Wednesday, January 29, 2014

சந்திப்பும் கலந்துரையாடலும்.

• தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் நடைபெற்ற சந்திப்பும் கலந்துரையாடலும்.

கடந்த 25.01.2014யன்று லண்டன் ஈஸ்ட்காமில் தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற்றது. மாலை 4.00 மணி இரவு 8.00 மணி வரை நிகழ்வுகள் நடைபெற்றன.

முதலாவது அமர்வாக அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில் “நவதாராளவாத பொருளாதாரமும் இலங்கையும்” என்னும் தலைப்பில் உரையாடல் நடைபெற்றது. அரசியல் செயற்பாட்டாளர் சிறீ அவர்கள் உரையாற்றினார். அவர் நோர்வேயில் இருந்து வந்திருந்தார்.

சிறீ அவர்கள் முதலில் நவதாராளவாத பொருளாதாரம் என்றால் என்ன என்று விளக்கினார். பின்னர் அது இலங்கையில் எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பதை ஜே.ஆர் காலத்தில் இருந்து விளக்கினார். அவர் உதாரணங்களினூடாகவும் தேவையான அளவு புள்ளி விபரங்களுடன் ஒரு சிறப்பான உரையாடலை நிகழ்த்தினார். அவரின் உரையை தொடர்ந்து பார்வையாளர்களின் கருத்து பரிமாறல்கள் இடம் பெற்றன.

நவதாரளவாத பொருளாதாரம் குறித்து மேலதிகமாக அறிய விரும்புவோர் “போராட்டம்” இதழ்களில் அது பற்றிய கட்டுரைகளை படிக்கலாம் என்றும் சிறீ அவர்கள் தனது உரையின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாவது அமர்வாக மு.நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் இருந்து வந்திருந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் உரையாடல் நடைபெற்றது. யுவன் சந்திரசேகர் பல கவிதைகள், சிறுகதை, நாவல் என்பன எழுதியுள்ளார்.

எழுத்தாளர் யுவன் அவர்கள் தனது உரையில் தனது எழுத்து வரலாறு பற்றி கூறினார். தனது எழுத்து மற்றவர்களில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கிறது என்பதையும் கூறினார். இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதில் அளித்து பேசினார்.

No comments:

Post a Comment