Saturday, June 29, 2019

•இவை எல்லாம் தற்செயலாக நடக்கின்றனவா?

•இவை எல்லாம் தற்செயலாக நடக்கின்றனவா? அல்லது
ஏதாவது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நடக்கிறதா?
ஈழத் தமிழ் தலைவர்கள் பலரும் ஸ்டாலினை சந்தித்து வருகின்றனர். இச் சந்திப்புகள் தற்செயலானவையா அல்லது திட்டமிட்டு நடக்கின்றனவா?
முதலில் முன்னாள் வடமாகாணசபைத் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் ஸ்டாலின் இலங்கை வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஸ்டாலின் இப்போது ஆட்சியில் இல்லை. அவர் முதலமைசரும் இல்லை. அதுமட்டுமல்ல அவரது திமுக கட்சி மத்தியிலும்கூட ஆட்சியில் இல்லை. அப்படியிருக்க விக்கிஸே;வரன் எதற்காக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் என்று புரியவில்லை.
அடுத்து தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா சென்னைக்கே சென்று ஸ்டாலினை சந்தித்துள்ளார். சந்தித்தார் என்று போட்டோக்கள் வெளிவந்துள்ளனவே தவிர ஏன் சந்தித்தார் என்ற விபரம் வரவில்லை.
ஏனெனில் மாவை சேனாதிராசாவுக்கு சென்னையில் பங்களா உண்டு. அவர் குடும்பம் அங்கு தங்கியுள்ளனர். அதனால் அவர் அடிக்கடி சென்னை செல்வதுண்டு. இதுவரை ஸ்டாலினை சந்திக்காத மாவை சேனாதிராசா இம்முறை எதற்காக சந்தித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அப்புறம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சென்னை சென்று ஸ்டாலினை சந்தித்துள்ளார். சந்தித்தது மட்டுமன்றி திமுக கூட்டத்தில் ஸ்டாலின் புகழ் பாடி உரையாற்றியும் இருக்கிறார்.
இலங்கைக்கு பிரதமர் மோடி வநதுள்ள தருணத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் இந்தியா வந்திருப்பதாக ஹக்கீம் கூறினார்.
இலங்கையில் முஸ்லிம்களின் தலைவரான இவர் இப்போது எதற்காக ஸ்டாலினுக்கு முக்கியத்தவம் கொடுத்து சந்தித்தார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
இவர்கள் எல்லோருடைய சந்திப்பைவிட மிகவும் ஆச்சரியம் தருவது நாடுகடந்த தமிழீழ அரசின் சந்திப்பு ஆகும். ஒரு பெண்மணி ஸ்டாலினை சந்தித்து நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்களின் கடிதத்தை கையளித்துள்ளார்.
இத்தனை காலமும் ஸ்டாலினை சந்திக்காத இவர்கள் இப்போது எதற்காக ஸ்டாலினை சந்திக்கிறார்கள்?
அதுவும் தமிழ்நாட்டில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும்போது அதற்காக குரல் கொடுக்காமல் சிங்கப்பூர் சென்று குடும்பத்துடன் விளையாட்டு காட்டுபவரை ஏன் இவர்கள் சந்திக்கின்றார்கள்?
(1) கலைஞர் கருணாநிதி தத்தெடுத்து வளர்த்த “மணி” என்ற அகதிச் சிறுவனை சொத்துக்காக ஸ்டாலின் கொலை செய்ததாக கூறுகின்றார்கள். ஒருவேளை ஸ்டாலினை சந்தித்து அதற்காக இந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பார்களோ?
(2) அல்லது, கலைஞர் கருணாநிதி ஆரம்பித்து வைத்த சிறப்புமுகாம் இப்போதும் இருக்கிறது. அதனை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு குரல் கொடுக்கும்படி ஸ்டாலினிடம் கேட்டிருப்பார்களோ?
(3) அல்லது,37 வருடமாக தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு இந்திய அரசிடம் வலியுறுத்தும்படி ஸ்டாலினிடம் கேட்பதற்காக சந்தித்திருப்பார்களோ?
(4) அல்லது, 27 வருடமாக தமிழக சிறையில் வாடும் ஈழத் தமிழர்களான சாந்தன், முருகன், பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய குரல் கொடுக்குமாறு கேட்டிருப்பார்களோ?
(5) அல்லது, புலிகளின் அரசியல்பிரிவு பொறுப்பாளர் நடசேன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசி சரணடைய ஒழுங்கு செய்த கனிமொழி, அவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஜ.நா வில் வாக்குமூலம் வழங்கவேண்டும் என்று கேட்பதற்காக சந்தித்திருப்பார்களா?
இதில் எதாவது ஒன்றை அல்லது எல்லாவற்றையும் கேட்பதற்காகவே எமது தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்தார்கள் என்று நம்புவோம். ஏனெனில் நம்பிக்கைதானே வாழ்க்கை!
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. ஒருவேளை இந்த தலைவர்களை சந்திக்கவைத்து அதன்மூலம் ஈழத் தமிழர்கள் கலைஞர் கருணாநிதி மீதிருந்த கோபத்தை மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் காட்ட முனைவாரேயானால் அவருக்கு நாம் கூறிக்கொள்ள விரும்புவது “ ஈழத் தமிழர்கள் ஒருபோதும் கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்”.

No comments:

Post a Comment