Saturday, August 10, 2013

ஜே.வி.பி தலைவர் சோமவம்ச அவர்களுக்கு!

ஜே.வி.பி தலைவர் சோமவம்ச அவர்களுக்கு!

தோழர் ராமலிங்கம் சந்திரசேகர் மூலம் ஜே.வி.பி யின் “தேசியப் பிரச்சனை தீர்ப்பதற்கான அணுகுமுறை” அறிக்கை கிடைக்கப் பெற்றேன். ஏனக்கு அந்த அறிக்கை அனுப்பியமைக்கும் மற்றும் தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அறிக்கை வெளியிட்டமைக்கும் என் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிக்கை பற்றி எனது கருத்தை தெரிவிப்பதற்கு முன்னர் கருத்தை தெரிவிப்பதற்கான எனது தகுதியை பற்றிக் கூறிவிடுவது நல்லது என நம்புகிறேன். நான் இதுவரை தமிழீழ கோரிக்கையை ஆதரித்தவன் அல்ல. ஜக்கிய இலங்கைக்குள் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க விரும்புபவன். ஜே.வி.பியுடன் தொடர்பு வைத்து ஜக்கியத்திற்கு முயன்றதால் 1987 வெலிக்கடை சிறைவாசலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு இராணுவத்தால் கொல்லப்பட்ட எனது தோழர்கள் பாஸ்கரன், டிஸ்கோ போன்றவர்கள் பேரால் உங்களிடம் கேட்கிறேன்.

ஜே.வி.பி ஒரு இனவாதக் கட்சி அல்ல என்பது உண்மைதான். அதனால் ஒரு தமிழனின் நிழலுக்குக் கூட தீங்கு இழைக்கப்படவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் புலிகளை அழிக்க ஜே.வி.பி யுத்தத்திற்கு வழங்கிய ஆதரவு 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலைக்கும் காரணமாக இருந்துள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு சம உரிமை உள்ளதாக உங்கள் அறிக்கையில் எவ்வளவுதான் சொல்ல முனைந்தாலும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாதவரை அவர்கள் உங்களை நம்பப்போவதுமில்லை. உங்களை எற்றுக்கொள்ளப் போவதுமில்லை.

உங்களுக்கு நான் சொல்வதை விட உங்கள் முன்னாள் தலைவர் தோழர் சண்முகதாசன் கூறிய பின்வரும் வார்த்தைகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

“தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடராக ஒரு நிலப்பரப்பில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அவர்களுக்கு சுய நிர்ணயத்திற்கான உரிமை உண்டு என்பதையும் ஏற்க மறுக்கின்றமையே இன நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டாலொழிய இன்றைய தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எதுவுமே இருக்க முடியாது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர்தான் அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள் ஒரு தனிநாட்டை அமைப்பதற்காக அச் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதை தமிழ் பேசும் மக்களின் மொழி வழிப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஒரு சமஸ்டியாகவோ அல்லது பூரண பிரதேச சுயாட்சியாகவோ பிரயோகிக்கும்படி கேட்டுக் கொள்வதற்கான அருகதையைக் கொண்டிருக்க முடியும்.”

எனவே தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அதன் மூலம் தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தைக் கட்டத் தவறினால் அது எதிரிகளான இலங்கை, இந்திய அரசுகளுக்கு செய்யும் உதவியாகவே இருக்கும். எனவே வரலாறு ஜே.வி.பியை ஒரு எதிர் புரட்சிகர சக்தியாகவே இனங் கண்டு கொள்ளும்.

• தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் மூலம்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

No comments:

Post a Comment