Saturday, January 31, 2015

லண்டனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா!

லண்டனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா!
தமிழக பதிப்பகங்களின் சுரண்டலுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி!
“எழுநா” வின் முயற்சிகள் நம்பிக்கையளிக்கின்றன. பாராட்டுகள்!
லண்டனில் ஈஸ்ட்காமில் இன்று (25.01.2015) மாலை 5 மணியளவில் “எழுநா” வின் 10 புத்தகங்கள் அறிமுக விழா நடைபெற்றது.
இன்றைய இண்டர்நெட் யுகத்தில் அச்சுப் புத்தகங்கள் விரும்பப்படாது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் லண்டனில் அதுவும் ஒரே நேரத்தில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டிருப்பது எதிர்வரும் காலங்களிலும் அச்சு நூல்களுக்கு மதிப்பு இருக்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
ஈழத்து எழுத்தாளர்கள் தமது புத்தகங்களை வெளியிடுவதற்கு தமிழக பதிப்பக வியாபாரிகளை நம்பியிருக்கும் நிலையில், தமிழக பதிப்பக வியாபாரிகளால் சுரண்டப்படும் நிலையில், அதற்கு எதிரான “எழுநா” வின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரிய பணியாகும்.
ஈழத்து எழுத்தாளர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை புத்தகமாக்குவதற்கு தமிழக வியாபாரிகளிடம் தமது எழுத்தை மட்டுமன்றி பெருமளவு பணத்தையும் கொடுத்துவிட்டு நீண்டகாலமாக காத்திருந்து ஏமாற்றமடைந்து வருவதை “எழுநா”வின் வருகை முற்று புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
“எழுநா” ஒரே நேரத்தில் 10 புத்தகங்களை வெளியிட்டது மட்டுமன்றி அந்த எழுத்தாளர்களுக்கு ராயல்டி பணமும் கொடுத்துள்ளனர். அது மட்டுமன்றி 3 வருட காப்புரிமை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சலுகை என பல பயன் மிக்க ஏற்பாடுகளையும் “எழுநா” செய்துள்ளமை மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக “எழுநா” தனது கடந்த வருட கணக்கு வழக்கையும் பகிரங்கமாக முன்வைத்துள்ளமை மற்ற அமைப்புகளுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.
இது லாப நோக்கற்ற சமூக அக்கறையுள்ளவர்களின் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து உதவ வேண்டும்.
“எழுநா” வின் வளர்சியானது நல்ல புத்தகங்களை மலிவான விலையில் கிடைக்க வழி செய்வதுடன் ஈழத்து தமிழ் ஏழுத்தாளர்களுக்கு நியாயமான பணமும் கிடைக்க வழி செய்கிறது. முக்கியமாக தமிழக பதிப்பக வியாபாரிகளின் சுரண்டடலுக்கு முடிவு கட்டுகிறது.
“எழுநா” வின் பணி பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

No comments:

Post a Comment