Saturday, April 29, 2023

நான் விமானம் மூலம் இலங்கை திரும்புவதற்காக

நான் விமானம் மூலம் இலங்கை திரும்புவதற்காக திருச்சியில் சில நாட்கள் தோழர் மாறனுடன் தங்கியிருந்தேன். அப்போது ஒருநாள் திருச்சி வானொலி நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் மாறன். அங்கு வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரியும் வடிவேல் ராவணன் என்ற நபரை எனக்கு அவர் அறிமுகப்படுத்தினார். ஈழத்தில் இந்திய ராணுவம் செய்யும் அராஜகத்தை மூடி மறைத்து இந்திய அரசு தரும் பொய் செய்திகளை படிக்கும்போது தனக்கு கடுங் கோபம் வருவதாகவும் தன் கையில் ஒரு குண்டு கிடைத்தால் இப்பவே இந்த வானொலி நிலையத்தை தகர்ப்பேன் என ஆவேசமாக வடிவேல் ராவணன் கூறினார். ஆனால் இதே ராவணன்தான் பின்னர் அப்ரூவராக மாறி எம்மை எல்லாம் காட்டிக்கொடுக்கப்போகிறார் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. சில வருடங்களின் பின்னர் நான் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருந்தபோது மறியல் போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு உள்ளே வந்த ராவணன் என்னை சந்தித்தார். பொலிசாரின் சித்திரவதைக்கு பயந்து அப்புரூவராக மாறி வாக்குமூலம் கொடுத்துவிட்டேன். ஆனால் வழக்கு விசாரணை வரும்போது நான் மாற்றி கூறுவேன் என்றார். அதேபோல் பசுபதி பாண்டியனுக்காக மறியல் போராட்டம் செய்து டாக்டர் ராமதாஸ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோது என்னை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் “காட்டிக்கொடுக்கும் நபரான வடிவேல் ராவணனை எப்படி உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ராவணன் வாக்குமூலம் கொடுத்தது தவறுதான். ஆனால் விசாரணை வரும்போது யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டார்” என்று உறுதி அளித்தார். ஆனால் வழக்கு விசாரணையின்போதும் வடிவேல் ராவணன் பொலிசாருக்கு ஒத்துழைத்து வாக்குமூலம் கொடுத்தார். இதனால் எமது தோழர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால் இங்கு எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இதே வடிவேல் ராவணன் இப்பவும் பாமக கட்சியில் இருப்பதுடன் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் அளித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ். ஆனால் நல்லவேளை மக்கள் ஒவ்வொரு முறையும் இந்த வடிவேல் ராவணனை தோற்கடித்தே வருகிறார்கள்.

No comments:

Post a Comment