Monday, March 31, 2014

• பகத்சிங் குண்டு வீசினால் தியாகம். தமிழரசன் வீசினால் பயங்கரவாதமா?

• பகத்சிங் குண்டு வீசினால் தியாகம்.
தமிழரசன் வீசினால் பயங்கரவாதமா?

“பகத் சிங்கும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். பகத் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம்” என்று குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் குறிப்பிட்டார். (ஆதாரம்- 24.03.1994 தினமணி)

இலங்கையில் இந்திய ராணுவம் நிகழ்திய கொடுமைகளைக் கண்டித்து கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்தார். அப்போது தமிழ்நாடு விடுதலைப் படையினர் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமுகமாக கொடைக்கானல் டிவி டவர் , கிண்டி நேரு சிலை என்பனவற்றுக்கு குண்டு வைத்தனர். இங்கு அவர்கள் நோக்கம் யாரையும் கொல்வதோ அல்லது சேதப்படுத்துவதோ அல்ல என்பது தெளிவாக தெரிந்தும் இந்திய அரசு அதை பயங்கரவாத நடவடிக்கை என்றது.

“பாலஸ்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்த இந்திய அரசு தமிழீழ விடுதலையையும் விடுதலை அமைப்புகளையும் அங்கீகரிக்க வேண்டும்” எனக் கோரி குடமுருட்டி பாலத்தில் தோழர் தமிழரசன் குண்டு வைத்தார். அப்போது யாரும் இறக்க வில்லை. எந்த சேதமும் நிகழவில்லை. ஆனால் இந்திய அரசு தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்று அறிவித்தது.

இதே குடியரசு தலைவர் சர்மா காலத்தில் தான் கொடைக்கானல் வெடி குண்டு சம்பவம் தொடர்பாக பல தமிழ் உணர்வாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது. அவர்களுக்கு கொடிய ஆயுள் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டன.
இதே இந்திய அரசுதான் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்களையும் அடித்துக் கொலை செய்தது.

• வெள்ளைக்கார அரசுக்கு எதிராக குண்டெறிந்தால் அது சுதந்திர வேட்கை. ஆனால் கொள்ளைக்கார காங்கிரஸ் அரசுக்கு எதிராக எறிந்தால் அது பயங்கரவாதமா?

• பகத்சிங் குண்டெறிந்தால் தியாகம். அதையே
தமிழரசன் செய்தால் பயங்கரவாதம்.
இந்திய அரசே ஏன் இந்த இரட்டை வேடம்?

• பாலஸ்தீன இயக்கம் குண்டு வைத்தால் அது விடுதலைப் போராட்டம்.அவர்களுக்கு இந்திய அரசு செங்கம்பள வரவேற்பு. ஆனால் ஈழப் போராளிகள் குண்டு வைத்தால் அது பயங்கரவாதம். அவர்களை பிடித்து சிறப்பு முகாமில் அடைப்பு ஏன்?

• பகத் சிங்கை போற்றி புகழும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (CPM) இலங்கையில் போராளிகளை இகழ்வது ஏன்? இலங்கை இனவெறி அரசை ஆதரிப்பது ஏன்?

தோழர் பகத்சிங் இன் தியாகத்தை தமக்கு பயன்படுத்த நினைக்கும் அராஜகவாதிகளை இனம் காண்போம்.

தோழர் பகத்சிங் அவர்களுக்கு வீர வணக்கம்.
தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கம்.
தியாகிகளை நினைவில் கொள்வோம்!

No comments:

Post a Comment