Monday, January 31, 2022

மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள். உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ் எட்டு மணி நேர வேலை எட்டு மணி நேர ஓய்வு எட்டு மணி நேர உறக்கம் இதற்காகப் போராடி சிக்காக்கோ வீதிகளில் இரத்தம் சிந்தியவர்களின் நினைவே "மே தினம்" எமக்காகப் போராடிய அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்ததே எம் கரங்களில் தவளும் "செங்கொடி". வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன் இன்று உழைப்பதற்காக வாழ்கிறான். மாற்றுவோம் இந்த அவல நிலையை. உலகின் பாதி சொத்து வெறும் 62 முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது. இந்த 62 முதலாளிகளின் சொத்து மதிப்பு 119 லட்சம் கோடி ரூபா இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு 44 சத விகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒன்பது பேரில் ஒருவர் இரவு உணவு இன்றி பட்டினியாக உறங்க செல்கிறார். ஏன் இந்த நிலை? உலகில் செல்வம் சமமாக பங்கிடாமல் இருப்பதே காரணம். ஆறு மனி நேர வேலை கேட்போம் எட்டு மணி நேர உறக்கம் கேட்போம் பத்து மணி நேர ஓய்வு கேட்போம். போராடுவோம் எமக்காக மட்டுமல்ல எமது அடுத்த சந்ததிக்காகவும்! •முதலாளி, தொழிலாளி சுரண்டலை ஒழிப்போம் •உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் இடைவெளியை நீக்குவோம். •நகரத்திற்கும் கிராமத்திற்கும் வேறுபாட்டை இல்லாது செய்வோம் வாருங்கள் தோழர்களே! ஒன்றாய் அணிதிரள்வோம்!

நான் நலமாக இருக்கிறேன்.

நான் நலமாக இருக்கிறேன். எனக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பேக் ஜடி(FAKE ID) க்கு நன்றிகள்.

எனது முகநூல் கணக்கில் இருந்து

எனது முகநூல் கணக்கில் இருந்து பணம் கேட்கப்பட்டிருப்பதாக நண்பர் ஒருவர் இன்று இந்தியாவில் இருந்து தெரிவித்துள்ளார். எனது பெயரில் பேக் ஜடி ஒன்று உலாவுவதாக இன்னொரு நண்பர் இன்று தெரிவித்துள்ளார். இது எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதனை நீங்கள் கண்டால் முகநூல் நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் என்னை இறந்துவிட்டதாக ஒரு பேக்ஐடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தது. இப்போது என் பெயரிலேயே ஒரு பேக் ஜடி உருவாக்கப்படடு என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி நடக்கிறது. எனது இருப்பு இலங்கை இந்திய அரசுக்கும் அதன் ஏஜென்டுகளுக்கும் அச்சம் கொடுக்கிறது என்பதை அறிவேன். ஆனால் அவர்கள் இந்தளவு தரங்கெட்டு இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

அனைவருக்கும் இனிய பொங்கல்

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் எத்தனையோ தை பிறந்தும் அரசியல் கைதிகளுக்கு விடிவு பிறக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் கைதி உடை அணிந்து சிறை போன்று கூண்டு செய்து அதற்குள் பொங்கல் செய்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மட்டுமன்றி தமிழகத்தில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!

தீர்வு பெற்று தருவதாக கூறிச்சென்றவர்

தீர்வு பெற்று தருவதாக கூறிச்சென்றவர் பொங்கல் பானையும் தேங்காயுமாக வந்திருக்கிறார். இதன் அர்த்தம் என்ன?

ஒன்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் திராவிட பொங்கல்

ஒன்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் திராவிட பொங்கல் இன்னொன்று சுமந்திரனின் சுத்துமாத்து பொங்கல். இரண்டு பொங்கலும் தமிழர்களை ஏமாற்றும் பொங்கல்.

கடவுள் என்னும் முதலாளி

•கடவுள் என்னும் முதலாளி கண்டாவளையில் கண்டெடுத்த விவசாயி ஒரு விவசாயியாக எதை அறுவடை செய்ய விரும்பினாரோ அதை அவர் நன்றாக விதைத்தார். ஆனால் ஒரு அரசியல்வாதியாக தீர்வை பெற அவர் எதனையும் விதைக்க தவறிவிட்டார். அவர் விதைத்தது அவருக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கும். ஆனால் அவரை தெரிவு செய்து அனுப்பிய தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்கப்போகிறார்? பொங்கல்பானையும் தேங்காயும்தானா?

ஐயா! உறங்கியது போதும். பிளீஸ் எழும்புங்கோ.

ஐயா! உறங்கியது போதும். பிளீஸ் எழும்புங்கோ. பிரிட்டிஸ் பிரதமர்கூட பொங்கலுக்கு வாழத்து கூறிவிட்டார். நீங்களும் அடுத்த பொங்கலுக்குள் தீர்வு கிடைக்கும் என்று ஒரு அறிக்கையை விட்டிட்டு தூங்குங்கோ.

83 வயதான கடும் நோயால் பாதிக்கப்பட்ட

83 வயதான கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன்சாமிக்கு பலமுறை ஜாமீன் மறுத்த உச்சநீதிமன்றமே இப்போது தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமீன் வழங்குகிறது. இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை. வாங்கப்படுவது. அதை பணம் படைத்தவர்கள் இலகுவில் வாங்கிவிடுகிறார்கள்.

தமிழழகத்தில் இந்தி திணிப்பு

தமிழழகத்தில் இந்தி திணிப்பு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும். ஏனெனில் இந்தி திணிப்பு என்பது இன்று தமிழகத்தை தாண்டி ஈழத்திற்கும் வந்துவிட்டது.

இரு தினங்களுக்கு முன்னர்

இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதர் “இந்தி தின நிகழ்வு” நடத்தியுள்ளார். எமது தலைவர்கள் தீர்வு கேட்டு மோடிக்கு கடிதம் எழுதுகின்றனர். அவர் பதிலுக்கு இந்தி மொழியை அனுப்பியுள்ளார். ஒருபுறம் சிங்களமொழி. மறுபுறம் இந்தி மொழி இதனிடையே சிக்கி தமிழ் மொழி இனி மெல்ல சாகும். முதலில் நிலம் இழந்தோம். இப்போது மொழியை இழக்கிறோம். மொத்தத்தில் எம் இனம் அழிகிறது.

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள். தமிழத்தேச மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் தமிழ்மகன் காலமானார். தோழர் தமிழரசன் முன்வைத்த தமிழ்த்தேசிய பாதையில் பயணித்தவர். இறுதிவரை ஈழத் தமிழருக்கு தனது ஆதரவை வழங்கியவர். எனது “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” நூலை அச்சிட்டு வெளியிட்டதில் அவரின் பங்கு மறக்க முடியாதது.

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழன்

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழன் A.R ரகுமான் தமிழர்களுக்கு தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்து தெரிவிக்க கூடாதாம். இந்தியாவின் தாய்மொழியான இந்தியில்தான் தெரிவிக்க வேண்டுமாம். இந்தி வெறியர்களின் அட்டகாசம். என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை?

இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்படும்போதெல்லாம்

இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்படும்போதெல்லாம் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற செய்தி வருகிறது. அல்லது எல்லையில் மோதல் என்கிறார்கள். இது ஏன்?

சாதி மத பேதமற்று தமிழ் இனம்

சாதி மத பேதமற்று தமிழ் இனம் அனைவரும் ஒன்றுதிரண்டு கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே. தான் வாழ்வதற்கு உதவிபுரியும் இயற்கைக்கும் (சூரியன்) தனது உழவு தொழிலுக்கு உதவிபுரிந்த பிராணிக்கும்(மாடு) பொங்கல் வைத்து நன்றி தெரிவிக்கும் ஒரே இனம் தமிழர் மட்டுமே. இந்த பொங்கல் பண்டிகைக்காக நிச்சயம் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள முடியும்.

கனிமொழி கூறிய வரிகள

கனிமொழி கூறிய வரிகளை சிரிக்காமல் படிப்பவர்களுக்கு தகுந்த பரிசு வழங்கப்படும். தயவு செய்து 2022ம் ஆண்டின் சிறந்த ஜோக் இது என்று யாரும் நினைத்துவிடாதீர்கள்.

பிக்பாஸ்

•பிக்பாஸ் தமது டிவி நபரான பிரியங்காவிற்கு கொடுக்க முடியாமல் மக்கள் விருப்பப்படி ராஜீவிற்கு முதற்பரிசை விஜய் டிவி வழங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்வில் பங்குபற்றும் நபர்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைப்பதாக கூறும் பிக்பாஸ் குழுவினர் அதை பார்க்கும் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்று கூறவில்லை. மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு குப்பை.

லண்டனில் தமிழ் மரபு மாதம்

லண்டனில் தமிழ் மரபு மாதம் தமிழ் இனி மெல்ல சாகாது. வாழும்

மற்ற நாடுகளில் ரிசர்வ் பாங்க் கவர்னராக

மற்ற நாடுகளில் ரிசர்வ் பாங்க் கவர்னராக இருப்பதற்கு பல தகுதிகள் வேண்டும். ஆனால் இலங்கையில் மட்டும் மகிந்த ராஜபக்சாவின் மகன் நாமல் ராஜபக்சாவின் தோளில் கைபோடுவராக இருந்தால் போதுமானது. இப்போது புரிகிறதா இலங்கை ஏன் வங்குரோத்து நிலைக்கு செல்கிறது என்பதை?

நாம் ஊமையாக இருக்கும்வரை

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும் என்பார்கள். லண்டனில் எமது அடுத்த சந்ததியினர் பேச ஆரம்பித்துள்ளனர். எனவே இனி உலகம் கேட்டேயாக வேண்டும். எத்தனையோ அவதூறுகள் , நெருக்கடிகள். அத்தனைக்கு மத்தியிலும் ஈழப் போராட்டத்தை உயிர்ப்போடு நகர்த்துவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே. அதுவும் அதை அடுத்த சந்ததியினர் கையில் எடுப்பது நம்பிக்கை அளிக்கிறது.

ஒன்றல்ல இரண்டல்ல ஒரு லட்சம் பனை

ஒன்றல்ல இரண்டல்ல ஒரு லட்சம் பனை விதைகளை வடக்கு கிழக்கு முழுவதும் விதைக்கிறார்கள். இவர்கள் பனையை மட்டும் விதைக்கவில்லை. கூடவே தமிழ்த் தேசியத்தையும் விதைக்கிறார்கள். விதைத்த இரண்டும் இவர்களுக்கு பயன் தருகிறதோ இல்லையோ ஆனால் அடுத்த சந்ததி நிச்சயம் அனுபவிக்கும். வாழ்த்துக்கள்.

தோழர் ஜீவாவை நினைவுகூரும்

தோழர் ஜீவாவை நினைவுகூரும் இன்றைய கம்யுனிஸ்டுகள் ஜீவா முன்வைத்த தமிழத்தேசிய இனத்திற்கான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை இன்று முன்வைக்க தயாரா? அல்லது குறைந்தபட்சம் அதை முன்வைத்து போராடும் தமிழத்தேசியவாதிகளை “பாசிட்டுக்கள்” என்று அழைப்பதையாவது நிறுத்துவார்களா?

இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும்

இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் மனம் இரங்கியதால் 75 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த இரண்டு சகோதரர்கள் ஒருவரை ஒருவர் கடந்த 10ம் திகதி சந்திக்க முடிந்திருக்கிறது. 39 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் ஈழ தமிழ அகதிகள் தம் உறவுகளை சந்திக்க இலங்கை அரசும் இந்திய அரசும் எப்போது மனம் இரங்கப்போகின்றன?

கனடாவைத் தொடர்ந்து லண்டனில்

கனடாவைத் தொடர்ந்து லண்டனில் தமிழ் மரபு மாதம் தமிழன் செல்லுமிடமெல்லாம் தமிழையும் கூடவே கொண்டு செல்கிறான் தாம் உறங்கவில்லை. விழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை புலம்பெயர்ந்த தமிழர் நிரூபித்த வண்ணம் இருக்கிறார்கள். மொழி இழந்தால் இனம் அழிந்துவிடும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து உள்ளனர்.

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் முல்லைத்தீவைச் சேர்ந்த யுவதி க.இந்துகாதேவி. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் யுவதி தமிழ் இனத்திற்கும் வன்னி மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். வாழ்த்துக்கள்.

இதுவரை கோத்தபாயா என்ன கூறிவந்தாரோ

இதுவரை கோத்தபாயா என்ன கூறிவந்தாரோ அதையேதான் இம்முறையும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை மௌனமாக இருந்துவந்த சம்பந்தர்ஐயா இம்முறை “பாய்ச்சல்” என்கிறார்கள். அப்படியென்றால் கோத்தபாயா இம்முறை வேறு ஏதாவது கூறுவார் என சம்பந்தர் ஐயா எதிர்பார்த்தாரா? ஆனாலும் மற்றவர் உதவியின்றி எழுந்து நடக்கமுடியாத சம்பந்தர்ஐயா “பாய்ச்சல்” என்று எழுதுவது ரொம்பவும் ஓவரடா.

என்ன பாப்பா ஒளிஞ்சு நின்று பார்க்கிற?

என்ன பாப்பா ஒளிஞ்சு நின்று பார்க்கிற? அங்கிள்! நாம் மோடியை கிண்டல் பண்ணிட்டோம் என்று எங்களை பொலிசில் பிடிச்சு குடுக்க பாஜக அண்ணாமலை வாறாரு செய்தி – ZEE டிவி சிறுவர் நிகழ்வு குறித்து அண்ணாமலை புகார்.

முதலில் , 300 தீவிரவாதிகள்

முதலில் , 300 தீவிரவாதிகள் நாட்டிற்குள் ஊடுருவ தயாராக இருக்கின்றனர் என்று ராணுவ தளபதி கூறினார். இப்போது, பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து என்று உளவுஅமைப்புகள் தெரிவித்துள்ளன. தேர்தல் அறிவிப்பு வரும்போதெல்லாம் ஏன் இப்படி செய்திகள் வருகின்றன?

எண்ணெய் இல்லாது சப்புகஸ்கந்தையை மூடினார்கள்.

எண்ணெய் இல்லாது சப்புகஸ்கந்தையை மூடினார்கள். மின்சாரத்தை துண்டிக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு அங்காங்கு மின்சாரத்தை துண்டித்து வருகிறார்கள். விற்கப்பட்ட வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்குத் தாரைவார்க்கிறார்கள். இவற்றுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்த வேளையில் அரசு மக்கள் மீது முட்டைகளை வீசி எறிந்துள்ளது. 30 ரூபா விலையான முட்டைகளை மக்கள் மீது அரசால் வீசி எறிய முடியும். ஆனால் மக்கள் நினைத்தால் அரசையே தூக்கி எறிய முடியும். அதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

மட்டக்களப்பில் மகிந்த ராஜபக்சா

மட்டக்களப்பில் மகிந்த ராஜபக்சா ஆதரவாளர்களால் பெரியார் இயக்கம் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மகிந்த ஆதரவாளர்களால் அம்பேத்கார் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்பேத்காரும் பெரியாரும் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள்.

தோழர் தென்தமிழன்- 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தோழர் தென்தமிழன்- 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. வெளியில் சிகிச்சை பெறவும் பரோல் விடுதலை அளிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் தோழர் தமிழரசன் அரசியலை ஏற்று தமிழ்நாடு விடுதலைக்கு பயணித்ததே காரணம்.

சுமந்திரன் பொங்கல் பானை

சுமந்திரன் பொங்கல் பானை தேங்காய் கொடுத்த பிரச்சனை கிளப்கவுசில் கேட்டுக்கொண்டிருந்தபோது நினைவுக்கு வந்தது, தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் கனடாவில் இருந்து வந்த காசுக்கு கணக்கு கேட்டார். அதற்கு சுமந்திரன் அவர் மீது ஆயிரம் கோடி ரூபா மானநஸ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அது என்ன ஆச்சு? யாருக்காவது தெரியுமா?

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன. சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது

இந்தியாவை பயன்படுத்த முடியுமா?

•இந்தியாவை பயன்படுத்த முடியுமா? தன் தந்தை தர்மலிங்கம் எம.பி யை இந்திய உளவு அமைப்பே டெலோ மூலம் கொலை செய்வித்தது என்று தெரிந்தும்கூட இந்தியாவை பயன்படுத்துகிறோம் என்று சித்தார்த்தன் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. “நாங்கள் இந்தியாவை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது” என்று EPRLF தலைவர் பத்மநாபா கூறியதை சித்தார்த்தன் எப்போது உணரப்போகிறார்? 1983முதல் இந்தியாவை பயன்படுத்துவதாக தமிழ் தலைவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்தியா அவர்களை பயன்படுத்தி தனது நலன்களை சாதித்துக்கொள்கிறது என்பதே உண்மை.

கடந்த மைத்திரி ரணில் ஆட்சியில்

கடந்த மைத்திரி ரணில் ஆட்சியில் இணைந்து பணியாற்றியபோது எந்த மக்களிடம் இவர் ஆனை பெற்றிருந்தார்? சரி. பரவாயில்லை. இப்போது தீர்வு 13 ஐ கேட்டு இந்திய அரசுக்கு கடிதம் எழுத மக்கள் ஆனை தந்தார்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி சுத்துமாத்து அரசியல் செய்யப்போகிறார்?

வெறுமனே வாயளவில்

வெறுமனே வாயளவில் எதிர்த்துக்கொண்டிருக்காமல் அதற்காக மக்களை திரட்டிப் போராட முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. தீர்வு 13க்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும்

புலம்பெயர் தமிழர்களை

புலம்பெயர் தமிழர்களை மிரட்டி அடக்க முடியாமல் போனதால் தற்போது அவர்களுடன் பேச வாய்ப்பு எற்படுத்தி தரும்படி பிரிட்டன் அமைச்சரிடம் கெஞ்சுகிறார் ஜனாதிபதி கோத்தா. இப்போது புரிகிறதா ஏன் 200 ரூபா திமுக உடன்பிறப்புகளும் சுமந்திரன் தம்பிகளும் புலம்பெயர் தமிழர் மீது அவதூறுகள் பொழிகின்றனர் என்று?

இந்தியாவிடம் தீர்வு கேட்டு கடிதம் கொடுத்துவிட்டு

இந்தியாவிடம் தீர்வு கேட்டு கடிதம் கொடுத்துவிட்டு பிரிட்டன் தூதுவரிடம் தீர்வை எதிர்பார்ப்பது சரியா? சரியென்றால் பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கலாமே? சம்பந்தர் ஐயாவின் “சாணக்கியம்” என்னவென்றே புரியுதில்லை. யாருக்காவது புரிகிறதா?

ஏழு தமிழர் விடுதலை

ஏழு தமிழர் விடுதலை நீட் தேர்வு ரத்து வரிசையில் திமுக வின் அடுத்த உருட்டு. இது விடியல் ஆட்சி அல்ல. இது திராவிட உருட்டு ஆட்சி. போற போக்கைப் பார்த்தால் இந்த ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை பல்டி அடிப்பார்கள்?

இருவரும் பெண்கள்.

இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்கள். ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவும் வழங்கப்படவில்லை ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர். இப்படி எல்லாவற்றிலும் இனவாதம் பார்க்கும் நாட்டில் தமிழர் எப்படி சேர்ந்து வாழ முடியும்?

தலைவர்களை விலைக்கு வாங்கலாம்.

தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது தமிழ் தலைமைகள் இந்தியாவிடம் சமர்ப்பித்த தீர்வு 13ற்கு எதிரான மக்கள் போராட்டம் ஆரம்பித்துள்ளது. படம்- ஜேர்மனியில் ஈழ தமிழ் பெண் ஒருவர் சுமந்திரன் உருவப்படத்திற்கு செருப்படி கொடுத்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அகிம்சை வழியில் இந்தியா

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கூறிவருபவர்கள் இன்று தவிர்க்க முடியாமல் ஆயுத வழியில் போராடிய சுபாஷ் சந்திரபோசை சிலை திறந்து நினைவு கூர்ந்துள்ளனர். ஒருபுறம் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை வன்முறையாளர்கள் என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் ஆயுதம் ஏந்திப் போராடியவரை நினைவு கூர்வது எதற்காக?

இதுவரை இந்தியா தீர்வு

இதுவரை இந்தியா தீர்வு பெற்று தரும் என்று கூறிவந்தவர் இப்போது சர்வதேச தலையீடுதான் தீர்வுக்கு ஒரே வழி என்கிறார். மக்களை திரட்டி போராடித்தான் தீர்வு பெற வேண்டும் என்பதை இவர் எப்போது உணரப் போகிறார்? தீர்வு என்பது நமது உரிமை. இரந்து கேட்பதற்கு அது பிச்சை அல்ல. அது போராடிப் பெறுவது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்த பின்பும் அரசின் தயவில் சொகுசு பங்களாக்களையும் சலுகைகளையும் அனுபவிப்பவர் எந்த முகத்துடன் அரசை எதிர்த்து போராட முடியும்?

தன் மகன் விடுதலைக்கு

தன் மகன் விடுதலைக்கு குரல் கொடுக்குமாறு சாந்தனின் தாயார் சம்பந்தர் ஐயாவிடம் மனுக் கொடுத்தும் இதுவரை சம்பந்தர் ஐயா குரல் கொடுக்கவில்லை. விடுதலைக்கு குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சாந்தனுக்கு ஒரு மாதம் பரோல் விடுமுறையாவது கொடுக்குமாறு சம்பந்தர் ஐயாவால் ஏன் ஒரு கடிதம் எழுத முடியவில்லை?

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு !

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ! ஒருபுறம் மாதராய் பிறந்திட மாதவம் புரிந்திட வேண்டும் என்பாங்கள் மறுபுறம் ஒவ்வொரு நிமிடமும் இரண்டு பெண் குழந்தைகளை சீரழிப்பாங்கள். அடுப்புபூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலத்தில் துப்பாக்கி தூக்கி சாதனை புரிந்தவர்கள் உன் அக்காமார்கள். உன் அக்காமார் தூக்கிய துப்பாக்கி உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது. நீயும் தூக்கு. அப்பதான் இந்த வெறியன்கள் அடங்குவாங்கள

கொரோனோவை விட

கொரோனோவை விட வேகமாக பரவும் “கஜன்மேனியா” நோய். தமிழ்நாட்டில் 200 ரூபா உடன்பிறப்புகளுக்கு சீமான்மேனியா நோய் பீடித்திருப்பதுபோல் ஈழத்தில் சுமந்திரன் தம்பிகளுக்கு கஜன்மேனியா நோய் பரவிவருகிறது. சம்பந்தர் சுமந்திரன் எதற்காக தீர்வு 13 கேட்டு கையொப்பம் வைத்தார்கள் என்று கேட்டால் கேட்பவர்களை கஜன் ஆட்கள் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்கள்) என்று முத்திரை குத்தி சுமந்திரன் தம்பிகள் திட்டித் தீர்க்கிறார்கள். இது உரிய பதில் இல்லை என்பதை எப்படி அவர்களுக்கு புரியவைப்பது?

தமிழனை கள்ள தோணியில் வந்தவன் என்றார்கள்

தமிழனை கள்ள தோணியில் வந்தவன் என்றார்கள் அப்ப விஜயனும் அவனது கூட்டாளிகளும் கட்டார் எயர்வேஸில் வந்தவர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழனை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்கிறார்கள் அப்ப புத்தர் என்ன இங்கிலாந்திலிருந்து வந்தவரா? அவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டியதுதானே என்று கேட்டால் பதில் இல்லை. பிள்ளையார் கோவிலை அகற்றிவிட்டு புத்த விகாரையை கட்டுகிறார்கள். நீயும் இந்து நானும் இந்து என்று தமிழர்களுக்கு கதை சொல்லும் பார்ப்பாண் இதைக் கண்டுக்காம இருக்கிறான். அவன் பிள்ளையாரை தூக்கி பிடிப்பதும் இவன் புத்தரை தூக்கி பிடிப்பதும் தங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து விடக்கூடாது என்பதற்காகதானே!

ஒரு படத்தில் கிணற்றை

ஒரு படத்தில் கிணற்றைத் காணவில்லை என்று வடிவேலு காவல் நிலையத்தில் முறையிட்டது போன்று தன் கட்சியை காணவில்லை என்று முறையிடுகிற நிலையில் ஆனந்தசங்கரி இருக்கிறார். ஆனால், தென்னை மரத்தில் வட்டுவரை சென்றுவிட்டேன். இனி இளநீர் பறிப்பதுதான் மிச்சம் என்று 13 தீர்வு மூலம் இந்தியா வழியாக தீர்வு பெறுவதை பல வருடங்களாக சொல்லி வருபவர் ஆனந்தசங்கரி ஆனந்தசங்கரி கூறும்போது அவரை கிண்டல் செய்தவர்கள்தான் இன்று அதே 13 தீர்வைக் கேட்டு இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

இவர் சிங்கள இனத்தவர்.

இவர் சிங்கள இனத்தவர். தன் கணவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடந்த 12 ஆண்டுகளாக தேடி வருகிறார். இதுவரை அவருக்கு நீதி கிடைக்காமையால் இன்று கோவிலில் தன் முடியை காணிக்கை கொடுத்து கடவுளிடம் வேண்டியுள்ளார். இங்கு எனது கேள்வி என்னவெனில் ஒரு சிங்களவருக்கே இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றால் சிங்கள அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?

திக 1944 ல் தொடங்கப்படுகிறது.

திக 1944 ல் தொடங்கப்படுகிறது. திமுக 1949 ல் தொடங்கப்படுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938 ல் ஈழத்து சிவானந்த அடிகளால் தொடங்கப்படுகிறது. ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து இன்றுவரை பதவியை அனுபவிக்கும் திமுக உடன்பிறப்புகள் கூறுகிறார்கள் “ ஈழத்து அகதிநாயே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு “ என்று . என்னே கொடுமை இது தமிழனுக்கு?

கொம்பு வைச்ச சிங்கம்டா

•கொம்பு வைச்ச சிங்கம்டா புலிகள் பற்றியும் ஈழத் தமிழர் போராட்டம் பற்றியும் சில காட்சிகள் இடம் பெறும் இன்னொரு படம். ஈழத் தமிழர் போராட்டங்களை காட்டுவதும் குறிப்பாக அதை கொச்சைப்படுத்தாமல் காட்டுவதும் ஆறுதலாக இருக்கிறது. விரைவில் முழுமையான சிறந்த ஈழத் தமிழர் போராட்டங்களை கூறும் படங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையை எற்படுத்துகின்றன.

எந்தவித பொலிஸ் பாதுகாப்பும்

எந்தவித பொலிஸ் பாதுகாப்பும் இன்றி சுமந்திரன் வயலில் விவசாயம் செய்கிறார். எந்தவித பொலிஸ் பாதுகாப்பும் இன்றி சுமந்திரன் கடலில் செல்கிறார் எந்தவித பொலிஸ் பாதுகாப்பும் இன்றி சுமந்திரன் பொங்கல் பானை வழங்குகிறார். இதுவரை அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் அவரை கொல்ல முயன்றதாக 20 க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்கள் சிறையில் சித்திரவதை அனுபவிப்பது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் அவர்கள் இன்றி அவர்களது குடும்பங்கள் மிகவும் கஸ்டப்படுகின்றன. எனவே சுமந்திரன் இந்த அப்பாவி தமிழ் இளைஞர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களின் விடுதலைக்கு வழி செய்ய வேண்டும். சுமந்திரன் தம்பிகள் இதை கவனத்தில் கொள்வார்களா?

சுமந்திரன் பாக்கெட்டில் இருந்த கடிதம் எங்கே?

•சுமந்திரன் பாக்கெட்டில் இருந்த கடிதம் எங்கே? ஒருபுறம் டெலோவுடன் சேர்ந்து சுமந்திரன் இந்தியாவுக்கு கடிதம் அனுப்புகிறார். மறுபுறத்தில் டெலோவின் சதியை முறியடித்துவிட்டதாக சுமந்திரன் தம்பிகள் எழுதுகின்றனர். சுமந்திரனும் சரி சுமந்திரன் தம்பிகளும் சரி தமிழ் மக்களுக்கு மூளை இல்லை என்று நினைக்கின்றனர். சரி. பரவாயில்லை. கடந்த ஆட்சியில் பேசும் கூட்டங்களில் எல்லாம் சுமந்திரன் தன் பக்கெட்டை தொட்டு “ இந்த ஆட்சி முடிவதற்குள் தீர்வு பெற்று தருவேன். இல்லை என்றால் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன்” என்று கூறுவார். தீர்வும் வரவில்லை. அவர் கூறியபடி ராஜினாமாவும் செய்யவில்லை. பரவாயில்லை. அவர் ராஜினாமா செய்யமாட்டார் என்பது தெரிந்தவிடயம்தான். ஆனால் அவர் பேசும்போது உண்மையில் ஒரு ராஜினாமா கடிதம் அவர் பாக்கெட்டில் இருந்ததா? இருந்தது என்றால் அந்த கடிதம் இப்போது எங்கே இருக்கிறது? சுமந்திரன் தம்பிகள் தங்கள் (sir)சேரிடம் கேட்டு சொல்வார்களா?

சம்பந்தர் ஐயாவின் இந்திய விசுவாசம்

•சம்பந்தர் ஐயாவின் இந்திய விசுவாசம் தமிழர்களின் சொத்தான திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு கொடுப்பதற்கு சிங்கள ஜேவிபி கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் தன் சொந்த தொகுதியில் இருக்கும் சொத்துக்களை கொடுப்பது பற்றி சம்பந்தர் ஐயா ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். இதில் அச்சரியப்பட எதுவுமே இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் இதே சம்பந்தர் ஐயாவின் திருமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 ஏக்கர் நிலம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது. தமது நிலம் இப்படி கொடுப்பதை எதிர்த்து தமிழ் மக்கள் சென்று சம்பந்தர் ஐயாவிடம் முறையிட்டனர். அதற்கு சம்பந்தர் ஐயா “ இந்தியா எமக்கு தீர்வு தரப் போகிறது. எனவே இந்தியாவுக்கு நிலம் கொடுப்பதை என்னால் எதிர்க்க முடியாது “ என்றார். இறுதியாக அந்த மக்கள் நீதிமன்றத்தை நாடி தமது நிலங்களை மீட்டனர். அந்த தமிழ் மக்கள் தம் நிலத்தை பெறுவதற்கு சிங்கள ஜேவிபி கட்சியே உதவி செய்தது. உலக நாடுகள் நிராகரித்த நிலக்கரி மின்சார நிலையம் சம்பூரில் இந்தியா நிறுவ உள்ளது. அதற்கும் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதால் தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால் சம்பந்தர் ஐயா இன்றுவரை அதனை எதிர்க்கவில்லை. பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் , மன்னார் பெற்றோல்வளம், புல்மோட்டை கனிவளம் என எல்லா தமிழர் வளமும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இத்தனை தமிழர் வளங்களையும் விட்டுக்கொடுத்த சம்பந்தர் ஐயா தமிழ் மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?

எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு

எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு அல்லவா? தமிழனுக்கு மட்டும் ஒரு விடுதலை வராமல் போய்விடுமா? காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றதே. தமிழன் மட்டும் கோதத்பாயாவின் காலடியில் அடிமையாக வீழ்ந்து கிடந்துவிடுவானா? பொங்கும் கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் எழுவோம் கொன்று புதைத்தால் மீண்டும் மீண்டும் முளைத்து எழுவோம் இம்முறை உலகத் தமிழன் எட்டுக் கோடியும் ஒன்றுபட்டு எழுவோம்!

பழனிபாபா

•பழனிபாபா எம்.ஜி.ஆர் காலத்தில் பழனிபாபா பெயர் பத்திரிகைகளில் அடிபட்டதுண்டு. அதைவிட அவர் பற்றி வேறு எதுவும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் 1991ம் ஆண்டு மதுரை சிறையில் புரட்சி மணி என்ற ஆயள்சிறைவாசி பழனிபாபா பற்றி நிறைய தகவல்கள் கூறினார். அதில் அவர் கூறியவற்றில் முக்கியமான சுவாரசியமான ஒரு தகவல் இன்றும் என் நினைவில் உள்ளது. அதாவது சிறை விதிகள் சிறைவாவாசிகளின் உரிமைகள் சலுகைகள் அடங்கிய “ஜெயில் மனுவல்” என்னும் புத்தகத்தை ஜெயில் சுப்பிரண்டனிடம் வாங்கி படித்த முதல் சிறைவாசி பழனிபாபாதான். ஜெயில் மனுவலை படித்து அதில் இருக்கும் விபரங்களை சக கைதிகளுக்கு கூறி இன்று கைதிகள் அனுபவிக்கும் உரிமைகள் சலுகைகள் பலவற்றுக்கு அவரே காரணம். இதைக் கேட்டதும் எனக்கும் அந்த ஜெயில் மனுவலை பெற்று படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அப்போது மதுரை சிறை அடிஷனல் சுப்பிரண்டாக பாலன் அழகிரி இருந்தார். அவரிடம் சென்று ஜெயில் மனுவலைக் கேட்டேன். அப்போது அவரது அறையில் சாத்தூர் கே.கே.எஸ.ராமச்சந்திரன் இருந்தார். அவர் என்னைக் கண்டதும் தனது எதிரிகள் யாரோ தன்னை தாக்க என்னை அனுப்பியதாக நினைத்து பதட்டமடைந்தார். இதனால் அடிசனல் சுப்பிரண்டன் என்னை வெளியே அனுப்புவதற்காக உடனே நான் கேட்ட ஜெயில் மனுவல் புத்தகத்தை தந்துவிட்டார். எனக்கு நான் கேட்ட புத்தகம் கிடைத்துவிட்டது என்ற ஆச்சரியம் ஒருபுறம் இருக்க மறுபுறம் என்னால் கே.கே.எஸ.எஸ.ஆருக்கு பிரச்சனை வரக்கூடும் என் அஞ்சி அன்று இரவே அவரை வேறு சிறைக்கு மாற்றியது அதைவிட ஆச்சரியமாக இருந்தது. பழனிபாபா பற்றி பேச்சு வரும்போது கூடவே இந்த நினைவுகளும் எப்போதும் எனக்கு வருகின்றன.

முத்துக்குமாரா எங்களை மன்னித்துவிடு!

முத்துக்குமாரா எங்களை மன்னித்துவிடு! “உன் மூச்சுக்காற்று சோனியாவை எரிக்கும்” என்று நாங்கள் பாட்டு பாடியது உண்மைதான். ஆனால் மதவாத மோடியை ஒழிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு அன்னை சோனியாவே வருக என்று இப்போது பாடிக்கொண்டு இருக்கிறோம். என் பிணம்கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று கூறியவர் இப்போது ராகுல் காந்தியின் தலைமையில் தேசம் காக்க மாநாடு நடத்துகிறார். காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து நீ உன் உயிரை விட்டாய். உன் உடலை தூக்கி சுமந்தவர்கள் இப்போது அதே காங்கிரசையும் திமுகவையும் தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். சோனியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்த நீ உன் முகத்தை தீயினில் எரித்தாய். ஆனால் ஈழத் தலைவர் ஒருவர் அன்னை சோனியாவின் முகத்தில் இரக்கத்தை கண்டேன் என்று லண்டனில் அறிக்கை விடுகிறார். மன்னித்துவிடு முத்துக்குமாரா, உன்னை நினைவு கூரக்கூட எமக்கு நேரம் இல்லை. அஜித்தின் வலிமை எப்போது வரும்? அது விஜய்யின் மாஸ்டர் பட வசூலை உடைக்குமா என்பதே எமக்கு இப்போ முக்கிய பிரச்சனை. குறிப்பு – 29.01.2022 யன்று முத்துக்குமாரின் நினைவு தினம் ஆகும்.

எத்தனை நெருக்கடிகள்

எத்தனை நெருக்கடிகள், அவதூறுகள், அதைவிட சுமந்திரன் தம்பிகளின் கேலிப் பேச்சுகள் வேற. அத்தனையும் தாண்டி புலம்பெயர் தமிழர் தம் இலக்கு நோக்கி நகர்கிறார்கள். அவர்கள் நகர்கிறார்கள் என்பதைவிட அந்த நகர்வுகளை அடுத்த சந்ததியே முன்னின்று நடத்துகின்றது என்பது நம்பிக்கை அளிக்கிறது. தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது.

பாகிஸ்தானில் அண்மையில்

பாகிஸ்தானில் அண்மையில் சிங்களவரை எரித்துக்கொன்ற கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸதான் பிரதமர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கொல்லப்பட்ட சிங்களவரின் குடும்பத்திற்கு பலகோடி ரூபா பணம் வழங்கியுள்ளார். ஆனால், 1956ல் தார் பீப்பாவிற்குள் போட்டு எரித்து கொல்லப்பட்ட தமிழ் ஐயருக்கு சிங்கள அரசு வழங்கிய நீதி என்ன? 1977, 1983 ல் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்கு சிங்கள அரசு இதுவரை வழங்கியது என்ன?

இந்திய தூதரும் ஆறு வெங்காயங்களும்

•இந்திய தூதரும் ஆறு வெங்காயங்களும் இந்திய தூதர் கூறியபடி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியவர்கள் இந்திய தூதர் கூறியபடி ஊடக மாநாடு நடத்தியிருக்கிறார்கள். கடிதம் அனுப்ப முன் இதேபோல் ஒரு ஊடக மாநாட்டை நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்திவிட்டு கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் என்று ஏன் இவர்களுக்கு தோன்றவில்லை? மக்கள் 13க்கு எதிராக மட்டுமன்றி இந்தியாவுக்கும் எதிராக திரள்கிறார்கள் என்ற அச்சம் இவர்களுக்கும் இவர்களின் இந்திய தூதருக்கும் வந்துவிட்டதா

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF)தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈழத்தை கைவிட்டுவிட்டார் புரட்சியை கைவிட்டுவிட்டார் விடுதலையையும் கைவிட்டுவிட்டார் அப்புறம் இன்னும் எதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பெயர் வைத்திருக்கிறார்? அவர் “இந்திய தீர்வு 13 ஐ பெறும் முன்னணி” என பெயரை மாற்றிக்கொள்வது பொருத்தமாக இருக்கும் அதுமட்டுமல்ல கஜேந்திரகுமார் அணியினரை அவர் தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். அதேபோல் அவர்களும் இவரை, கனடாவில் இருக்கும் மகளுக்கு டில்லி மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்க சீட்டு பெற்றதற்காகவும், டில்லி சென்னை போன்ற இடங்களில் இருக்கும் கட்சியின் வீடுகள் மற்றும் சொத்துகளை பாதுகாப்பதற்காகவுமே, இந்திய விசுவாசியாக இருக்கிறார் தமிழ் மக்கள் நலனுக்காக அல்ல தமது சொந்த நலனுக்காகவே இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என பதிலுக்கு விமர்சிக்க எவ்வளவு நேரமாகும்? எனவே சுரேஸ் பிரேமசந்திரன் நாகரீகமாக விமர்சனம் செய்வது நல்லது.

தீர்வு 13 ஐக் கேட்டு இந்திய பிரதமருக்கு

தீர்வு 13 ஐக் கேட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய செல்வம் அடைக்கலநாதன் சிறப்புமுகாம்களை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி ஏன் எழுதவில்லை? இத்தனைக்கும் செல்வம் அடைக்கலநாதனே புதுக்கோட்டை சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரும் சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்தவர். எனவே சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப் பட்டிருப்பவர்களை விடுதலை செய்யுமாறு கோரும் தார்மீக கடமை அவருக்கு இருக்கிறதல்லவா? இதைவிட கடந்த 39 வருடங்களாக இந்தியாவில் இருக்கும் அகதிகள் மிகவும் கஸ்டப்படுகின்றனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு உயர் கல்வி மறுக்கப்படுகிறது. திரும்பி வர விரும்பும் அகதிகளைக்கூட அனுப்பி வைக்கவில்லை. சுதந்திரமாக நடமாடக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதுகுறித்து ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று ஏன் செல்வம் அடைக்கலநாதனுக்கு தோன்றவில்லை? ஒருவேளை இவை குறித்து கடிதம் எழுதினால் இந்திய தூதருக்கும் இந்திய அரசுக்கும் கோவம் வரும் என அச்சப்படுகிறாரா? அல்லது, இந்தியாவில் இருக்கும் தனது சொத்துகளுக்கு இடையூறு வந்துவிடும் என தயங்குகிறாரா?;

தீர்வு 13ஐ தமிழ் மக்கள் மீது

தீர்வு 13ஐ தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு இந்திய அரசு மேற்கொள்ளும் சதிகளுக்கு எதிராக இந்தியாவில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டித்திருப்பது பயன் உள்ளது. பாராட்டப்பட வேண்டியது. இதேபோன்று மற்ற தமிழக தலைவர்களும் இந்திய அரசை கண்டித்து ஈழத் தமிழர்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். இதன்மூலம் இந்திய அரசின் சதி முயற்சிக்கு எதிராக போராடும் ஈழத் தமிழருக்கு உதவிட வேண்டும்.

புலிகள் இருந்தவரை

புலிகள் இருந்தவரை புலிகள் மீதான விமர்சனம் என்பது மாற்றுக்கருத்து என்ற அரசியல் தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் இன்று புலிகள் இல்லாத நிலையில் புலிகள் மீதான விமர்சனம் என்பது இலங்கை இந்திய அரசுக்கு உதவுவதாகவே இருக்கின்றது. தொடரும் தமிழ்த்தேசிய போராட்டத்தில் பங்கு பற்றாமல் இருக்கவும் தங்களை பிரமுகராக காட்டுவதற்கும் சிலர் புலி எதிர்ப்பு பிரச்சாரம் கிளப்கவுசில் செய்கின்றனர். இவர்கள் புலிகளை எதிர்க்கவில்லை. புலி எதிர்ப்பு பெயரால் தமிழத்தேசியத்தையும் அதற்கான தமிழ் மக்களின் போராட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

தமது சொந்த நிலம் கேட்டு

தமது சொந்த நிலம் கேட்டு வீதியில் படுத்துறங்கி போராட்டம் செய்த கேப்பாப்பிலவு மக்களுக்கு அவர்களின் நிலம் முழுவதும் வழங்கப்பட்டுவிட்டதா?

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

•இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு இந்திய அரசை இனங்காண விரும்புபவர்கள் தயவு செய்து எனது இந்த நூலை ஒருமுறை படியுங்கள். இலங்கை இந்திய ஒப்பந்தம், அமைதிப்படை என்ற பெயரில் செய்த அக்கிரமங்கள். அவை பற்றிய வரலாற்று பின்னணி அறிய ஒருமுறை படியுங்கள். இதைப் படித்த பின்பு இந்திய அரசை ஈழத் தமிழர் நம்ப முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். சிறிய நூல். வெறும் 60 பக்கம் மட்டுமே. கீழ்வரும் இணைப்பில் PDF பிரதி தரவிறக்கம் செய்ய முடியும். https://noolaham.org/.../%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0...

இதுவரை,

இதுவரை, சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறு ஒன்றாக வந்து கேட்காதவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்குமாறு ஒன்றாக வந்து கேட்காதவர்கள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு ஒன்றாக வந்து கேட்காதவர்கள் ஏன் தேர்தலில்கூட ஒன்றாக வந்து கேட்காதவர்கள் இப்போது ஒன்றாக வந்து கேட்கிறார்கள் கஜேந்திரகுமார் போராட்டத்தில் பங்கு பற்ற வேண்டாம் என்று. என்னே கொடுமை இது? இவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள்.

தீர்வு 13 ஐ கேட்டு

தீர்வு 13 ஐ கேட்டு இந்தியாவுக்கு கடிதம் எழுதியவர்களுக்கு மக்கள் திரண்டு தகுந்த பதில் அளித்துள்ளார்கள். மக்கள் இவர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் சேர்த்தே பதில் அளித்துள்ளார்கள். இனியாவது இந்த தலைவர்களும் இந்தியாவும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

தலைவர்களை விலைக்கு வாங்கலாம்

தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது. 7 தலைவர்களை விலைக்கு வாங்கி தமிழரை அடிமையாக்க முனைந்த இந்தியாவுக்கு தமிழ் மக்கள் அளித்துள்ள பதில்.

இதுவரை உலகில் பற்றி எரிந்த

இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு தீப்பொறியில் இருந்தே ஆரம்பமானது. இந்தியா மற்றும் துரோக தலைவர்களுக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் சிறு தீப்பொறி தோன்றியுள்ளது. போராட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் என மக்கள் அறிவித்துள்ளார்கள்.

இலங்கை சுதந்திரதினம் (பெப்-4) தமிழருக்கு கரி நாளா?

•இலங்கை சுதந்திரதினம் (பெப்-4) தமிழருக்கு கரி நாளா? இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக முதன்முதலில் 1956ல் அறிவித்தவர்கள் தமிழரசுக்கட்சியினரே. அதற்கமைய நடராஜா என்பவர் திருகோணமலை கச்சேரியில் பறந்த இலங்கை தேசியக் கொடியை அகற்றிவிட்டு கறுப்பு கொடியை ஏற்றினார். அப்போது இலங்கை பொலிஸ் அவரை சுட்டுக் கொன்றது. எதிர்வரும் 04.02.2022யன்று அவரது 66வது நினைவு தினம் ஆகும். கடந்த ஆட்சியில் இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுட்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரினார்கள். அப்போது தமிழரசுக்கட்சி எம்.பி யான சுமந்திரன் சுதந்திரதினத்தை கரிநாள் எனக் குறிப்பிடுவது தவறு என்றார். அதுமட்டுமல்ல தன் மனைவியுடன் சென்று இலங்கை அரசின் சுதந்திரதின வைபவத்திலும் கலந்துகொண்டார். ஆனால் கடந்த வருடம் அதே சுமந்திரன் அந்த சுதந்திரநாளில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணி சென்றார். தமிழர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை அறிவதற்கு சுமந்திரனுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது இந்த வருடம் சுதந்திரதினத்தை கரிநாளாக தமிழரசுக்கட்சி அறிவிக்குமா? குறிப்பு – தியாகி திருமலை நடராஜனை நினைவு கூர்வோம்.

அடேல் பாலசிங்கம் அவர்களுக்கு

முதலில் அடேல் பாலசிங்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய ராணுவம் இவரை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று வெறிகொண்டு அலைந்தபோது இவர் வெள்ளை இனத்தவர் என்பதால் மறைந்து வாழ்வது கூட பிரச்சனையாக இருந்தது. சிலவேளைகளில் இரவில் கரவெட்டி நெல்வயல்களில்கூட படுத்துறங்கியதாக கூறுவார்கள். நல்லவேளை பிடிபடவில்லை. பிடிபட்டிருந்தால் நிச்சயம் கொன்று குதறியிருப்பார்கள். இவரால் ஈழப் போராட்டம் பற்றி நிறைய பேச முடியும். ஆனால் ஏன் மௌனமாக இருக்கின்றார் என்று தெரியவில்லை. இவர் பேச வேண்டும்.

இதுவரை புலத்தில்

இதுவரை புலத்தில் போராடிய மக்களை கொச்சைப்படுத்திய சுமந்திரன் தம்பிகள், இப்போது தாயகத்தில் போராடிய மக்களையும் கொச்சைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.