Wednesday, October 30, 2013

புளொட் தலைவர் உமா மகேஸ்வரன்.

“புலிகள் வென்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால் புலிகள் தோற்றால் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும்” - புளொட் தலைவர் உமா மகேஸ்வரன்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து புலிகள் இயக்கத்தினர் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஆனால் அதேவேளை இந்திய உளவுப்படையான “றோ” இரகசியமாக புளொட் இயக்கத்திற்கு ஆயுதங்களை வழங்கியது. இதை அறிந்த நாம் ஆச்சரியமடைந்தோம். எனவே இது பற்றி அறிவதற்காக புளொட் தலைவர் உமா மகேஸ்வரனையும் அதன் படைத்துறைச் செயலர் கண்ணன் அவர்களையும் சந்தித்தேன். அப்போது கண்ணன் “றோ” தந்த ஆயுதங்களைக்காட்டி புலிகளை சுட்டுக் கொல்லும்படி தந்திருக்கிறார்கள் என்றார்.

இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உதவி செய்ததாகவும் ஆனால் புலிகள்தான் தேவையில்லாமல் சண்டை பிடித்து தமிழ் மக்களுக்கு கெடுதல் விளைவித்துவிட்டார்கள் என்று இன்றும் நம்பும் அப்பாவிகள் நிறையப் பேர் எம் மத்தியில் இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசு புலிகளை அழிக்க நினைத்த போதே புலிகள் வேறு வழியின்றி தங்களைக் காப்பதற்காக இந்திய ராணுவத்தை எதிர்த்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

மேலும் அப்போதுதான் முகுந்தன் என்று அழைக்கப்படும் உமா மகேஸ்வரன் “புலிகள் வென்றால் அது தமிழ் மக்களின் வெற்றி அல்ல, ஆனால் அவர்கள் தோற்றால் அது தமிழ் மக்களின் தோல்வியாக அமையும்” என்றார். அவர் மட்டுமல்ல பின்னர் 1999ம் ஆண்டு புளொட் தலைவராக இருந்த மாணிக்கதாசனும் கொழும்பில் இதே வரிகளை என்னிடம் கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நிறைய செய்ததாகவும் அவர் இருந்திருந்தால் இந் நேரம் தமிழீழம் மலர்ந்திருக்கும் என்றும் கதை சொல்ல சிலர் தற்போது ஆரம்பித்துள்ளனர். எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில புலிகளை ஆதரிக்கவில்லை. புளொட் அமைப்பபையே ஆதரித்தார். அப்போது புளொட் அமைப்பு இரகசியமாக வெளிநாட்டில் இருந்து 150 ரைபிள் துப்பாக்கிகளை இறக்குமதி செய்தது. இது AK47 போன்று நவீனரக துப்பாக்கி இல்லையென்றாலும்கூட அதையும் பெற்றுக் கொள்ள எம.ஜி.ஆர் அரசு அனுமதிக்கவில்லை. அவரின் பொலிஸ் அதிகாரி மோகன்தாஸ் அந்த ஆயுதங்கள் எல்லாவற்றையும் பிடித்து அரசிடம் ஒப்படைத்தார். புளொட் அமைப்பு தன் சொந்த செலவில் பெற்றுக்கொள்ள முனைந்த துப்பாக்கிகளைப் பறித்த அதே இந்திய அரசு பின்னர் புலிகளை அழிக்கும்படி நவீன துப்பாக்கிகளை வழங்கியது.

புளொட் அமைப்பு மாலைதீவு எதிர்க்கட்சி தலைவரின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு உதவியது. அதன் மூலம் எதிர்காலத்தில் மாலை தீவை பின் தளமாக பயன்படுத்த முடியும் என புளொட் கணித்தது. ஆனால் அப்போது மாலை தீவு அரசு இலங்கை அரசிடமே உதவி கேட்டது. இந்திய அரசிடம் உதவி கேட்கவில்லை. ஆனால் இந்திய அரசு நுழைந்து புளொட் போராளிகளை கைது செய்ததோடு மாலை தீவு அரசைக் காப்பாற்றியது. இந்திய அரசு தமிழ் போராளிகளுக்கு தானும் உதவி செய்யாது. அவர்கள் வேறு இடத்தில் உதவி பெறவும் விடாது என்பதற்கு மாலைதீவு சம்பவம் ஒரு நல்ல உதாரணமாகும்.

புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் சண்டை நடந்தபோது பாகிஸ்தான் உளவுப்படை புலிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. அது மட்டுமல்ல தேவையான உதவிகள் வழங்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால் பிரபாகரன் எக் காரணம் கொண்டும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உளவுப்படையுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என தனது போராளிகளுக்கு மிகவும் கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார். இவ்வாறு யுத்த களத்திலும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்த புலிகளுக்கு இந்திய அரசு வழங்கிய பரிசே முள்ளிவாய்க்கால் அழிவும் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களின் படுகொலையும்.

பின்னர் உமா மகேஸ்வரன் கொழும்பில் வைத்து கொல்லப்பட்டார். அவர் இந்திய உளவுப்படைக்கு ஒத்துழைக்க மறுத்தமையினால் அவரது கொலையின் பின்னனியில் இந்திய உளவுப்படைகளே இருந்துள்ளன .உமா மகேஸ்வரனைக் கொன்ற நபர்களுக்கு இந்திய தூதுவராலயமே பாதுகாப்பு வழங்கியது. அந் நபரை தமிழ்நாட்டில் வைத்து பராமரித்து வந்தது றோ அமைப்பு. அவரை தமிழ்நாடு அரசு தெரியாமல் கைது செய்து மேலூர் சிறப்பு முகாமில் அடைத்தபோது அடுத்தநாளே “றோ” அவரை விடுவித்து பெங்களுர் அழைத்து சென்றுவிட்டது. இதிலிருந்தே இந்திய உளவுப்படையின் பங்களிப்பை உணரமுடியும்.

கண்ணன் படைத்துறை செயல் அதிபராக இருந்தாலும் அவர் அரசியல் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். குறிப்பாக அவர் இந்தியாவில் பல புரட்சிகர சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் பல அமைப்புகளுக்கு எம் மூலம் நிறைய உதவிகள் செய்தார். குறிப்பாக பைப் வெடிகுண்டுகள் அவர்களது ஆதரவாளரான திருச்சி பா.ஜ.க கவுன்சிலர் ஒருவரது பட்டறையிலே செய்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து தந்தார். அவர் இலங்கைக்கு திரும்பு முன்னர் தமது தோழர்கள் வசந், விஜயன் போன்றவர்களையும் பல ஆதரவாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

புளொட் வானொலி பொறுப்பாளராக இருந்த சிவா சின்னப்பொடி மூலம் கேரள புரட்சிகர சக்திகளின் தொடர்பு கிடைக்க வழி செய்தார். கண்ணன் தமிழரசன் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அதேபோல் தோழர் தமிழரசனும் அவரை சந்தித்து பேச மிகவும் விரும்பினார். ஆனால் துரதிருஸ்டவசமாக அவர்கள் விருப்பம் நிறைவேறவில்லை. இருவரும் மிக குறுகிய கால இடைவெளியில் கொல்லப்பட்டுவிட்டனர்.

No comments:

Post a Comment