Friday, March 31, 2017

"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் நினவு நாள் இன்று ஆகும்.(29.03.2017)
தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தார் தோழர் லெனின்.
தோழர் லெனின் என்றவுடன் எல்லோரும் போல எனக்கும் நினைவுக்கு வருவது ரஸ்சியப் புரட்சியின் நாயகன் மாபெரும் ஆசான் தோழர் லெனினைத்தான். ஆனால் அதற்கடுத்து எனக்கு நினைவுக்கு வருவது தமிழ்நாடு விடுதலைப்படையை முன்னெடுத்த தோழர் லெனினே.
தோழர் லெனினை எனக்கு அறிமுகப்படுத்தியவர் புலவர் கலியப்பெருமாள் அவர்களே. ஒருமுறை புலவரை சந்திப்பதற்காக அவரது பெண்ணாடம் வீட்டிற்கு சென்ற போது ஒரு துடிப்பான இளைஞரைக் காட்டி இவர் எமது அமைப்பு தோழர், பெயர் லெனின் என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் லெனின் பெயர் கொண்டவர்களை ஈழத்திலோ அல்லது தமிழகத்திலோ நான் இதற்கு முன்னர் சந்தித்ததில்லை. எனவே புலவரிடம் லெனின் என்பது அவரது சொந்தப் பெயரா? அல்லது அமைப்பு பெயரா எனக் கேட்டேன்.
புலவர் எனது கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக "இவரது அப்பா ஒரு மாக்சிய உணர்வாளர். அதனால்தான் அவர் தன் மகனுக்கு லெனின் என பெயர் வைத்திருக்கிறார்" என்று காரணத்தை விளக்கினார்.
புலவரை சந்தித்துப் பேசிய பின்பு நான் பெண்ணாடம் பஸ் நிலையத்திற்கு திரும்பி வந்தேன். அப்போது லெனின்தான் என்னை தனது சயிக்கிளில் ஏற்றிச் சென்று இறக்கிவிட்டார். அதுமட்டுமல்ல எனக்குரிய பஸ் வரும்வரை காத்திருந்து எனக்கு காப்பி வாங்கித் தந்து உரையாடினார். அப்போது அவருடனான உரையாடலில் போராட்டத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை நான் உணர்ந்தேன்.
19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார்.
தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் 06.04.1991 யன்று அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார்.
தோழர் லெனின் 17.11.1993 யன்று செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார்.
தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார்.
தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும்.
தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
குறிப்பு- தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.

No comments:

Post a Comment