமையின் கீழ் சாதித்த மாபெரும் சாதனைகளாகும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஏவுகணை உற்பத்திக்கான அஸ்திவாரங்கள் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டவை. இந்த முக்கிய வரலாற்று உண்மைகளை எப்படி அழிக்க முடியும்? எல்லாப் பெருமைகளும் குருசேவுக்கு எப்படி சேரும்?
லெனினியம் காலாவதியாகிவிட்டது என்று கூறும் குருசேவை மார்க்சிய-லெனினிய அடிப்படைக் கோட்பாடுகளை திரித்துப் புரட்டிய குருசேவை அவர்கள் மார்க்சிய-லெனினியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைப்படுத்திய புத்திக் கூர்மையுள்ள முன்மாதிரி என்று புகழ்கிறார்கள்.
ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற போர்வையில் செய்வது யாவும் லெனின் மிகச் சரியாக சொன்னது போல “சாதாரண விடயங்களைப்பற்றி மிகச் சாதாரண கண்ணோட்டங்களைக் கொண்டிருந்த பழைய தலைவர்களுக்கு பதிலாக இயற்கைக்கு அப்பாற்பட்டு முட்டாள்தனமாகவும் குழப்பமாகவும் பேசுகிற புதிய தலைவர்களை முன்வைக்கிற” செயலேயாகும்.
ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்க கடிதம் மார்க்சிய-லெனினியத்தை பின்பற்றும் எங்கள் நிலைப்பாட்டின் மீது அவதூறு செய்கிறது. “தனிநபர் வழிபாட்டுக் காலத்தில் திகழ்ந்து வந்த சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகள், தலைமைக்கான வடிவங்கள் மற்றும் முறைகள் ஆகிய, நடைமுறையில் இருந்தவற்றை பிற கட்சிகள் மீது திணிக்க முயல்வதாக” எங்கள் மீது அவதூறு கூறுகிறது. இந்தக் கூற்று தனிநபர் வழிபாட்டை எதிர்த்து போராடுவதன்; முட்டாள்தனத்தை மீண்டும் அம்பலப்படுத்துகின்றது.
ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் கூற்றுப்படி அக்டோபர் புரட்சி ரஸ்சியாவில் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டிய பிறகு அங்கு ஒரு தனிநபர் வழிபாட்டுக்காலம் தொடங்கியது. அந்தக்காலத்தின் சமூக அமைப்பு முறையும் சித்தாந்த மற்றும் நெறிமுறைகளும் சோசலிசத்திற்கானவை அல்ல என்று தோன்றும். அந்தக் காலத்தில் ரஸ்சிய உழைக்கும் மக்கள் ஒரு கனத்த சுமையினால் அழுத்தப்பட்டுக் கிடந்தார்கள். அங்கே மக்களுடைய வாழ்க்கையை நச்சுப்படுத்திய நிச்சயமின்மையும் சந்தேகமும் அச்சம் நிறைந்த சூழலும் நிலவியது. இவை ரஸ்சிய சமுதாய வளர்ச்சியை தடை செய்தன.

1963 ஜீலை 19ல் நடந்த ரஸ்சிய-ஹங்கேரி நட்புறவு பேரணியில் குருசேவ் ஆற்றிய உரையில் “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலை நிறுத்தினார்” என்று கூறி ஸ்டாலினுடைய பயங்கர ஆட்சி பற்றிப் பேசினார். அந்தக் காலத்தின் சமூக நிலைமைகளை கீழ்கண்டவாறு வர்ணித்தார். “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா தனது மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் காண்போமா என்பதைப்பற்றி நிச்சயமற்றிருந்தான்”.

ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்களின் வர்ணிப்புப்படி தனிநபர் வழிபாட்டுக் காலத்தில் சமுதாயம் நிலப்பிரபுத்துவம் அல்லது முதலாளித்துவக்  காலத்திலிருந்ததைவிட மிகவும் வெறுக்கத் தக்கதாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் இருந்தது.

ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்களின் கூற்றுப்படி அக்டோபர் புரட்சியின் விளைவாக நிறுவப்பட்ட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும் சோசலிச சமூக அமைப்பு முறையும் உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்கு முறையை நீக்குவதற்கோ அல்லது ரஸ்சிய சமுதாயத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கோ பல பத்தாண்டுகள் தவறிவிட்டன. ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது பேராயம் தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை நிறைவேற்றிய பின்புதான் உழைக்கும் மக்கள் மீது இருந்த கனத்த சுமை அகற்றப்பட்டது. ரஸ்சிய சமுதாயத்தின் வளர்ச்சி திடீரென்று துரிதப்பட்டது.

குருசேவ் சொன்னார் “ஆ! ஸ்டாலின் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பே செத்திருந்தால்... !” எல்லோருக்கும் தெரிந்ததுபோல் ஸ்டாலின் 1953ல் இறந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு என்பது 1943ஆக இருந்திருக்கும். அந்த ஆண்டுதான் ரஸ்சிய நாடு மாபெரும் தேச பக்த யுத்தத்தில் எதிர்த் தாக்குதலை தொடங்கியிருந்தது. அந்தக் காலத்தில் ஸ்டாலின் இறந்து போக வேண்டுமென்று விரும்பியது யார்? ஹிட்லர்!

சர்வதேச கம்யுனிச இயக்க வரலாற்றில் மார்க்சிய-லெனினியத்தின் எதிரிகள் பாட்டாளி வர்க்க தலைவர்களைக் கொடியவர்களாகக் காட்டுவதும் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது போன்ற முழக்கங்களைப் பயன்படுத்தி பாட்டாளிவர்க்க இலட்சியத்திற்கு குழி பறிப்பதும் புதிய விடயமல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே மக்கள் கண்டுகொண்ட ஒரு அசிங்கமான தந்திரமே இது.
முதலாவது அகிலத்தின் காலகட்டத்தில் சதிகாரன் பக்கூன் மார்க்ஸை வசைபாட இத்தகைய மொழியைத்தான் பயன்படுதினான். முதலில் மார்க்ஸின் நம்பிக்கையை பெறுவதற்கு புழுவைப்போல் நெளிந்து “ நான் உங்கள் சீடன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று எழுதினான். பிறகு முதலாவது அகிலத்தின் தலைமையைக் கைப்பற்றுவதற்கான தனது சதியில் தோல்வியுற்ற அவன் மார்க்ஸை வசை பாடினான். “ஒரு ஜேர்மானியனும் யூதனுமான அவன் அடியிலிருந்து முடிவரை ஒரு எதேச்சதிகாரி” மற்றும் “ஒரு சர்வாதிகாரி” என்றும் சொன்னான்.

இரண்டாவது அகிலத்தின் காலகட்டத்தில் லெனினை வசைபாட ஓடுகாலி காவுத்ஸ்கி இதே மாதிரி மொழியைத்தான் பயன்படுத்தினான். “ஒரு அரசாங்க மதத்தின் தரத்திற்கு மட்டுமல்ல , மாறாக ஒரு மத்தியக்கால அல்லது கிழக்கத்திய (மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு மார்க்சியத்தை குறுக்கிவிட்ட ஏகக்கடவுள் கொள்கையினரின் கடவுள்” என்று லெனினை பழித்துக் கூறினான்.

மூன்றாவது அகிலத்தின் காலகட்டத்தில் ஸ்டாலினை வசைபாட ஓடுகாலி டிராட்ஸ்கி இதேமாதிரி மொழியைத்தான் பயன்படுத்தினான். ஸ்டாலினை ஒரு கொடுங்கோலன் என்றும் ஸ்டாலினிய அதிகார வர்க்கம் தலைவர்களுக்கு தெய்வீக குணாம்சங்களை சூட்டும் ஒரு இழிவான தலைவர் வழிபாட்டை உருவாக்கிவிட்டது என்றும் கூறினான்.
நவீன திரிபுவாத டிட்டோ கும்பலும் ஸ்டாலினை வசைபாட இதே மொழியை பயன்படுத்துகிறது. ஸ்டாலின் முற்று முழுக்க தனிநபர் அதிகாரத்தை கொண்ட ஒரு அமைப்பு முறையில் சர்வாதிகாரியாக இருந்தார் என்று கூறுகின்றது.

இவ்வாறு ரஸ்சிய கம்யுனிஸ்ட் கட்சி தலைமையினால் எழுப்பப்பட்டுள்ள தனிநபர் வழிபாட்டை எதிர்க்கும் போக்கு பாட்டாளிவர்க்க தலைவர்களைத் தாக்கவும் பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்திற்கு குழிபறிக்கவும் பக்கூன், காவுட்ஸ்கி, டிராட்ஸ்கி மற்றும் டிட்டோ போன்ற அனைவரும் பயன்படுத்தியதுதான் என்பது தெளிவாகிறது.

சந்தர்ப்பவாதிகள் சர்வதேச கம்யுனிச இயக்க வரலாற்றில் மார்கஸ், எங்கெல்ஸ் அல்லது லெனினை வசைபாடுவதன் மூலம் அவர்களை மறுதலிக்க முடியவில்லை. குருசேவினாலும் வசைபாடுவதன் மூலம் ஸ்டாலினை மறுதலிக்க முடியாது.

லெனின் சுட்டிக்காட்டியது போல உயர்ந்த பதவி இழிவுபடுத்தலின் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது.

லெனின் அருங்காட்சியகத்திலிருந்து ஸ்டாலினுடைய உடலை அப்புறப்படுத்த குருசேவ் தனது உயர்ந்த பதவியை பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அவர் எவ்வளவுதான் முயன்றாலும் உலகெங்குமுள்ள மக்கள் மனதிலிருந்தும் ரஸ்சிய மக்களின் மனதிலிருந்தும் ஸ்டாலின் மீதான மாபெரும் பற்றுதலை நீக்குவதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
மார்க்சிய- லெனினியத்தை ஒரு வழியிலோ அல்லது இன்னொரு வழியிலோ திரித்துப் புரட்டுவதற்கு குருசேவ் தன்னுடைய உயர்ந்த பதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அவர் என்னதான் முயன்றாலும் உலகெங்குமுள்ள மார்க்சிய-லெனினியவாதிகளால் பாதுகாக்கப்பட்ட, ஸ்டாலினால் பாதுகாக்கப்பட்ட மார்க்சிய-லெனினியத்தை தூக்கியெறிவதில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.

நாங்கள் தோழர் குருசேவுக்கு அக்கறையுடன் ஒரு அறிவுரை கூற விரும்புகிறோம். நீங்கள் உங்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு தவறான பாதையிலிருந்து மார்க்சிய-லெனினியப் பாதைக்கு திரும்பி வருவீர்கள் என நம்புகிறோம்.

மார்க்ஸ,; எங்கெல்ஸ,; லெனின,; ஸ்டாலின் ஆகியோரது மாபெரும் புரட்சிகர போதனைகள் வாழ்க!








Tuesday, December 23, 2014

சிறப்புமுகாம் என்னும் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம்

சிறப்புமுகாம் என்னும் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம்

அமெரிக்காவின் குவாண்டநாமோ சித்திரவதை முகாம் பற்றி அறிந்த அளவிற்கு, கிட்லரின் யூத சித்திரவதை முகாம்கள் பற்றி அறிந்த அளவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் பற்றி உலகம் இதுவரை அறியவில்லை. இதில் வேதனை என்னவென்றால்  தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்திரவதை முகாம் கொடுமைகள் பற்றி தமிழர்களே இன்னும் முழுமையாக அறியாமல் இருப்பதே.

அமெரிக்காவின் குவாண்டநாமோ சிறை கொடுமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகக்குறைந்தது அதை ஒத்துக்கொள்கிறார். அந்த வதைமுகாமை மூடுவதற்கு தான் எவ்வளவோ முயன்றதாக பேட்டி கொடுக்கிறார். ஆனால் தமிழ் அகதிகளின் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை ஒத்துக்கொள்வதுமில்லை. அது குறித்து வாய் திறப்பதும் இல்லை.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு எனறு தமிழ்மக்கள் பெருமையாக கூறிவருகிறார்கள். ஆனால் அது தன்னை நம்பி வந்த தமிழ் அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகின்றது என்பதை ஏனோ அவர்கள் கவனத்தில் கொள்ள தவறுகிறார்கள்.

சிறப்புமுகாம் என்றால் என்ன?
சிறப்புமுகாம் என்பது 1946ம் ஆண்டு அயல்நாட்டார் சட்டம் 3(2)நு ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்து முகமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் முகாம் ஆகும். சட்டப்படி மாவட்ட ஆட்சிதலைவரின் அதிகாரத்தின் கீழ் உள்ள முகாம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் நடைமுறையில் இந்த முகாம் தொடர்பான அனைத்து அதிகாரமும் சட்டவிரோதமாக கியூ பிரிவு பொலிசாரிடமே வழங்கப்பட்டிருக்கிறது. பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள முகாமாவே இது இயங்கி வருகிறது.

சிறப்பு முகாம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
சிறப்பு முகாம் என்பது முதன் முதலாக 1990ம் ஆண்டு உலக தமிழனத் தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர்களால் அகதியாக வந்த ஈழத் தமிழர்களை  அடைத்து வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த கலைஞர் அரசு தவறிவிட்டதாக மத்திய அரசு குற்றம்சாட்டியபோது மத்திய அரசை திருப்திப் படுத்துவதற்காக கலைஞர் அரசால் வேலூர் கோட்டையில் உள்ள திப்புமகாலில் முதலாவது சிறப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டது.

சிறப்பு முகாமில் முதலில் அடைக்கப்பட்டவர்கள் யார்?
தமிழீழ விடுதலை புலிகளை கட்டுப்படுத்த சிறப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டதாக அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் உண்மையில் அதில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அல்லர். மாறாக சாதாரண அகதி முகாமில் வாழ்ந்து வந்த அப்பாவி அகதிகளே. அவர்கள் படிக்க வசதி, நல்ல வேலைவாய்ப்பு போன்றவை தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார்கள். அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட பின்பே தெரிந்து கொண்டார்கள்.


வேலூர் சிறப்புமுகாமில் துப்பாக்கிசூடு ஏன் நடத்தப்பட்டது?
வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்து கோபம் கொண்டார்கள். தங்களை உடனே விடுதலை செய்யும்படி கோரினார்கள். உணவு உட்கொள்ள மறுத்தார்கள். ஆனால் அவர்களை எந்த அரசு அதிகாரிகளும் சென்று சந்திக்கவும் இல்லை. அவர்களது கோரிக்கைக்கு தகுந்த பதில் அளிக்கப்படவுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவ் அகதி இளைஞர்கள் திப்புமகால் வாயிற் கதவுக்கு தீவைத்தார்கள். பொலிசாரை நோக்கி கற்களை வீசினார்கள்.

பொலிஸ் கமிசனர் தேவாரம் தலைமையில் வந்த பொலிசார் அவ் அகதி இளைஞர்களை அடக்குவதற்காக துப்பாக்கி பிரயோகம் நிகழ்த்தினார்கள். அதனால் அப்பாவி இளைஞர்கள் இருவர் பலியானார்கள். பல இளைஞர்களை கட்டைகளை கொண்டு தாக்கினார்கள். இறுதியாக 130 இளைஞர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

உலகில் நிராயுதபாணியான அகதிகளை துப்பாக்கியால் சுட்டு அடக்கிய பெருமை தமிழக பொலிசாரையும் அதற்கு உத்தரவு வழங்கிய கலைஞர் கருணாநிதியையுமே சேரும். தங்களை விடுதலை செய்யுமாறு கோரிய அகதிகளை “பிரியாணி கேட்டு கலகம் செய்தார்கள்” என்று பத்திரிகைகள் தம் பங்கிற்கு எழுதி அகதிகள் மீது அவதூறு பரப்பினார்கள்.

எதிர்க்கட்சிதலைவராக இருக்கும்போது சிறப்புமுகாம் பற்றி கலைஞர் கருணாநிதி கூறியது என்ன?
மத்திய அரசை திருப்திப்படுத்த சிறப்பு முகாம் என்னும் கொடிய சித்திரவதை முகாமை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பித்திருந்தாலும்கூட மத்திய அரசானது அவரது அரசை டிஸ்மிஸ் செய்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயா அம்மையார் ஆட்சிக்காலத்தில் வேலூர் கோட்டை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சிலர் சுரங்கம் தோண்டி தப்பியிருந்தார்கள். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி  தான் சிறப்பு முகாமை சில மாதங்களின் பின் மூட இருந்ததாகவும் ஆனால் அதற்குள் தனது அரசு கலைக்கப்பட்டுவிட்டதால் தன்னால் மூட முடியாமற் போய்விட்டது என அறிக்கை விட்டார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது சிறப்பு முகாமை மூடுவதற்கு தான் நினைத்திருந்ததாக கூறிய கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு முகாமை மூடுவார் என சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த அகதிகள் நம்பினார்கள். அதன் பின் இரண்டு முறை ஆட்சிக்கு கலைஞர் வந்துவிட்டார். ஆனால் அவர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடுவதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜெயா அம்மையார் சிறப்பு முகாம்கள் குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?
பொதுவாக கலைஞர் திட்டங்களுக்கு எதிராக செயற்படும் குணம் கொண்ட ஜெயா அம்மையார் கலைஞர் ஆரம்பித்த சிறப்பு முகாம்களை மூடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ செங்கல்பட்டு, பூந்தமல்லி, மேலூர், துறையூர், திருவையாறு, பழனி என பல்வேறு இடங்களில் இருந்த கிளைச் சிறைகளில் புதிய சிறப்புமுகாம்களை உருவாக்கினார். ராஜீவகாந்தி கொலையைக் காரணம் காட்டி பல அப்பாவி அகதிகளை பிடித்து சிறப்புமுகாம்களில் அடைத்தார். கலைஞரும் ஜெயா அம்மையாரும் ஒற்றுமையாக செயற்பட்ட ஒரேயொரு விடயம் இந்த சிறப்பு முகாம் விடயம் மட்டுமே! ஈழ அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து துன்புறுத்துவதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை தங்கள் ஆட்சிக் காலங்களில் இருவரும் நன்கு காட்டினார்கள்.

சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாம் என சிறப்பு முகாம் ஏன் கருதப்படுகிறது?
சிறைச்சாலையானது கொடிய சித்திரவதைகள் நிறைந்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த சிறைகளில் வழங்கப்படும் அற்ப சலுகைகள் கூட சிறப்பு முகாம்களில் வழங்கப்படுவதில்லை. அதனால்தான் சிறப்புமுகாம் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் என கருதப்படுகிறது.

சிறையில் அடைக்கப்படும் கைதிகள் பராமரிப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக சிறைவிதிகள் உண்டு. ஆனால் இந்த சிறப்புமுகாமில் அடைக்கப்படும் அகதிகள் உரிமைகள் தொடர்பாக எந்த விதியும் இல்லை. இதனால் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் (றுP 15044ஃ91) உயர்நீதிமன்ற நீதிபதிகள் 'அருணாசலம்" மற்றும் 'பிரதாப்சிங்" அவர்கள் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவெனில்,
(1)சிறப்பு முகாமில் உணவு வழங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக ஓரு உதவி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
(2)சிறப்பு முகாமில் வைக்கப்படுபவர்களுக்கு அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதேயன்றி மற்றும்படி அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(3)சிறப்பு முகாமில் வைக்கப்பட்டவர்கள் விரும்பினால் குடும்பத்தலைவர்களை வரவழைத்து தங்களுடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்தவர்களின் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
(4)சிறப்பு முகாமிற்குள் இருப்பவர்களை சிறையில் சிறைவாசிகளை 'லாக்கப்" செய்வதுபோல் (செல்களில் வைத்துப்  ப+ட்டுதல்) லாக்கப் செய்வது கூடாது. முகாமின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
(5)பார்வையாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். எவ்வித நேரக் கட்டுப்பாடுமின்றி விரும்பிய நேரம் பேசுவதற்கும், பொருட்கள் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
(6)போலீசார் காவலுக்கு மட்டும் அதுவும் சிறப்பு முகாமின் வெளிப்புறத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். மற்றும்படி தாசில்தார் பொறுப்பில் தான் முகாம் நிர்வகிக்கப்படும்.                      
(7)நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் சொந்தச் செலவிலோ அல்லது அரசு செலவிலோ அனுப்பிவைக்கப்படும்.
                                        
தமிழக அரசு கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேற்கண்ட உரிமைகள் யாவும் வழங்கப்பட்டு சட்டப்படியே சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் உண்மையென்னவெனில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அவ்வுரிமைகளில் ஒன்றைக் கூட தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வழங்கவில்லை. மாறாக தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் மனிதாபிமானமற்ற முறையில், ஈவிரக்கமின்றி, தமிழ் அகதிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றனர்.

தமிழக பொலிஸ் சிறப்புமுகாம் அகதிகளை அடித்து துன்புறுத்துகிறதா?
தமிழக பொலிஸ் பெண் அகதிகளை பாலியல் வல்லுறவு செய்கிறதா?
சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை தமிழக பொலிஸ் அடித்து சித்திரவதை செய்கிறது. அகதி பெண்களை பாலியல் வல்லுறவு செய்கிறது. மனதாபிமாமற்ற முறையில் சட்ட விரோதமாக செயற்படுகிறது என்பதை பல முறை தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மனிதவுரிமை கமிசன் தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நீதிமன்றங்களில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சிவா என்பவர் கரூர் நீதிமன்றில் 17.10.1994யன்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து  வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
 '21.12.93 அன்று உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் வெறிபிடித்த போலீசார் கும்பலாகச் சேர்ந்து என்னைத் தாக்கினார்கள். இதனால் என் கால் முறிந்தது. அன்று என்னை மட்டுமல்ல முகாமில் வைக்கப்பட்டிருந்த இன்னும் பலரையும் இவ்வாறு அடித்துத் துன்புறுத்தினர். அவர்கள் எவ்வாறு சித்திரவதை செய்தனர் என்பதைக் கூறுவதற்கு என் நாக்கு கூசுகிறது. அந்த அளவிற்கு கேவலமான முறையில் கொடுமை செய்தனர். கால் முறிந்து நடக்க முடியாமல் நான் வேதனைப்பட்ட போதும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. எனக்கு மருத்துவ சிகிச்சையும் தரப்படவில்லை. 

இச்சிறப்பு முகாமில் தாய், தந்தை, பிள்ளைகளை பிரித்து அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசுவதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு தனியாகப் பிரித்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களை தமது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் மருத்துவமனைக்கென அழைத்துச் சென்று வெளியே வைத்து தமது காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். இவ்வாறு போலீஸ் அதிகாரிகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உயரதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டும் மனுக் கொடுத்தும் இதுவரை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் நடத்தப்படுகிறதென்றே நான் கருதுகிறேன்.

அத்துடன் இங்குள்ள சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இந்நிலையில் நோட் புக், பேனா, பாடப்புத்தகங்கள் எவற்றையும் சொந்தச் செலவில் பெற்று படிப்பதற்கும்கூட அனுமதிக்கவில்லை." என்று தனது வாக்குமூலத்தில் சிவா தெரிவித்துள்ளார்.

சிவா என்பவரின் இந்த நீதிமன்ற வாக்குமூலம் தமிழக பொலிஸ் சிறப்புமுகாம் அகதிகளை அடித்து துன்புறுத்துகிறது என்பதற்கும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் பொலிசாரினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதற்கும் சாட்சியாக உள்ளது. ஆனால் கரூர் நீதிமன்றமோ அல்லது தமிழக அரசோ இதுவரை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

ஜெயா அம்மையாருக்கு ஒரு நீதி 
சிறப்புமுகாம் அகதிகளுக்கு இன்னொரு நீதி. 
இது என்ன நியாயம்?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இங்கு ஜெயா அம்மையாருக்கு ஒரு நீதி, சிறப்புமுகாம் அகதிகளுக்கு இன்னொரு நீதி வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?

66கோடி ரூபா மக்களின் பணத்தை சுருட்டிய குற்றத்திற்காக ஜெயா அம்மையாருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் நான்கு வருட தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு 21 நாட்களில் ஜாமீன் விடுதலை அளித்துள்ளது.  அதேவேளை அகதிகள் எந்தவித குற்றச்சாட்டும் இன்றி எந்தவித தண்டனையும் இன்றி வருடக் கணக்காக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் விடுதலை குறித்து நீதிமன்றங்கள் அக்கறையற்று இருப்பது என்ன நியாயம்?

ஜெயா அம்மையாருக்கு மட்டுமன்றி அவருடைய வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் என்று காரணம் கூறி ஜாமீன் விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால் சிறப்புமுகாமில் உண்மையாகவே உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதே காரணங்களுக்காக  விடுதலை செய்யவில்லை.  இது என்ன நியாயம்?

சிறையில் தன்னுடன் தங்கியிருக்க தனது தோழி சசிகலாவுக்கு அனுமதியளிக்குமாறு ஜெயா அம்மையார் கோரினார். ஆனால் சிறப்புமுகாமில் கணவன் மனைவி குழந்தைகளைக்கூட பிரித்து வைத்திருப்பதோடு அவர்கள் பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சிறையில் ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் சலுகைகள்கூட சிறப்புமுகாமில் அப்பாவி அகதிகளுக்கு மறுப்பது என்ன நியாயம்?

தமிழக அரசு தவறிழைத்தால் நீதிமன்றில் முறையிடலாம். 
நீதிமன்றம் கவனிக்க தவறினால் சர்வதேச அமைப்புகளிடம் முறையிடலாம். 
சர்வதேச அமைப்புகளும் கண்டுகொள்ளாவிடின்  என்ன செய்ய முடியும்?

சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து பலர் நீதிமன்றங்களில் முறையிட்டார்கள். குறிப்பாக நான் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவேளை எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் நீதிமன்றங்களில் நேரிடையாக முறையிட்டேன். அதுமட்டுமன்றி மக்கள் உரிமைக்கழக வழக்குரைஞர் பி.வி. பக்தவச்சலம் எனக்காக சென்னை உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் அரசு இணச்செயலர் பாஸ்கரதாஸ் மன்னிப்பு கோரியதுடன் இனி என்னை சட்டரீதியாக நடத்தப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனால் அதன் பின்பும்கூட தமிழக அரசு என்மீது மட்டுமல்ல சிறப்புமுகாம் அகதிகள் அனைவர் மீதும் சட்டவிரோதமாகவே செயற்பட்டு வருகிறது.

நான் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேளை தோழர் தமிழ்முகிலன் மற்றம் பல மனிதவுரிமை ஆர்வலர்கள் இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவந்த போராட்டத்தின் பயனாக மனிதவுரிமைக்கமிசன் தலைமை நீதிபதி வேலூர் சிறப்புமுகாமிற்கு விஜயம் செய்து நேரில் கொடுமைகளைப் பார்வையிட்டார். இனிமேல் இவ்வாறு நிகழாவண்ணம் தான் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார். ஆனால் அதன் பின்னும் கொடுமைகள் அதிகரித்ததுதான் மிச்சம்.

இந்திய நீதிமன்றங்களினால் தமிழக அரசின் இக் கொடுமைகளை தடுத்து நிறுத்த எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வேறு வழியின்றி நானே ஜ.நா மனிதவுரிமைக் கமிசன் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை போன்றவற்றுக்கு மனுக்கள் அனுப்பினேன். எனது மனுக்களை பெற்றுக்கொண்டதாக அறிவித்த அந்த அமைப்புகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசு தொடர்ந்து தவறு இழைத்து வருகிறது. இது குறித்து நீதிமன்றங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. சர்வதேச அமைப்புகளும் இது குறித்து அக்கறையற்று இருக்கின்றன. இந் நிலையில் அந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாரில் நம்பிக்கை வைக்க முடியும்? அவர்கள் விடுதலை பெறுவதற்கு என்னதான் செய்ய முடியும்?

சிறப்புமுகாம்கள் ஏன் இன்னும் மூடப்படவில்லை?
புலிகளை அடைத்து வைப்பதற்காகவே சிறப்பு முகாம்களை உருவாக்கியதாக கலைஞர் கருணாநிதி கூறினார். அதன் பின்பு வந்த ஜெயா அம்மையாரும் புலிகள் நடமாட்டம் இருப்பதால் சிறப்புமுகாமை வைத்திருப்பதாக கூறினார். ஆனால் தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதனை ஏற்றுக்கொண்டு ராஜீவ்காந்தி கொலையில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் பெயரை நீக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு மட்டும் புலிகளின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாமை மூட மறுத்து வருகிறது.

யுத்தம் முடிந்து 5 வருடங்களாகிவிட்டது. மகிந்த ராஜபக்சகூட முள்வேலிக்குள் அடைத்து வைத்திருந்த தமிழர்களை பெரும்பாலும் விடுதலை செய்துவிட்டார். ஆனால் தமிழக அரசு மட்டும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது.

சிறப்புமுகாம்களின் தற்போதைய நிலை என்ன?
தற்போது திருச்சி மற்றம் பூவிருந்தவல்லி என்னும் இரு இடங்களில் சிறப்புமுகாம் உள்ளது. அதில் பல அப்பாவி அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு பல முறை உண்ணாவிரதம் இருந்துள்ளனர். ஆனால் காந்தி தேச ஆட்சியாளர்கள் அந்த அகதிகளின் அகிம்சை போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை. மாறாக காவலுக்கு இருந்த தமிழக பொலிஸ் அதிகாரிகள் “தேவடியா அகதி நாய்களே! அடித்து போட்டால் ஏன் என்று கேட்க யாரும் இல்லை. உங்களுக்கு உண்ணாவிரத போராட்டம் கேட்குதா?” எனக் கேட்டு அந்த அப்பாவி அகதிகளைத் தாக்கியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி அந்த அகதிகள் 17 பேர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை சாகவும் விடாது காப்பாற்றிய பொலிசார் அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அகதிகளை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொடுமைப்படுத்தும் ஒரே அரசு உலகத்தில் தமிழக அரசாகவே இருக்கும்!

சிறப்பு முகாமும் தமிழக அரசியல் தலைவர்களும்

கலைஞர் கருணாநிதி
முதன் முதலில் சிறப்புமுகாமை உருவாக்கி அதில் அப்பாவி அகதிகளை அடைத்தவர் உலக தமிழின தலைவர் என தன்னை பெருமையாக அழைத்துக் கொள்ளும்  கலைஞர் கருணாநிதி அவர்கள். அவர் அதன் பின்பு பல முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டார். ஆனால் தான் உருவாக்கிய சிறப்பு முகாமை மூடுவதற்கு அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. ஆனால் தமிழீழம் அமைக்க “டெசோ” மாநாடு நடத்துகிறார். உண்மையில் அவர் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமாயின் முதலில் தான் உருவாக்கிய சிறப்புமுகாமை  மூடியிருக்க வேண்டும். அவர் சிறப்புமுகாமை மூடாதது மட்டுமல்ல தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் அதனை மூடுமாறு கோரிக்கைகூட வைக்க மறுக்கிறார். இந் நிலையில் இவர் ஈழத் தமிழகள் மீது அக்கறை கொண்டு “டெசோ” மாநாடு நடத்துகிறார் என்று எப்படி நம்ப முடியும்?

ஜெயா அம்மையார்
ஜெயா அம்மையார் தான் பதவிக்கு வந்தால் ராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்று தருவேன் என்றார். ஆனால் அவர் பதவிக்கு வந்த பின் அது குறித்து பேசுவதில்லை. அவர் ஈழம் பெற்றுத்தராவிட்டாலும் பரவாயில்லை, சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்துவைத்திருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்திருக்கலாம். ஆனால் அவர் அதற்கும்கூட தயார் இல்லை. இந்நிலையில் அவரை “ஈழத்தாய்” என சிலர் அழைப்பது வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

வைகோ
வைகோ அவர்கள் சிறப்பு முகாமை மூடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால் அவருடைய கட்சியினர் மத்திய அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சிறப்புமுகாமை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குமாறு உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த வைகோ அவர்கள் விரும்பியிருந்தால் இந்த சிறப்புமுகாமை மூடுமாறு உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருக்கமுடியும். அதன் மூலம் சிறப்புமுகாமை மூட வழி செய்திருக்க முடியும். ஆனால் அவர் அது குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ் அவர்களும் சிறப்புமுகாமை மூடுமாறு பல முறை கோரியிருக்கிறார் போராட்டமும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவருடைய மகன் அன்புமணி மத்திய அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சிறப்புமுகாமை மூடுவதற்கு அவர்மூலம் எதாவது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதுமட்டுமல்ல தமிழகத்தில்கூட அவருடைய கட்சியின் ஆதரவுடனே தமிழக அரசு இயங்கி வந்தது. அப்போதும்கூட டாக்டர் ராமதாஸ் அவர்கள் விரும்பியிருந்தால் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறப்புமுகாமை மூடியிருக்க முடியும். ஆனால் அவரும்கூட அக்கறையற்று இருந்துள்ளார்.

திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சிறப்பு முகாமை மூடுமாறு கோரிக்கை விட்டிருக்கிறார். ஆனால் அவருடைய ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி செய்த வேளையில் அவர் ஒருமுறைகூட பாராளுமன்றத்தில் இந்த சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து குரல் எழுப்பவில்லை. இது ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் சிறப்புமுகாமை மூடி அதில் உள்ள அகதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளனர். பல்வேறு மனிதவுரிமை ஆர்வலர்கள் இந்த கொடுமைகள் குறித்து குரல் எழுப்பியுள்ளனர். சர்வதேச அமைப்புகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் உலகத்தின் கவனமும் குறிப்பாக தமிழ்மக்களின் கவனமும் இந்த கொடுமை குறித்து கவனம் கொள்ளாததாலேயே அகதிகள் மீதான சிறப்புமுகாம் கொடுமைகள் தொடருகின்றன.

ஈழத்தமிழ் தலைவர்களின் கண்டு கொள்ளாத அவல நிலை
ஈழத் தமிழ் தலைவர்கள் அடிக்கடி இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து வருகின்றனர். அவ்வேளைகளில் அவர்கள் ஒருமுறைகூட சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதில்லை. அண்மையில் தமிழகத்திற்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழகத்தில் இருக்கும் அகதிகளை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு கோரியபோதும்கூட சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோராதது ஈழதமிழ்மக்களின் தலைவர்களின் அவல நிலையைக் காட்டுகிறது.

இதைவிட பெரிய கொடுமை என்னவெனில் அமெரிக்காவில் இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் என தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும் உருத்திரகுமார் அவர்கள்கூட ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயா அம்மையாரை விடுதலை செய்யமாறு அறிக்கை விடுகிறார். ஆனால் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு அவரால் ஒருபோதும் அறிக்கை விடப்படவில்லை.

சிறப்புமுகாம் கொடுமைக்கு என்னதான் முடிவு?
உலகத்தின் கவனத்திற்கு குறிப்பாக தமிழக மக்களின் கவனத்திற்கு சிறப்புமுகாம் கொடுமைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழக மக்களால் மாத்திரமே இந்த கொடுமைக்கு முடிவு கட்ட முடியும். அந்த மக்களால் மட்டுமே சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்ய முடியும். எனவே அவர்கள் கவனத்திற்கு இந்த சிறப்புமுகாம் கொடுமைகளை கொண்டு செல்வதே விடுதலையை விரும்புபவர்களின் பணியாக இருக்க வேண்டும்.