Wednesday, October 30, 2013

• மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம். நடந்தது என்ன?

• மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம். நடந்தது என்ன?

“துக்ளக்” சோ போன்றவர்கள் ஈழப்போராளிகள் தமிழகத்தில் அராஜகம் செய்தனர் என்பதற்கு குறிப்பிடும் சம்பவங்களில் இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவமும் ஒன்றாகும். இது பற்றிய உண்மைகள் முழுவதும் இந்த சோ, ராம் போன்ற பார்ப்பண கும்பல்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியாது என்பதால் இவர்கள் தொடர்ந்தும் எழுதியும் ஏமாற்றியும் வருகின்றனர். எனவே இந்த சம்பவம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவது எனது கடமை என கருதுகிறேன்.

1984 ல் சென்னை விமான நிலையத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 40ற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் சிங்கள பயணிகளாயினும் தமிழகத்தில் நடந்த முதல் பாரிய வெடிகுண்டு சம்பவம் என்பதால் இது மக்கள் மத்தியில் கடும் அதிர்வை எற்படுத்தியிருந்தது.

அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். இதனை செய்தது ஈழ விடுதலை இயக்கம் என்பதை தெரிந்தும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான “தமிழீழ தேசிய இராணுவம்” ஆகும். எமது “பேரவை” இயக்கமும் தமிழீழ தேசிய ராணுவமும் ஜக்கியமாக சேர்ந்து இயங்கினோம். இந்தியாவில் எமது பாதுகாப்பு கருதி நாம் அவர்களது பெயரிலேயே செயற்பட்டோம்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து முதன் முதலாக வேதாரணியத்தில் கரைப்பொறுப்பாக இருந்த எமது தோழரும் ஈழத்திற்கு அனுப்ப வைத்திருந்த 100 பெட்டி வெடி மருந்தும் பொலிசாரால் கைப்பற்றப்ட்டது. அடுத்து ஒரு வாரத்தில் வெடிகுண்டு சம்பவத்தின் சூத்திரதாரியான தம்பாபிள்ளை மகேஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.

அவரை விசாரணை செய்யும்போது முழு உண்மைகளையும் பொலிசார் தெரிந்து கொண்டனர். அதாவது சென்னையில் இருந்து செல்லும் இலங்கை விமானத்தில் அந்த வெடி குண்டு அனுப்ப இருந்தது என்றும் கொழும்பில் அது இறங்கி சுமார் அரை மணி நேரத்தின் பின்பே குண்டு வெடிக்க இருந்தது என்றும் அதற்கு ஏற்ப நேர குண்டாக அது செய்யப்பட்டது என்பதையும் அறிந்து கொண்டனர். இங்கு மகேஸ்வரன் அவர்களின் நோக்கம் இலங்கையில் குண்டு வெடித்து இலங்கை அரசுக்கு பொருளாதார இழப்பு வரவேண்டும் என்பதேயொழிய சென்னை விமான நிலையத்தில் வெடிக்கவைப்பதோ அல்லது பயணிகளைக் கொல்வதோ நோக்கமாக இருக்கவில்லை.

மகேஸ்வரன் சென்னை விமான நிலையத்தில் பணி புரியும் ஒரு உயர் அதிகாரியிடம் இது பற்றி பேசி அவரும் தான் குண்டை கொழும்பிற்கு அனுப்ப உதவி செய்வதாக கூறி லஞ்சமாக பெரிய தொகை பணமும் பெற்றுக்கொண்டார். அந்த உயர் அதிகாரி கூறியபடி மகேஸ்வரனே விமான பயண ரிக்கட்டுடன் குண்டு அடங்கிய பயண சூட்கேசையும் கொண்டு சென்றார். ஆனால் அங்கு வாக்குறுதியளித்தபடி அந்த உயர் அதிகாரி நிற்காமல் ஏமாற்றிவிட்டார். இதனால் வேறுவழியின்றி சூட்கேசை அப்படியே விமான நிலையத்தில் வைத்துவிட்டு மகேஸ்வரன் திரும்பி வரவேண்டியேற்பட்டுவிட்டது.

வெளியே வந்த மகேஸ்வரன் உடனடியாக தொலைபேசி மூலம் சுங்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் விடயத்தை கூறியுள்ளார். அவர்களும் சென்று பெட்டியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வேறு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சென்றுவிட்டனர். அவர்கள் அஜாக்கிரதையாக இருப்பதை கண்ட மகேஸ்வரன் உடனே விமான நிலைய சுங்க துறையினருக்கு தொலை பேசி மூலம் குண்டு வெடிக்கப்போகிறது என்ற விடயத்தை கூறினார். சுங்க அதிகாரிகள் சென்று பெட்டியை தூக்கி பார்த்து “நல்ல கனமாக இருக்கிறது. அவ்வளவும் தங்க கட்டிகளாக இருக்கும,; ஆட்கள் எல்லாம் போன பின்பு எடுத்து நைசாக தமக்குள் பங்கு போட்டுக் கொள்ளலாம்” என்று ஒரு ஓரத்தில் பெட்டியை மறைத்துவைத்துவிட்டார்கள்.

இவ்வாறு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையாலும், தவறாலுமே சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடித்தது. இலங்கை விமானத்திற்கு ஏறவந்த சிங்கள பயணிகளும் கொல்லப்பட்டனர். இந்த உண்மைகள் யாவும் பொலிசார் மூலம் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே அதிகாரிகளை ஏசிவிட்டு மகேஸ்வரனை ஜாமீனில் விடுதலை செய்யும்படி அறிவுறுத்தினார்.

ஜாமீனில் வெளிவந்த மகேஸ்வரன் தொடர்ந்தும் இயங்கினார். ஆனால் அவரது இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டு அவரும் இயங்காமல் இருந்தவேளை 1997ம் ஆண்டு சென்னையில் அவர் கைது செய்யப்பட்டு இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கில் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இருந்தும் ஜெயலலிதா அரசு வேண்டுமென்றே உச்ச நீதிமன்த்தில் அப்பீல் செய்தது. அதிலும் அவர் விடுதலை செய்யப்படார். இறுதியாக அவர் 2010ம் ஆண்டவில் சிறையில் இருந்து விடுவிக்கபப்ட்டு ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டார்.

No comments:

Post a Comment