Saturday, January 30, 2021

யாழ் இந்திய தூதுவர் இனியாவது திருந்துவாரா?

•யாழ் இந்திய தூதுவர் இனியாவது திருந்துவாரா? வல்லரசு நாடுகள்கூட இலங்கையில் ஒரு தூதுவராலயமே வைத்திருக்கின்றன. ஆனால் இந்திய அரசோ கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, அம்பாந்தோட்டை என நான்கு இடங்களில் நான்கு தூதுவராலயங்களை வைத்திருக்கின்றன. பொதுவாக இலங்கையை ஆக்கிரமிப்பதே இதன் நோக்கமாக இருந்தாலும் யாழ்ப்பாண இந்திய தூதுவரோ தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களையே தொடர்ந்து செய்து வருகிறார். அண்மையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக சில ஈழத் தமிழ் மீனவ சங்கங்களின் பெயரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின்னாலும் இந்த யாழ் இந்திய தூதுவரே இருந்தார். இதன் மூலம் தமிழக தமிழ் மக்களையும் ஈழத் தமிழ் மக்களையும் பிரிப்பதே இவரின் நோக்கமாக இருந்தது. தொப்புள்கொடி உறவை இல்லாமல் செய்வதே இவரின் கனவாக இருக்கிறது. ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இவருக்கு தக்க பதில் அளித்துள்ளார்கள். ஆம். அவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு தமிழக மீனவர்களுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தூதுவரின் முகத்தில் ஓங்கி குத்தி நிரூபித்துள்ளார்கள். அதேவேளை டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடநதுள்ளது என்ற செய்தியும் வருகிறது. இனியாவது யாழ் இந்திய தூதுவர் திருந்துவாரா? தமிழ் மக்களுக்கு எதிரான சதிவேலைகளை நிறுத்துவாரா?

No comments:

Post a Comment