Saturday, June 29, 2019

•தமிழகத்து பேரறிவாளனும் ஈழத்து முத்தையா சகாதேவனும்

•தமிழகத்து பேரறிவாளனும்
ஈழத்து முத்தையா சகாதேவனும்
பற்றரி வாங்கிக் கொடுத்தமைக்காக பேரறிவாளன் தமிழகத்தில் 27 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அதுபோலவே கூலிக்காக வேலியில் உள்ள மரத்தை வெட்டியதற்காக சகாதேவன் 13 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
பேரறிவாளனுக்கு எப்படி நீதி மறுக்கப்பட்டதோ அதேபோன்று சகாதேவனுக்கும் நீதி மறுக்கப்பட்டுள்ளது.
13 வருடங்களாக நீதி வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகூட வழங்கப்படவில்லை.
குண்டு வாங்கி கொடுத்த கே.பி பத்மநாபன் மீது வழங்கு இல்லை. குண்டை கட்டி அனுப்பிய கருணா அம்மான் மீது வழக்கு இல்லை.
ஆனால் எதுவுமே அறியாமல் கூலிக்காக லக்ஸ்மன் கதிர்காமர் வீட்டு அருகில் இருந்த வேலி மரங்களை வெட்டியதற்காக சகாதேவன் மீது வழக்கு.
நீதிமன்றத்தால் 19 வருட தண்டனை வழங்கப்பட்ட பொதுபலசேனா பிக்குவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்து விடுதலை வழங்குகிறார்.
ஆனால் 13 வருடமாகியும் சகாதேவனுக்கு நீதி வழங்கப்படாதது மட்டுமன்றி பெயில்கூட வழங்கப்படவில்லை.
ஏனெனில் சகாதேவன் தமிழன் மட்டுமன்றி எதுவுமற்ற ஏழை மலையக தமிழன்.
அதனால்தான் அவரின் விடுதலைக்கு மலையக தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை.
சகாதேவனும் ஒரு இந்துதான். ஆனால் அவரின் விடுதலைக்கு சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனோ அல்லது அர்ஜீன் சம்பத்தோ குரல் கொடுக்கவில்லை.
சகாதேவன்!
எங்களை மன்னித்துவிடு.
உன் விடுதலைக்கு எம் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று வருத்தப்படாதே.
உன் மரண ஊர்வலத்தில்கூட எமது தலைவர்கள் பங்கு பற்றவில்லையே என கவலைப்படாதே.
முடிந்தால் உன் போட்டோவை கொடுத்து அனுப்பு. அது எமது தலைவர்களுக்கு அடுத்த தேர்தலுக்கு பயன்படும்.

No comments:

Post a Comment