Tuesday, April 30, 2013

40வது இலக்கிய சந்திப்பு


40வது இலக்கிய சந்திப்பு லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று முதலாவது நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. வழக்கம்போல் சல சலப்புகளும, கல கலப்புகளும் கொண்ட சந்திப்பாக நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறுவது ஆச்சரியம் அல்ல மாறாக இப்படி நடக்கவில்லையென்றால்தான் ஆச்சரியம் என்று இத்தகைய சந்திப்புகளில் தொடர்ச்சியாக பங்குபற்றி வரும் நண்பர் ஒருவர் கூறினார்.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த சாத்திரி அவர்கள் இலக்கிய சந்திப்பில் பேச இன்று வந்திருந்தார். அவ்வாறு அவர் பேச முன்வந்தது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. மாறாக தாங்களும் மாற்றுக் கருத்தாளர்கள் என்றும் ஜனநாயகத்தற்காக குரல் கொடுத்து வருவதாக கூறும் சிலர் அவரை பேச விடாமல் செய்ததுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

புலிகள் மாற்றுக் கருத்திற்கு இடங்கொடாமல் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டும் இவர்கள், புலிகள் அமைப்பைச் சேர்ந்த சாத்திரி என்பவரை பேசவிடாமல் நடந்து கொண்டது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.

“ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்” என்கிறோம். மாற்று கருத்து அவசியம் என்கிறோம். அதற்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்கிறோம். ஆனால் எமக்கு எதிராக கருத்துகள் வரும்போது நாமும் சர்வாதிகாரமாக அடக்க முனைகிறோம்.

நல்ல வேளையாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் பௌசர் அவர்கள் இது குறித்து வருத்தம் தெரிவித்ததுடன் அனைவரின் கருத்துகளுக்கும் தொடர்ந்து இடம் அளிக்கப்படும் என உறுதியளித்தது ஆறுதலாக இருந்தது.

இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் இப்படி நடக்க முனையாது உண்மையாகவே கருத்துச் சுதந்திரத்தை மற்றவர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment