Wednesday, October 30, 2013

• தொடரும் பொலிஸ் கொலைகளை நிறுத்துவது யார்?

• தேவாரம் அப்பாவிகளை தர்மபுரியில் கொன்றார்.
• சைலேந்திரபாபு தோழர் நாகராசனைக் கொன்றார்.
• கியூ பிராஞ் தோழர் தமிழரசன் மற்றும் 4 தோழர்களை கொன்றனர்.
• தொடரும் பொலிஸ் கொலைகளை நிறுத்துவது யார்?

கொடைக்கானல் டி.வி டவர் வெடி குண்டு வழக்கில்(1991) நான் கைது செய்யப்பட்டதால் 14 நாட்களுக்கு ஒரு முறை கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வந்தேன். மதுரை சிறையில் இருந்தபோதும் அதன் பின்னர் வேலூர் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த வேளையிலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இவ்வாறுதான் ஒரு ஏட்டு மற்றும் இரு காவலர்கள் காவலுடன் என்னை பேரூந்தில் அழைத்துச் சென்றனர். (அவ்வாறு அழைத்து செல்லும்போது எடுத்த படமே கீழே தரப்பட்டுள்ளது). ஆனால் திடீரென ஒருநாள் என்னை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவன் எனக் குறிப்பிட்டு ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஜீப் வண்டிகளில் சுமார் 30 பொலிசார் காவலுடன் கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நான் “பேரவை” இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது பொலிசாருக்கு நன்கு தெரியும். அதுமட்டுமல்ல அவர்கள் தந்த குற்றப்பத்திரிகையிலும் நான் “பேரவை” இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றே குறிப்பிட்டுள்ளனர். அப்படியிருக்கும்போது திடீரென என்னை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவன் எனக் குறிப்பிட்டதோடல்லாமல் அதிக காவலுடன் அழைத்து சென்றது எனக்கும் எனது தோழர்களுக்கும் சந்தேகத்தைக் கொடுத்தது.

எமது சந்தேகம் அதிகமானதற்கு முக்கிய காரணம் சம்பந்தமேயில்லாமல் எஸ்.பி சைலேந்திரபாபு எனக்கு காவலுக்கு வந்ததாகும். அதற்கு முதல் வாரம்தான் திண்டுக்கல்லில் தோழர் நாகராசன் சைலேந்திரபாபுவினால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோழர் நாகராசன் தமிழரசன் போல் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர்களில் ஒருவர். அவரை இரகசியமாக முதல் நாளே கைது செய்த இந்த சைலேந்திரபாபு அடுத்த நாள் சுட்டுக் கொன்றுவிட்டு “மோதலில் பலி” என அறிக்கை விட்டிருந்தார்.

“குட்டி தேவாரம்” என அழைக்கப்படும் இந்த எஸ்.பி சைலேந்திரபாபு தேவாரம் போல் சட்டவிரோத கொலைகள் செய்வதில் பிரபல்யம் பெற்றவர். எனவேதான் அவர் திடீரென எனக்கு காவலுக்கு வந்ததும் என்னையும் கொலை செய்யவே வந்திருப்பதாக தோழர்கள் சந்தேகம் கொண்டனர். இதனால் தோழர்களின் ஆலோசனைப்படி எனக்கு இவரால் ஆபத்து என்றும் எனக்கு பாதுகாப்பு தருமாறு கோரி கொடைக்கானல் நீதிபதியிம் மனுக் கொடுத்தேன். மனுவைப் பெற்றுக்கொண்ட நீதிபதியோ இது குறித்து விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் தான் எனது மனுவை உயர்நீதி மன்றத்திற்கு அனுப்புவதாக கூறினார். ஆனால் எனது தோழர்களோ தாங்கள் என்னை அந்த அதிகாரி அழைத்து செல்ல விடமாட்டோம் என ஒன்றாக கோசம் எழுப்பி நீதிபதியை தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்கள்.

நிலைமையை புரிந்து கொண்ட நீதிபதி என்னை திருப்பி அழைத்து செல்ல முடியாதவாறு கொடைக்கானல் கிளைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். வேலூரில் இருந்து அழைத்து வந்த காவல் துறை அதிகாரிகளுக்கோ என்னை மீண்டும் வேலூரில் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். கொடைக்கானல் கிளைச் சிறை அதிகாரிகளோ என்னை அங்கு வைப்பதற்கு பாதுகாப்பு இல்லை என்று எற்க மறுத்துவிட்டார்கள். காவல் துறை அதிகாரிகள் சென்னை மதுரை என்று எல்லா இடமும் பேசிவிட்டு இறுதியாக என்னிடமே வந்து இதை தீர்த்துவைக்கும்படி கேட்டனர்.

நான் தோழர்களிடம் கலந்துபேசிவிட்டு சைலேந்திரபாபு நீதிபதியிடம் எனது உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதாக வாக்குறுதியளித்தால் நான் Nவுலூருக்கு திரும்பிவர சம்மதிப்பதாக கூறினேன். நாம் கேட்டுக்கொண்டபடி வேறு வழியின்றி சைலேந்திரபாபு நீதிபதியிடம் வாக்குறுதியளித்தார். அதன்படி என்னை வேலுர் சிறப்பு முகாமில் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

இங்கு இதை நான் நினைவுகூருவது ஏனெனில் முதலாவது நாகராசன் என்ற தோழர் சைலேந்திபாபுவினால் சட்டவிரோத மாக சுட்டுக் கொல்லப்பட்டதை யாவரும் அறிய வேண்டும். அதேபோல் எனக்கும் நடக்கவிடாமல் எனது தோழர்கள் என்னைக் காப்பாற்றியதை நான் நன்றியுடன் நினைவு கூரவேண்டும்.

தேவாரம் தர்மபுரியில் பல அப்பாவிகளை நக்சலைட்டு எனக் கொன்றார். அதன் பின் குட்டி தேவாரம் சைலேந்திரபாபு தோழர் நாகராசனைக் கொன்றார். இடையில் தோழர் தமிழரசன் மற்றும் ஜந்து தோழர்கள் பொலிசாரின் சதியில் கொல்லப்பட்டனர். தொடரும் இந்த சட்ட விரோதக் கொலைகளுக்கு முற்றுப்பள்ளி வைப்பது யார்? இந்த அரச பயங்கரவாதம் எப்போது நிறுத்தப்படும்? மக்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்!

No comments:

Post a Comment