Sunday, February 16, 2014

இந்திய அரசுக்கு ஒரு நியாயம். ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நியாயமா?

• இந்திய அரசுக்கு ஒரு நியாயம். ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நியாயமா?

ஜாலியன்வாலாபாக்கில் 400 பேர் படுகொலை செய்தமைக்காக உதம்சிங் என்ற சீக்கியர் இங்கிலாந்து சென்று டயர் என்ற அதிகாரியை சுட்டுக்கொன்றார். அவரை பயங்கரவாதி என்று கூறி இங்கிலாந்து நீதிமன்றம் மரதண்டனை வழங்கியது. ஆனால் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவருடைய அஸ்தியை வரவழைத்து சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்தார். உதம்சிங் மாபெரும் தியாகி என்று இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டார்.

அதே இந்திய அரசு இன்று ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய பயங்கரவாதம் என்றும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 400 பேரை கொன்ற டயரை இங்கிலாந்து சென்று கொல்வது நியாயம் என்றும் அது பெரிய தியாகம் என்றும் கூறும் இந்திய அரசு 40000 அப்பாவி தமிழர்களை கொன்று பல பெண்களை கற்பழித்து பல கோடி ரூபா சொத்துக்களை அழித்த ராஜீவ் காந்தியைக் கொன்றது பயங்கரவாதம் என்கிறது.

சீக்கிய மக்கள் கொல்லப்பட்டமைக்கு உதம் சிங் பழி வாங்கியது நியாயம் என்றால் ஈழத் தமிழர்கள் தம் அழிவுக்கு காரணமானவரை பழிவாங்கியது எப்படி அநியாயம் ஆகும்?

இங்கிலாந்து சென்று டயரை கொன்றது சரி என்றால் இந்தியா சென்று ராஜீவ் காந்தியைக் கொன்றது எப்படி தவறாகும்?

இந்திராகாந்தியை கொன்றவர்களை சீக்கிய மதகுருமார் புனிதர்களாக அறிவித்துள்ளார்கள். அவர்கள் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் ராஜீவ் கொலை பற்றி பேசினாலே தமிழர்கள் மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாய்கிறது.

சீக்கியர்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு இன்னொரு நியாயமா?

என்ன காரணத்திற்கு தெரியாமலே பற்றரி வாங்கி கொடுத்த ஒரு காரணத்திற்காக பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசு வாதிடுகிறது. அவர் 23 வருடங்கள் சிறையில் உல்லாசமாக இருந்ததாக வேறு உச்ச நீதிமன்றில் அது கூறுகிறது. இந்த அநியாயத்தை எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு பொறுமையாக நாம் பார்த்துக்கொண்டிருப்பது?

இன்னும் எத்தனை நாளைக்கு ராஜீவ் கொலையை காரணம் காட்டி தமிழ் இனத்தை அழிக்க அனுமதிப்பது?

No comments:

Post a Comment