Tuesday, April 30, 2013

சிங்கள மக்கள் எல்லாம் காமுகர்கள் எனில் இன்று அவர்கள் மத்தியில் பல லட்சம் தமிழ் மக்கள் எப்படி வாழுகிறார்கள்?


சிங்கள இரணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்களின் படங்களை பிரசுரித்து இதனை செய்தவர்களுடன் சேர்ந்து வாழ முடியுமா? அவ்வாறு சேர்ந்து வாழும்படி சொல்பவர்கள் தமிழ் இன துரோகிகளே என்று ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் பின்வரும் எனது சந்தேகங்களை தீர்த்து வைக்கும்படி கேட்கிறேன்.

(1)இலங்கை ராணுவமும் சிங்கள மக்களும் ஒன்று என்று கூறமுடியுமா? சிங்கள மக்கள் எல்லாம் காமுகர்கள் எனில் இன்று அவர்கள் மத்தியில் பல லட்சம் தமிழ் மக்கள் எப்படி வாழுகிறார்கள்?

(2) இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை சிங்கள மக்களும் கண்டித்திருக்கிறார்களே. நிமால் பெர்ணாண்டோ என்ற சிங்கள பெண்மனியும் சிறில்துங்க என்ற சிங்கள இடதுசாரியும் சென்னையில் வந்து இது குறித்து பேசியது அனைவரும் அறிந்ததே. அண்மையில் ஆயிரக்கணக்கான சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும்படி போராடியிருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் இலங்கை ராணுவம் போன்றவர்களா?

(3)இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை சிங்கள மக்கள் கண்டிக்கவில்லை எனவே இலங்கை ராணுவம் சமம் சிங்கள மக்கள் என்று கூறுவதாயின் இந்திய ராணுவம் இலங்கையில் செய்த படுகொலைகள், கற்பழிப்புகளை வைத்து இந்திய ராணுவம் சமம் இந்திய மக்கள் என்று யாராவது கூற முனைந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

(4) 1971ல் ஒரு அழகிய இளம் பெண்ணை கதிர்காமம் என்னும் இடத்தில் ஒரு அதிகாரியும் 4 ராணுவ வீரர்களும் கற்பழித்து பின் நிர்வாணமாக்கி தெருவில் கட்டி இழுத்து மக்கள் மத்தியில் சுட்டார்கள். அந்த பெண் குற்றுயிராக துடித்து தண்ணீர் கேட்ட போதும் யாரும் பயத்தில் கொடுக்க முன்வரவில்லை. இந்த பெண் ஒரு சிங்கள இனத்தவள்.ஜே.வி. பி இயக்கத்தை சேர்ந்தவள். இதை செய்தது இலங்கை இராணுவத்தை சேர்ந்த சிங்களவர்கள். இது குறித்து என்ன கூறுவீர்கள்?

(5)இதே இலங்கை ராணுவம் 1971ல் நான்காயிரம் சிங்கள இளைஞர்களையும் 1989ல் அறுபதினாயிரம் சிங்கள இளைஞர்களையும் சுட்டுக் கொன்றது. பாதி எரிந்த நிலையில் உடல்களை ஆற்றில் மிதக்க விட்டது. சிங்கள மக்கள் சமம் சிங்கள ராணுவம் எனில் அவர்கள் எப்படி தமது இனத்தவர்களையே சுட்டுக்கொன்றார்கள்?

(6) இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக யார் போராடினாலும் அது தமிழர்களாக இருந்தாலும் சரி அல்லது சிங்களவர்களாக இருந்தாலும் சரி அவர்களை ஈவிரக்கமின்றி இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்லும். அதனால்தான் அதற்கு இந்தியா உட்பட எல்லா நாடுகளும் பயிற்சி, ஆயுதம் எல்லாம் கொடுத்து ஆதரவளிக்கின்றன. எனவே இவ்வாறு அனைவருக்கும் பொது எதிரியான இலங்கை ராணுவத்திற்கு எதிராக அனைத்து மக்களும் ஜக்கியமாக சேர்ந்து போராட வேண்டும் என்று புரட்சிவாதிகள் கோருவது எப்படி தவறாகும்?

No comments:

Post a Comment