Tuesday, November 18, 2014

• சட்டத்தின் வலையில் திமிலங்கள் சிக்குவதில்லை. சிறு மீன்களே எப்போதும் சிக்குகின்றன.

• சட்டத்தின் வலையில் திமிலங்கள் சிக்குவதில்லை.
சிறு மீன்களே எப்போதும் சிக்குகின்றன.
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் ஆறு தமிழர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. இந்த ஆறுபேருக்கும் இந்தியாவில் போதைபொருள் வழங்கிய அந்த பெரிய புள்ளிகள் யார்? என்பதோ அல்லது இலங்கையில் அதை விநியோகித்து பெரும் லாபம் ஈட்டும் அந்த பெரும் புள்ளிகள் யார்? என்பதோ தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் யார்? என்று விசாரணை கூட நடைபெறவில்லை.
இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்தில் சில அமைச்சர்கள் மட்டுமல்ல பிரதமருக்கே பங்கு உண்டு என குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அரச அமைச்சர்கள் மட்டுமல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்கூட இந்த கடத்தல் மூலம் பெரும் பணம் சம்பாதித்து திருச்சியில் பெரிய வணிக வளாகமே வைத்திருக்கிறார். ஆனால் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவும் இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை.
ராமேஸ்வரம் தலைமன்னார் ஊடாக ஒரு சில கிலோ போதைப்பொருட்களே கடத்தப்படுகின்றது. ஆனால் தூத்துக்குடி, நீர்கொழும்பினூடாக தொன் கணக்கில் கடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த பெரும் அரசியல்வாதி ஒருவருக்கும் பங்கு உண்டு என்பது வெளிப்படையான செய்திகள்.
ஆனால் இலங்கையிலும் சரி அல்லது இந்தியாவிலும்சரி இதுவரை எந்த பெரிய புள்ளியுமே போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்டவும் இல்லை. அது ஏன்?
கடந்த வருடம் ஒரு குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் சவூதியில் இலங்கையை சேர்ந்த பணிப்பெண் ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. அப்போது இலங்கை அரசு அந்த மரண தண்டனையை எதிர்த்தது. ஆனால் அதே இலங்கை அரசின் நீதிமன்றம் இன்று ஆறு பேருக்கு மரணதண்டனை அளித்துள்ளது.
மரணதன்டனைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதேவேளை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முன்னர் கொழும்பில் உள்ள பள்ளி மாணவர்களே இதனால் பெரிதும் பாதிக்கப்ட்டனர். தற்போது யாழ்ப்பாணத்திலேயே பள்ளிகூட வாசல்களில் போதைப் பொருள் விநியோகம் நடைபெறுகிறது.
எனவே ஒரு சிலரின் சுயநலத்திற்காக ஒரு சமுதாயம் கெடுவதை வேடிக்கை பார்க்க முடியாது. அந்த சுயநலவாதிகளை இனத்தின் பெயராலோ அல்லது மொழியின் பெயராலோ ஆதரிக்கவும் முடியாது.

No comments:

Post a Comment