Tuesday, October 31, 2023

தமிழா!

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது உனது ரயில்வேயில் உனக்கு வேலை இல்லை. 90% வேலை வட மாநிலத்தவருக்கு. காஸ்மீர் எல்லையில் காவலுக்கு சென்று நீ சாக வேண்டும். ஆனால் கடலில் உன் மீனவனைக் காக்க யாரும் வருவதில்லை. வருடம் 85 ஆயிரம் கோடி ரூபா வரி நீ கட்ட வேண்டும். ஆனால் கொரோனோவுக்கு காசு கேட்டு நீ கையேந்தினாலும் உதவி கிடைப்பதில்லை. தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் நீ அதை ஆள முடியாது! உன் கைக்கு எட்டும் தூரத்தில் 2 லட்சம் தமிழர் உன் கண்முன் கொல்லப்படும்போதும் உன்னால் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நீ அடிமையாக இருக்கிறாய் தமிழா! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் கிடக்கப் போகிறாய் தமிழா! மூவாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு உனக்கு உண்டு. ஆனால் அதை உணராமல் கைபர் கணவாய் வழியே ஆடு மாடு மேய்த்து வந்தவனிடம் அடிமையாகக் கிடக்கிறாயே. நீ எட்டுக் கோடி தமிழா. ஆனால் இரண்டு கோடி சிங்களவன் எப்படி உன் தொப்புள் கொடி உறவுகளை தைரியமாக கொல்ல முடிந்தது? ஏனெனில் அவன் இரண்டு கோடியாக இருந்தாலும் அவனுக்கு தனி நாடு இருக்கிறது. அவனுக்கு ஒரு அரசும் இருக்கிறது. உனக்கும் ஒரு நாடும் அதில் உன் அரசும் இருந்தால் நீயும் தலை நிமிர்ந்து வாழ முடியும் அல்லவா? உன்னைவிட வரலாறும் சனத் தொகையும் குறைந்த பிரான்ஸ் இன்று வல்லரசு. பிரிட்டன் இன்று வல்லரசு. ஆனால் நீ மட்டும் இதை உணராமல் அடிமையாகக் கிடக்கிறாயே? நீ அடிமையாக கிடப்பது கேவலம் அல்ல. மாறாக நீ அடிமையாக கிடக்கிறாய் என்பதை உணராமல் இருக்கிறாயே அதுதான் கேவலம். உன் அடிமைத்தனத்தை உணர்ந்துகொள் உன் பலத்தை அறிந்துகொள் அதன் பின்னர் கிழக்காசியாவில் ஒரு அதிசயம் நிகழ்வதை நீ காண்பாய். "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதே ஈழத்தமிழருக்கு செய்யும் உதவியாகும்" – தோழர் தமிழரசன்.

சம்பந்தன் தமிழரின் அடையாளம்.

சம்பந்தன் தமிழரின் அடையாளம். அவர் பதவி விலக தேவையில்லை – விக்கினேஸ்வரன். முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை ஈழத்து தலைலாமாவாக பயன்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் அரசியல் அறிவியலாளர் திருநாவுக்கரசு கூறினார். ஒறிஜினல் தலைலாமாவையே இந்தியா கைவிட்டுவிட்டது. அப்படியிருக்க ஈழத்து தலைலாமாவிற்கு இந்தியா உதவும் என்று எப்படி இந்த அரசியல் அறிவியாளர் நம்புகின்றார் என்று தெரியவில்லை. இந்த ஈழத்து தலைலாமாவை அரசியலுக்கு அழைத்து வந்து மாகாண முதலமைச்சர் பதவியை கொடுத்தவர்கள் சம்பந்தரும் சுமந்திரனுமே. பின்னர் இவருக்கு எதிராக ஆளுநரிடம் மனுக் கொடுத்தவர்களும் இந்த சம்பந்தரும் சுமந்திரனுமே. அதனால் தமிழரசுக்கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி கண்டுள்ளார் இந்த ஈழத்து தலைலாமா அதையெல்லாம் மறந்து எப்படி இவர் சம்பந்தருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் என்று பலருக்கு தோன்றும். அதொன்றுமில்லை. வயது மூப்பு காரணமாக சம்பந்தர் பதவி விலகினால் அடுத்து தன்னையும் பதவி விலகுமாறு கோரிவிடுவார்களோ என்ற அச்சம்தான்.

ஒருவர் தமிழகத்தை பலமுறை ஆண்டவர்

ஒருவர் தமிழகத்தை பலமுறை ஆண்டவர் இன்னொருவர் தன்னையே “ஆண்டவர்” என்றவர் இருவருமே தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைத்தவர்கள். கீழே உள்ள படம், சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று சாய்பாபாவுக்கு கலைஞர் விளக்கிய போது 😂😂

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்த பைரவி என்ற அரசு பள்ளி மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஆழ்ந்த இரங்கல்கள்.

Monday, October 30, 2023

காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்திற்கு

காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்திற்கு இடையில் பெரும் ஆராவாரத்தோடு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தானே காரணம் என்று ஈழத்து சிவசேனைத்தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அறிக்கை விட்டார். சேவை தொடங்கிய அடுத்த நாள் போதுமான பயணிகள் இல்லை என நிறுத்தப்பட்டது. அடுத்து காலநிலை காரணம் என்று தற்போது ஓரேயடியாக நிறுத்தப்பட்டுவிட்டது. கப்பற்சேவை ஆரம்பித்தமைக்கு தானே காரணம் என்று அறிக்கைவிட்ட சச்சிதானந்தம் அவர்கள் கப்பற்சேவை நிறுத்தப்பட்டது குறித்து கருத்து எதுவும் கூறவில்லை. இப்போது தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரத்திற்கு இடையில் கப்பற் சேவை ஆரம்பிக்கப்போவதாக கதை கூறுகின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் மறைக்கும் ஒரு செய்தி என்னவெனில் 1984ம் ஆண்டுவரை தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இருந்தது என்பதை. அதுவும் இந்த கப்பற்சேவை ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைவரை ரயில் நிலையத்திலேயே டிக்கட் பெற்றுக் கொள்ளலாம். நான் இவ்வாறு டிக்கட் பெற்று மதுரையில் எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த உலக தமிழாராய்ச்சி மாநாட்டை சென்று பார்த்து வந்தேன். கப்பற் சேவை மட்டுமல்ல அப்போது பலாலி மற்றும் திருச்சிக்கு இடையில் விமான சேவையும் இருந்தது. இவ்வாறு ஏற்கனவே இருந்த சேவைகளை மீண்டும் இப்போது ஆரம்பித்துவிட்டு ஏதோ பிரதமர் மோடி ஈழத் தமிழர் மீது இரக்கம் கொண்டு புதிதாக ஆரம்பித்திருப்பதாக கதை விடுகின்றனர்.

தாய் பாதுசாம்மாள் 3வது நினைவு தினம்

•தாய் பாதுசாம்மாள் 3வது நினைவு தினம் 1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார். தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட. மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்? ஆம். அந்த கொடும் துயரை 33 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே. தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய். தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை. மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை. நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை. அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருப்பார்? இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். முடியவில்லை. ஆனாலும் அவர் மகன் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது அவரிடம் சேர்ப்பிக்க முடிந்ததையிட்டு ஆறுதல் அடைகிறேன். அந்த தாயாரின் 3வது நினைவு தினம் இன்று ஆகும். அவருக்கு என் அஞ்சலிகள்.

Sunday, October 29, 2023

1998ம் ஆண்டு நான் மேலூர் சிறப்புமுகாமில்

1998ம் ஆண்டு நான் மேலூர் சிறப்புமுகாமில் இருந்து விடுதலையான போது என்னை பொலிஸ் காவலுடன் சென்னை விமான நிலையம் அழைத்துச் சென்றனர். பொதுவாக சிறப்புமுகாமில் இருந்து இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களை சென்னை விமான நிலையத்தின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு விமானம் புறம்படும் நேரம் விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்வார்கள். ஆனால் என்னை வழக்கத்திற்கு மாறாக மேல்மருத்துவத்தூர் பொலிஸ் நிலையத்தில் தங்க வைத்தார்கள். புதிதாக கட்டப்பட்ட கட்டிடம். நன்றாக இருந்தது. பங்காரு அடிகளார் கட்டிக் கொடுத்தது என்றார்கள். அடுத்த வாரம் அமைச்சர் வந்து திறப்பு விழா செய்ய விருப்பதாக கூறினார்கள். கழிப்பறை குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருந்தது. பைப்பில் தண்ணீர் நன்றாக வந்தது. அறை எல்லாம் ரியூப் லைற் மின்விசிறி என ஏதோ ஓட்டல் போல் இருந்தது. காலையில் என்னை அருகில் உள்ள பங்காரு அடிகளாரின் கோயிலுக்கு பொலிசார் அழைத்துச் சென்றனர். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தனர். ஆண் பெண் எல்லோரும் செவ்வாடை உடுத்திருந்தனர். எல்லோரும் முதலில் பங்காரு அடிகளாரை வணங்கினார்கள். அப்புறம்தான் உள்ளே சென்று கடவுளை வணங்கினார்கள். கடவுள் இருக்கு என்று கூறுபவனைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் தான் கடவுள் என்று கூறும் மனிதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். சாதாரண சயிக்கிளில் சென்றவர். இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். மக்களின் அறியாமையை பயன்படுத்தியே அவர் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறார். பின்னர் அவர்கள் என்னை அப்படியே அங்கிருந்து விமானம் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விமானம் புறப்பட பல மணி நேரம் இருந்தும் விமான நிலையத்திற்குள் நேராக அழைத்துச் சென்று உள்ளே ஒரு அறையில் இருத்திவிட்டனர். என்னை யாரும் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே மேல்மருத்துவத்தூர் பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டேன் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். தோழர் பொழிலன் உட்பட பல நண்பர்கள் என்னை வழியனுப்ப வந்து என்னை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குறிப்பு – என்னை விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்லும்போது வாசலில் காத்திருந்த சில நண்பர்கள் எடுத்துக் கொண்ட படம் கீழே உள்ளது.

விமர்சனமற்ற சமூகம் ஒருபோதும்

விமர்சனமற்ற சமூகம் ஒருபோதும் தன்னை திருத்திக்கொள்ளவோ அல்லது முன்நோக்கி பயணிக்கவோ முடியாது. எனவே வீழ்ந்து கிடக்கும் ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் அதற்கு மிகவும் அவசியமானது ஆக்கபூர்வமான விமர்சனமே. இப்போது எம்முன் உள்ள கேள்வி ஆக்கபூர்வமான விமர்சனத்தை செய்வது எப்படி என்பது பற்றியே. இதற்கு மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் அவர்கள் எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார். அவர் கூறுகிறார் 'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார். ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது. ஏனெனில் நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.. எமது உரையாடல்கள் பொறுப்புணர்வுடன் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும். மாறாக எம் மத்தியில் உருவாகிவரும் ஜக்கியத்தை குழப்புவதற்கு முயலும் நம் எதிரிகளுக்கு உதவிடக்கூடாது.

ஜனனி

• ஜனனி கடந்த வருடம் வரை யாழ்ப்பாணத்தில் எந்தவித பிரபல்யமும் அற்ற ஒரு சாதாரண பெண்ணாக இருந்தார். கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு அவரை உலகெங்கும் பிரபல்யப்படுத்தியது. குறிப்பாக பிக்பாஸில் அவர் பேசிய ஈழத் தமிழ் அவரை தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைக்க வைத்தது. மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த அவரை திடீரென்று பிக்பாஸ் நிகழ்வில் இருந்து வெளியேற்றப்பட்டது பலரையும் ஆதங்கப்பட வைத்தது. ஆனாலும் பிக்பாஸில் வென்றவர்களுக்கே கிடைக்காத பட வாய்ப்பு அவருக்கு கிடைத்து. லியோ படத்தில் லோகேஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் நடிப்பேன் என அவர் கனவில் நினைத்திருக்கமாட்டார். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார். பாராட்டுகள். மேலும் வளர அவருக்கு வாழ்த்துகள்.

செந்தில் பாலாஜி இதை உணராமல்

செந்தில் பாலாஜி இதை உணராமல் இருப்பாரா?😂

அராலித்துறை படுகொலை 36ம் ஆண்டு நினைவுதினம்

•அராலித்துறை படுகொலை 36ம் ஆண்டு நினைவுதினம் இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி யாழ் அராலித்துறையில் நடத்திய தாக்குதலில் 2மாத பெண் குழந்தை, மாணவர்கள் உட்பட 35 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். காசாவில் பாலஸ்தீன மக்கள் படுகொலைக்கு கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினருக்கு ஒரு நினைவூட்டல் இது. இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு பாராட்டுகள்.

கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை

• கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை கடந்த தேர்தலில் “திமுக பதவிக்கு வந்தால் நீட் ரத்து செய்வோம்” எதிர்வரும் தேர்தலில் “திமுக கூட்டணி பதவிக்கு வந்தால் நீட் ரத்து செய்வோம்” சரி, நீட் கொண்டு வந்து யாரு? அதுவும் நாங்கதான் ;

கல்வியைக் கொடுப்பது கலைமகள்

“கல்வியைக் கொடுப்பது கலைமகள் எனில் இன்னமும் கைநாட்டுக்காரர் இருப்பது ஏன்?” “கலைமகள் உறைவது பிரமா நாவில் எனில் அவள் மல சலம் கழிவது எங்கே?” 1978ல் நவராத்திரி விழாவின்போது நெல்லியடி மத்திய சந்தை சுவரில் நாம் ஒட்டிய சுவரொட்டிகள் இவை. ஒவ்வொரு நவராத்திரி விழாவின்போதும் நெல்லியடி காளிகோவிலில் பட்டி மன்றம் சிறப்பாக நடக்கும். கல்வியா? செல்வமா? வீரமா? என்ற தலைப்பில் புகழ் பெற்ற பேச்சாளர்கள் பேசுவார்கள். அந்த காலத்தில் நெல்லியடியில் சண் தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியினர் அதிக அளவில் இருந்தனர். அவர்கள்தான் இந்த போஸ்டரை ஒட்டியிருக்க வேண்டும் என நினைத்து பேசிய பேச்சாளர்கள் அனைவரும் அவர்களை வறுத்தெடுத்தனர். திட்டித் தீர்த்தனர். நாம் பயத்தில் வாய் திறக்காமல் பேசாமல் இருந்துவிட்டோம்.😂

மறப்பது மக்கள் வழமை

• மறப்பது மக்கள் வழமை நினைவூட்ட வேண்டியது நமது கடமை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது. ஆனால் சம்பந்தர் ஐயா கூறிய தீர்வுதான் இன்னும் வரவில்லை. முதலில் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார். தீர்வு வரவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தது. அப்புறம் இரு வாரங்களில் தீர்வு குறித்து நல்ல செய்தி வரும் என்றார். அப்பவும் தீர்வு வரவில்லை. ஆனால் இரண்டாவது சொகுசு பங்களாவும் அதற்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ரூபா பண ஒதுக்கீடு என்ற நல்ல செய்தியும் அவருக்கு வந்தது. அதன்பின்பு அடுத்த தீபாவளி பண்டிகை தீர்வு கிடைத்து மகிழ்வான சூழ்நிலையில் நடக்கும் என்றார். அடுத்த தீபாவளிகள் வந்து செல்கின்றன. ஆனால் அவர் கூறிய தீர்வும் வரவில்லை. தீபாவளி கொண்டாடக்கூடிய மகிழ்வான சூழ்நிலையும் தமிழ் மக்களுக்கு வரவில்லை. பொதுவாக, ஒரு பண்பான அரசியல் தலைவர், தான் கூறியது நடக்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்வார். சம்பந்தர் ஐயா பண்பான தலைவரும் இல்லை. அவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நேர்மையான தலைவரும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் தான் சொன்னது ஏன் நடக்கவில்லை என்பதற்கு ஒரு விளக்கமாவது தமிழ்மக்களுக்கு கொடுக்க வேண்டாமா?

கடந்த வருடம் இதே நாளில் இன்னும்

கடந்த வருடம் இதே நாளில் இன்னும் ஒரு வருடத்தில் இனப்பிரச்னைக்கு தீர்வு என்று ரணில் அறிவித்தார். ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அவர் கூறிய தீர்வு தரவில்லை. இதுவரை தீர்வு தரவில்லை என்பதுமட்டுமன்றி இனி இப்போதைக்கு தீர்வு இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது. ஏனெனில் ரணிலே இப்போது தீர்வு பற்றி பேசுவதை கைவிட்டுவிட்டார். மூக்கனாங்கயிறை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த பயனும் இல்லை அதுபோல கோத்தாவுக்கு பதிலாக ரணிலை மாற்றியதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்களே உணர ஆரம்பித்துவிட்டனர்.

போராட்டம் வெற்றி பெறட்டும்

போராட்டம் வெற்றி பெறட்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை பெற வழி கிடைக்கட்டும்

இந்திய அரசு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை

இந்திய அரசு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தது. அதன் தலைவர் யசீர் அரபாத்திற்கு செங்கள வரவேற்பு அளித்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் இந்தியாவில் அலுவலகம் அமைக்க அனுமதித்தது. ஆனால் இந்திய அரசு தமிழீழத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. ஈழப் போராளிகள் இயக்கத்தை அங்கீகரிக்கவில்லை. ஈழப் போராளி தலைவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கவில்லை. வெளிப்படையாக அலுவலகங்கள் அமைக்கவும் அனுமதிக்கவில்லை. அதனால்தான் தோழர் தமிழரசன், பாலஸ்தீனத்தை அங்கரித்ததுபோன்று தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்ததுபோன்று ஈழ விடுதலை இயக்கங்களையும் அங்கீகரித்து உதவ வேண்டும் என்று வலியுறுத்தி அரியலூர் ரயில் பாலத்திற்கு குண்டு வைத்தார். அன்று தோழர் தமிழரசன் வலியுறுத்தியதை வேறு எந்த அரசியல் தலைவரும் வலியுறுத்தவில்லை. ஈழ போராளி அமைப்பு தலைவர்களும்கூட தோழர் தமிழரசன் கோரிக்கை எந்தளவு அவசியமானது என்பதை உணர தவறிவிட்டனர். தோழர் தமிழரசன் கோரிக்கை நிறைவேறியிருந்தால் ஈழப் போராட்ட வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். முள்ளிவாய்க்கால் அவலம்கூட நிகழ்ந்திருக்காது. குறிப்பு – ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்திய அரசு உதவவில்லை என்பவர்கள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள்?

ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும்

“ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட அயோக்கியன்” - பிடல் காஸ்ரோ

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி – பெரியார் கலைஞரை வணங்குபவன் திராவிட பகுத்தறிவுவாதி?? கடவுளுக்கு படைத்தால் கடவுள் சாப்பிடுவாரா என்று கேட்பவர்கள், கலைஞருக்கு படைத்தால் கலைஞர் சாப்பிடுவாரா என்று கேட்பதில்லை இதுதான் திராவிட பகுத்தறிவா?

வன்னியில் ஒருநாள் வழக்கம்போல்

வன்னியில் ஒருநாள் வழக்கம்போல் சிங்கள அரசின் விமானம் மக்கள் மீது குண்டுகளை வீசிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிறுவன் கோவத்தில் அருகில் நின்ற போராளியிடம் “அண்ணே அதை சுடுங்க” என்று கேட்டான். அதற்கு அந்த போராளி “அது ரொம்ப உயரத்தில் பறக்கிறது. இந்த துப்பாக்கியால் அதை சுட முடியாது” என்றார். அதற்கு அந்த சிறுவன் “அப்ப இந்த விமானங்களை சுடக்கூடிய துப்பாக்கி உங்களிடம் இல்லையா?” என்று கேட்டான். அப்போது அந்த போராளி “எம்மிடம் இப்ப இல்லை. அது வாங்க ரொம்ப காசு வேணும்” என்றார். சிறிது யோசித்த சிறுவன் “பறக்கும்போது சுட முடியாது என்றால் பறந்து முடிய ஒரு இடத்தில் இறங்கி நிற்கும்தானே, அப்ப சுடலாம் தானே?” என்று கேட்டான். அந்த போராளி இந்த சிறுவனின் கேள்வியை தன் தலைமைக்கு அனுப்பினார். இந்த சிறுவனின் கேள்வியே விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் அநுராதபுரம் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு சென்று தாக்கும் யோசனையை தலைமைக்கு கொடுத்தது. விமான நிலையங்களை சென்று தாக்கும் திட்டத்திற்கு ஒரு சிறுவனே காரணம் எனபது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் மனிதன் என்பவன் ஒரு சமூக பிராணி. அவன் தான் சார்ந்துள்ள சமூக சூழ்நிலையையே பிரதிபலிப்பான். இதற்கு சிறந்த உதாரணம், தோழர் ஸ்டாலின் காலத்தில் ரஸ்சியாவுக்கு சென்ற இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் ஒருவர் அங்குள்ள ஒரு சிறுவர் பாடசாலையை பார்வையிட சென்றார். அங்கு அவர் சிறுவர்களிடம் ஐந்து ரூபாய் பொருள் ஒன்றை எட்டு ரூபாய்க்கு விற்றால் என்ன கிடைக்கும் என்று கேட்டார்? மாணவர்கள் மூன்று ரூபாய் லாபம் கிடைக்கும் என கூறுவார்கள் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்த மாணவர்கள் ஆறு மாதம் தண்டனை கிடைக்கும் என்றார்கள். ஆம். பொருட்களை இப்படி அதிக விலைக்கு விற்பது குற்றம் என்று அப்போது மாணவர்களுக்கு படிப்பிக்கப்பட்டது. அதையே மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள். நீதி – நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோமோ அதை முதலில் மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.

நோர்வே சென்ற ஈழத் தமிழ் பெண்

நோர்வே சென்ற ஈழத் தமிழ் பெண் படித்து முதல் தமிழ் பெண் விமானி ஆகியுள்ளார். அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். உலகெங்கும் சென்ற ஈழத் தமிழர் படித்து பட்டம் பெறுகின்றனர். அங்கு குடியுரிமையும் பெறுகின்றனர். ஆனால் தமிழ்நாடு சென்ற ஈழத் தமிழர்கள் நாற்பது வருடமாக அகதிகளாகவே வாழ்கின்றனர். இந்திய அரசு எப்போது இவர்கள் மீது இரக்கம் காட்டும்?

வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர்

வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் அறிவியல் பாடம் படிப்பித்துக்கொண்டிருந்தார். அப்போது “ஆங்கிலேயர் நீராவியில் இருந்து ரயில் எஞ்சின் கண்டு பிடித்தனர். தமிழர்கள் ஏன் கண்டு பிடிக்கவில்லை?” எனக் கேட்டார். அதற்கு ஒரு மாணவன் “ சேர் ! தமிழர்கள் நீராவியில் புட்டு அவிக்க கண்டு பிடித்திருக்கின்றனரே “ என்றான். “சரி. அப்படியென்றால் ஆப்பிள் மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் விழுவதைப் பார்த்து நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார். தமிழர்கள் ஏன் புவியீர்ப்புவிசையைக் கண்டு பிடிக்கவில்லை?” எனக் கேட்டார் ஆசிரியர். அதற்கு ஒரு மாணவன் “ சேர்! தமிழர் பிரதேசத்தில் ஆப்பிள் மரம் இல்லை. அதனால் கண்டு பிடிக்கவில்லை” என்றான். ஆசிரியர் சிரித்துவிட்டு “பனை மரத்தில் இருந்து பனங்காய் விழுகிறதுதானே? அதைப் பார்த்து கண்டு பிடித்திருக்கலாம்தானே” எனக் கேட்டார். மாணவர்கள் பதில் கூறவில்லை. அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. அப்போது ஆசிரியர் “ ஆப்பிள் பழம் மேலே போகாமல் ஏன் கீழே விழுகிறது என்று நீயூட்டன் தனக்குள் கேள்வி எழுப்பியதாலே அவரால் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடிக்க முடிந்தது” என்றார். மேலும் ஆசிரியர் “எனவே நீங்களும் எப்போதும் கேள்வியை எழுப்புங்கள். நீங்களும் விஞ்ஞானியாகலாம்” என்றார். இதைக் கேட்ட மாணவன் ஒருவன் எழுந்து “ஒரு கேள்வி கேட்கலாமா சேர்” என்றான். ஆசிரியர் மிக்க மகிழ்ச்சியுடன் “தாராளமாக கேளு” என்றார். “சம்பந்தர் ஐயா எப்போது உறக்கத்தில் இருந்து எழும்புவார்? அவர் எப்போது தமிழருக்கு தீர்வு பெற்று தருவார்? “ என்று கேட்டான். இந்த கேள்வியை எதிர்பார்க்காத ஆசிரியர் எஸ்கேப். அதன் பிறகு அவர் எந்த மாணவர்களிடமும் கேள்வி கேளுங்கள் என்று கூறுவதில்லை. குறிப்பு – (1)அந்த ஆசிரியர் நான் இல்லை😂😂 (2) மாணவனின் கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் தாராளமாக கீழே எழுதலாம்.

கரடியே காரித் துப்பிடிச்சு!

• கரடியே காரித் துப்பிடிச்சு! கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை. மற்றவர் துணையின்றி நடக்க முடியவில்லை. எனவே சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் என நான் எழுதினேன். அப்போது சுமந்திரன் தம்பிகள் பலர் வந்து என்னை திட்டினார்கள். அது மட்டுமல்ல சம்பந்தர் ஐயா நன்கு ஆரோக்கியமாக செயற்படுவதாகவும் கூறினார்கள். இப்போது அவர்களுடைய சுமந்திரனே வந்து வயது மூப்பு காரணமாக சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக கோரியுள்ளார். எனக்கு பல விபரங்கள் தெரிந்திருந்தும் சம்பந்தர் ஐயாவை அவமதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதாமல் தவிர்த்தேன். ஆனால் சுமந்திரன் 288 நாளில் வெறும் 39 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு சம்பந்தர் ஐயா வந்துள்ளார் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல அவருக்கு சம்பளமாக 40 லட்சம் ரூபாவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்திற்காக 4 லட்சத்து 19ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். எல்லாவற்றையும்விட சுமந்திரன் தன் தலைவர் சம்பந்தர் ஐயா பற்றிய இவ் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கூடாக பெற்றுள்ளார். சுமந்திரனுக்கு சம்பந்தர் ஐயா மீது ஏன் இந்த கோபம் என்று தெரியவில்லை. ஏன் பகிரங்கமாக இதை எல்லாம் கூறி சம்பந்தர் ஐயாவை அவமதிக்கிறார் என்றும் புரியவில்லை. எனவே இனியும் சம்பந்தர் ஐயா பதவியில் இருப்பது முறையில்லை. அவர் பதவி விலகி இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

செய்தி – சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும்

செய்தி – சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் - சுமந்திரன் கோரிக்கை தம்பி சுமந்திரன் நீயுமா? உமக்கு போனஸ் எம்.பி பதவி தந்தேனே பின்னர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தேனே என்ன குறை உமக்கு வைத்தேன் தம்பி? ஏன் இப்போது பதவி விலக கோருகிறீர்? பதவி போனால் சொகுசு பங்களா பறிபோகும் என்று தெரியாதா? பதவி போனால் சொகுசு வாகனமும் போய்விடும். சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் போய்விடும் என்று தெரியாதா? அப்புறம் இந்திய தூதர்கூட விருந்துக்கு அழைக்க மாட்டாரே இந்த வயதான காலத்தில் இதை யெல்லாம் விட்டிட்டு என்னால் வாழ முடியுமா? என்மேல் அப்படி என்ன கோவம் தம்பி உமக்கு? என்னைப் பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் போய் தகவல் பெற்றுள்ளீரே? என்னை இப்படி அசிங்கப்படுத்த வேண்டுமா?

எல்லா தமிழர்களையும் வெட்டுவேன்

எல்லா தமிழர்களையும் வெட்டுவேன் என சிங்கள புத்த பிக்கு மிரட்டல். புலிகள் இல்லாத காட்டில் குள்ள நரிகள் அட்டகாசம் மீண்டும் புலிகள் வர வேண்டும் என தமிழ் மக்கள் ஏன் விரும்புகின்றார்கள் என்று இப்போது புரிகிறதா

நடந்தவற்றை மாற்ற முடியாது

நடந்தவற்றை மாற்ற முடியாது ஆனால் மறக்க முடியும் மறக்க முடியாதவற்றை மன்னிக்க முடியும் ஆனால் எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது

கலைஞர் குடும்பத்தினர்

கலைஞர் குடும்பத்தினர் வீட்டில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என ஆளுநர் தமிழிசை கடந்த வருடம் கூறியிருந்தார். அதை இதுவரை கலைஞர் குடும்பத்தினர் யாருமே மறுக்கவில்லை. இந்தியாவில் இப்போது மூன்று தெலுங்கு முதல்வர்கள் இருக்கிறார்கள். ஏன் ஒரு தமிழ் முதல்வர்கூட இல்லை? ஒரு டவுட்! ரஜனி வீட்டில் கலைஞர் குடும்பத்தினருடன் தமிழிசை உரையாடுகிறார். அவர்கள் என்ன மொழியில் உரையாடியிருப்பார்கள்?😂

ஒரு சிங்கள பிக்கு தமிழர்

ஒரு சிங்கள பிக்கு தமிழர் நிலத்தில் வந்து இருந்துகொண்டு எல்லா தமிழர்களையும் வெட்டுவேன் என்கிறார். தமிழர் நிலத்தில் திலீபன் நினைவு ஊர்தி கொண்டு சென்றது இன நல்லிணக்கத்தை பாதிக்கிறது என்ற ஆளுநருக்கு இந்த பிக்கு இன நல்லிணக்கத்தை பாதிப்பதாக தோன்றவில்லையா? திலீபனை நினைவு கூர்வது சட்ட விரோதம் என்ற ஆளுநர் பிக்குவின் பேச்சு குறித்து மௌனம் காப்பது ஏன்? ஆளுநர் உயிரோடு இருக்கிறாரா? அல்லது மானஸ்தன் எங்கேயாவது தூக்கில் தொங்கிவிட்டாரா?

தொடரும் இந்திய அரசின் இராஜதந்திர தோல்விகள்!

•தொடரும் இந்திய அரசின் இராஜதந்திர தோல்விகள்! என்றுமில்லாதவாறு தனது அண்டை நாடுகளான உறவில் மட்டுமன்றி உலகில் பல நாடுகளுடன் உறவில் பெரும் பின்னடைவை இந்தியா சந்தித்துள்ளது. இது பிரதமர் மோடி அரசின் பெரும் இராஜதந்திர தோல்வியாக காட்டப்படுகிறது. மாலைதீவின் புதிய ஜனாதிபதி “ஒரு இந்திய ராணுவ வீரர்கூட தன் நாட்டில் இருக்க அனுமதிக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பில் இருக்கும் பூட்டான் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மிக முக்கிய பாதுகாப்பு பிரதேசமாக கருதப்படும் சிக்கன் நெக் ( கோழிக் கழுத்து) பகுதியை சீனாவுக்கு வழங்க பூட்டான் சம்மதம் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளில் இலங்கை அரசுதான் இந்தியாவுக்கு ஆதரவான நாடு என கருதப்பட்டது. இந்திய உதவிகளை பெருமளவில் பெற்று வருகிறது இலங்கை அரசு. ஆனால் இப்போது அந்த இலங்கை அரசு இந்திய அரசின் வேண்டுகோளுக்கு எதிராக சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது. கனடாவில் சீக்கிய தலைவர் ஒருவரை கொன்றமையினால் கனடாவுக்கும் இந்தியாவிற்குமான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இப்போது கர்த்தார் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. அது பற்றி இதுவரை வாய் திறக்காத இந்திய பிரதமர் மோடி பாலஸ்தீன பிரச்சனையில் இஸ்ரவேலுக்கு ஆதரவு தெரிவித்தார். முஸ்லிம் நாடுகள் பெற்றோல் தர முடியாது என்று எச்சரித்ததும் அடுத்த நாள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்று அறிக்கை விடுத்தார். வேறு எந்த இந்திய பிரதமரும் இப்படி ஒரு நாளில் பல்டி அடிக்கவில்லை என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

ஈழத்து கருணாநிதியா சம்பந்தர் ஐயா?

• ஈழத்து கருணாநிதியா சம்பந்தர் ஐயா? கலைஞர் கருணாநிதி இறக்கும்வரை தனது பதவியை துறக்கவில்லை. அதுபோல் சம்பந்தர் ஐயாவும் இறக்கும்வரை தனது பதவியை துறக்கமாட்டார் என்றே கூறுகின்றனர். சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் என்று இரு தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் பகிரங்கமாக கோரியிருந்தார். இந் நிலையில், சம்பந்தர் ஐயா பதவி விலகுமாறு கோர சுமந்திரனுக்கு அருகதை இல்லை என்று சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். தீர்வு பெற்றுத் தரவில்லை என்றால் பதவி விலகுவேன் என்று நல்லாட்சி அரசில் சுமந்திரன் கூறியிருந்தார். அதன்படி அவர் பதவி விலகவில்லை. எனவே சம்பந்தர் ஐயாவை கோர சுமந்திரனுக்கு தகுதி இல்லை என்கிறார் தவராசா. ஆம். தவராசா கூறுவது உண்மைதான். சுமந்திரனுக்கு தகுதி இல்லைதான். ஆனால் சுமந்திரனுக்கு தகுதி இல்லை என்பதற்காக சுமந்திரன் கோரிய கோரிக்கை தவறு என்று அர்த்தம் இல்லை. சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் என்பது நியாயமான தேவையான கோரிக்கை. அவசியமான கோரிக்கையும்கூட.

சம்பந்தர் நாயனாரால் தேவாரம் பாடி

சம்பந்தர் நாயனாரால் தேவாரம் பாடி புகழ் பெற்ற வேதாரணியம் கோயில் ஈழத்தில் கரவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. பல ஆண்டுகாளாக அக் கோயில் அந்த ஈழத் தமிழரின் குடும்பத்தவர்களால் உரிமை பேணப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னர் அப்போது வேதாரணியம் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்த ராஜேந்திரன் போன்றவர்களால் அரசியல் செல்வாக்கின் மூலம் அவ் உரிமை பறிக்கப்பட்டது. வேதாரணியம் கோயில் உரிமையை பறித்தவர்கள் தஞ்சாவூர் ராஜராஜ சோழன் கோவில் உரிமையை பறிக்க முயலவில்லை. ஏனெனில் ராஜராஜசோழன் கோயில் உரிமை மராட்டிய வம்சத்தவரிடம் இருக்கிறது. வேதாரணியம் கோயில் உரிமை (ஈழ)தமிழரிடம் இருந்தது.

600 போராளிகள் எப்படி

600 போராளிகள் எப்படி ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்க்க துணிந்தார்கள்? ஒரு சுருட்டு பற்றவைத்து முடிப்பதற்குள் அந்த சாரம் கட்டிய போய்ஸ் அனைவரையும் இந்திய ராணுவம் முடித்துவிடும் என்று இந்திய தூதர் கூறினார். ஆனால் இரண்டரை வருடத்தில் இந்திய ராணுவம் தோல்வியடைந்து வெளியேறிய வரலாறு எப்படி நிகழ்ந்தது? இதை அறிய விரும்புவோர் இருபது வருடம் போராடி அமெரிக்க ராணுவத்தை வெளியேற்றிய வியட்நாம் தலைவர் ஹோசிமின் கூறிய வரிகளை படிக்க வேண்டும். நிருபர் - ஐயா, உங்கள் நாடு ஒரு சிறிய நாடு. உங்கள் எதிரி ஒரு பெரிய, சக்திவாய்ந்த நாடாக இருந்தது. எப்படி நீங்கள் அமெரிக்காவை தோற்கடித்தீர்கள்? வியட்நாம் தலைவர் ஹோ சிமின் - அமெரிக்கா ஒரு சிறந்த இராணுவம் கொண்ட ஒரு சக்திவாய்ந்த நாடாகும். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை தவறாக புரிந்துகொண்டனர். அவர்கள் வியட்நாம் மக்களின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டனர். வியட்நாம் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள். அவர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அவர்கள் அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தனர். அமெரிக்க இராணுவம் வியட்நாமில் பல வெற்றிகளைப் பெற்றது. ஆனால் அவர்கள் எப்போதும் ஒரு முழுமையான வெற்றியை அடைய முடியவில்லை. வியட்நாம மக்கள் தொடர்ந்து போராடினர். இறுதியில், அமெரிக்க அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவருவது நல்லது என்று முடிவு செய்தது. அவர்கள் வியட்நாம் விட்டு வெளியேறினர். வியட்நாம் மக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றனர். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை வென்றனர். நிருபர் - இந்த வெற்றி உங்கள் நாட்டிற்கான என்ன அர்த்தம்? வியட்நாம் தலைவர் ஹோ சிமின் - இந்த வெற்றி எங்கள் நாட்டின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சிக்கு அர்த்தம். இது எங்கள் மக்களின் வலிமையையும் உறுதியையும் உலகிற்கு காட்டியது. இந்த வெற்றி உலகின் மற்ற மக்களுக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறது. அது என்னவென்றால், எந்த அளவு சக்திவாய்ந்த பகைவராக இருந்தாலும், சுதந்திரத்திற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. இந்த உரையாடலில் அமெரிக்க ராணுவம் என்னும் இடத்தில் இந்திய ராணுவம் என்றும் வியட்நாம் மக்கள் என்னும் இடத்தில் ஈழத் தமிழ் மக்கள் என்றும் படித்து பாருங்கள். ஈழத் தமிழர் பெற்ற வெற்றியை உணர முடியும். சரி. இப்போது இதை ஏன் கூறவேண்டும் ? இந்தியா பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து தமிழர் விடுதலை பெற முடியாது என்று கூறுபவர்களுக்கு ஹோசிமின் கூறிய வார்த்தை “எந்த அளவு சக்திவாய்ந்த பகைவராக இருந்தாலும், சுதந்திரத்திற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது.”

கடவுள் கண்ணனுடன் ஒரு உரையாடல்

•கடவுள் கண்ணனுடன் ஒரு உரையாடல் தமிழன்- கடவுளே! அநியாயமும் அக்கிரமமும் தலைவிரித்தாடும்போது அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன் என கூறினீர்களே. ஏன் இன்னும் வரவில்லை? கண்ணன்- தமிழா! உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் நான் அவதாரமெடுத்து வந்தால் என்னை “பயங்கரவாதி” என்று உங்கள் சம்பந்தர் ஐயா கூறுவாரே. அதுதான் தயக்கமாக இருக்கிறது. தமிழன்- என்ன சொல்லுகிறீர்கள் கடவுளே. எனக்கு ஒன்றும் புரியவில்லை? கண்ணன்- அன்று நான் அரக்கன் நரகாசுரனை எனது சக்ராயுதத்தால் வதம் செய்ததை தீபாவளி என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று வந்து அதே ஆயுதத்தை நான் பாவித்தால் உடனே சம்பந்தர் ஐயாவும் யாழ் இந்தியதூதரும் அது “வன்முறை” என்று அறிக்கை விடுவார்கள் அல்லவா? தமிழன்- ஆமாம்! ஆமாம்! இனி நீங்கள் வந்தால் “பயங்கரவாதி” என்று சிறையில் அடைப்பார்கள். அப்புறம் நீங்கள் உங்கள் வழக்கை விசாரணைக்கு எடுக்கவே பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டி வரும். கண்ணன்- போராடும்போது “பயங்கரவாதி” என்பார்கள். நான் செத்த பின்பு “மாவீரர்” என்று புகழ்ந்து மக்களிடம் வோட்டு பெறுவார்கள். உங்கள் தலைவர்கள் பலே கில்லாடிகள். தமிழன்- கடவுளே! அப்ப எமக்கு என்னதான் தீர்வு? கண்ணன் - தமிழா! நான் செய்த கீதா உபதேசத்திலும் ஆயுதம் ஏந்தி போராடும்படிதானே அர்சுனனிடம் கூறினேன். அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருக்கும் படி கூறவில்லையே. அப்புறம் ஏன் உங்கள் தலைவர்கள் அகிம்சை வழியை போதிக்கிறார்கள்? நீதி- இனி கண்ணன் ஒருபோதும் வரமாட்டான். ஆனால் அவன் தந்த ஆயுதம் இருக்கிறது. தீர்வு வேண்டும் என்றால் அதை மக்கள் ஏந்த வேண்டும்.

இவர்கள் ஒருவகை விளம்பரத்திற்காக

இவர்கள் ஒருவகை விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார்களா? அல்லது உண்மையில் முட்டாள்தனத்தால்தான் இப்படி செய்கிறார்களா? தமிழர் நலனில் சிறிதும் அக்கறையற்ற ஒரு மராட்டிய நடிகருக்கு தமிழ் மண்ணில் எப்படி கோயில் கட்ட முடிகிறது? இது பெரியார் மண் என்கிறார்கள். அப்புறம் எப்படி இப்படி நடக்கிறது?

தமிழர் மண்ணில் இருந்துகொண்டு

தமிழர் மண்ணில் இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதம் கக்கும் இந்த சிங்கள பிக்கு கைது செய்யப்பட வேண்டும். இந்த சிங்கள பிக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரன் கோரியுள்ளார். இதேவேளை இன்று சில சமூக செயற்பாட்டாளர்கள் நேரடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று இந்த பிக்கு மீது சட்ட நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

கவர்னர் மாளிகைக்கு பெற்றோல் குண்டு

கவர்னர் மாளிகைக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்ட பின்பு திமுகவும் பாஜகவும் மாறி மாறி ஒன்றன் மீது ஒன்று குற்றம் சுமத்துகின்றன. பாஜக வன்முறைக்கட்சி என்பது எந்தளவு உண்மையோ அந்தளவு திமுகவும் வன்முறைக்கட்சி என்பது உண்மையே. அதுவும் 200 ரூபா உடன்பிறப்புகள் சிலர் ஈழத் தமிழரை வன்முறையாளர் என்று டிவிட்டரில் எழுதுகின்றனர். அவர்களுக்கு வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசியல் அமைப்பு சட்டத்தை எரித்தார். அதனால் கலைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கலைஞர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் தபாற்கந்தோரில் ஒரு குண்டு வெடித்தது. அக் குண்டு வெடிப்புக்கு காரணமான மதுரை திமுக இளைஞர் அணி தலைவர் செயப்பெருமாள் என்பவரும் அவருக்கு உதவியதாக டெலோ அமைப்பைச் சேர்ந்த ஈழத் தமிழர் கார்த்திக்கும் கைது செய்யப்பட்டனர். செயப்பெருமாள் திமுக உதவி மூலம் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால் ஈழத் தமிழரான கார்த்திக் எந்த உதவியும் இன்றி நீண்ட நாட்களாக சிறையில் இருந்தார். நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டவேளை கார்த்திக் என்னிடம் தன் நிலை பற்றி வருத்தத்துடன் கூறினார். இதையடுத்து நான் பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு இது குறித்து கடிதம் எழுதினேன். அவர் செயப்பெருமாள் கார்த்திக் இருவருக்கும் சார்பாக ஆஜராகி வாதாடினார். ஆயினும் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போதும் செயப்பெருமாள் அப்பீல் செய்து அதனூடாக ஜாமீனில் விடுதலையானார். ஆனால் ஈழத் தமிழர் கார்த்திக் 14 வருடங்கள் முழுமையாக சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையானார்.

பாகிஸ்தானும் இந்தியாவும்

பாகிஸ்தானும் இந்தியாவும் எதிரி நாடுகள். ஆனால் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சுட்டுக் கொல்வதில்லை. இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள். ஆனால் இதுவரை 600ற்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக இந்திய அரசு கருதுவதில்லை. அதனால்தான் தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படைக்கு பயிற்சியும் போர்க்கப்பலும் வழங்குகிறது இந்திய அரசு. தமிழக மக்களின் வரிப்பணத்தை தமிழக மக்களை கொல்லும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு சிங்கள அரசுக்கு உதவி வழங்கக்கூடாது என தமிழக முதல்வர் இதுவரை கோரியதில்லை. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும்படியும் அவர் கோரியதில்லை. தமிழக மீனவர்களும் ஈழத் தமிழ் மீனவர்களும் நேரடியாக பேசினால் இப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இப் பேச்சுவார்த்தைக்கு சிஙகள அரசுகூட சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு மறுத்து வருகிறது. ஏனெனில் திமுக வில் இருக்கும் டி.ஆர் பாலு போன்ற பெரிய படகு முதலாளிகள் இப் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை. அவர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழ் மீனவர்கள் நேரடியாக பேசுவதை தடுக்கின்றன. தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனை பெரிதாகி மோதல் ஏற்பட வேண்டும் என இந்திய அரசும் தமிழக அரசும் விரும்புகின்றன. ஏனெனில் இதன் மூலம் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவை நீக்க முடியும் என அவை நினைக்கின்றன.

சபாஷ் சரியான போட்டி!

• சபாஷ் சரியான போட்டி! பேய்க்கும் பேய்க்கும் சண்டை. அதை ஊரே வேடிக்கை பார்க்குது என்பார்கள். அதுபோல் ஒரே கட்சியை சேர்ந்த தலைவர்கள் கட்சிக்குள் பேச வேண்டிய விடயத்தை பொதுவெளியில் பேசி தமிழ் இனத்தின் மானத்தை வாங்குகிறார்கள். இதை பார்க்கும் சிங்கள தலைவர்கள் கைகொட்டி சிரிக்கமாட்டார்களா?

Friday, October 20, 2023

உஷ்! சத்தம் செய்யாதீர்கள்,

உஷ்! சத்தம் செய்யாதீர்கள், எமது தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். மெதுவாக அவர்களுக்கு முதியோர்தின வாழ்த்துக்களை தெரிவியுங்கள்

சிறுமி – அங்கிள் நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

சிறுமி – அங்கிள் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? சுமந்திரன் - ஏன்மா அப்படி கேட்கிறே? சிறுமி – சிறுவன் பாலச்சந்திரனை ஏன் கொன்றார்கள்? சுமந்திரன் - அவர் அப்பா பயங்கரவாதி. எனவே மகனும் பயங்கரவாதி என்று கூறி கொன்றார்கள். சிறுமி - அப்படியென்றால் ஏன் பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவின் பிள்ளைகளையும் பயங்கரவாதிகள் என்று சுட்டுக் கொல்லாமல் படிக்க வைத்தார்கள்? சுமந்திரன் - ஆம் அவரது ஆறு பிள்ளைகளையும் மட்டுமன்றி மனைவியையும் பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். சிறுமி – பாலச்சந்திரன் தமிழர் என்பதால் கொல்லப்பட்டார். ரோகணாவின் பிள்ளைகள் சிங்களவர் என்பதால் கொல்லப்படவில்லை. எமக்கு நடந்தது இனப்படுகொலை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? சுமந்திரன் - ???? குறிப்பு - இன்று உலகம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடுகிறது. நாம் எப்போது கொல்லப்பட்ட எமது தமிழ் சிறுவர்களுக்குரிய நீதியை பெற்றுக்கொடுக்கப் போகிறோம்?

இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்

•இன்று சர்வதேச சிறுவர்கள் தினம் சரணடைய சொன்னார்கள், சரணடைந்தேன். பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன். சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன். அப்புறம் பார்த்தா சுட்டுக் கொன்றார்கள். இறந்துவிட்டேன். பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்வி என்னை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ? ஏனென்றால் என் அப்பா பயங்கரவாதியாம். எனவே நானும் பயங்கரவாதி என்கிறார்கள் சரி. அப்படியென்றால் , ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றீர்கள் ஆனால் அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை? ஏனென்றால் அவர் சிங்களவர். இப்போது புரிகிறதா ? நடந்தது இனப்படுகொலை என்று! குறிப்பு - இவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்குரிய நீதியை எப்போது பெற்றுக் கொடுக்கப் போகிறோம்?

இவர்கள் பெண்கள்

இவர்கள் பெண்கள் இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இவர்களில் சிலர் கர்நாடகாவில் இருந்து விஜயலட்சுமியை அழைத்து வந்து அவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள். மற்றவர்கள் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விரைந்து தண்ணீர் வர வேண்டும் என்று போராடுகிறார்கள். விஜயலட்சுமிக்கு நீதி விரைந்து கிடைக்க வேண்டும் என போராடியவர்ளால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விரைந்து கிடைக்க வேண்டும் என ஏன் போராடவில்லை? இவர்களும் தமிழர்தானே?

ஓடாத மானும் போராடாத

ஓடாத மானும் போராடாத இனமும் ஒருபோதும் வாழ முடியாது

தெலுங்கு தெரியாதவர்

தெலுங்கு தெரியாதவர் ஒரு திராவிட கட்சிக்கு தலைவராக வர முடியுமா? வீட்டில் தெலுங்கு பேசாதவர் எப்படி தமிழக முதல்வராக இருக்க முடிந்தது? அதிசயம். ஆனால் உண்மை.

திருடர்கள் இரண்டு வகைப்படும்.

திருடர்கள் இரண்டு வகைப்படும். அவையாவன (1) சாதாரண திருடர் (2) அரசியல் திருடர் சாதாரண திருடர் - இவர்கள் நமது பணம், கடிகாரம் கைத்தொலைபேசி போன்ற நமது சொந்த உடமைகளை திருடுபவர்கள் அரசியல் திருடர் - இவர்கள் நமது எதிர்காலம், தொழில், சம்பளம், கல்வி, அரோக்கியம், என பலவற்றை திருடுபவர்கள் இந்த இரண்டு திருடர்களுக்கும் வேறுபாடு என்னவெனில், சாதாரண திருடர் நம்மை தெரிவு செய்கிறார்கள். அரசியல் திருடர்களை நாம் தெரிவு செய்கிறோம். அதைவிட, சாதாரண திருடனை காவல்துறை கைது செய்யும். அரசியல் திருடர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும். குறிப்பு - இதைப் படித்ததும் உங்களுக்கு கலைஞர் குடும்பம் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

33 வருடங்களாக தொடரும் சிறைவாசம்.

• 33 வருடங்களாக தொடரும் சிறைவாசம். சிறப்புமுகாமில் உள்ளவர்கள் தம் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவே உள்ளது. ஆனாலும் நாடு திரும்ப விரும்பும் சாந்தனை தொடர்ந்தும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்துள்ளது தமிழக திராவிட அரசு. தன்னை நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரி சாந்தன் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடி அனைவருக்கும் பலமுறை மனு அனுப்பியுள்ளார். ஆனால் யாருமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சாந்தன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்றமாவது சாந்தன் நாடு திரும்ப விரைந்து வழி செய்யுமா?

இன்று உலகம் “சிறுவர் தினம்”

இன்று உலகம் “சிறுவர் தினம்”கொண்டாடிக்கொண்டிருக்கிறது. கேப்பாப்புலவில் வீதியில் படுத்து போராடும் இந்த சிறுவனுக்கு எப்போது அவன் சொந்த நிலம் கிடைக்கும்? சிரியா, உக்ரைன் சிறுவர்களுக்காக இரங்கும் சர்வதேசம், இந்த தமிழ் சிறுவனுக்காக இரங்காதா?

எல்லா நாடுகளிலும் குழந்தையை

எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை என்று அப்பா தேடுவார். ஆனால் இலங்கையில் மட்டுமே அப்பாவைக் காணவில்லை என்று குழந்தை தேடும் நிலை இருக்கிறது. அதுவும் போர் முடிந்து 14 வருடம் கழிந்த பின்பும்கூட அப்பாவைத் தேடும் அவலநிலை தமிழ் இன குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது. சமர் பல கண்ட களத்தை மறந்தோம் அதில் எமக்காக மாண்டவர்களை மறந்தோம். நிலத்தை மறந்தோம். இனத்தை மறந்தோம். எதிரி விட்டெறியும் எலும்புத் துண்டிற்காக குழந்தைகள் துயர் துடைக்க மறந்தோமே. (சிறுவர் தினத்தை முன்னிட்டு)

காந்தியின் அகிம்சை வழியில்

•காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா? அகிம்சை வழியில் போராடி காந்தி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இதை இந்தியர்கள் எந்தளவுக்கு நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழர் பலர் நம்புகிறார்கள். ஏனெனில் சிறுவயது முதல் இது போதிக்கப்படுகிறது. இதுவே உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது. அதனால்தான் அகிம்சை வழியில் போராடியிருந்தால் தீர்வு பெற்றிருக்க முடியும் என்று சுமந்திரனால் தைரியமாக கூறமுடிகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் நடந்தது என்ன? இதுபற்றி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர் தன் நூலில் எழுதியிருப்பது வருமாறு, “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எப்போதெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி ஆயுத புரட்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் காந்தி, தன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவார். இந்த வழியில் நாம் போராடுவது தவறு, நாம் அகிம்சையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பார். மக்கள் புரட்சியால் நிலமை கட்டுக்கடங்காமல் போய், போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில், காந்தி அகிம்சை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார். பிறகு அந்த செய்தி நாடு முழுக்க பரவும், மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி ஆவார்கள். இப்படியே நாங்கள் இந்தியாவை மேலும் 10 ஆண்டுகள் என தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தோம்”. இதே நிலைமைதான் இலங்கையிலும் நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் பாதை மூலம் நடத்திய போராட்டம் யாவும் இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களை இன அழிப்பு செய்வதற்கே உதவி வந்தது. எனவே தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள், (1) அகிம்சை வழியில் விடுதலை பெற முடியாது (2) ஆயுத போராட்டத்தின் மூலமே விடுதலை பெற முடியும்

எந்த மருத்துவமனைக்குள்

எந்த மருத்துவமனைக்குள் புகுந்து தமிழ் மக்களை இந்திய ராணுவம் கொன்றதோ அந்த யாழ் மருத்துவமனைக்கு முன்னால் காந்திசிலையை நிறுவி காந்தியின் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இந்திய தூதர். அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த திலீபனை கொன்றுவிட்டு அகிம்சையை போதித்த காந்திக்கு விழா எடுக்கும் இந்திய தூதர். என்னே கொடுமை இது?

புலம்பெயர் தமிழரின் வியாபாரத்திற்காக

புலம்பெயர் தமிழரின் வியாபாரத்திற்காக இம்முறை ஈழத் தமிழ் பெண் எவரும் “பிக்பாஸ்” நிகழ்வில் இறக்கப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. நன்றிகள் விஜய் டிவிக்கு.

முழந்தாளிட்டு வாழ்வதைவிட

“முழந்தாளிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று இறப்பது மேல்” - சே

75 படங்கள் கதை வசனம் எழுதி

75 படங்கள் கதை வசனம் எழுதி கலைஞர் சம்பாதித்தது நாற்பத்தையாயிரம் கோடி ரூபா ஒரு முந்திரிகை தோட்டத்தில் இருந்து ஜெயா அம்மையார் சம்பாதித்தது முப்பதாயிரம் கோடி ரூபா ஆனால் இவர்கள் இருவரும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகம் அடைந்த மொத்த கடன் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபா இது எப்படி ?

சர்வதேச விலங்குகள் தினம்!

•சர்வதேச விலங்குகள் தினம்! ( இது அரசியல் பதிவு இல்லை) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் திகதி சர்வதேச விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அழிந்துவரும் விலங்குகளை பாதுகாக்கவும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவர் தன் நாய்க்கு தமிழ் தெரியும் என்றும் தான் தமிழில் கூறுவதை அது புரிந்து செயற்படுவதற்கு 6 மாதம் எடுத்தது என்றும் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நாய் “ இந்த மனிதனுக்கு எனது மொழி புரிய 6 மாதம் எடுத்திருக்கிறது”என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டதாம். இது பகிடிதான். ஆனால் இது கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமே மொழி என்கிறார்கள். அப்படியென்றால் விலங்குகளும் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தமக்கு ஒரு மொழி வைத்திருக்கின்றனவா? விலங்கிற்கு மொழி இருக்கிறதா இல்லையா என்பதைவிட விலங்குகளுக்கு கணக்கு தெரியுமா என்பது என் மூளையைக் குடைகிறது. ஏனெனில் உதாரணத்திற்கு ஒரு பன்றி தன் 20 குட்டிகளை எப்படி நினைவில் கணக்கு வைத்திருக்கும்? குறிப்பு - இங்குள்ள படங்களை பார்த்துவிட்டு நான் விலங்குகளை கேவலப்படுத்திவிட்டதாக விலங்கு ஆர்வலர்கள் தயவு செய்து என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

இஸ்லாமிய சமூகத்தில் இருந்து

இஸ்லாமிய சமூகத்தில் இருந்து அதுவும் பெண்கள் நடிப்புதுறைக்கு வருவது மிகவும் கஷ்டம் ஆனால் இந்த இரட்டையர் விஜய் டிவி போட்டியில் கதாநாயகிகளாக வெற்றி பெற்று சாதித்துள்ளனர். பாராட்டுகளும் வாழ்த்துகளும்

நீதிபதிக்கே நீதி கேட்டு

நீதிபதிக்கே நீதி கேட்டு போராட வேண்டிய நிலையில்தான் இலங்கையில் நீதி இருக்கிறது. நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

வெறும் 800 போராளிகள்

வெறும் 800 போராளிகள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்க்க எப்படி துணிந்தார்கள்? டாங்கிகள் பீரங்கிகள் மட்டும்ல்ல நவீன போர் விமானங்கள் சகிதம் வந்தவர்கள் அமைதிப்படை அல்ல அது ஒரு அழிவுப்படை என்பதை எப்படி உணர்ந்தார்கள்? ஆம். அதற்கு இந்த 12 போராளிகளின் மரணங்கள் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன. திலீபன் மரணத்திற்கு எந்த இந்திய அரசு பொறுப்போ அதே இந்திய அரசுதான் இந்த 12 போராளிகளின் மரணத்திற்கும் பொறுப்பு ஆகும். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த இந்திய அரசு அதற்கான பழியை புலிகள் மீது போடுகிறது. ஆம். காட்டின் வரலாற்றை சிங்கம் எழுதினால் தானாக வந்து தன் வாயில் மாட்டாமல் தப்பி ஓட முயலும் மான்கள் யாவும் தவறானவர்கள் என்றே எழுதும்.

முதல்வர் ஸ்டாலின் - தம்பி உதய்!

முதல்வர் ஸ்டாலின் - தம்பி உதய்! இந்த சீமான் காவிரிப் போராட்டத்தை மக்கள் கவனத்தில் இருந்து எப்படி திசை திருப்பவது? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - பேசாம மீண்டும் விஜயலட்சுமியை பெங்களுரில் இருந்து வரவழைப்போமா? முதல்வர் ஸ்டாலின் - அது இனி சரிப்பட்டு வராது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் ரகசியம் எனக்கு தெரியும் என்று ஒரு அறிக்கை விட்டுப் பார்க்கட்டுமா? முதல்வர் ஸ்டாலின் - ?????

நடிகர் மன்சூர் அலிகானால்

நடிகர் மன்சூர் அலிகானால் குரல் கொடுக்க முடிகிறது. ஏன் மற்ற நடிகர்களால் குரல் கொடுக்க முடியவில்லை? கன்னட நடிகர்களால் கர்நாடகாவிற்காக குரல் கொடுக்க முடியுமென்றால், தமிழ் நடிகர்களால் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்க முடியாதா?

நீதிபதிக்கு ஆங்கில அறிவு இன்மையால்

நீதிபதிக்கு ஆங்கில அறிவு இன்மையால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம் என சட்டமா அதிபருக்கு ஆதரவாக கொழும்பில் கருத்து கூறியவர் விக்கி ஐயா. அதே நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராடுகிறார். கொழும்பில் அரசுக்கு ஆதரவான முகம். யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு ஆதரவான முகம். வயதான காலத்தில் ஏன் இந்த இரட்டை முகம்?

இருவரும் ஈழத் தமிழர்கள்

இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் விக்கினேஸ்வரன். இன்னொருவர் சார்லஸ் நிர்மலநாதன் ஒருவர் தமிழ்நாடு சென்று நடிகர் ரஜனியை சந்தித்தார். இன்னொருவர் தமிழ்நாடு சென்று ஈழத் தமிழ் அகதிகளை சந்திக்க முயன்றார். ஒருவருக்கு நடிகர் ரஜனியை சந்திக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, இன்னொருவருக்கு அகதிகளை சந்திக்க அனுமதி மறுத்துள்ளது. இங்கு விக்கினேஸ்வரன் ஏன் அகதிகளை சந்திக்கவில்லை என்று நான் கேட்கப்போவதில்லை. மாறாக, அகதிகளை சந்திக்க அனுமதி மறுப்பதற்கு ஒரு கண்டனத்தை ஏன் அவர் தெரிவிக்கவில்லை? தமிழக முதல்வரிடம் சிங்கள மக்களுக்கும் அரிசி அனுப்புமாறு கேட்ட சுமந்திரன்கூட அகதிகளை சந்திக்க அனுமதி மறுப்பது தவறு என்று ஏன் அந்த தமிழக முதல்வரிடம் கூற முடியவில்லை? எல்லாவற்றுக்கும் மேலாக, “ஈழத் தமிழர் அனாதைகள் இல்லை. அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்” என்று கூறிவரும் தமிழக முதல்வர் ஸடாலின் அகதிகளை சந்திக்க அனுமதி மறுப்பது ஏன்?

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம்

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர் அழிந்தபோது “மானாட மயிலாட” நடத்தியவர்கள். இப்போது காவரி பிரச்சனையில் தமிழகம் தவிக்கும்போது நயன்தாரா செய்தி போடுகிறார்கள். சன் டிவி , கலைஞர் டிவி எப்பவாவது தமிழர் பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறதா?

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என வாக்குறுதி அளிப்பது ஆட்சிக்கு வந்த பின்பு அவர்களை விடுதலை செய்தால் பெரிய ஆபத்து என நீதிமன்றத்தில் வாதிடுவது. இந்த திராவிட உருட்டை தட்டிக் கேட்க முடியாத இஸ்லாமிய தலைவர்கள் சீமானிடம் கேட்கிறார்கள். ஏழு தமிழர் விடுதலையில் என்ன துரோகத்தை திமுக செய்ததோ அதையே இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும் செய்கிறது . இஸ்லாமிய மக்கள் இனியாவது உணர்வார்களா?

யார் தமிழன் என்று கேட்பவர்கள்,

யார் தமிழன் என்று கேட்பவர்கள், எந்த லேப்பில் டெஸ்ட் செய்தீர்கள் என்பவர்கள். ஒருமுறை கர்நாடகா சென்று தண்ணீர் கேளுங்கள். யார் தமிழன் என்பதை அவர்கள் உணர வைப்பார்கள்.

வந்தார்கள்

•வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்!! இது ஜீனியர்விகடனில் மதன் எழுதிய “வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்” கதை அல்ல. இது அமைதிப்படை என்று வந்து அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு சென்ற இந்திய ராணுவத்தின் கதை. கொடுங்கோலன் என்றழைக்கப்பட்ட கிட்லர்கூட எதிரி நாட்டு மருத்துவமனைகளையோ நூலகத்தையோ தாக்கியது கிடையாது. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் யாழ் மருத்துவமனையைத் தாக்கி பல அப்பாவி தமிழ் மக்களை கொன்றார்கள். யாழ் மருத்துமனையில் மட்டும் படுகொலைகள் நிகழ்த்தப்படவில்லை. வல்வையில் நடத்தப்பட்டது. பிரம்படியில் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கு முழுவதும் சுமார் இரண்டரை வருடங்கள் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். 80 வயதுக் கிழவியைக்கூட பாலியல் வல்லுறவு செய்த பெருமை இந்திய அமைதிப்படைக்கே சேரும் என அன்றைய பிரதமர் பிரேமதாசா கூறியிருந்தார். புலிகள் பொதுமக்களுக்குள் இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததால் அப்பாவி பொது மக்கள் இறக்க நேரிட்டது என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியென்றால் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமைக்கு என்ன காரணம்? ஏன் இதுவரை ஒரு ராணுவம்கூட இதற்காக தண்டிக்கப்படவில்லை? அதுமட்டுமன்றி, அமைதிப்படையின் முதல் குண்டு புலிகளை தாக்கவில்லை. மாறாக ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையல்லவா தாக்கியது. 48 மணி நேரத்தில் ஒரு லட்ச்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவ வீரர்கள் அமைதிப்படை என்று வந்தார்கள் அவர்கள் வெறும் துப்பாக்கியுடன் மட்டும் வரவில்லை. பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்களுடன் வந்தார்கள். ஒருபுறம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்தினார்கள். மறுபுறம் புளட், டெலோ போன்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி புலிகளை அழிக்கும்படி கூறினார்கள். இத்தனையும் இந்திய ராணுவம் செய்தது தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக அல்ல. மாறாக இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்காகவே. இங்கு கொடுமை என்னவென்றால் இத்தனையும் செய்துவிட்டு அதற்காக இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமன்றி தமிழ் மக்கள் தம் உறவுகளை நினைவு கூர்வதைக்கூட மிரட்டி தடுக்கின்றனர்.

என் கணவர் புலவரோடு

"என் கணவர் புலவரோடு வாழ்ந்த காலங்கள் துயரமானதுதான். நான் மட்டுமல்ல என் ஒட்டுமொத்த குடும்பமே கொடுமைகளைத்தான் அனுபவித்தது. ஆயினும் இவையனைத்தும் எங்களை மனோரீதியில் பாதிக்காத அளவிற்கு அவரின் சமூக செயல்பாடுகள் மீது எம் அனைவருக்குமே முழு நம்பிக்கையை ஊட்டியே வளர்த்தார்" - வாலாம்பாள்

பொன்னியின் செல்வனை

பொன்னியின் செல்வனை படமாக எடுத்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் அதில் ஒரு சில கோடிகளை அவரது நினைவிடத்திற்கு செலவு செய்ய மாட்டார்களா?

இதைவிட அதிகமாகவும்

இதைவிட அதிகமாகவும் வாய் விட்டு சிரித்திருக்கிறேன். உலக புன்னகை தினத்திற்கு பதிவிட தேடியபோது இந்த படம்தான் சிக்கியுள்ளது. #உலக புன்னகை தினம் (06.10.2023)

கடல்சார் தமிழிய ஆய்வறிஞர் ஒரிசா பாலு

கடல்சார் தமிழிய ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்களுக்கு புகழ்வணக்கம்.

புரட்சியாளர் தோழர் சேகுவாரா!

புரட்சியாளர் தோழர் சேகுவாரா! புரட்சியாளர் தோழர் சே வின் நினைவு தினம் 09.10.23 ஆகும். தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு உன்னதமான போராளியின் நினைவு தினம் ஆகும். துப்பாக்கி அவர் நெஞ்சை குறி பார்த்தபோதும் அவர் உயிருக்காக கெஞ்சவில்லை. “நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்” என்று அவர் முழங்கிய வார்த்தைகள் இன்று ஈழத் தமிழருக்கு உறுதியளிக்கிறது. அவர் தேர்தல் பாதையை முன்வைக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்ட பாதையையே முன்னெடுத்தார். “உலகில் எங்கு அநியாயம் காணப்படுகிறதோ அங்கு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாய் எனில் நீ என் தோழனே” என்று கூறினார் தோழர் சே.

தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக

தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா 11.10.2015யன்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். அவர் தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. மாறாக தனது சொத்தை எல்லாம் தமிழ் இனத்திற்காக செலவு செய்தார். அவர் தனக்கு எந்த பதவியையும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக தமிழ் இனத்திற்காக தனது உழைப்பையெல்லாம் கொடுத்தார். அவர் தனது இனத்திற்கு ஒருபோதும் துரோகம் இழைத்தவர் அல்லர். மாறாக தமிழ் இனத்திற்காக தன்னையே தியாகம் செய்தவர். அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் பதவிகளைப் பெற்றிருக்கலாம். சொகுசாக வாழ்ந்திருக்கலாம். எந்த நெருக்கடியிலும் அவர் தனது கொள்கைகளை விட்;டுக்கொடுக்கவில்லை. அதனால் அவரை கொடிய பயங்கரவாதி என்று இந்திய அரசு லிஸ்ட்டில் வைத்திருந்தது. அவர் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வசதியாக இருக்கின்றனர். அவர் விரும்பியிருந்தால் அவர்களிடம் உதவி பெற்று வசதியாக வாழ்ந்திருக்கமுடியும். அவர் இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மடிந்துள்ளார். அவருடைய தியாகம் ஒருபோதும் வீண்போகாது. வரலாறு அவரை நிச்சயம் நினைவில் கொள்ளும்.

இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள்

•இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் 50க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். யாழ் மருத்துவமனை முன்னால் காந்திசிலை நிறுவி காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்திய தூதர் , பிரம்படியில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு வருத்தம்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. இந்திய தூதருடன் சேர்ந்து காந்திக்கு விழா எடுக்கும் எம் தலைவர்களும்கூட பிரம்படியில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை. ஒருவேளை அஞ்சலி செலுத்தினால் இந்திய தூதர் கோபம் கொள்வாரோ என்ற அச்சமா?

மனிதன் குரங்கில் இருந்து வந்தவன்

மனிதன் குரங்கில் இருந்து வந்தவன் என்று விஞ்ஞானி டார்வின் கூறியபோது பலர் அதை நம்ப மறுத்தனர். பல வருடம், பல உயிரிணங்களை ஆய்வு செய்த பின்னரே அவர் இந்த உண்மையை உலகிற்கு அறிவித்தார். ஆனாலும் அவர் இதை அறிவிக்க தயங்கினார். மதவாதிகள் தன்னை கொன்று விடுவார்கள் என பயந்தார். காரல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலை இவருக்கு சமர்ப்பணம் செய்ய முன்வந்தபோது அதை அவர் ஏற்க மறுத்ததும் இந்த பயம் காரணமாகவே. ஆனால் காலப்போக்கில் மேலும் மேலும் பல ஆய்வுகள் டார்வின் கூற்று உண்மைதான் என நிரூபித்துள்ளது.. குறிப்பு- கீழே உள்ள படத்திற்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?😂

ஊருக்கு உபதேசம்?

• ஊருக்கு உபதேசம்? 33 வருடமாக சிறைவாசம் அனுபவிக்கும் சாந்தன் தன்னனை நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோருவதை ஒருமுறைகூட பொறுமையாக கேட்கவில்லையே? தான் இறப்பதற்கு முன் தன் மகனை நேரில் பார்க்க வழி செய்யுமாறு சாந்தனின் தாயார் பலமுறை கேட்டுவிட்டாரே. அதை ஒருமுறையாவது காது கொடுத்து கேட்கவில்லையே?

நாம் ஊமையாக இருக்கும்வரை

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். நாம் உரத்து குரல் எழுப்பினால் அதை உலகம் நிச்சயம் கேட்கத் தொடங்கும் நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டம் அவருக்கு நீதி கோரி அல்ல மாறாக, இலங்கையில் ஒரு நீதிபதிக்கே நீதி இல்லை என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்காகவே.

800

• 800 ஒரு விளையாட்டு வீரரின் படத்தை எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம். படத்தை பார்த்ததும் “நல்லவேளை நான் தப்பினேன்” என்று விஜய் சேதுபதி நினைத்திருப்பார். குறிப்பு – திம்பு பேச்சுவார்த்தையின்போது போராளிகள் வைத்த முதலாவது கோரிக்கை மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே. அதன் பின்பே வேறு வழியின்றி ஜே.ஆர் ஜெயவர்த்தனா குடியுரிமை வழங்கினார். இந்த வரலாற்றை இனியாவது முரளி அறிந்து கொள்ள வேண்டும்.

அக்-10, உலக மனநல தினம்

அக்-10, உலக மனநல தினம் இந்த தினம் எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ குறிப்பாக இன்றைய நிலையில் எமது தமிழ் இனத்திற்கு இது எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ எம்மிடையே போதியளவு விழிப்புணர்வு காணப்படவில்லை. எமது தமிழ் சமூகத்தில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும் பொத்திப் பாதுகாக்கும் ரகசியமாகவும் இருந்து வருகிறது. பைத்தியம், கிறுக்கு, விசர் என்றும் நவீன தமிழில் லூசு, மெண்டல் என்றும் தரக்குறைவாக அழைக்கப்படுகிறது. தமிழ்படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள். இதனால் சிறுவர்கள் இவர்கள் மீது கல் எறிகின்ற கோர நிலை எமது சமூகத்தில் காணப்படுகிறது . மனநோயாளர்கள் என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்படுபவர்கள் மீது பாரபட்சமும் வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகின்றன. குடும்பங்களிடையே இது ஒரு அவமானமாக பார்க்கப்படுகின்றது. மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய காப்பகங்கள்கூட அவர்களை கேவலமாக நடத்துகின்றன. அவர்களின் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள் , வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயம் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டங்களிலும் காணப்படுகின்றது. எனவேதான் இந்த மனநோய் பற்றி உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது. மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்தவுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது. மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார். குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது. மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர் . இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர். அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.

ஜெகத்ரட்சகனின் மொத்த சொத்து

ஜெகத்ரட்சகனின் மொத்த சொத்து மதிப்பு 65000கோடி ரூபாவுக்கு மேல் என்கிறார்கள். மிக குறுகிய காலத்தில் இந்தளவு சொத்து சேர்ப்பது சாத்தியமே இல்லை என்றும் இவர் கலைஞர் குடும்பத்தின் பினாமி என்கிறார்கள். ஜெகத்ரட்சகன் இலங்கையில் செய்துள்ள முதலீடு 26000கோடி ரூபா. இவர் மட்டுமன்றி கனிமொழி மற்றும் டிஆர் பாலு போன்ற திமுக பிரமுகர்களும் இலங்கையில் அதுவும் சிங்கள பகுதிகளில் முதலீடு செய்துள்ளனர். மகிந்த ராஜபக்சாவின் உதவியுடன் இதனை செய்துள்ளனர். திமுக ஏன் 2009ல் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்தது என்பதற்கான விடைகள் இவை. கனிமொழியும் டிஆர் பாலுவும் மகிந்த ராஜபக்சாவின் ரத்தம் தோய்ந்த கரங்களை அது காயுமுன்னரே ஓடிவந்து ஏன் கைகுலுக்கினார்கள் என்பது இப்போது புரிகிறது அல்லவா?

சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

• சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு தீப்பொறியில் இருந்தே ஆரம்பமானது.

செய்தி – வருமானத்திற்கு அதிகமாக

செய்தி – வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஆர் ராசாவின் 15 அசையா சொத்துக்களை முடக்கியது அமுலாக்கத்துறை. லண்டனுக்கு வருகை தரும் பல கம்யுனிஸ்டுகளே காரல் மார்க்ஸ் சமாதிக்கு செல்வதில்லை. இந்நிலையில் திமுக வில் இருக்கும் ராசா தன் மகளுடன் காரல் மார்க்ஸ் சமாதிக்கு சென்றிருந்தார். இவர் சார்ந்துள்ள திமுக கட்சி மீது விமர்சனம் இருந்தாலும் இவரது இச் செய்கை இவர் மீது மதிப்பு எற்பட வைத்தது. ஆனால் இப்போது இவர் மீது வரும் குற்றச்சாட்டுகளை பார்க்கும்போது இவர் ஏன் காரல் மார்க்ஸ் சமாதிக்கு சென்றார் என்று சந்தேகப்பட வைக்கின்றது.

பாலஸ்தீனியர்களுக்கு தமிழர்கள்

பாலஸ்தீனியர்களுக்கு தமிழர்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறிய பெரியார், தந்தை செல்வா ஈழத் தமிழர்களுக்காக ஆதரவு கோரிய போது ஏன் வழங்க மறுத்தார்? “ஒரு அடிமை எப்படி ஆதரவு தர முடியும்” என கேட்டார். அப்படியென்றால் ஒரு அடிமை எப்படி பாலஸ்தீனியர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும்?

தமிழ்நாட்டில்,

தமிழ்நாட்டில், “சுப்பர்ஸ்டார்” நடிகர் இருக்கிறார் “தளபதி” நடிகர் இருக்கிறார் “தல” நடிகர் இருக்கிறார் இப்படி வருங்கால முதலமைச்சர் கனவில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு இல்லாத துணிவு நடிகை கஸ்தூரிக்கு இருக்கிறது. பாராட்டுகள். தமிழக மக்களுக்காக நடிகை கஸ்தூரியால் குரல் கொடுக்க முடியுமென்றால் இவர்களால் ஏன் கொடுக்க முடியவில்லை?

ஜெகத்ரட்சகனுக்கு 65000கோடி ரூபா சொத்து

ஜெகத்ரட்சகனுக்கு 65000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்டால் , சீமானுக்கு வாடகை கட்ட பணம் எங்கிருந்து வருகின்றது என்று ஏன் கேட்கவில்லை என்கிறார்கள். எனக்கு புரியவில்லை. பதவியில் உள்ளவர்கள் சொத்து சேர்த்தது பற்றி அறிய ஏன் எந்த பதவியிலும் இல்லாத சீமானிடம் அதுவும் வீட்டு வாடகை பணம் பற்றி கேட்க வேண்டும்? இவனுகள் இப்பவும் தமிழரை இளிச்சவாயன்களாகவே நினைக்கிறார்களா?

இந்திய தூதர் தலைவர்களை

இந்திய தூதர் தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை வாங்க முடியாது. இந்திய தூதருக்கு அஞ்சி தலைவர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர தயங்கலாம். ஆனால் மக்கள் யாருக்கும் அஞ்சாமல் இறந்த தம் உறவுகளை நினைவு கூர்வர். பிரம்படியில் இந்திய ராணுவம் செய்த படுகொலைகளை வரலாறு அடுத்த சந்ததிக்கும் கடத்தியுள்ளது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் சுந்தரலிங்கனார் அவர்களது நினைவைப் போற்றுவோம்..(13.10.2023)

வழக்கத்திற்கு மாறாக

வழக்கத்திற்கு மாறாக விதியை மீறி அசானிக்கு வாய்ப்பளித்தது ஜீ டிவி. சரிகமப நிகழ்வில் 5 முறை மட்டுமே பாட இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இவருக்கு இல்லை. ஆனாலும் வெற்றி பெறும் நபரைவிட அதிக புகழையும் பரிசில்களையும் இவர் பெற்றுவிட்டார். இதுவரை இப்படி யாருக்குமே நடக்காத நிலையில் முதன் முதலாக அசானிக்கு நடந்திருக்கிறது. இப்படி நடப்பதற்கு முக்கிய காரணம் அசானிக்கு ஈழத் தமிழர்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவே. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்த்துகளும் பரிசில்களும் வழங்கி அசானியை ஆதரித்து வருகின்றனர். ஈழத் தமிழர் மலையக தமிழரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் என சிலர் செய்யும் பிரச்சாரத்திற்கு ஈழத் தமிழர் தமது பாணியில் அளித்துள்ள பதில் இது. இந்த விஷம பிரச்சாரகர்கள் இனி என்ன சொல்லப் போகிறார்கள்?

முதலில் கலாநிதி மாறன் தன் பாங்க் அக்கவுண்டில்

முதலில் கலாநிதி மாறன் தன் பாங்க் அக்கவுண்டில் இருந்து யாரோ ஒரு லட்சம் ரூபாவை திருடிவிட்டதாக முறையிட்டார். இப்போது பொன்முடி தன் மனைவியின் கடையில் இருந்து இரண்டு லாக்கர்களை யாரோ திருடி விட்டதாக முறையிட்டுள்ளார். உண்மையில் பெரிய திருடர்களிடம் திருடும் தைரியம் சிறிய திருடர்களுக்கு வந்துவிட்டதா ? அல்லது மக்களின் கவனத்தை திருப்ப இப்படி திருட்டு செய்திகளை பரப்புகிறார்களா?

காலம் பூராவும் சிங்கள அரசுக்கு

காலம் பூராவும் சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கியவர், இப்போது மலையக மக்களுக்கு தான் உதவ சிங்கள அரசு அனுமதிக்கவில்லை என புலம்புகிறார். பாவம். இந்த உண்மையை அறிய இவருக்கு இத்தனை நாள் தேவைப்பட்டிருக்கு?

தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு

தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு எந்தளவு கொடுமையானது என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். ஏனெனில் அந்த கொடும் வலியை அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள். ஆனால் கொடுமை என்னவெனில் மகிந்த ராஜபக்சா ஈழத் தமிழர் மீது தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு வீசிய போது அவருக்கு ஆதரவு தெரிவித்தது பாலஸ்தீனம் . இப்போது தன்மீது தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு போடப்படுவதை சர்வதேசம் கண்டிக்க வேண்டும் எனக் கோருகின்றது. இதைவிடக் கொடுமை என்னவெனில் மகிந்த ராஜபக்சா ஈழத் தமிழர் மீது பொஸ்பரஸ் குண்டு வீசியதை கண்டிக்காத காங்கிரசும் திமுகவும் பாலஸ்தீனத்தில் பொஸ்பரஸ் குண்டு வீசப்படுகிறது என கண்ணீர் வடிக்கின்றன. இனியாவது ஈழத் தமிழர் அனுபவித்த வலியை இவர்கள் உணர்வார்களா?

போர் நடைபெறும் இடமெல்லாம்

போர் நடைபெறும் இடமெல்லாம் போருக்கு சம்பந்தமில்லாத குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படுவது கொடுமை அதுவும் பெற்ற தாயின் கண் முன்னே குழந்தைகள் பாதிக்கப்படுவது வார்த்தைகளால் வடிக்க முடியாத கொடுமை. ஆனால் பாலஸ்தீனத்தில் சிறுவர் பாதிக்கப்படும்போது இரக்கம் காட்டுவோர் ஈழத்தில் சிறுவர் பாதிக்கப்பட்ட போது இரங்கவில்லையே. அது ஏன்? ஈழத்து சிறுவர் “தமிழர்” என்பதாலா?

நியூசிலாந்தில் நாளை நடைபெறும்

நியூசிலாந்தில் நாளை நடைபெறும் தேர்தலில் ஈழத் தமிழர் செந்தூரன் அருளானந்தம் போட்டியிடுகிறார். வாழ்த்துக்கள். நியூசிலாந்து சென்ற ஈழத் தமிழர் அங்கு பொறியிலாளராக வேலை பார்க்க முடிகிறது. நியூசிலாந்தில் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிடவும் முடிகிறது. ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் 40 வருடமாக அகதியாகவே வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர் தமிழ்நாட்டின் "தொப்புள்கொடி உறவுகள்" என்பது வெறும் வார்த்தைதானா? இந்த நிலை எப்போது மாறும்?

கீழே உள்ள படத்தை பார்க்கும்

கீழே உள்ள படத்தை பார்க்கும் திராவிட உடன்பிறப்புகளுக்கு 2009ல் கலைஞர் செய்த துரோகம் மனட்சாட்சியை உறுத்தாமல் விடுமா?

இன்னொரு நாட்டில் நடக்கும் சண்டைக்கு

இன்னொரு நாட்டில் நடக்கும் சண்டைக்கு தமிழகம் என்ன செய்ய முடியும் என கேட்ட திமுக உடன் பிறப்புகளுக்கு கீழே உள்ள படம் நல்ல பதிலாக இருக்கும். ஆனால் சில ஈழத் தமிழர் இந்த படத்தை போட்டு தமிழக மக்கள் இதேபோன்று செய்யவில்லையே என அங்கலாய்க்கின்றனர். இது தவறு. உலகில் எந்த இனமும் செய்யாததை தமிழக மக்கள் ஈழத் தமிழருக்காக செய்திருக்கின்றனர். ஆம். ஒன்றல்ல. இரண்டல்ல. மொத்தம் பதினேழு பேர் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தனர். ஆனால் இதையெல்லாம் மழுங்கடித்தவர் ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி. அவர் தீக்குளித்து இறந்தவர்களை காதல் தோல்வியில் இறந்தவர்கள் என தமது காவல்துறை மூலம் செய்தி பரப்பினார். மாணவர்கள் போராட முனைந்தபோது கல்லூரிகளுக்கு லீவு விட்டு விடுதிகளில் இருந்து மாணவர்களை பலவந்தமாக வெளியேற்றினார். போராடும் மக்களை தேடி தேடிப் பிடித்து பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தார். இரத்தம் அனுப்ப முயன்றவர்களைக் கூட தடுத்து நிறுத்தி கைது செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக 3 மணி நேரம் உண்ணாவிரத நாடகம் நடத்தி போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். இவர் கூறிய பின்பே பல்லாயிரம் ஈழத் தமிழர் கொல்லப்பட்டது பற்றி கேட்டபோது “மழைவிட்டும் தூவானம் விடவில்லை” என பொறுப்பின்றி கூறினார். ஈழத் தமிழர் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டது உங்களுக்கு கவலை தரவில்லையா என கேட்டபோது சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டபோது இன்னொரு வீட்டில் திருமணம் நடந்தது என்று தம் பிள்ளைகளுக்கு பதவி ஏற்புவிழா நடத்தினார். எனவே தமிழக முதல்வர் என்ன செய்ய முடியும் எனக் கேட்கும் திமுக உடன்பிறப்புகளுக்கு கலைஞர் செய்த துரோகத்தை கூறுவதே சரியான பதிலாக இருக்கும். தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். ஈழத்தில் தமிழினம் அழியும்போது தமிழக தமிழர் மனம் வாடாமல் இருக்குமா? நிச்சயமாக வாடியது. ஆனால் அதை எல்லாம் தடுத்து மழுங்கடித்தவர் கலைஞர். இந்த வரலாற்று துரோகத்தை அடுத்த சந்ததிக்கு கடத்துவோம்.

லண்டன் வரும்போதெல்லாம் மக்களை சந்திக்கிறார்.

லண்டன் வரும்போதெல்லாம் மக்களை சந்திக்கிறார். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலும் அளிக்கிறார். அவர் கூறும் கருத்துக்களில் விமர்சனம் இருக்கலாம். ஆனால் மக்களை சந்திக்கும் இவரின் பண்பை பாராட்டாமல் இருக்க முடியாது. இது மற்ற தமிழ்த் தலைவர்களும் வெளிநாடுகளுக்கு வரும்போது மக்களை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் காலங்களில் மட்டும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு கொண்டு பணம் பெற்று வரும் தலைவர்கள் இனி இவரைப் போன்று செயற்பட முன்வரவேண்டும்.

புலிகள் இருந்தவரை புலிகள் மீதான விமர்சனம்

புலிகள் இருந்தவரை புலிகள் மீதான விமர்சனம் என்பது மாற்றுக் கருத்துகள் என்ற அரசியல் தன்மை பெற்றிருந்தது. புலிகள் இல்லாதவேளை புலிகள் மீதான விமர்சனம் என்பது இனப்படுகொலையை நியாயப்படுத்த சிங்கள அரசிற்கு உதவுவதாகவே இருக்கும். குறிப்பு - ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும் - லெனின்.

ஒரு இனத்தை படுகொலை செய்தவர்கள்,

ஒரு இனத்தை படுகொலை செய்தவர்கள், அந்த இனத்தின் மத்தியில் தலைவர்களாக வலம் வரமுடியுமா? தமிழின படுகொலையில் பங்கெடுத்தவர்கள், தமிழ் இனத்தின் மத்தியில் வர முடியும் என நிரூபித்துள்ளனர்.

தோழர் இளங்கோ

•தோழர் இளங்கோ முதலாம் ஆண்டு நினைவு தினம் (17.10.2023) தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுத்த தோழர் இளங்கோ கடந்த ஆண்டு காலமானார். நாளை அவரது முதலாவது நினைவு தினம் ஆகும். கரூரில் பிறந்த தோழர் இளங்கோ புலவர் கலியபெருமாள் மூலம் தமிழ்நாடு விடுதலைப்படையில் சேர்ந்து பங்காற்றினார். 11.04.88 யன்று ஈழத்தில் இந்திய ராணுவம் புரிந்த அக்கிரமங்களை கண்டித்து கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததால் குண்டை கொண்டு சென்ற தோழர் மாறன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். கூடவே சென்ற தோழர் இளங்கோ படுகாயம் அடைந்தார். அங்கிருந்து தப்பி வரும்போது ஒரு இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அதிர்ஸ்டவசமாக இவர் ஒரு மருத்துவரின் வீட்டின் முன் மயங்கி விழுந்ததால் அப் பெண் மருத்துவர் உடனடியாக இவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் இவ் வழக்கில் இவருக்கு ஆயள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட சிறைவாசத்தின் பின் விடுதலையானார். தமிழத்தேசிய விடுதலைக்கான இவரது அர்ப்பணிப்பு மகத்தானது. இவரை என்றும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

தோழர் இளங்கோ முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்

•தோழர் இளங்கோ முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிகள் 1988ம் ஆண்டு விமானம் மூலம் நாடு திரும்புவதற்காக தோழர் பொழிலன் ஏற்பாட்டில் திருச்சியில் தோழர் மாறனுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது நான் நாடு திரும்பும் செய்தியை புலவரிடம் கூறுவதற்காக பெண்ணாடத்தில் உள்ள அவர் வீட்டிற்கு தோழர் மாறனுடன் சென்றிருந்தேன். அங்கு புலவர் அவர்களால் எனக்கு தோழர் இளங்கோ அறிமுகம் செய்யப்பட்டார். புலவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தோழர்கள் மாறன், இளங்கோ இருவருக்கும் பெண்ணாடம் ஆற்றங்கரையில் பயிற்சிகள் வழங்கினேன். அப்போது மாலை இருட்டு நேரம். வேலை முடிந்து வந்த கூலி விவசாயிகள் குண்டு சத்தம் கேட்டு பயந்துவிட்டனர். இதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ஆனால் புலவரால் எமக்கு காவலுக்கு நியமிக்கப்பட்ட தோழர் லெனின் உடனே சமயோசிதமாக செயற்பட்டு பாறைக்கு வெடி வைக்கிறார்கள் என அவர்களிடம் கூறி சமாளித்தார். பின்னாளில் இதே தோழர் லெனின்தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் தளபதியாக பொறுப்பேற்று பல காவல்நிலையங்களை குண்டு வீசித் தகர்த்தார்.

தோழர் இளங்கோவை நினைவு கூர்வோம்

•தோழர் இளங்கோவை நினைவு கூர்வோம் 1991ம் ஆண்டு மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை ஈழத் தமிழர் தங்கவேலாயுதம் சிறை அதிகாரிகளால் மிகவும் தாக்கப்பட்டார். தங்கவேலாயுதத்திற்கு சிகிச்சை அளிக்கக்கோரியும் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாம் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போது என்னைப் பார்வையிடுவதற்கு தோழர் இளங்கோ கரூரில் இருந்து வந்திருந்தார். நான் உண்ணாவிரதத்தில் இருந்தமையினால் சிறை விதிகளின்படி என்னை பார்வையிட அவர் அனுமதிக்கப்படவில்லை. தோழர் இளங்கோ ஏற்கனவே சிறையில் இருந்தமையினால் அனுமதி மறுக்கப்பட்டதும் ஏதோ பிரச்சனை உள்ளே நடந்துள்ளது என்பதை ஊகித்துவிட்டார். பதட்டமடைந்த தோழர் இளங்கோ இது பற்றி யாரிடமோ விசாரித்தபோது நான் தாக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த தோழர் இளங்கோ அப்போது மனு அதிகாரியாக இருந்த தமிழ்செல்வனிடம் “ எமது தோழர் பாலனுக்கு ஏதும் நடந்தால் அப்புறம் மதுரை சிறையே இருக்காது குண்டு வீசி தரை மட்டமாக்குவேன்” என மிரட்டியுள்ளார். தோழர் இளங்கோ மீது ஏற்கனவே இரண்டு குண்டு வழக்குகள் இருக்கிறது என்பது அதிகாரி தமிழ்செல்வனுக்கு தெரியும். அதனால் பயந்த அதிகாரி தமிழ்ச்செல்வன் உடனே உள்ளே வந்து என்னிடம் நடந்ததைக்கூறி நான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டால் இளங்கோவை பார்வையிட அனுமதிப்பதாக கூறினார். உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்த நான் இளங்கோ கொடுத்த மனுப் பேப்பரின் பின்புறத்தில் நான் நலமாக இருக்கிறேன் எனவும் அடுத்த வாரம் நீதிமன்றம் வரும்போது நேரில் யாவும் கூறுகின்றேன் என எழுதிக் கொடுத்தேன். என் எழுத்தைப் பார்த்தபின்பே தோழர் இளங்கோ ஆறுதல் அடைந்திருந்தார். இதேபோன்று துறையூர் சிறப்புமுகாமில் நான் உண்ணாவிரதம் இருந்தபோது காஞ்சிபுரத்தில் இருந்து வந்து திருச்சி கலெக்டரின் வாசலில் உட்கார்ந்து குரல் கொடுத்தவர் தோழர் முகிலன். ராஜீவ் காந்தி கொலையின் பின் தமிழகத்தில் ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது. அதற்கு அஞசாது எனக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள் இளங்கோ, முகிலன் மற்றும் பல தோழர்கள

வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய

வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும் இந்திய அரசால் கொல்லப்டவில்லை. வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட இந்திய அரசால் கொல்லப்படவில்லை. ஆனால் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததும் உடனடியாக இந்திய அரசால் சதி செய்து கொல்லப்பட்டார். தமிழ்நாடு விடுதலையை முன்வைக்கும் பலர் உயிரோடுதானே இருக்கிறார்கள். அப்படியிருக்க வீரப்பனை மட்டும் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? உண்மைதான். நல்ல கேள்விதான். இதற்கு காரணம் வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கியே. வீரப்பனின் துப்பாக்கி யானைகளை சுட்டுக் கொன்ற போது இந்திய அரசு கவலை கொள்ளவில்லை. வீரப்பனின் துப்பாக்கி பொலிசாரை சுட்டுக் கொன்றபோதும்கூட இந்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வீரப்பன் துப்பாக்கி தமிழ்நாடு விடுதலைக்காக சுடப் போகிறது என்று அறிந்ததும் உடனடியாக இந்திய அரசால் கொல்லப்பட்டார். கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில, (1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும் (2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் (3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் (4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும் (5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். புரட்சிதலைவி என்று அழைக்கப்பட்ட ஜெயா அம்மையார் சிறையில் அடைக்கப்பட்டபோது முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு, ( 1)தனக்கு சுகர், மூட்டுவலி இருப்தால் சலுகை தர வேண்டும் (2)சிறையிலும் தன்கூட சசிகலா இருக்க அனுமதிக்க வேண்டும் (3)வயது மூப்பு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் தமிழ் மக்களே! இப்போது புரிகிறதா ஏன் வீரப்பன் கொல்லப்பட்டார் என்று? குறிப்பு – 18.10.2022 வீரப்பன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள்பதிவு.

மயிலத்மடு மாதவனை தமிழர் நிலத்தில்

மயிலத்மடு மாதவனை தமிழர் நிலத்தில் சட்ட விரோதமாக சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த குடியேற்றப்பட்ட சிங்களவருக்காக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இனி புத்தரையும் எழுப்ப முடியாது. சிங்களவரையும் அகற்ற முடியாது. புலிகள் இருந்தவரை தமிழர் நிலம் தமிழரிடம் இருந்தது. புலிகள் இருந்தவரை தமிழர் கடல் தமிழரிடம் இருந்தது. புலிகள் இருந்தவரை தமிழர் வானம்கூட தமிழர் வசப்பட்டது. ஆனால் இப்போது புலிகள் இல்லை என்றவுடன் ஒவ்வொன்றாக தமிழரிடமிருந்து பறிபோய்க்கொண்டிருக்கிறது. இதனை கண்டிக்க வேண்டிய சிலர் புலிகளை "பாசிசவாதிகள்" என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். என்னே கொடுமை இது?

ஈழத் தமிழர் பிரச்சனையை

ஈழத் தமிழர் பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே என அண்ணாமலை கூறுகின்றார் ஆனால் உலகில் எங்கு இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டாலும் அதை கண்டித்து குரல் கொடுக்கும் மோடி ஈழத்தில் இந்துக்கோயில்கள் இடிக்கும்போது குரல் கொடுப்பதில்லை. குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மாறாக கோயில்களை இடிக்கும் அந்த சிங்கள அரசுக்கு கடன் கொடுத்து உதவி வருகிறார். கச்சதீவில் கிருத்தவ ஆலயத்திற்கு முன் வைக்கப்பட்ட புத்தர் சிலையை மன்னார் ஆயரால் அகற்ற முடிகிறது. ஆனால் இந்து ஆலயங்களை இடித்து அதில் புத்தர் சிலைகளை வைப்பதை மோடி ஏன் தடுப்பதில்லை? இது குறித்து அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்து உறவுப்பாலம் கட்டியவர்கள் கேட்க மாட்டார்களா?

இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா?

•இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா? மறப்பது மக்கள் இயல்பு. நினைவு படுத்த வேண்டியது எமது கடமை. 2009ல் என்ன நடந்தது என்பதே பலருக்கு மறந்துவிட்ட நிலையில் 1987ல் நடந்தது எப்படி நினைவு இருக்கும்? அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987ல் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு” என்றும் “அமைதிப்படையை எதிர்த்து போரிட்டது ஒரு முட்டாள்தனம்” என்றும் ரீல் சுத்த முனைகின்றனர். •முதலில் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி பார்ப்போம். (1)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த அரசியல் இராணுவ நலன்கள் (அ) இலங்கையின் வெளியுறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை (ஆ)ஒலி ஒளி பரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை (இ)திருகோணமலை தளத்தின் மீதான கட்டுப்பாடு உரிமை (ஈ)இலங்கை ராணவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை,இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடனான உறவுகள் மீதும் கட்டுப்பாடு (2)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த பொருளாதார நலன்கள் (அ)இந்திய கொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும் (ஆ)திரிகோணமலை எண்ணெய் குதங்கள் புத்துயிர்ப்பு செய்யப்படும். அதன் செயற்பாட்டிலும் லாபத்திலும் இந்தியாவுக்கு உரிமை அளிக்கப்படும் (இ)சுமார் 400 கோடி ரூபா பெறுமதியான கட்டுமான பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் (ஈ)பெற்றோல் மற்றும் எண்ணெய் கிணறுகள் இந்தியாவுக்கு அளிக்கப்படும் (உ)இலங்கை வங்கி மற்றும் திட்டக்குழு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதார திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு (ஊ)இந்திய ரயில் மற்றும் பேரூந்துகளை விற்பனை செய்யும் வாய்ப்பு இவ்வாறு தமிழர் நலனைவிட இந்திய நலனை கொண்ட ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்கள் எதிர்த்தது தவறு என்று கூறுகின்றனர். •அடுத்து இந்திய ராணுவம் பற்றி கொஞ்சம் பார்ப்போம் பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971இலும் இந்திய ராணுவம் இலங்கை வந்தது என்பதை இவர்கள் அறியவில்லை. 1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள். அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார். வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை. அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார். அதுமட்டுமல்ல, இந்திய ராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987ல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது. இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000 மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800 அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இந்திய ராணுவம் தமிழ் மக்களின் நலனுக்காக இந்த போரை செய்யவில்லை. மாறாக தென்கிழக்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் மத்தியஸ்தன் என்கிற அரசியல் பாத்திரத்தையும் இப் பிராந்திய வல்லரசு என்கிற இராணுவ பாத்திரத்தையும் அது நிலை நிறுத்திக் கொண்டது. இலங்கைக்கு வந்தது அமைதிப்படை அல்ல. அது இந்திய ஆக்கிரப்புபடை. அதனை ஈழத் தமிழர்கள் எதிர்த்து போரிட்டது சரியே. ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது என்பதையே ஈழத்தில் தமிழ்மக்கள் செய்து காட்டினார்கள்

மறக்க முடியாத தட்டிவான் பயணம்

•மறக்க முடியாத தட்டிவான் பயணம்! படிக்கிற காலத்தில் தினமும் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிவரை இந்த தட்டிவானில் டிக்கியில் நின்று பயணம் செய்தது இன்றும் நினைவில் இருக்கிறது. நாம் இப்படி டிக்கியில் நின்று வரும்போது எமக்கு அடிப்பதற்காக பொலிஸ் சார்ஜன்ட் மாணிக்கராசா சங்குன்னி கடையில் நீண்ட தடியுடன் ஒளித்து நிற்பார். சார்ஜண்ட் மாணிக்கராசா ஒளித்து நிற்பதை வீதியில் நிற்பவர்கள் இரகசியமாக சிக்னல் தருவார்கள். உடனே தட்டிவான் டிறைவர் எம்மை தலையை உள்ளே செருகும்படி கூறுவார். எமது உடல் முழுவதும் டிக்கியில் நிற்கும். தலையை மட்டும் குனிந்து தட்டி வானுக்குள் செருகி நிற்போம். இப்படி நின்றால் மாணிக்கராசா அடிக்க மாட்டார். அது ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.

காசாவில் மருத்துவமனை

காசாவில் மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டு 600 பேர் மரணம். இந்த வலியை தமிழர்களாகிய எம்மால் உணர முடிகிறது. ஏனெனில் 1987ல் யாழ் மருத்துவமனை மீது இந்திய ராணுவமும் இதேபோன்றுதான் தாக்கியது. 2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிங்கள ராணுவமும் இதே போன்று தாக்கியது. இப்போது காசா மருத்துவமனை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்போர் , அன்று ஈழத் தமிழர்களின் மருத்துவமனை மீது தாக்குதல் நடந்தபோது கண்டிக்கவில்லை. அது ஏன்?

சிறுமி – அங்கிள்! காசா மருத்துவமனை

சிறுமி – அங்கிள்! காசா மருத்துவமனை மீது குண்டு போட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சுமந்திரன் - அது வெறுக்கத்தக்க போர்க்குற்றம். சிறுமி – காசா மருத்துவமனை தாக்குதலை போர்க்குற்றம் என்று கூறும் நீங்கள், யாழ் மருத்துவமனை மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை போர்க்குற்றம் என்று இதுவரை கூறவில்லையே. அது ஏன்? சுமந்திரன் - ??????

மாலை நேரம் மட்டும் வியாபாரம் நடக்கும்

மாலை நேரம் மட்டும் வியாபாரம் நடக்கும் பருத்தித்துறை ஓடக்கரை வீதி அப்பக்கடைகள். வட்டப்பாறை கடலில் குளித்துவிட்டு இந்த கடையில் வெள்ளைஅப்பம் வாங்கி சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் சொர்க்கம் மேலே இல்லை பூமியில்தான் உள்ளதென்று.

இன்று காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு

இன்று காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஸ்டாலின் அவர்கள் 2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்திய போது ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? இன்று காசாவில் போர் நிறுத்தம் செய்யுமாறு கோரும் ஸ்டாலின் அவர்கள் 2009 ல் முள்ளிவாய்க்காலில் போர் நிறுத்தம் செய்யுமாறு ஏன் கோரவில்லை? பாலஸ்தீன மக்களுக்கு இரங்கும் ஸ்டாலின் அவர்கள் ஈழத் தமிழர் மீது இரங்க மறுப்பது ஏன்?

இந்தியாவில் ஒரு தோசை அனுபவம்

•இந்தியாவில் ஒரு தோசை அனுபவம் நான் முதன் முதலாக 1982ல் மதுரையில் நடந்த உலக தமிழாராய்ச்சி மாநாட்டை பார்ப்பதற்காக இந்தியா சென்றேன். அப்போது திருச்சியில் பஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு லாட்ஜில் தங்கினேன். அந்த லாட்ஜின் கீழ் தளத்தில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது. காலை நேரம். நல்ல பசி. சாப்பிடுவதற்காக அக் கடைக்கு சென்றேன். புட்டு தாங்க என்றேன். சர்வர் இல்லை என்றார். சரி இடியப்பம் தாங்க என்றேன். அவர் அதுவும் இல்லை என்றார். அப்ப என்னதான் இருக்கு என்று கேட்டேன். அவர் சொன்ன பெயர்களில் தோசை மட்டும் தெரிந்ததாக இருந்தது. சரி ஐந்து தோசை கொண்டு வாங்க என்றேன். அவர் ஒரு மாதிரி என்னைப் பார்த்தார். எனக்கு அவர் ஏன் அப்படி பார்க்கிறார் என்று புரியவில்லை. யாழ்ப்பாணத்தில் முதலில் ஐந்து தோசை வைப்பார்கள். அப்புறம் சாப்பிட்டதும் அடுத்த ஜந்து தோசை வைப்பார்கள். அந்த பழக்கத்தில்தான் நானும் ஐந்து தோசை தாங்க என்று கேட்டேன். முதல்ல ஒரு தோசை தாரன். அப்புறம் தேவை என்றால் கேளுங்க என்று சர்வர் கூறினார். சிறிது நேரத்தில் ஒரு தட்டில் தோசையை சுருட்டி எடுத்து வந்தார். இது பேப்பர் ரோஸ்ட் என்றும் கூட இருப்பது சட்னியும் சாம்பாரும் என்றார். சம்பல் இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவர் சம்பல் என்றால் என்ன என்று கேட்டார். எனக்கு தோசையே வெறுத்துவிட்டது. 11 நாட்கள் நின்றேன். அதன் பின்பு ஒருமுறைகூட தோசை சாப்பிடவில்லை. அடுத்த முறை 1983ல் இந்தியா சென்றேன். அப்போது சென்னையில் ஒரு நண்பர் எனது தோசைக் கதையைக் கேட்டுவிட்டு ஊத்தப்பம் கிட்டதட்ட யாழ்ப்பாண தோசை போல் இருக்கும் அதை சாப்பிட்டு பார் என்றார். பின்னர் பல தடவை இந்தியா சென்றுள்ளேன். சென்னையில் சரவணபவன் ஓட்டலில் விரும்பி சாப்பிடுவேன். சரவணபவன் ஓட்டலில் அனைத்த வகை தோசைகளும் சாப்பிட்டு இருக்கிறேன். அந்தளவுக்கு தமிழ்நாட்டு தோசையும் எனக்கு பிடித்த உணவாக மாறிவிட்டது. அப்புறம் நான் 1991ல் கைது செய்யப்பட்டபோது என்னை மந்தைவெளி கியூ பிராஞ் அலுவலகத்தில் வைத்து விசாரித்தார்கள். அப்போது காலையில் என்னை விசாரிக்க வந்த மத்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் சாப்பிட்ட பின்பு விசாரணையை ஆரம்பிக்கலாம் என்றனர். அருகில் நின்ற கியூ பிரிவு காவலரிடம் “ இவர் தோசை விரும்பி சாப்பிடுவார். ஒவ்வொரு நாளும் காலையில் சாந்தி தியேட்டருக்கு அருகில் உள்ள கடையில் தோசை சாப்பிடுவார். அதனால் இப்பவும் அவருக்கு நீங்கள் தோசை வாங்கி கொடுங்கள்” என்றனர். இதைக் கேட்டதும் நான் ஆச்சரியப்பட்டேன். எனக்கு தோசை பிடிக்கும் என்பது மத்தியபுலனாய்வு துறையினர்வரை தெரிந்திருக்கிறதே.😂

நடிகர் விஜய்யை இன்னொரு எம்ஜிஆராக

நடிகர் விஜய்யை இன்னொரு எம்ஜிஆராக மாற்றுகிறதா திமுக?

அன்பே கடவுள்” - புத்தர்

“அன்பே கடவுள்” - புத்தர் யாரும் தவறாக நினைத்துவிட வேண்டாம். புத்தரின் போதனையை பரீட்சித்துப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான்.😂😂

36 வது நினைவு தினம்!

• 36 வது நினைவு தினம்! 1987 அக்டோபர் 21 ம் திகதி யாழ் மருத்துவமனையில் பணிபுரிந்த 21 ஊழியர்கள் உட்பட மொத்தம் 68 பேர் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். இதுவரை இந்த கொலைக்கு இந்திய தரப்பில் இருந்து யாரும் நீதியோ நியாயமோ வழங்கவில்லை. வருத்தம்கூட தெரிவிக்கவும் இல்லை ஆனால் இந்த கொலைகளுக்கு காரணமான ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை மன்னிக்கவும் முடியாதாம். மறக்கவும் முடியாதாம். ஏனெனில் ராஜீவ்காந்தி உயிர்தான் உயிராம். 68 தமிழன் உயிர் மயிராம். போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!