Monday, October 26, 2020

முதலில் ராகுல்காந்தி பொலிசாரால் தள்ளி விழுத்தப்படுகிறார்.

முதலில் ராகுல்காந்தி பொலிசாரால் தள்ளி விழுத்தப்படுகிறார். அடுத்து பிரியங்காவின் சட்டையை பொலிஸ் இழுக்கிறது. ஆனாலும் ராகுலும் பிரியங்காவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கின்றனர். கொரோனோவினால் எம்.பி, எம்எல்.ஏ க்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ் இருவரும் இவ்வாறு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியதே. இது இவர்களுக்கு அடுத்த தேர்தலில் எந்தளவு வோட்டுகளை பெற்றுக் கொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இவர்களால் இந்திய பொலிஸ் அராஜகம் பற்றி இந்தியாவில் மட்டுமல்ல முழு உலகத்திலும் அறிய வாய்ப்பு எற்பட்டுள்ளது. இந்திரா மற்றும் ராகுல் காந்தி குடும்பத்திற்கே இப்படி என்றால் சாதாரண மக்களை இந்த பொலிஸ் எப்படி நடத்தும் என்று அனைவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனை நாளும் பொலிஸ் கொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவு பற்றி காஸ்மீர் மக்கள் கூறியபோது அதனை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பொய்ப் பிரச்சாரம் என்று இந்திய அரசு கூறி வந்தது. மணிப்பூரில் பெண்கள் பொலிசுக்கு வழங்கிய கறுப்பு சட்ட அதிகாரத்தை நீக்கும்படி போராடியபோது அதனை தீவிரவாதிகளின் கலகம் என இந்திய அரசு கூறியது. சதீஸ்கரில் மலைவாழ் மக்களை பொலிஸ் சுட்டுக் கொன்றபோது அவர்களை நக்சலைட்டுகள் என்று இந்திய அரசு கூறியது. ஏன் தமிழ்நாட்டில்கூட தூத்துக்குடியில் 14 அப்பாவி மக்களை பொலிஸ் சுட்டுக்கொன்றபோது நடிகர் ரஜனி இறந்த மக்களை தீவிரவாதிகள் என்றார். ஆனால் இப்போது பொலிஸ் என்பது அரசின் ஏவல்நாய் என்பதும் அரசின் ஒடுக்குமறைக் கருவிகளில் ஒன்று என்பதும் நிரூபணமாகியுள்ளது.

No comments:

Post a Comment