Friday, July 31, 2015

சம்பந்தர் அய்யா மேய்ப்பனாக இருக்க ஆசைப்படலாம்.

 சம்பந்தர் அய்யா மேய்ப்பனாக இருக்க ஆசைப்படலாம். ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் செம்மறி ஆடுகளாக இருக்க மாட்டார்கள்!
சம்பந்தர் அய்யாவின் மனட்சாட்சிக்கு (அப்படி ஒன்று இருந்தால்) சமர்ப்பணம்!
பிரதேச சபை தேர்தல் நடக்கும்போதும், மாகாணசபை தேர்தல் நடக்கும்பொதும், பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போதும், ஏன் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்போதும் நீங்கள் கூறும் ஓரே விடயம் "தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூட்டமைக்கு வாக்கு போடவேண்டும். நாங்கள் உங்களுக்கு தீர்வு பெற்று தருவோம்" என்பதே.
நீங்கள் கேட்டுக்கொண்டபடி தமிழ் மக்களும் ஒற்றுமையாக உங்களுக்கு வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் இதுவரை பெற்றுக்கொடுத்தது என்ன?
ஒவ்வொரு தேர்தலுக்கும் " இந்திய பிரதமர் தொலைபேசியில் பேசினார். அமெரிக்க ஜனாபதி பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே தமிழ் மக்களே தீர்வு பெறுவதற்கு கூட்டமைப்பிற்கு வாக்கு போடுங்கள்" என்று ரீல் விட்டு வருகிறீர்கள்.
பூமி சுற்றுகிறதோ இல்லையோ ஆனால் தேர்தலில் வென்ற பின்பு நீங்களும் உங்கள் கட்சி எம்.பி களும் உலகைச் சுற்றுகிறீர்களேயொழிய தொகுதிப் பக்கம் சுற்றுவதில்லை.
தேர்தல் வந்தால்தான் தொகுதிப் பக்கம் வருகிறீர்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் வயதான பெண்களையும் கட்டிப் பிடிக்கிறீர்கள். நடிப்பில் நீங்கள் எம்.ஜி ஆரையும் மிஞ்சிவிட்டீர்கள் போங்கள்.
10 வருடமாக அகதிகளாக இருக்கும் சம்பூர் மக்களை ஒருமுறைகூட சென்று பாhக்கவில்லை. ஆனால் இப்போது நீதிமன்ற தீர்ப்பை உங்கள் வெற்றி என்று உரிமை கொண்டாடுகிறீர்கள். எப்படி அய்யா கொஞ்சம்கூட கூச்சமின்றி உங்களால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது?
இதோ இந்த குழந்தையை கொஞ்சம் பாருங்கள்!
இந்த குழந்தை தமிழ் இனத்தில் பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் செய்தது?
இந்த குழந்தைக்கு நடந்த கொடுமைக்கு என்ன நியாயம் கூறப் போகிறீர்கள்?
ஓ! கூட்டமைப்பு நியாயன்மாரே!
உரத்து கேட்கிறோம். உங்கள் காது என்ன செவிடா?
நாங்கள் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?
நாங்கள் கேட்பதற்கு யாருமற்ற பரதேசிகளா?

No comments:

Post a Comment