Sunday, October 29, 2023

கவர்னர் மாளிகைக்கு பெற்றோல் குண்டு

கவர்னர் மாளிகைக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்ட பின்பு திமுகவும் பாஜகவும் மாறி மாறி ஒன்றன் மீது ஒன்று குற்றம் சுமத்துகின்றன. பாஜக வன்முறைக்கட்சி என்பது எந்தளவு உண்மையோ அந்தளவு திமுகவும் வன்முறைக்கட்சி என்பது உண்மையே. அதுவும் 200 ரூபா உடன்பிறப்புகள் சிலர் ஈழத் தமிழரை வன்முறையாளர் என்று டிவிட்டரில் எழுதுகின்றனர். அவர்களுக்கு வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசியல் அமைப்பு சட்டத்தை எரித்தார். அதனால் கலைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கலைஞர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் தபாற்கந்தோரில் ஒரு குண்டு வெடித்தது. அக் குண்டு வெடிப்புக்கு காரணமான மதுரை திமுக இளைஞர் அணி தலைவர் செயப்பெருமாள் என்பவரும் அவருக்கு உதவியதாக டெலோ அமைப்பைச் சேர்ந்த ஈழத் தமிழர் கார்த்திக்கும் கைது செய்யப்பட்டனர். செயப்பெருமாள் திமுக உதவி மூலம் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால் ஈழத் தமிழரான கார்த்திக் எந்த உதவியும் இன்றி நீண்ட நாட்களாக சிறையில் இருந்தார். நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டவேளை கார்த்திக் என்னிடம் தன் நிலை பற்றி வருத்தத்துடன் கூறினார். இதையடுத்து நான் பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு இது குறித்து கடிதம் எழுதினேன். அவர் செயப்பெருமாள் கார்த்திக் இருவருக்கும் சார்பாக ஆஜராகி வாதாடினார். ஆயினும் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போதும் செயப்பெருமாள் அப்பீல் செய்து அதனூடாக ஜாமீனில் விடுதலையானார். ஆனால் ஈழத் தமிழர் கார்த்திக் 14 வருடங்கள் முழுமையாக சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையானார்.

No comments:

Post a Comment