Saturday, September 28, 2013

ஐரோப்பிய பாராளுமன்றில் தொடரும் விவாதங்கள்: சபா.நாவலன் !

ஐரோப்பிய பாராளுமன்றில் தொடரும் விவாதங்கள்: சபா.நாவலன் !

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ibon international என்ற அமைப்பு சுய நிர்ணய உரிமை, மக்கள் விடுதலை மற்றும் ஜனநாயகம் என்ற தலைப்பில் ஆய்வரங்கு ஒன்றை 23.09.2013 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இத்தலைப்பில் மூன்று ஆரம்ப உரையாளர்களும், நான்கு ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். (Cynthia McKinney, Former member, House of Representatives, USA , Dr. Hans Koechler, University of Innsbruck, Austria, Luis Jalandoni, National Democratic Front, Philippines) ஆரம்ப உரையைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.

ஆய்வுரையின் முதல் பேச்சாளராக ஈழப் போராட்டம் குறித்த ஆய்வை சபா நாவலன் நிகழ்த்தினார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த ஆய்வில் ஈழப் போராட்டம் இனப்படுகொலையின் முடிவில் வன்னியில் இலங்கை பாசிச அரசால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது குறித்தும், இன்னும் அந்தப் போராட்டம் தொடரப்பட வேண்டும் என்றும் உலகின் ஏனைய தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்று ஈழப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏகாதிபத்திய அரசுகள் தமது நலன்களுக்காகப் போராட்டத்தைக் கையகப்படுத்தி அழித்ததை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து மீண்டும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மேலெழும் என அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது பேச்சாளரான சிரியாவிலுள்ள குர்தீஷ் கவுன்சிலின் உறுப்பினரான சாலி இஸ்லாம் தனது உரையை நிகழ்த்தினார். சிரியாவில் குர்தீஷ் மக்களின் போராட்டம் குறித்தும் அது எவ்வாறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வெற்றியை நோக்கிச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். அதன் பின்னர் பிரஞ்சு மொழியில் உரையாற்றிய ஹம்டன் அல் டமாரி பலஸ்தீனியப் போராட்டத்தை மேற்கு நாடுகள் அங்கீகரித்தது போன்ற தோற்றப்பாட்டை வழங்கினாலும் ஐ.நா போன்ற அமைப்புக்கள் தனி நாடாக ஏற்றுக்கொள்ள நீண்ட காலம் எடுக்கும் என்றும் போராட்டங்கள் தொடரும் என்றும் குறிப்பிட்டார். மூன்றாவதாகப் பேசிய இகோர் சுலைக்கா அல்பேர்சால் இடது என்ற அமைப்பைச் சேர்ந்தவர். பாஸ்க் மக்கள் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்பவர். பாஸ்க் மக்களின் போராட்ட வழிமுறைகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாக சூழலுக்கு ஏற்ப மாற்றமடைந்து தொடர்வதாகக் குறிப்பிட்டார்.

இறுதியாக சமாதானத்திற்கான குர்தீஷ் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஆன் கிரிஸ்ரின் காவாச் பேசினார். குர்தீஷ் பெண்களின் போராட்டத்தில் பங்களிப்புக் குறித்தும். ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்பினுள் பெண்களின் விடுதலை சாத்தியமற்றது என்றும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாகவே அது சாதியமாகும் என்றும் குறிப்பிட்டார். 100 பேர் வரையான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுள் இரண்டு ஈழத் தமிழர்களும் கலந்துகொண்டனர். கருத்தரங்கின் முடிவில் பார்வயாளர்கள் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் அரை மணி நேரம் வழங்கப்பட்டது. பலர் தமது போராட்டங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அந்த வேளையில் பிரான்சில் இயங்கும் மக்களவையிலிருந்து பார்வையாளராகக் கலந்து கொண்ட திருச்சோதி என்பவர் இலங்கையின் இனப்படுகொலையில் 70 ஆயிரம் மக்கள் உலக நாடுகளின் ஆதரவுடனேயே கொல்லப்பட்டனர் என்றார்.

.

No comments:

Post a Comment