Sunday, June 30, 2013

தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!

அரசே!
தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!

நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும, சமூக விடுதலையில் அக்கறை கொண்டவருமான தோழர் தேவதாசன் அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புலிகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் தேவதாசன் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

பல கொலைகள் புரிந்த தளபதி கருணா அமைச்சராக இருக்கிறார்.
வெடிகுண்டுகள் வாங்கிக் கொடுத்த கே.பி அரச விருந்தாளியாக வலம் வருகிறார்.
தயா மாஸ்டர் மீது எந்த வழக்கும் இன்றி அரசு வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
பெண்கள் பிரிவு பொறுப்பாளர் தமிழினியும் கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் புலிகளுக்கு உணவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மலையக மாது ஒருவர் விடுதலை செய்யப்படாமல் சிறையிலே இறந்துள்ளார். அதுபோல் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தேவதாசன உட்பட பலர் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்ட்டிருக்கிறார்கள்.

தளபதிகளுக்கு விடுதலை. அப்பாவி தொண்டர்களுக்கு தண்டனை. இதுதான் அரசின் புனர்வாழ்வு கொள்கையா? அல்லது இதுதான் மகிந்த சிந்தனையா?

தோழர் தேவதாசன் அவர்கள் தன்மீதான வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு கோரி பல முறை உண்ணாவிரதம் நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொருமுறையும் அரச அதிகாரிகளால் வாக்குறுதி வழங்கப்படுகிறதேயொழிய இன்னும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.

இவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிக காலத்தை சிறையில் கழித்துவிட்டபடியால் விடுதலையாகும் நோக்கத்தில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஒத்துக்கொள்ள இவர் முன்வந்தபோதும்கூட அரசு வேண்டுமென்றே இவரது வழக்கை விசாரணை செய்யாமல் இழுத்தடித்து வருகிறது.

1979களில் வாசுதேவநாணயக்காரவை கரவெட்டிக்கு அழைத்து வந்து கருத்தரங்கு நடத்தியவர். இப்போது வாசுதேவா அமைச்சராக இருக்கிறார். அவர் ஏன் இவரின் விடுதலைக்கு வழி கோல மறுக்கிறார்?

தேவதாசனுக்கு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன தலைவர் பதவியை பெற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி யினர். அவர்களின் தமிழ் உறுப்பினர் சந்திரசேகர் இவரின் நெருங்கிய நணபர். அவர் கூட ஏன் மௌனமாக இருக்கிறார்?

புதிய ஜனநாயக்கட்சி மற்றும் சிறீதுங்காவின் சோசலிசக் கட்சிகளின் சார்பாக வடபகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர் தேவதாசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தளவு பிரபல்யம் மிக்க ஒருவருக்கே இந்த கதி என்றால் பிரபல்யம் அற்ற அப்பாவிகளின் கதி என்ன?

அடைத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரியதால் லலித், குகன் ஆகியோர் இரகசியமாக கடத்தி செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment