Saturday, August 10, 2013

மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சி தமிழின விரோத கட்சியா?

மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சி தமிழின விரோத கட்சியா?

பா.ஜ.க வும் காங்கரசும் இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவை. அவை தமிழின விரோத கட்சிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியையும் அவ்வாறு கூறலாமா?

நான் இவ்வாறு கேட்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் சிலருக்கு எரிச்சலாகவும் இருக்கலாம். ஆனால் தயவு செய்து உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவில் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நக்சல்பாரி இயக்கங்களையே புரட்சிகர இயக்கங்களாக கருதுகிறேன். பாராளுமன்ற பாதையை தேர்ந்தெடுத்து புரட்சியைக் காட்டிக்கொடுத்த மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியை ஒரு திரிபுவாதக் கட்சியாகவே பார்க்கிறேன்.

மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் அதன் கொள்கைகளும் புரட்சிக்கு விரோதமான திரிபுவாத்தை முன்வைக்கின்றன. ஆனால் அதில் இருக்கும் லட்சக் கணக்கான உறுப்பினர்கள் பாட்டாளிகள். நாம் வென்றெடுக்கப்பட வேண்டிய தோழர்கள்.

தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்பதற்காக மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சி ஒரு தமிழின விரோதக் கட்சி எனக் குறிப்பிடுவதாயின் அது தவறு ஆகும். ஏனெனில் இலங்கையிலே தமிழீழத்தை முன்வைத்த பல தமிழ் கட்சிகளே இன்று தமிழீழத்தை கைவிட்டு விட்டன.

தமிழர்களின் அதிக ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளரான விக்கினேஸ்வரன் அவர்கள் தான் தமிழீழத்தை கைவிட்டுவிட்டதாகவும் ஜக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்விற்கு முயற்சி செய்யப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனை தமிழகத்தில் தமிழீழ விரும்பிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமாயின் அது இந்திய இலங்கை புரட்சிகர சக்திகளின் ஜக்கியமான போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்று நான் கருதுகிறேன். ஆனால் இன்றைய நிலையில் இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி ஏன் சர்வதேச ரீதியிலும்கூட புரட்சிகர சக்திகள் மிகவும் பலவீனமான நிலையிலே உள்ளனர்.

எனவே இன்றைய நிலையில் இலங்கை தமிழர்கள் ஒரு சுயாட்சி தீர்வைப் பெறுவதற்கு மாநிலக் கட்சிகளான தி;மு.க வினாலோ அல்லது அ.தி.மு.க வினாலோ எந்த விதத்திலும் உதவ முடியாது. அவர்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அவர்களால் மத்திய அரசை நிர்பந்திக்க கூடிய பலம் இல்லை என்பதே உண்மை. ஆனால் மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சி முனைந்தால் இதனை சாதிக்க முடியும்.

மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சி ஒரு அகில இந்திய கட்சி மட்டுமல்ல அவர்களால் மத்திய அரசிலும் ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். அதுமட்டுமல்ல அவர்களால் இலங்கையிலும் ஜே.வி.பி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மத்தியிலும்; தமது செல்வாக்கை செலுத்த முடியும். சர்வதேச ரீதியிலும் கியூபா வெனிசுலா மற்றும் வடகொரியா நாடுகளையும் தமக்கு ஆதரவாக திருப்ப முடியும். இன்று உலகில் மிகப்பெரிய கம்யுனிஸ்ட் கட்சிகளில் மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியும் ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் மதுரை சிறையில் (1991)அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது மாக்சிய கம்யுனிஸ்ட் கடசியை சேர்ந்த ஆயுள்சிறைவாசி புரட்சி மணி என்பவர் நிறைய உதவி புரிந்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு காவலர் அவரும் மாக்சிய கம்யுனிச கட்சியை சேர்ந்தவர். அவர் எமக்கு ஆதரவாக இருந்ததுடன் பல உதவிகளை இரகசியமாக செய்தவர். அவருடைய ஏற்பாட்டில் மதுரை மாக்சியகட்சி சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் என்னை வந்து பார்வையிட்டார். இலங்கை பிரச்சனை பற்றி அவர்களின் கட்சி நிலைப்பாடு குறித்து நான் முன்வைத்த விமர்சனங்களை எழுத்து வடிவில் பெற்று இப்போதைய தலைவரும் அப்போதைய தத்தவ பொறுப்பாளருமாகிய காரத் அவர்களுக்கு அனுப்பிவைத்தார். சிறையில் தமது கட்சி பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகள் கிடைக்க வழி செய்தார். துரதிருஸ்டவசமாக சிறையில் இருந்து சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்ட பின்பு அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது.

எனவே மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியை தமிழின விரோதியாக கருதுவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை பிரச்சனையில் ஒரு தீர்வு கிடைக்க மாக்சிய கம்யுனிஸட் கட்சியை நிர்ப்பந்திப்பதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும் என கருதுகிறேன். இதன் மூலமே அதில் இருக்கும் தோழர்களை வென்றெடுக்க முடியும்.

No comments:

Post a Comment