Monday, April 29, 2019

தோழர் தமிழரசனை ஏன் நினைவு கூர வேண்டும்?

•தோழர் தமிழரசனை ஏன் நினைவு கூர வேண்டும்?
எதிர்வரும் 14.04.2019 யன்று தோழர் தமிழரசனின் 74வது பிறந்ததினம் ஆகும். இந்த நாளில் நாம் ஏன் அவரை நினைவு கூர வேண்டும்?
தோழர் தமிழரசன் மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைகளை பின்பற்றியதால் நினைவு கூர வேண்டுமா?
இல்லை. அவரைப் போல் வேறு பலரும் இந்த தத்துவங்களை பின்பற்றியிருக்கின்றனர்.
அப்படியென்றால், தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததால் அவரை நினைவு கூர வேண்டுமா?
இல்லை. அவருக்கு முன்னரும் பலர் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்துள்ளனர்.
தேர்தல் பாதையை நிராகரித்ததால் அவரை நினைவு கூர வேண்டுமா?
இல்லை. அவரைப் போல் பலர் தேர்தல் பாதையை நிராகரித்துள்ளனர்.
அப்படியென்றால் எதற்காக அவரை நாம் நினைவு கூர வேண்டும்?
அவர்தான் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தவர்.
அவர்தான் தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டியவர்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என கூறியவர் தோழர் தமிழரசன்.
தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஈழத் தமிழனும் விடுதலை அடைவான் என்று கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்து முழு இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவாது. மாறாக மாபெரும் தமிழ் இன அழிவை மேற்கொள்ளும் என்று முள்ளிவாய்க்கால் அவலத்தை அன்றே எதிர்வு கூறியவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கலக்க வேண்டும் என்று கூறியதோடு தானே அதற்கு முன்மாதிரியாக விளங்க முயற்சி செய்தவர் தோழர் தமிழரசன்.
தோழர் தமிழரசன் தமிழ் மக்களுக்காக உண்மையாகவே போராடினார். அதனால்தான் அவர் உளவுப்படைகளின் மூலம் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான் தோழர் தமிழரசன் நினைவு கூரப்பட வேண்டும் என்கிறோம்.

No comments:

Post a Comment