Saturday, September 28, 2013

தோழர் தமிழரசன்

இன்று தோழர் தமிழரசன் குறித்து பலரும் வெளிப்படையாக ஆதரித்து பேசியும் எழுதியும் வருகின்றனர். 26 வருடங்களின் பின்னர் தமிழகத்தின் பல பாகங்களில் தோழர் தமிழரசன் நினைவு தினம் கொண்டாடப்படுவது உண்மையிலே மிக்க மகிழ்வு தருகிறது. ஆனால் அன்று அப்படி நிலை இருக்க வில்லை. தமிழரசனின் போராட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட வெளிப்படையாக ஆதரிக்க தயங்கினார்கள். அந்தளவுக்கு கியூ பிராஞ் பொலிசின் அடக்கு முறைகளும் நெருக்கடிகளும் இருந்தன.

தோழர் தமிழரசனின் நெருங்கிய ஆதரவாளர்கள் அவரை காட்டிக் கொடக்கும்படி நெருக்கப்பட்டார்கள். தோழர் தமிழரசன் அடிக்கடி செல்லும் ஒரு ஆதரவாளரை இனங் கண்டு கொண்ட உளவுப்படை பொலிசார் அவரிடம் நஞ்சைக் கொடுத்து அதை சாப்பாட்டில் கலந்து கொடுக்கும்படி வற்புறுத்தினார்கள். இல்லையேல் அவருடைய குடும்பத்தை சின்னா பின்னமாக்குவோம், மனைவியை விபச்சார வழக்கில் கைது செய்வோம், மகளை மான பங்பப்படுத்துவோம் என்றெல்லாம் மிரட்டியிருந்தனர். அந்த ஆதரவாளரும் பயந்து வேறு வழியின்றி சம்மதித்தார்.

வழக்கம்போல் ஒரு நாள் தோழர் தமிழரசன் அந்த ஆதரவாளர் வீட்டுக்கு வருகை தந்தபோது அந்த ஆதரவாளர் சாப்பாட்டில் நஞ்சைக் கலந்து கொடுத்திருக்கிறார். கொடுக்கும்பொது அவரது மனட்சாட்சி உறுத்தியதால் கைகள் நடுங்கியிருக்கிறது. இதை அவதானித்த தோழர் தமிழரசன் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு தனக்கு பசிக்க வில்லை என்று கூறிவிட்டு சாப்பிடாமல் சென்றுவிட்டார்.

அதேபோல் இன்னொரு முறை வேறொரு ஆதரவாளர் வீட்டுக்கு தமிழரசன் சென்றபோது அவரது வருகை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழரசன் தனி ஆள் தானே . இலகுவாக கைது செயயலாம் என்று நினைத்து ஒரு சப் இன்பெக்டரும் நாலு காவலரும் ஜீப் வண்டியில் சென்றுள்ளனர். இரவு நேரம். தமிழரசன் வெளியில் வரட்டும் கைது செய்யலாம் என நினைத்து வீதியோரத்தில் பதுங்கியிருந்தனர். வெளியே வந்த தமிழரசன் தனது மோட்டார் வண்டியில் ஏறு முன்னர் வழக்கம்போல் தனது சப் மிசின்கன் துப்பாக்கியை சரிபார்த்திருக்கிறார்.

அவர் எப்போது பணயம் செய்யும் போது துப்பாக்கியை சரி பார்ப்பது வழக்கம். (லோட் செய்து லாக்கில் தயார் நிலையில் வைத்திருப்பார்). அவர் சப் மிசின்கன் துப்பாக்கி வைத்திருப்பதை பார்த்து திடுக்கிட்ட பொலிசார் பயந்து அவரை கைது செய்ய முயற்சிக்காமல் அப்படியே பதுங்கி இருந்துவிட்டனர். எனெனில் அவர்களிடம் ஒரேயொரு துப்பாக்கி அதுவும் 303 ரைபிள் துப்பாக்கியே அப்போது இருந்திருக்கிறது. அடுத்தநாள் தகவல் கொடுத்தவரை “ஏன்டா, அவன் மிசின்கன் வைத்திருப்பதை எங்களுக்கு முன்னரே சொல்லவில்லை. நல்ல காலம். நேற்று எங்களை கொல்லப் பார்த்தியே” என்று செல்லி அடித்தார்களாம்.

சந்தன வீரப்பன் போல் காட்டில் இருந்தால்தான் பொலிசில் இருந்து தப்பிக்க முடியும் என சிலர் என்னிடம் கூறுவதுண்டு. ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் மக்கள் மத்தியிலேயே இருக்க முடியும் என்பதற்கு தோழர் தமிழரசன் ஒரு நல்ல உதாரணமாக நான் காட்டுவேன். அவர் மோட்டார் சயிக்கிளில் எப்போதும் துப்பாக்கியுடன் செல்வார். அதற்கு லைசென்ஸ் கிடையாது. அது அவருடைய வண்டியும் கிடையாது. ஒரு பண்ணையாரிடம் பறித்தெடுத்தது. இருந்தும் அவர் இறக்கும்வரை பொலிசில் பிடிபட்டது கிடையாது.

No comments:

Post a Comment