Saturday, January 31, 2015

இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?

அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயம்.
அப்பாவி மக்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்பாவி மக்களுக்கு ஒரு நியாயமும் அரசியல்வாதிகளுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
323 ரெலிபோன் இணைப்புகளை சன் டிவிக்கு முறைகேடாக பயன்படுத்தியதில் 400 கோடி ரூபா பெறுமதியான ஊழல் செய்த தயாநிதி மாறன் இன்னும் கைது செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
2ஜி மூலம் பல லட்சம் கோடி ஊழல் செய்த கனிமொழி மற்றும் ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவும் இல்லை.
66 கோடி ரூபா மக்கள் பணத்தைச் சுருட்டிய ஜெயா அம்மையாருக்கு 4 வருடம் தண்டனை வழங்கியும்கூட 21 நாளில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை அளித்துள்ளது.
ஆனால் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு விடுதலையளிக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் நிரபராதி பேரறிவாளன் விடுதலையை வேண்டுமென்றே தாமதம் செய்கிறது.
மதுரையில் கைது செய்யப்பட்ட 6 தமிழ் இன உணர்வாளர்கள் 300 நாட்களுக்கு மேலாக மதுரை சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் இந்த தலைவர்கள் போல் ஊழல் செய்யவில்லை. மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை. மாறாக தமிழின விடுதலையை விரும்பியதே அவர்கள் செய்த தவறு.
மக்கள் பணத்தை திருடியவர்களுக்கு ஜாமீனில் விடுதலை. ஆனால் தமிழ் இன உணர்வாளர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறை.
இதுதான் இந்திய நீதியா?

No comments:

Post a Comment