Sunday, June 30, 2013

பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார்

என்றும் நினைவில் கொள்வோம்!

1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் இலங்கைப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள். அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் இலங்கை தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் அவர்கள் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை. அவர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம்.

நான் அய்யா அவர்களுடன் அதிகம் பழக வில்லை. அவருடைய மகன் பொழிலன் அவர்களுடனே நான் அதிகம் பழகியிருக்கிறேன். பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் அய்யா அவர்களுடன் பேசியிருக்கசிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன். அவ்வேளைகளில் இலங்கைப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார். அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்பொது கண்டு கொண்டேன். ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார்.

தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார். அப்போது அவர் அய்யா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாடு விடுதலையில் அய்யா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன்.

அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாம். அரசியலில் பதவிகள் பெற்றிருக்கலாம் என்றெல்லாம் அவருடன் பழகிய பலர் கூறக் கேட்டிருக்கிறேன். இது எந்தளவு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் நினைத்திருந்தால் இலங்கைப் போராளிகளை வைத்து நிறைய சம்பாதித்திருக்க முடியும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். ஏனெனில் அவரிடம் சென்று பழகாத போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர். அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள்.

பிரபாகரன், உமா மகேஸ்வரன் மட்டுமல்ல முதல் பெண் போராளி என்று அழைக்கப்படும் ஊர்மிளாவும் அவர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். ஊர்மிளா அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் அய்யா அவர்களே தனது வீட்டில் வைத்து பாதுகாத்து அனுப்பினார் என்பது மிக முக்கிய உதவியாகும்.

அய்யா அவர்களின் சில அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எனக்கு உடன்பாடு இல்லாவிடினும் அய்யா அவர்கள் இலங்கை தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை. இலங்கைத் தமிழர்கள் அய்யா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.




No comments:

Post a Comment