Tuesday, April 12, 2016

தோழர் தமிழரசனும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்

தோழர் தமிழரசனும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்

(தோழர் பாலன் எழுதிய "ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" என்னும் நூலில் இருந்து) 

அண்மையில் நடைபெற்ற இரு நிகழ்வுகள் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் சாதீயம் குறித்த உரையாடல்களை தோற்றுவித்தள்ளது. ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்ற சங்கர் என்பவர் கொலை. இன்னொரு நிகழ்வு புலம்பெயர்ந்த தமிழரனான துரைரத்தினம் என்பவர் சாதீய ரீதியாக ஏசியது. இவ்வாறான நிகழ்வுகள் எதோ இப்போதுதான் நடக்கிறது என்று அல்ல, மாறாக இவை காலம் காலமாக நடந்து வருபவைதான். ஒவ்வொரு முறையும் நிகழும்போது பரவலாக கண்டிப்பதும் பின்னர் அடுத்த நிகழ்வு நடக்கும்வரை அதை மறந்து விடுவதுமாகவே இருந்து வருகின்றன. இந்த தீண்டாமையையும் அதற்கு காரணமான சாதீயத்தையும் முற்றாக ஒழிக்காதவரை இவ்வாறான நிகழ்வுகளை தடுத்தவிட முடியாது. இவற்றை ஒழிப்பதற்கு பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொண்டாலும் இதை எவ்வாறு ஒழிப்பது என்பதிலேதான் தமக்குள் பலவிதமாக வேறுபடுகின்றனர்.

சங்கர் கொலை என்பது தேவர் சாதி பெண் ஒருவரை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் காதலித்து திருமணம் செய்து எட்டு மாதமாக சேர்ந்து வாழ்ந்தபோது கொல்லப்பட்டிருக்கிறார். 10 லட்சம் ரூபா பணம் தருவதாகவும் பெண்ணை கைவிடும்படி பெண்ணின் தந்தையால் பேரம் பேசியபோதும் அதற்கு இடங்கொடாது தான் காதலித்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வரும்போது அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சாதி வெறியர்கள் சங்கரை மட்டுமல்ல அவருடன் சேர்த்து அந்த பெண்ணையும் கொல்லும் நோக்கோடு கத்தியால் வெட்டியிருக்கிறார்கள். ஆனால் நல்ல வேளையாக அவர் ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டுவிட்டார். தமிழ் சமூகத்தில் நடைபெறும் இவ்வாறான கொலைகள் கொடுமை என்றால் அதைவிடப் பெரும் கொடுமை இவ்வாறான கொலைகளை நியாயப்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்களான டாக்டர் ராமதாஸ் போன்றோர் இவை "நாடகக் காதல்" என்று கூறிவருவதாகும்.

சாதி ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் ஒரு சிறப்பு மிக்க தீர்ப்பை 23.02.2015 ஆம் நாள் வழங்கியுள்ளார். 'மன்மீத்சிங் எதிர் அரியானா மாநிலம்' என்ற வழக்கில் ( றுP 26734ஃ2014 நாள் 23.02.2015) தீர்ப்பளித்த நீதியரசர் அவர்கள் காவல்துறைக்குச் சில முக்கியமான வழிகாட்டுதல்களை ஆணையாகப் பிறப்பித்திருக்கிறார். மன்மீத்சிங் என்பவர் தனது மனைவியைப் பிரித்த பெண்ணின் பெற்றோர் அவரைப் படுகொலை செய்துவிட்டனர் என்று வழக்கு தொடுத்தார். அவ் வழக்கில் பின்வரும் உத்தரவை நீதியரசர் கே.கண்ணன் பிறப்பித்திருக்கிறார்:

1. சாதி ஆணவக் கொலைகள் நடக்கும் மாவட்டங்களில் கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை ஆதரிக்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் ஊரில் பதற்றம் ஏற்படாமல் அமைதியை ஏற்படுத்தவும், ஒவ்வோர் ஊரிலும் ‘மக்களின் நண்பர்கள் ‘ என்னும் பெயரில் அங்கிருக்கும் முற்போக்காளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

2. ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் சாதி ஆணவக் கொலை குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கெனத் தனிப் பிரிவுகள் ஏற்படுத்தவேண்டும்.

3. கலப்புமணம் செய்துகொண்ட தம்பதிகளில் ஆணையோ பெண்ணையோ அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் பெற்றோருடன் அனுப்பக்கூடாது.

4. சாதி ஆணவக் கொலை வழக்கைக் காவல்துறை உயரதிகாரியின் நேரடி மேற்பார்வையில் மாவட்டக் கண்காணிப்பாளர் தகுதியில் உள்ளவர்தான் விசாரிக்க வேண்டும்.

5. பழமையான மரபுகள் கலப்பு மணத்துக்குத் தடையாக இருக்குமெனில் தனிமனிதரின் சுதந்திரத்துக்குத்தான் காவல்துறை முன்னுரிமை அளிக்கவேண்டும்.

6. திருமணப்பதிவு அலுவலகங்களில் பதிவின்போது தம்பதியினரின் பெற்றோர் உடன் வரவேண்டும் எனக் கட்டாயப் படுத்தக்கூடாது .

இவற்றை அவர் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் ஊடகங்கள் சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார். ஊடகங்களில் வெளியிடப்படும் 'மணமக்கள் தேவை' விளம்பரங்கள் சாதியப் பெருமிதத்தை வெளிப்படுத்துவனவாக இருப்பதாகவும் வருமானத்தைக் கருதி அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் அவர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வாறு சமூக அக்கறையுடன் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கும் அதேவேளை இன்னொருபுறம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் சாதிப்பாசத்தின் காரணமான செயல் அருவருக்க வைக்கிறது. சங்கரைக்; கொலை செய்த சாதிவெறிக் கொலைகாரர்கள் ஜட்டியுடன் நிற்கும் படம் பத்திரிகையில் வெளியானவுடன் காவலில் இருப்பவர்களை எப்படி ஜட்டியுடன் படம் பிடித்து பத்திரிகைகளுக்கு கொடுக்க முடியும் என இந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொலிசாரிடம் கேட்டுள்ளனர். பொலிஸ் காவலில் உள்ளவர்களை இப்படி படம் பிடித்து பத்திரிகைகளில் போடுவது தவறுதான். ஆனால் இதற்கு முன்னர் திலீபன் மகேந்திரன் என்பவர் பொலிஸ் காவலில் கை முறிக்கப்பட்டு அந்த படம் பத்திரிகைகளில் வந்தபோது இந்த நீதிபதிகள் ஏன் கேட்கவில்லை? அதன்பின்பு ஈழ அகதி ஒருவர் விசாரணைக்கு என அழைத்து சென்று பொலிசாரால் கால் முறிக்கப்பட்டு அந்த படமும் அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்ததே. அப்போதும் இந்த நீதிபதிகள் எதுவும் கேட்காமல் மௌனமாகத்தானே இருந்தார்கள். இப்போது மட்டும் இந்த கொலைகாரர்களுக்காக பரிந்து பேசுவதன் மர்மம் அவர்களின் சாதி குறித்த பாசம் இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

துரைரத்தினம் என்பவர் ஒரு ஈழத் தமிழர்.  தற்போது புலம்பெயர்ந்து சுவிற்சலாந்து நாட்டில் வாழ்கிறார். அவர் ஒரு பிரபலமான ஊடகவியலாளர். அவருடைய புலி ஆதரவு காரணமாக அவருக்கு இலங்கை அரசினால் உயிராபத்து ஏற்பட்டிருந்தது. அவர் அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமார் அவர்களுடன் முகநூலில் விவாதிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு "பற நாயே" என்று ஏசியுள்ளார். இவர் சாதீய ரீதியாக இவ்வாறு பேசியது தவறு என்றும் அதற்காக இவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று ரவிக்குமாரும் வேறு பலரும் கோரினார்கள். ஆனால் அவர் இதுவரை மன்னிப்பு கோராமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். ஒரு பிரபலமான ஊடகவியலாளர் இவ்வாறு சாதீய ரீதியாக ஏசிவிட்டு அது சுட்டிக்காட்டப்பட்ட பின்பும்  அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் பிடிவாதமாக இருந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதைவிடப் பேரதிர்ச்சி என்னவெனில் இது குறித்து எவ்வித அக்கறையுமின்றி அவருக்கு ஒரு பிரபல தேசிய ஊடகம் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவித்தமையாகும். இந்த சம்பவம் இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் ஜரோப்பிய மற்றும் கனடா நாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் சாதீயம் இன்னமும் உயிர்ப்போடு இருந்துவருகின்றது என்பதை நன்கு காட்டுகின்றது. 

இந்த உண்மைகளைப் பார்க்காமல் "முன்புபோல இப்போதில்லை. காலம் எவ்வளவோ மாறிவிட்டது. இப்போதெல்லாம் யாரும் சாதியே பார்ப்பது கிடையாது" என்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் அப்படி வாதாடுகிறவர்கள் யாரும் தங்கள் சுயவாழ்வில் சாதியை எந்தக் கட்டத்திலும் துறந்தவர்களில்லை. தீண்டாமையின் சில வடிவங்களை வெளிப்படையாக கடைப்பிடிக்க முடியாமல் கைவிடப்பட்டதைத்தான் அவர்கள் சாதி ஒழிந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள். உடலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் தேவையற்றதொரு உறுப்பை வெட்டி எறிந்துவிட்டதைப் போல சாதியொழிந்தவிட்டதாக செய்யப்படும் பிரகடனங்கள், சாதிவெறியரின் கொக்கரிப்பைவிட ஆபத்தானவை. சாதி, சுயவுணர்வாகவும் ஆழ்மனங்களில் கூட்டு நினைவாகவும் பதிவாகி பிறப்பில் தொடங்கி இறப்புக்கு பின்னும் சடங்காக தொடர்கிறது. கடல்தாண்டி மலைதாண்டி கண்டம் விட்டுப்போனாலும் உள்ளிருந்து வழி நடத்துவதாய் சாதியே இருக்கிறது.

கடல்தாண்டி வந்தாலும் ஜரோப்பிய அமெரிக்க கண்டங்களில் அகதியாக வாழ்ந்தாலும் சாதீயத்தை விட்டுவிடாமல் இறுகப் பற்றிக்கொண்டே உயர்சாதி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு இந்த துரைரத்தினம் சம்பவம் ஒரு உதாரணமாகும். இவர்கள் உருவாக்கும் கோயில்களை தந்திரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். ஊர்ச் சங்கங்கள் என்ற போர்வையில் சாதிய சங்கங்களையே இவர்கள் வைத்திருக்கின்றனர். முக்கியமாக திருமணங்களை தமது சாதிகளுக்குள்ளேயே நடத்துகின்றனர். தமது பிள்ளைகள் ஒரு வெள்ளை இனத்தவரையோ அல்லது கறுப்பு இனத்தவரையோ மணம் முடிக்க சம்மதிக்கும் உயர்சாதிப் பெற்றோர்கள் தமிழ் இனத்தில் தாழ்ந்த சாதியில் மணம் முடிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இதிலிருந்தே புலம்பெயர்ந்த நாடுகளிலும் சாதீயம் உயிர்ப்புடன் பேணப்படுவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் இந்த சாதீய கொடுமைகள் தொடருகின்றன என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் காட்டுகின்றன. கடந்தவருடம் உடுப்பிட்டி மகளிர் பாடசாலைக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டபொழுது உயர்சாதியினர் அதை தடுத்து நிறுத்தினார்கள். யாழ்ப்பாணத்தில் ஏழாலை என்னும் இடத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் சிறீ முருகன் வித்தியாலயத்தில்  தண்ணீர் தாங்கியில் நஞ்சு கலக்கப்பட்டமையினால் 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இது உயர் சாதியினரின் திட்டமிட்ட நாசகாரச் செயல் என்பதை பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள். இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றார்கள். ஆனால் பொலிஸ் இதுவரை குற்றவாளிகள் எவரையும் கைது செய்யவில்லை. தமிழ் தலைவர்களும்கூட வழக்கம்போல் இதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

சில ஊடகங்கள் இது ஈபிடிபி கட்சியினரின் சதி என்றார்கள். இன்னும் சிலர் இது இராணுவ புலனாய்வு பிரிவின் வேலை என்றார்கள். ஆனால் யாருமே இப்பவும் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு என தனி பாடசாலை இருப்பது குறித்தோ அல்லது  அந்த பாடசாலை குடிநீரில் சாதி வெறியர்களால் விசம் கலக்கப்பட்டமை குறித்தோ வெட்கப்படவோ அன்றி ஒரு கண்டனத்தையோ தெரிவிக்க முன்வரவில்லை. புலம்பெயர் தமிழ் உறவுகள்கூட இந்த விடயம் குறித்து தமது முகநூலில் பேச விரும்பவில்லை. அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை தமிழ் மக்களாக இவர்கள் கருதவில்லையா? அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தமிழ் இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்று உணரவில்லையா? இத்தனை அழிவிற்கும் பிறகுகூட தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் இந்த சாதி வேறுபாடுகள் நீங்கவில்லையாயின் எப்பதான் இது நீங்கும்? அனைவரின் மத்தியில் தமிழர் என்ற இன உணர்வு ஏற்படாதா? 

புலிகளின் காலத்தில் சாதி இல்லை என்றும் இப்போது புலிகள் இல்லாததால் அது மீண்டும் உருவெடுக்கிறது என்றும் சில புலி ஆதரவு ஆய்வாளர்கள் சொல்ல முற்படுகின்றனர். இது தவறு. புலிகள் மட்டுமல்ல தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய எந்த ஒரு இயக்கமுமே சாதி பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சாதீயத்தை ஒழிக்க ஒருபோதும் முயன்றதில்லை என்பதே உண்மையாகும். மலரும் சோசலிச தமிழீழத்தில் சாதிகள் இருக்காது என்று கூறினார்கள். ஆனால் அது எவ்வாறு இல்லாமல் போகும் என்பது குறித்து அவர்கள் ஒருபோதும் பேசியது இல்லை.

புலிகளுக்கு முன்னரும் சாதிகளும் அதன் தீண்டாமைக் கொடுமைகளும் இருந்தன. அவை புலிகளின் காலத்திலும் இருந்தன. புலிகளுக்கு பின்னர் இப்போதும் அவை இருக்கின்றன. இந்த சாதீய கொடுமை நிலை குறித்து 2006ல் லண்டனுக்கு வருகை தந்திருந்த மதிப்புக்குரிய காலம் சென்ற தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களிடம் கேட்டேன். அவர் இந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தோழர் சண்முகதாசன் தலைமையில் போராடியவர். அவர் புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்திலும் வாழ்ந்தவர். அவர் “ சாதீயம் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. அது என்றாவது ஒருநாள் மீண்டும் பற்றி எரியும்” என்றார். அதுமட்டுமல்ல “சாதீயம் புலிகளின் துப்பாக்கி நிழலில் தூங்குகிறது. அது ஒருநாள் விழித்தக் கொள்ளும் என்றார். இவருடைய இக் கூற்று மறுக்க முடியாத உண்மையாகும். இன்று மீண்டும் சாதீயக் கொடுமைகளை காணும்போது அன்று தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் போது தென்னிலங்கைப் பகுதியில் இருந்த தமிழர்கள் சிங்களக் காடையினரால் தாக்கப்பட்டு காயம்பட்ட நிலையில் , உடைமைகளைப் பறிகொடுத்த நிலையில் பரிதாபகரமான நிலையில் பஸ்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் நெல்லியடி என்னும் பகுதியில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வந்து இறங்கியபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்த கன்பொல்லை கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் இதனை வெள்ளாளர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சண்டையாம் என்று கூறினார்கள். அவர்கள் இதனை தமிழ் மக்கள் மீதான இனக் கலவரம் என்று  கருதவில்லை. இதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அன்றைய நிலை அதுதான். தாழ்த்தப்பட்ட சாதி மக்களையும் தமிழர்களாக உயர் சாதியினர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவர்களும் கலவரத்தினால் பாதிக்கப்பட்டது வெள்ளாளர்கள் என்று பாhத்தார்களேயொழிய தமிழர்கள் என்று கருதவில்லை.

1970களில் இதே கன்பொல்லை கிராமத்து தாழ்த்தப்பட்ட சாதி மக்களை உயர்சாதியினர் தாக்கியபோது அவர்கள் திருப்பி தாக்கினார்கள். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் துப்பாக்கி வெடிகுண்டுகள் எல்லாம் பயன்படுத்தினார்கள். அப்போது தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தார்கள். அவர்கள் நினைவாக நிறுவப்பட்ட நினைவுச் சின்னத்தை இன்றும்கூட கன்பொல்லை கிராம நுழைவாயில் காணலாம். மூன்று பேரில் இருவரின் சிலைகள் உடைக்கப்பட்டு ஒருவரின் சிலையுடன் இந்த நினைவுச்சின்னம் இன்று இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சாதி வெறியர்கள் தாழ்த்ப்பட்ட மக்களின் சிலைகளைக்கூட அனுமதிக்கவில்லை என்பதற்கு இந்த உடைந்த கன்பொல்லை தியாகிகளின் சிலையே சாட்சியாகும். 

கன்பொல்லை கிராமத்தை சேர்ந்த அந்த தாழ்த்தப்பட்ட சாதி மக்கள்  உயர் சாதியினரின் சாதீயக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெற தங்கள் கிராமத்திற்கு “கனப்பொல”என சிங்களப் பெயர் சூட்டி புத்தபிக்கு ஒருவரை வரவழைத்து புத்த ஆலயம் ஒன்றையும் உருவாக்கினார்கள். அந்த புத்த ஆலயத்திற்காக ஒரு அரச மரத்தையும் நட்டிருந்தார்கள். ஆனால் நல்ல வேளையாக சிங்கள இராணுவம் சாதி வேறுபாடு இன்றி , பிரதேச வேறுபாடு இன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தாக்கியதால் அதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் திரட்டுவது விடுதலை இயக்கங்களுக்கு இலகுவாக அமைந்தது. பின்னர் அதன் மேல் தமிழ்த் தேசியம் கட்ட முனைந்தனர். ஆனால் அதன் அடித் தளத்தில் உள்ள சாதீயப் பிரச்சனை தீர்க்கப்படாமல் அவ்வாறே உள்ளது என்ற உண்மையை இந்த தமிழ் தேசியவாதிகள் காண மறுக்கின்றனர்.

1989ம் ஆண்டுப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் இயக்கம் போராடிக் கொண்டிருந்தபோது கரவெட்டிப் பகுதியில் அதன் ஒரு பிரிவுக்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த செங்கதிர் என்பவர் பொறுப்பு வகித்தார். அவருடன் அவருடைய சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களே பெரும்பாலும் இருந்தனர். அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடினாலும்கூட அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் அவருடைய சக போராளிகளுக்கும் உயர் சாதியினர் உணவு வழங்க மறுத்தனர். தங்குமிடம் கொடுக்க மறுத்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க தயங்கினர். இதனால் அவர் பல தடவை இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளானார். தனது போராளிகள் பலரை இழந்தார். அப்போது அவரிடம்  “தமிழ் ஈழம் கிடைத்தால் என்னவாகும்?" என்று நான் கேட்டபோது அதற்கு அவர் எவ்வித தயக்கமும் இன்றி “என் சாதி மக்கள் அனைவரும் அகதிகளாக சிங்களப் பகுதியான அநுராதபுரம் செல்ல நேரிடும்” என்று கூறினார். இவ்வாறு அவர் கூறியதில் நான் எதுவும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அந்தளவுக்கு சாதியக் கொடுமைகளை அவர் அனுபவித்திருந்தார். அன்று மட்டுமல்ல இன்றும் கூட இந்த நிலைமைதான் உள்ளது. மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது மறுக்கமுடியாத,  கசப்பான உண்மையாகும்.

உண்மையாகவே தமிழ் தேசியத்தை விரும்புவோர் முதலில் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து சாதீயத்தை ஒழிப்பதற்கு முன் வரவேண்டும். அவ் வழியிலேயே தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப முயலவேண்டும். மாறாக தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அடக்கி யொடுக்கி பலவந்தமாக அவர்கள் கூறும் தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்பினால் அது என்றாவது ஒருநாள் பீறிட்டு வெடித்துக் கிளம்பி போலியாக கட்டியெழுப்பிய தமிழ் தேசியத்தையே சுக்கு நூறாக்கும். புலிகள் இயக்கத்தில் உப தளபதியாக இருந்த ராகவன் அவர்களும் “வடக்கில் நிகழும் இச் சாதிப்பிரச்சனை தீர்க்கப்படாவிடின் தமிழ் மக்கள் ஒருபோதும் விடுதலை பெறமுடியாது” என்று கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

இலங்கையில் குறிப்பாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் சாதி முறையும் தீண்டாமையும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. சாதி அமைப்பு என்பது இலங்கை முழுவதிலும் சிங்களவர் தமிழர் இருசாரார் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால் வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீண்டாமை என்ற நாசமும் சேர்ந்து இருக்கின்றது. நளவர், பள்ளர், பறையர் போன்ற சில சாதிகள் தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட சாதிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களாக மட்டுமன்றி மனிதர்களாகவும் கருதப்படவில்லை. தீண்டாமை என்பது மனிதன் மனிதனுக்குச் செய்யும் மிக மோசமான கொடுமை என்றே கூறவேண்டும்.                                      
சாதி அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் ஒரு மிச்ச சொச்சமாகும். இலங்கையில் முதலாளித்துவம் ஒழுங்காக இல்லாமல் ஏற்ற இறக்கமாக வளர்ந்துள்ள படியால்தான் சாதி அமைப்பு இன்னமும் நின்று பிடிக்கிறது. சாதி அமைப்பு இன்று ஆளும் வர்க்கத்திற்கு துணைபுரிவதால் ஆளும் வர்க்கத்தின் அரசு இயந்திரம் அது அழியாமல் இருப்பதற்கு உதவி புரிகிறது. எனவே சாதீயத்திற்கு எதிரான போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தங்களைத் தாங்களே முற்போக்கு சக்திகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இதனைப் பார்க்கவோ புரிந்து கொள்ளவோ மறுக்கின்றனர். சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க தயங்குகின்றனர். இதுவே இன்றைய துரதிருஸ்டமான நிலையாகும்.

இந்தியாவில் உயர்சாதியினரான பிராமணர் வெறும் மூன்று வீதமே சனத்தொகையில் உள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால் பாராளுமன்ற அரசியலில் சில சலுகைகளை பெறமுடிகிறது. ஆனால் இலங்கையில் வடக்குப் பகுதியில் உயர் சாதியினர் பெரும்பான்மையினராகவும் தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக சிறுபான்மையினராக இருப்பதனால் எந்தப் பாராளுமன்றக் கட்சியும் உயர் சாதியினரைப் பகைத்துக் கொள்ளவோ , புண்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக இருந்தும் கூட அவர்கள் எந்தத் தேர்தல் தொகுதியிலும் பெரும்பான்மையைப் பெறமுடியாத விதத்தில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் கமிஸன் மற்றும் அதிகார வர்க்கம் அனைத்திலும் உயர் சாதியினர் இருப்பதால் அவர்களால் இவ்வாறு தந்திரமாக செய்ய முடிந்தது. ஆனால் இந்த நிலைமை தோழர்.சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன் மாறியது. ஏனெனில் அவருடைய கட்சியானது பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்வைத்தது. அது தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சலான தலைமையைக் கொடுத்தது.

1966ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் சுன்னாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு படுத்தியது. பொலிசாரும் உயர் சாதியினரும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடுத்த நிறுத்த எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் தடைகளை உடைத்தெறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் முற்றவெளியில் திரண்டார்கள். அங்கு அவ் மக்கள் மத்தியில் உரையாற்றிய தோழர்.சண்முகதாசன்  அமெரிக்க நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு அவருடைய சகோதரர் கூறிய புத்திமதியை மேற்கோள் காட்டினார். “ஒரு போதும் அடி பணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்” என்றார். இதன்பின் நிலைமை மாறியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தோன்றினார்கள். புதிய உணர்வு கொண்ட இப் போராளிகள் அடிக்கு அடி கொடுத்தார்கள். இவர்களுடைய போராட்டம் ஆலயப்பிரவேசம் தேனீர் கடைப் பிரவேசம் பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல் ஆகியவற்றைச் சுற்றி நடைபெற்றது. ஆனால் இன்னும் வேறு வடிவங்களில் இப் போராட்டம் நடைபெற்றது. சில போராட்டங்கள் வன்முறையான வடிவத்தில் நடைபெற்றன.

தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான இப் போராட்டத்தில் பொலிசார் நீதிமன்றங்கள் அதிகாரிகள் ஆகிய முழு அரசு இயந்திரமும் உயர் சாதியினருக்கு ஆதரவாக செயற்பட்டன. மாஜி மந்திரியாகிய சுந்தரலிங்கம் போன்றவர்கள் வெளிப்படையாக உயர் சாதியினருக்கு ஆலோசகர்களாக செயற்பட்டனர். இவ் வேளையில் சங்கானை என்னும் கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் சவ ஊர்வலத்தின் பாதையை மறித்து அவ் ஊர்வலத்தின் மீது சுட்டார். இத் துப்பாக்கிச் சூட்டிற்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கண்துடைப்பிற்காக சுட்டவரைக் கைது செய்த பொலிஸ் அவரை வெறும் 250 ரூபா பிணையில் விடுவித்தது. பின்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது. போலிஸ், நீதிபதி எல்லாம் உயர் சாதியினருக்கு ஆதரவாக இருந்தமையினால் இவ்வாறு நடந்தது. எனவே இவ் அமைப்பில் தமக்கு நீதி கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போராளிகள் அன்று மாலை சங்கானைச் சந்தையில் வைத்து அக் குற்றவாளியைச் சுட்டுக்கொன்றனர். தோழர் சண்முகதாசன் சுட்டிக்காட்டியதுபோல் “அடிக்கு அடி” கொடுத்தனர். 

இதே போன்று இந்தியாவில் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி என்னும் இடத்தில் கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட சாதிக் கூலித் தொழிலாளர்களை குடிசைக்குள் பூட்டி வைத்து எரித்துக் கொன்றனர் உயர் சாதியினர். இதற்கு காரணமான பண்ணையாரை “அப்பாவி” என்று கூறி இந்திய நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் அவரை கம்யுனிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொன்றனர். இது தான் சாதிப் போராட்டத்தின் இயல்பு. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தம் கன்னத்தில் அறை விழுந்த போது மறு கன்னத்தைக் காட்டாமல் அடிக்கு அடி கொடுக்கக் கற்றுக்கொண்டார்கள். இந்த மாற்றத்திற்கு காரணம் கம்யுனிஸ்ட் கட்சிகள் இப் போராட்டத்திற்கு தலைமை அளித்ததாகும்.

இலங்கையில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியானது இப் போராட்டத்தை ஆதரிக்கக்கூடிய உயர்சாதி மக்களின் முற்போக்கான பகுதிகளை அணிதிரட்டியது. இக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் தலைமைத் தோழர்களில் சிலர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அளித்த தலைமையினால் இந்தப் போராட்டத்தின் நோக்கங்கள் சகல பகுதி மக்கள் மத்தியிலும் பரவலாயின. சிங்கள மக்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அறிமுகம் செய்ய கட்சி பெரும் நடவடிக்கை எடுத்தது. பல தேசிய தின நாளிதழ்கள் இப் போராட்டத்தைப் பற்றிய பல செய்திகளை வெளியிட்டன. சீனாவின் பீக்கிங் வானொலி அதன் ஆதரவை இதற்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும். 

தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல வடிவக் கலாச்சார நிகழ்ச்சிகளும் அப்போது இடம்பெற்றன என்பதைக் குறிப்பிடவேண்டும். அற்புதமான பல கவிதைகள் பாடல்கள் தோன்றின. நூற்றுக்கு மேலான தடவை அரங்கேற்றப்பட்ட “கந்தன் கருணை” என்னும் சிறப்பான நாடகமும் தயாரித்தளித்தார்கள்.

இந்து மதத்தின்படி கந்தபெருமானுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி வள்ளி “குறவர்” என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இதனால் நாரதர் கந்தபெருமானிடம் சென்று இலங்கையில் வடக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் உயர் சாதியினரால் இம்சிக்கப்படுவதாக முறையிடுவதுடன் இவ் நாடகம் ஆரம்பிக்கின்றது. இதைக் கேட்ட கந்தபெருமான் கோபம் கொண்டு இதற்கு தண்டனை வழங்க பூமிக்கு வருகிறார். அவரின் பெயர் கந்தன் என்பதால் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொண்ட உயர்சாதியினர் அவரை முருகன் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட கந்தபெருமான் உயர் சாதியினர் மீது எறிவதற்காக தனது ஆயுதமாகிய “வேல்” ஜ உயர்த்தினார். அப்போது நாரதர் இடைமறித்து  “இந்த ஆயுதத்தை மக்களிடம் கொடுங்கள். அவர்கள் பாவிக்கட்டும்” என்று கூறுகின்றார். இந்த மாவோயிச அரசியல் தத்துவத்துடன் அவ் நாடகம் முடிவடைகின்றது.

புரட்சிகர கலை எப்படி புரட்சிகர இயக்கத்தை முன் தள்ளிவிடமுடியும் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும். புரட்சிகர நடைமுறையின்றி புரட்சிகர கலை பிறக்காது என்பதையும் அது தெளிவாக்கிறது. நடைமுறைதான் பிரதானமானது. ஆனால் புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும் புரட்சிகரக் கலை புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்தள்ளி விட உதவுகின்றது. சூன்யத்தில்  நாம் புரட்சிகரக் கலையை உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின் அங்கமாக அது உருவாகின்றது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடும்படும் தலைவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் மற்றும் டாக்டர் கிருஸ்ணசாமி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அவர்களது தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தையும் உறுதியாக ஆதரித்தவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் சாதி விடுதலை அடையாமல் தமிழ் தேசிய விடுதலை அடைய முடியாது என்கிறார்கள். அதாவது தமிழ் தேசிய விடுதலைக்கு சாதி விடுதலை முக்கியமான முன் நிபந்தனை என்கிறார்கள். இது சரியான நிலைப்பாடுதான். ஆனால் இவர்கள் ஈழப்பிரச்சனையில் தமது இந்த நிலைக்கு மாறாக தமிழீழ விடுதலை அடைந்தால் சாதீய விடுதலை அடையலாம் என்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் யாழ்ப்பாணம், வன்னி வந்து விடுதலைப்புலிகள் அமைப்பு தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து புலிகளிடம் வலியுறுத்துவார் என தாழத்தப்பட்ட சாதி மக்கள் நம்பினார்கள். எதிர்பார்த்தார்கள். ஆனால் திருமாவளவனோ தமிழீழ விடுதலை அடைந்த பின் சாதீய விடுதலை அடையலாம் எனக்கூறியது அந்த மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

திருமாவளவன் யாழ்ப்பாண தாழ்த்தப்பட்ட சாதி மக்களை ஏமாற்றியது அச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் தனது சொந்த தமிழ்நாட்டு மக்களையும் தேர்தல் பாதை மூலம் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றார். அவரும் டாக்டர் கிருஸ்ணசாமியும் தங்களை நம்பிய தாழ்த்தப்பட்ட சாதி மக்களை வைத்து பேரம்பேசி ஒரு சில தொகுதிகளைப் பெற்று ஓட்டு அரசியல் செய்கின்றனரேயொழிய அந்த மக்களின் விடுதலைக்காக உண்மையாக உழைக்க வில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இந்த சாதீய கொடுமைகளுக்கு என்ன தீர்வு? இந்த தீர்வை தமிழ்மக்கள் எவ்வாறு சென்றடைவது? தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வாக எப்போதும் இரண்டு வழியை நாடுகிறார்கள். ஒன்று கடவுள் இன்னொன்று தேர்தல். இந்த இரண்டும் எப்போதும் அவர்களுக்கு உதவியதில்லை என்று அனுபவரீதியாக உணர்ந்தும் மீண்டும் அந்த வழிகளையே தேர்தெடுக்கிறார்கள். பிரச்சினைகளை எதிர்த்து போராடுவதைவிட இந்த இரண்டு வழிகளும் அவர்களுக்கு சுலபமாகவும் சுவாரஸ்யங்கள் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பதாலும் இவைகளையே அவர்கள் விரும்புகிறார்கள். 

ஆனால் தமிழ்நாடு விடுதலையை ஆயுதப் போராட்ட பாதையில் முன்னெடுத்த தோழர் தமிழரசன் இந்த சாதீயக் கொடுமைகளை நன்கு உணர்ந்திருந்தார். அவர் இந்த சாதீயம் குறித்து ஆராய்ந்து “மீன்சுருட்டி அறிக்கை” என்னும் சிறப்பான அறிக்கையை முன்வைத்திருக்கிறார். அதில் அவர் சாதியை ஒழிப்பது தமிழ்தேசிய விடுதலைக்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை வீழ்த்தவும் உடனடி அவசியம் என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.

தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் 
(1) சாதியமைப்பு என்றால் என்ன? 
(2) சாதி தோன்ற காரணம் என்ன? 
(3) சாதி நீடிக்க காரணம் என்ன? 
(4) சாதியமைப்பு எப்போது தோன்றியது? 
(5) சாதியமைப்பு தோன்றியது எப்படி? 
(6) சாதிகள் எப்படி பெருகின? 
(7) சாதியைக் காப்பவர்கள் யார்? 
(8) சாதியை ஒழிக்க வேண்டிய அவசியம் என்ன? 
(9)சாதியை அழிக்கக்கூடியவர்கள் யார்? 
(10) சாதி ஒழிப்பு போராட்ட வரலாறு என்ன? 
(11) சாதிகளை ஒழிப்பது எப்படி? 
என்ற பதினொரு தலைப்புகளில் சாதி குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். 

தனது அறிக்கையில் அம்பேத்காரியம்  பெரியாரியம் போன்றவற்றின் போதாமையைச் சுட்டிக்காட்டியிருக்கும் தோழர் தமிழரசன் அவற்றை புறக்கணிக்காமல் அவற்றையும் உள்வாங்கி மாக்சியக் கண்ணோட்டத்தில் சாதிப் பிரச்சனையை அணுகியதும் அதற்கு உகந்த தீர்வை முன்வைத்திருப்பதும் உண்மையிலே மாபெரும் சாதனையாகும். சாதி ஒழிப்பிற்கு தோழர் தமிழரசன் வழங்கியிருக்கும் மிகப் பெரிய பங்களிப்பாகவே இந்த மீன்சுருட்டி அறிக்கை இருக்கின்றது.

தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார் 
"நிலபிரபுத்துவ சாதியமைப்பு தினமும் சாதிவெறி மதவெறியைத் தூண்டி வருகிறது. மக்களின் சனநாயக உரிமைகளை மறுத்து வருகிறது. சாதி ரீதியில் பிரித்து பிரித்துக் கையாள்கிறது. கிராம நிர்வாகத்திலும் அன்றாட கிராம நடைமுறையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறருக்கும் சம உரிமைகளைத் தர மறுக்கிறது. ஒதுக்கி வைக்கிறது. இதனால் பிரித்து ஒதுக்கும் நடைமுறைகளை எதிர்த்தும், சம உரிமைக்காகவும் பாதிக்கப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் போராட வேண்டிய கட்டாயம் எழுகிறது. அதுவே சாதி மோதல் வடிவத்தில் வெடிக்கிறது. சாதிப் பிரச்சனை ஒவ்வொன்றுமே ஜனநாயக உரிமைக்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களைப் பாட்டாளி வர்க்கக் கட்சி வறட்டுவாதங்களில் சிக்கி சரியான நிலை எடுக்கத் தவறுவதால் நிலபிரபுத்துவ சாதிவெறிக் கொடுமையிலிருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தால் மக்கள் அச்சாதிவெறிக் கொடுமைகளைத் தீர்ப்பதாகக்கூறிக்கொண்டிருக்கும் பிற்போக்குவாதிகளின் வர்க்க சமரச சீர்திருத்தவாதிகளின் பின்னால் ஓடுகிறார்கள். பிற்போக்கு வாதிகளின் நோக்கம் உழைக்கும் மக்களை ஒன்றுபட்டுவிடாதபடி பிரித்துவைத்திருப்பதே என்பதால் சனநாயக உரிமையை வழங்குவதை என்றுமே தீர்ப்பதில்லை. சீர்திருத்தவாதிகளோ மதமாற்றம் வகுப்புவாரி ஒதுக்கீடு சாதி சங்கம் என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்று பிரச்சனையை ஓரிரு எலும்புத் துண்டோடு நிறுத்திவிடுகிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றிச் சாதிகளையே ஒழிப்பதை நோக்கி இட்டுச் செல்வதில்லை. சாதிப் பிரச்சனை என்பது சனநாய பிரச்சனையில் சாதி ஒழிப்பின் வடிவமே. இது இந்தியாவிற்கு மட்டுமே இந்தியத் துணைக்கண்டப் புரட்சிக்கு மட்டுமே உரியதென்பதால் மற்ற நாட்டு புரட்சி போலல்லாமல் இதற்குத் தனி கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே தீர்க்கப்பட முடியுமென்பதால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து சனநாயகப் போராட்டங்களுடனும் அதாவது புதிய சனநாயகப் புரட்சிக்குரிய சனநாயகப் போராட்டங்களுடனும் இணைக்கப்படவேண்டும். சாதி ஒழிப்புப் போராட்டங்கள் உழவர் விடுதலை தமிழக விடுதலைப் போராட்டங்களுடன் இணைக்கப்பட்டாக வேண்டும்."

மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் தமது கருத்துகளை முன்வைத்தள்ள தோழர் தமிழரசன் அவர்கள் தனது அறிக்கையின் இறுதியில் பின்வரும் கோசங்களை முன்வைக்கிறார்.

•பிற்போக்கு வாதிகளின் மதவெறி சாதிவெறி பிரித்தொதுக்கும் முயற்சிகளை முறியடிப்போம்.

•உழைக்கும் மக்களைச் சாதி ஒழிப்பின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவோம்.

•வறட்டுவாதிகளின் சீர்திருத்தவாதிகளின் தவறான அணுகுமுறைகளை முறியடித்து சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

•தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா!

•தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடமே சேரிகள்!

•நிலப்பிரபுத்துவத்தின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பே சாதியமைப்பு!

•நிலப்பிரபுத்துவத்துக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடே சாதி மோதல்கள்!

•சாதி ஒழிப்பின் எதிரிகள் ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளே!

•சாதிகளை ஒழிக்கக்கூடிய முன்னணி சக்திகள் தாழ்த்தப்பட்டவர்களே!

•அதிகாரத்தையும், நிலத்தையும் கைப்பற்றாமல் தாழ்த்தப்பட்டவர்களால் சாதிகளை ஒழிக்க முடியாது.

•பாட்டாளி வர்க்கத் தலைமையில்லாமல் உழைக்கும் மக்களை அணிசேர்க்காமல் தாழ்த்தப்பட்டவர்களால் அதிகாரத்தை வெல்லவே முடியாது.

தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பிற்கான திட்டத்தை முன்வைத்தவர் மட்டுமல்ல அதனை நடைமுறையாகவும் கொண்ட ஒரு நடைமுறைவாதியும்கூட. இதற்கு பல உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும். ஆனால் நான் இங்கு எமது தோழர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை இங்கு தருவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். 

1984ல் பெரம்பலூருக்கு அருகில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த எமது அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்து வந்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அங்கு அழைத்துச் சென்றார்.

உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் அங்கிருந்த குளத்தில் குளிக்கலாம் என்று தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஓடியவர்கள் குளிக்காமல் அக் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் "ஏன் குளிக்கவில்லை?" என்று வினவினார்.

எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனையை ஏற்றுக்கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் தொடர்ந்தும் இருக்கவே செய்தது.

அந்த குளம் குட்டையாக இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினார்கள். இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று மாவோ கூறினார் “ என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்டதும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் உடனே “புரட்சி ஓங்குக” என்று உரத்து கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.

பின்பு சாப்பிடுவதற்காக அனைவரும் அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர்களே மாவோ வின் வரிகளை உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.

இங்கு என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கிய எமது தோழர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டதாகும். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார். ஆனால் இங்கு நான் இச் சம்பவத்தை சுட்டிக்காட்ட விரும்பியது ஏனென்றால் சாதி கொடுமை குறித்தும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுடன் புரட்சியாளர்கள் எப்படி பழக வேண்டும் என்பது குறித்தும் பக்கம் பக்கமாக எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாத அந்த விடயத்தை ஒரு சம்பவம் மூலம் தோழர் தமிழரசன் எமது தோழர்கள் மத்தியில் நன்கு புரிய வைத்தமையாகும்.

1984ல்  நானும் எமது தோழர்களும் சென்னையில் மடிப்பாக்கம் என்னும் இடத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். தோழர் தமிழரசன் சென்னைக்கு வரும் போதெல்லாம் எமது அந்த வீட்டிலேயே வந்து தங்குவார். அவருடைய நண்பர் ஒருவர் பஸ் கண்டக்டராக இருந்தார். அவருயை பஸ்சிலேதான் பெரும்பாலும் வருவார். ஏனெனில் அதில் வந்தால் அவருக்கு டிக்கட் காசு மிச்சமாகும். திட்டக்குடியில் இருந்து வரும் அந்த பஸ் சென்னைக்கு நள்ளிரவிலேயே வந்து சேரும். அந்த நேரம் பரங்கிமலையில் இருந்து மடிப்பாக்கம் வருவதற்கு பஸ் இருக்காது. குதிரை வண்டி அல்லது ஆட்டோவிலேதான் வரவேண்டும். அவரிடம் அதற்கு தேவையான பணம் இருந்தாலும்கூட அந்த பணத்தை மிச்சப்படுத்துவதற்காக பரங்கிமலையில் இருந்து மடிப்பாக்கத்திற்கு நடந்தே வருவார்.

எமது மடிப்பாக்கம் வீட்டில் எமது தோழர்கள் , ஆதரவாளர்கள் மற்றும் டெலோ, புளட் போன்ற இயக்கங்களில் இருந்து விலகி பாதுகாப்பிற்காக எமது இடத்தில் வந்து தங்கியவர்கள் என எப்போதும் குறைந்தது 40 பேராவது இருப்பார்கள். எனவே அவர்களுக்கு மட்டுமன்றி விருந்தினர்களாக வருபவர்களுக்கும் என எப்போதும் சமைத்த உணவு இருக்கும். இதை தெரிந்துகொண்ட தோழர் தமிழரசன் என்ன நேரமாயினும் எப்போதும் எமது வீட்டிற்கு வந்துதான் சாப்பிடுவார். இடையில் எங்கேயும் உணவு உண்ணமாட்டார். அதேபோல் தோழர் தமிழரசன் வருகிறார் என்றால் எமது தோழர்கள் எல்லோரும் மிகவும் சந்தோசப்படுவார்கள். அவர் எவ்வித பந்தாவும் இன்றி அனைவருடனும் சகஜமாக, எளிமையாக தோழமையோடு பழகுவார். அவரை நாம் எல்லோரும் “பெரியவர்" என்று அழைத்தோம்.

தோழர் தமிழரசன் சாப்பிடுவது எமது தோழர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். ஏனெனில் அவர் ஒருபோதும் முதலில் சாப்பிடமாட்டார். எல்லோரும் சாப்பிட்ட பிறகு "எல்லோரும் சாப்பிட்டுவிட்டீர்களா?" எனக் கேட்டு உறுதி செய்த பின்பே சாப்பிடுவார். அதேபோல் என்ன கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் எந்தவித குறையும் கூறாது சாப்பிடுவார். அதிகம் இருந்தாலும் மீதிவைக்காமல் அவ்வளவற்றையும் சாப்பிடுவார். அதே நேரத்தில் கொஞ்சமாக இருந்தாலும் திருப்தியாக சாப்பிடுவார். குறிப்பாக நாம் பொதுவாக காரம் அதிகம் சேர்த்து உணவு தயாரிப்போம். மேலும் பெரும்பாலும் மாட்டிறைச்சிக்கறியே சமைப்போம். ஆனால் அவர் இது குறித்த எந்த விருப்பு வெறுப்பும் கூறியதில்லை. மாறாக ருசித்து சாப்பிடுவார். 

இரவு உணவு உட்கொண்ட பின்பு தோழர் தமிழரசன் அங்கிருக்கும் அனைத்து தோழர்களுடனும் உரையாடிவிட்டே உறங்குவார். அப்போது அவர்களின் தனிப்பட்ட மற்றும் இயக்க பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறுவார். அவர்களின் அனுபவங்களை குறிப்பாக தாக்குதல் அனுபவங்களை மிகவும் விரும்பிக் கேட்பார். அவருக்கு ஈழத்து இயக்க பிரச்சனைகள் மற்றும் அனைத்து விபரங்களும் அறிந்து கொள்வதற்கு இந்த உரையாடல்கள் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறது.

தோழர் தமிழரசன் எமது தோழர்களுடன் மிகவும் தோழமையுடன் பழகினார். அவருடைய தோழமை ஒருபோதும் மறக்க முடியாதது. அவர் அவ்வாறு பழகும் வேளைகளில் எம்மிடமிருந்து தானும் கற்றுக்கொண்டார். அதேபோல் எமக்கு பலவற்றையும் கற்றுக்கொடுத்தார். தோழர் மாசேதுங் கூறிய "மக்களுடன் சேர்ந்து உழையுங்கள், மக்களுடன் சேர்ந்து உண்ணுங்கள், மக்களுடன் சேர்ந்து உறங்குங்கள்" என்பதையும் தோழர் தமிழரசனே எமக்கு கற்றுக்கொடுத்தார்.  மாசேதுங் கூறிய " மக்களுக்கு கற்றுக் கொடுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்" என்பதையும் தோழர் தமிழரசனிடமிருந்தே நாங்கள் கற்றுக்கொண்டோம்.

இன்று தோழர் தமிழரசன் குறித்து பலரும் வெளிப்படையாக ஆதரித்து பேசியும் எழுதியும் வருகின்றனர். சுமார் 25 வருடங்களின் பின்னர் தமிழகத்தின் பல பாகங்களில் தோழர் தமிழரசன் நினைவு தினம் கொண்டாடப்படுவது உண்மையிலே மிக்க மகிழ்வு தருகிறது. ஆனால் அன்று அப்படி நிலை இருக்கவில்லை. தமிழரசனின் போராட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட வெளிப்படையாக ஆதரிக்க தயங்கினார்கள். அந்தளவுக்கு கியூ பிராஞ் பொலிசின் அடக்கு முறைகளும் நெருக்கடிகளும் இருந்தன.

தோழர் தமிழரசனின் நெருங்கிய ஆதரவாளர்கள் அவரை காட்டிக் கொடுக்கும்படி நெருக்கப்பட்டார்கள். தோழர் தமிழரசன் அடிக்கடி செல்லும் ஒரு ஆதரவாளரை இனங்கண்டு கொண்ட உளவுப்படை பொலிசார் அவரிடம் நஞ்சைக் கொடுத்து அதை சாப்பாட்டில் கலந்து கொடுக்கும்படி வற்புறுத்தினார்கள். இல்லையேல் அவருடைய குடும்பத்தை சின்னா பின்னமாக்குவோம், மனைவியை விபச்சார வழக்கில் கைது செய்வோம், மகளை மானபங்பப்படுத்துவோம் என்றெல்லாம் மிரட்டியிருந்தனர். அந்த ஆதரவாளரும் பயந்து வேறு வழியின்றி சம்மதித்தார்.

வழக்கம்போல் ஒரு நாள் தோழர் தமிழரசன் அந்த ஆதரவாளர் வீட்டுக்கு வருகை தந்தபோது அந்த ஆதரவாளர் சாப்பாட்டில் நஞ்சைக் கலந்து கொடுத்திருக்கிறார். கொடுக்கும்போது அவரது மனட்சாட்சி உறுத்தியதால் கைகள் நடுங்கியிருக்கிறது. இதை அவதானித்த தோழர் தமிழரசன் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு தனக்கு பசிக்கவில்லை என்று கூறிவிட்டு சாப்பிடாமல் சென்றுவிட்டார்.

அதேபோல் இன்னொருமுறை வேறொரு ஆதரவாளர் வீட்டுக்கு தமிழரசன் சென்றபோது அவரது வருகை ஒரு உளவாளி மூலம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தமிழரசன் தனி ஆள் தானே . இலகுவாக கைது செயயலாம் என்று நினைத்து ஒரு சப் இன்பெக்டரும் நாலு காவலரும் ஜீப் வண்டியில் சென்றுள்ளனர். இரவு நேரம். தமிழரசன் வெளியில் வரட்டும் கைது செய்யலாம் என நினைத்து வீதியோரத்தில் பதுங்கியிருந்தனர். வெளியே வந்த தமிழரசன் தனது மோட்டார் வண்டியில் ஏறு முன்னர் வழக்கம்போல் தனது சப் மிசின்கன் துப்பாக்கியை சரிபார்த்திருக்கிறார்.

அவர் எப்போதும் பயணம் செய்யும்போது துப்பாக்கியை சரி பார்ப்பது வழக்கம். (லோட் செய்து லாக்கில் தயார் நிலையில் வைத்திருப்பார்). அவர் சப் மிசின்கன் துப்பாக்கி வைத்திருப்பதை பார்த்து திடுக்கிட்ட பொலிசார் பயந்து அவரை கைது செய்ய முயற்சிக்காமல் அப்படியே பதுங்கி இருந்துவிட்டனர். எனெனில் அவர்களிடம் ஒரேயொரு துப்பாக்கி அதுவும் 303 ரைபிள் துப்பாக்கியே அப்போது இருந்திருக்கிறது. அடுத்தநாள் தகவல் கொடுத்தவரை “ஏன்டா, அவன் மிசின்கன் வைத்திருப்பதை எங்களுக்கு முன்னரே சொல்லவில்லை. நல்ல காலம். நேற்று எங்களை கொல்லப் பார்த்தியே” என்று செல்லி அடித்தார்களாம்.

சந்தன வீரப்பன் போல் காட்டில் இருந்தால்தான் பொலிசில் இருந்து தப்பிக்க முடியும் என சிலர் என்னிடம் கூறுவதுண்டு. ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் மக்கள் மத்தியிலேயே இருக்க முடியும் என்பதற்கு தோழர் தமிழரசன் ஒரு நல்ல உதாரணமாக நான் காட்டுவேன். அவர் மோட்டார் சயிக்கிளில் எப்போதும் துப்பாக்கியுடன் செல்வார். அதற்கு லைசென்ஸ் கிடையாது. அது அவருடைய வண்டியும் கிடையாது. ஒரு பண்ணையாரிடம் பறித்தெடுத்தது. இருந்தும் அவர் இறக்கும்வரை பொலிசில் பிடிபட்டது கிடையாது.

தோழர் தமிழரசன் அவர்கள் வன்னிய சாதியை சேர்ந்;தவராயினும் அவர் அனைத்து மக்களுடனும் தோழமையுடன் பழகி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அவர் சாதி ஒழிப்பு குறித்து மீன்சுருட்டி அறிக்கை என்னும் அற்புதமான திட்டத்தை முன்வைத்துள்ளார். ஆனால் பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் அந்த  அறிக்கையை மட்டுமன்றி தமிழரசனையே பேசாமல் தவிர்க்கின்றன. இந்த நிலையில் நான் அறிந்தவரையில் “விடுதலைசிறுத்தைகள்” கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தோழர் தமிழரசன் பெயரை உச்சரித்ததோடு அவர் தியாகத்தையும் பாராட்டியுள்ளார். 2007ம் ஆண்டு பெண்ணாடத்தில்  நடைபெற்ற புலவர் கலியபெருமாளின் நிவைஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தோழர் தமிழரசனின் மரணம் காவல்துறையால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டசதி என்றும் அது தமிழத்; தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்றும் அவர் வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வன்னிய சங்கம் அமைத்து வன்னிய சாதிக்காக குரல் கொடுப்பதாக கூறும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தோழர் தமிழரசன் ஒரு வன்னியர் என்ற போதிலும்கூட அவர் பெயரை ஒருபோதும் உச்சரித்ததில்லை. மாறாக அவரது அமைப்பைச் சேர்ந்த காடுவெட்டி குரு என்பவர் “ பா.ம.க இல்லையேல் வன்னிய இளைஞர்கள் எல்லாம் நக்சலைட்டாக மாறியிருப்பார்கள்” என்று பேசியது ராமதாசை மட்டுமல்ல சாதீய அமைப்பகளை மத்திய புலனாய்வு துறையே ஊக்கம் கொடுத்து உருவாக்கிறது என்ற சந்தேகத்தை உறுதி செய்வதாக அமைகிறது.

பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம்.  அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது|| என்று மாபெரும் ஆசான் மாவோ அவர்கள் குறிப்பிட்டதுபோல் இந்திய அரசு தோழர் தமிழரசனை அடித்து கொல்வதன் மூலமோ அல்லது சாதீய சங்கங்களை உருவாக்கி தமிழினத்தைப் பிரித்து வைக்க முயல்வதன் மூலமோ தமிழக மக்களின் விடுதலைப் போராட்டத்தை  தடுத்து நிறுத்திவிட முடியாது. மாறாக ஓராயிரம் தமிழரசன்கள் உருவாகுவார்கள். அவர்கள் தமிழக விடுதலையை வென்றெடுப்பார்கள். இது உறுதி.





.


















No comments:

Post a Comment