Saturday, September 28, 2013

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

1983 க்கு முன்னர் பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர். பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர் அல்லது வெளிப்படையாக தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.

தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசனனின் தலைவர் என கருதப்பட்ட புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,

சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினேன். அடுத்து உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார். எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன். வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கிறது. மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்.

நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர். பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தோழர் தமிழரசன் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்து உதவி பெற முயன்றார். ஆனால் எந்த இயக்க தலைவர்களும் உதவி செய்ய மட்டுமல்ல அவரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்கள். புலிகள் இயக்கம் இறுதிக் காலங்களில் 303 ரைபிள, ரிப்பிட்டர் போன்ற அந்த கால ஆயுதங்களை பாவிக்காமல் புதைத்ததாக அறிகிறோம். ஆகக்குறைந்தது அந்த மண்ணில் புதைத்த ஆயுதங்களையாவது தோழர் தமிழரசனிடம் கொடுத்திருக்கலாம். அவர்கள் தாங்களும் கொடுக்கவில்லை. எங்களையும் கொடுக்கவிவில்லை. ஒரு வேளை தமிழரசன் விரும்பிவாறு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தவிர்த்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது!

1 comment:

  1. இறுதி வரிகளில் உள்ளது உறுதியான உண்மை! ஆனால் ஈழ விடுதலை இந்த அளவிற்கு நடைபெற்றிருக்குமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று!

    ReplyDelete