Sunday, June 30, 2024

இந்தியாவில் 40 வருடமாக

•இந்தியாவில் 40 வருடமாக அகதியாகவே இருக்கும் ஈழத் தமிழர் நிலை எப்போது மாறும்? ஒரு கூட்டம் மக்கள் அகதியாகவே பிறந்து அகதியாகவே வாழ்ந்து அகதியாகவே இறந்துவிடும் கொடுமையை என்னவென்பது? அதுவும் ஈழத் தமிழ் இனத்திற்கு இக் கொடுமை வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் நிகழ்வதை என்னவென்பது? அகதியாக சென்ற ஈழத் தமிழரை கனடா வாழ வைக்கிறது, பிரிட்டன் வாழ வைக்கிறது ஐரோப்பா அவுஸ்ரேலியா எல்லாம் வாழ வைக்கிறது. ஆனால் தொப்புள்கொடி உறவுகள் என்று நம்பிச் சென்ற தமிழ்நாடு மட்டும் ஏன் சிறப்பு முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது? இந்தியா சென்ற தீபெத் அகதிகள் நன்றாக வாழ முடியும். பர்மா மற்றும் நேபாள அகதிகள்கூட வாழ முடியும். ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் வாழ முடியாது என்றால் என்ன அர்த்தம்? பாகிஸ்தானில் இருந்துவரும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு, ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்? இங்கு வேதனை என்னவென்றால் சிறிமா சாத்திரி ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிய 30000 இந்திய வம்சாவழித் தமிழர்களுக்குகூட இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை. அதைவிடக் கொடுமை என்னவெனில் இவ் ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிய சிலர் கொடைக்கானலில் குடியேற்றப்பட்டார்கள். அவர்கள் வன இலகாவுக்கு சொந்தமான நிலத்தில் இருப்பதாக கூறி அவர்களை வெளியேறும்படி தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழித் தமிழரின் உண்மைநிலை இப்படி இருக்க, இலங்கையில் ஈழத் தமிழர் மலையக தமிழர் மீது அக்கறை காட்டவில்லை என்று திராவிடம் ஒப்பாரி வைக்கிறது. வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் என்று புத்தகம் எழுதி வெளியிடுகிறது. திம்பு பேச்சுவார்த்தையில் போராளிகள் முன்வைத்த முதல் கோரிக்கையே மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை எப்படி இத் திராவிடத்திற்கு நினைவூட்டுவது?

No comments:

Post a Comment