Monday, June 16, 2014

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் எப்போது நிறுத்தப்படும்?

• பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் எப்போது நிறுத்தப்படும்?
• பெண்களும் சக மனிதர்கள் என சமூகம் எப்போது ஏற்றுக்கொள்ளும்?

இன்று உலகம் பூராவும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் பெண்களை கடவுளாக மதிக்கும் கலாச்சாரம் கொண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் இது அதிகளவில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் உ.பி மாநிலத்தில்
• முதலில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வல்லுறவுள்ளாக்கி தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.

• அடுத்து கூட்டுப் பாலியல் உறவுக்கு சம்மதிக்காத சிறுமி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

• அதற்கடுத்து பெண் நீதிபதி பாலியல் வல்லுறவுக்குள்ளாகி உயிருக்குப் போராடுகிறார்.

ஒரு நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்ன ? என்று கேட்டால் 'இது எமது மாநிலத்தில் மட்டுமா நடக்கிறது? இந்தியா பூராவும்தானே நடக்கிறது' என அசட்டையாக பதில் தருகிறார் முதலமைச்சர்.

இந்தியாவை வல்லரசாக்குவேன் என பதவியேற்ற புதிய பிரதமரோ இப் பிரச்சனை குறித்து இதுவரை கருத்தே கூறவில்லை. பசு மாடுகளைக் கொல்லக்கூடாது என அக்கறைப்படும் பிரதமர் மோடி பெண்கள் குறித்து அக்கறை அற்று இருப்பது பெண்கள் மாடுகளைவிடக் கேவலமாக மதிக்கப்டுவதையே காட்டுகிறது.

இத்தனை நாளும் இராணுவமும் சாதி வெறியர்களுமே பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் தற்போது மேகலாயாவில் விடுதலைக்காக போராடும் அமைப்பே பாலியல் உறவுக்கு இணங்க மறுத்த பெண்ணை சுட்டுக்கொன்றுள்ளது என்று செய்தி வந்தள்ளது.

இந்தியா மட்டுமல்ல இலங்கையும் இதற்கு சளைத்தது இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்தகாலங்களில் இலங்கை ராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி படுகொலைகள் செய்தது யாவரும் அறிந்ததே. ஆனால் தற்போது அந்த ராணுவம் சிங்கள பெண்களையும் கடித்து குதற ஆரம்பித்துள்ளது. அண்மையில் வந்த செய்திகள் சில,

• தம்பகல்லவில் 83 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவு செய்த இராணுவ வீரர் கைது.

• 50வயது பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்த 3 ராணுவத்pனர் கைது.

இந்த பாலியல் கொடுமைகளை கேட்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு 'சம்பந்தப்பட்டவர்களின் ஆண் உறுப்பை வெட்ட வேண்டும். அவர்களை உடனே தூக்கில் தொங்கவிடவேண்டும்' என சிலர் கோருகின்றனர். ஆனால் இத்தகைய கடுமையான சட்டங்கள் இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் இந்த குற்றங்கள் நடக்கின்றன என்பதை இவர்கள் உணருவதில்லை.

பொருளாதார வளர்ச்சி கண்ட மேற்கத்தைய நாடுகளிலும் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கவே செய்கின்றன. குறிப்பாக லண்டனில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே பெண்கள் மீதான இந்த பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டியது குறித்து உலகம் பூராவும் உள்ள மக்கள் ஒரு புதிய தீர்வை நோக்கி சிந்தப்பதற்கு தள்ளப்பட்டுள்ளனர். நிச்சயம் அதில் மனித சமூகம் வெற்றி பெறும் என நம்புவோமாக.

No comments:

Post a Comment