Tuesday, May 28, 2013

தொடரும் துக்ளக்“சோ”வின் தமிழர் விரோத கருத்துகள்

• தொடரும் துக்ளக்“சோ”வின் தமிழர் விரோத கருத்துகள்

துக்ளக் “சோ” நெடுங்காலமாக தமிழர்களுக்கு விரோதமான கருத்துகளை பரப்பி வருகின்றமை யாவரும் அறிந்ததே. அதற்கு அவருடைய பார்ப்பணிய பாசமே காரணம் என்றாலும் ஈழத்தழிழர் படுகொலையிலும் அவர் தனது விசக் கருத்துக்களை பரப்ப முனைகிறார். அண்மையில் அவரது குழுவைச் சேர்ந்த சிலர் இலங்கைக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை பேட்டி கண்டு உண்மையை வெளிப்படுத்துவதாகக் கூறி திட்டமிட்டு பொய்களை பரப்ப முனைகிறார்கள்.

துக்ளக் செய்திகளை படிப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40ஆயிரம் தமிழர்களும் தாங்களே தங்களை சுட்டுக் கொன்றார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு புலிகளே காரணம் என்ற முடிவிற்கே வரவேண்டும். அதுமட்டுமல்ல இலங்கை ராணுவம் மிகவும் கட்டுப்பாடான நல்ல ராணுவம். அது தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவே அங்கு இருக்கிறது. தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற கூற்று சில பெண்களின் பையித்தியக்கார கூற்று என்றே நம்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் வாடிப்பட்டி என்னும் இடத்தில் எமது பயிற்சி முகாம் இருந்தது. அப்போது எமது பயிற்சியை புதினம் பார்க்க வந்த ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனிடம் எம்.ஜி. ஆர் இறந்துவிட்டார் என்று கூறியபோது அவன் அதை நம்பவில்லை. மாறாக தான் நேற்றும் தியேட்டரில் படத்தில் அவரைக் கண்டதாக கூறினான். எனவே அச் சிறுவனின் அறியாமைக் கூற்றை வைத்துக்கொண்டு தமிழ் நாட்டு மக்கள் இன்னும் எம்.ஜி. ஆர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் இறந்துவிட்டார் என்பது கூட தெரியாமல் இருக்கிறாரகள் என்றும் எழுதினால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள் தனமானது இலங்கை தமிழ் மக்களின் கருத்துகள் என்று துக்ளக் பரப்பும் செய்திகள் ஆகும்.

தமிழர் பகுதிகளில் அரசின் உதவியோடு திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. இதை அரசை ஆதரிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் துக்ளக் குழுவோ அப்படி ஒரு குடியேற்றம் நிகழவில்லை என்றும் இது புலத்தில் உள்ள புலிக் குழுக்களின் பொய்ப்பிரச்சாரம் என்று மகிந்த ராஜபக்சவிற்கு வக்காலத்து வாங்குகிறது. இதற்கு பரிகாரமாக எத்தனை பெட்டி பரிமாறப்பட்டது என்பது துக்ளக் சோ விற்கே வெளிச்சம்.

1982ல் இலங்கைக்கு விஜயம் செய்த துக்களக் சோ அவர்கள் கொழும்பில் ஜே.ஆர் ஜெயவர்த்தனவை சந்தித்து பரிசுகள் பெற்றது அனைவரும் அறிந்ததே. அன்றுமுதல் அவர் தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து வருவது மட்டுமல்ல காட்டிக் கொடுத்தும் வருகிறார். அவர் அப்போது கரவெட்டி என்னும் ஊருக்கு விஜயம் செய்து இதே கருத்தை தெரிவித்தபோது மக்களின் கடும் எதிர்ப்பினால் பாதியிலேயே ஓட்டம் பிடித்தார். அதன் பின் அவருக்கு மதுரையில் அசிட் வீசப்பட்டது. ஆனால் அவர் இன்னும் திருந்தவில்லை. தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு விரோதமாகவே செயற்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு விரோதமாக கருத்துக்களை பரப்பி வருகிறார். அரசியல் தரகு செயவதே அவரது வேலை. அதனால் ஆட்சிக்கு வரும் அரசுகள் எல்லாம் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன. ஆனால் தனது சுயநலத்திற்காக ஒரு இனத்தை காட்டிக்கொடுக்கும் அவரது துரோகத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

No comments:

Post a Comment