Monday, June 16, 2014

புதிய ஜே.வி.பி தலைவரின் லண்டன் விஜயம்! ஜே.வி.பி யின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

• புதிய ஜே.வி.பி தலைவரின் லண்டன் விஜயம்!
ஜே.வி.பி யின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

ஜே.வி.பி யின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசநாயக்க அவர்கள் அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் தமிழர,; சிங்களவர், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

நான் அறிந்தவரையில் 24.05.14 யன்று மேற்கு லண்டன் வெம்பிளியிலும,; 25.05.14 யன்று வடக்கு லண்டன் ஹாரிங்கேயிலும், 30.05.14 யன்று கிழக்கு லண்டன் ஈஸ்ட்காமிலும் ஜே.வி.பி தலைவர் பல்லின மக்களையும் சந்தித்து உரையாடல்களை நடத்தியுள்ளார். அவர் அறிவிக்கப்டாமலும் பல உரையாடல்களையும் சந்திப்புகளையும் நிகழ்தியிருக்கக்கூடும்.

ஜே.வி.பி கட்சியானது அதன் நிறுவன தலைவர் விஜயவீரா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அவர் முதலில் தோழர் சண்முகதாசன் தலைமையில் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியில் செயற்பட்டவர். தோழர் சண்முகதாசன் ஆரம்பம் முதல் ஜே.வி.பி கட்சியையும் அதன் தலைவர் காலம் சென்ற விஜயவீராவையும் இனவாதக் கட்சியாகவே குற்றம் சாட்டுகிறார். ஆனால் ஜே.வி.பி கட்சியானது இன்றுவரை தோழர் சண்முகதாசனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவேயில்லை.

அதேவேளை ஜே.வி.பி கட்சியானது தாங்கள் இனவாதக் கட்சி இல்லை என்றும் தாங்கள் ஒரு தமிழரின் நிழலுக்காவது தீங்கிழைத்தது என யாராவது நிரூபிக்க முடியுமா என்றும் சவால் விடுகிறார்கள். எதுவாயினும் மகிந்த சிந்தனையை முன்வைத்து மகிந்தவை ஜனாதிபதியாக்கிய பெரும்பங்கு ஜே.வி.யையே சாரும். அதை அவர்களால் மறுக்க முடியாது.

மகிந்தவை ஜனாதிபதியாக்கியமைக்கு ஜே.வி.பிக்கு அவர் செய்த நன்றிக்கடன் ஜே.வி.பி யை சுக்கு நூறாக உடைத்தமையாகும். இதையும் ஜே.வி.பியினால் மறக்க முடியாது.

மேலும் மாக்சிச லெனிசத்தை முன்னெடுப்பதாக கூறும் ஜே.வி.பியானது இன்றுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை. மாறாக மகிந்த முன்னெடுத்த யுத்தத்திற்கும் தமிழ் இன அழிப்புக்கும் பூரண ஆதரவை வழங்கி வந்துள்ளனர். அது தவறு என்பதையும் இன்று வரை தமிழ் மக்களிடம் அவர்கள் கூறுவதற்கு முன்வரவில்லை.

இந்நிலையில் புதிதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுராகுமார அவர்கள் பழைய பாதையில் பயணிக்கப் போகிறாரா அல்லது தமிழ் மக்களையும் அரவணைத்து ஒரு புதிய போராட்ட பாதையை தெரிவு செய்யப் போகிறாரா என்பதை அறிய தமிழ்மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

• மகிந்தவை ஜனாதிபதியாக்க பெரும் பங்கு வகித்த ஜே.வி.பி யானது மகிந்தவை பதிவியிறக்க என்ன பங்கு வகி;க்கப் போகிறது?

• லண்டனில் பல தரப்பு மக்களையும் சந்தித்த அனுபவம் புதிய தலைவரின் சிந்தனையில் மாற்றத்தை எற்படுத்துமா?

• ஜே.வி.பி கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

No comments:

Post a Comment