Thursday, March 31, 2016

•சீ... வெட்கம்!

•சீ... வெட்கம்!
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா ?
செய்தி- தமிழ் அதிகாரிகள் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தெரிவிப்பு
தமிழ் மாணவி வித்யா தமிழ் காடையர் சிலரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
தமிழ் மாணவி ஹரிஸ்ணவி தமிழன் ஒருவனால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
தமிழ் மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றமைக்காக பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் கிரிசாந்தி என்ற மாணவி ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இன்று அந்த சந்திரிக்கா அம்மையாரே தமிழர்களைப் பார்த்து தமிழ் அதிகாரிகள் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
என்னே கொடுமை இது? தமிழ் மக்களால் தமிழ் பெண்களை பாதுகாக்க முடியாதா?
தமிழ் மகாணசபை முதல்வர் இருக்கிறார்.
தமிழ் எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார்
தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள
தமிழ் பிரதேசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட தமிழ் இந்திய தூதர் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்.
இவர்கள் எல்லாம் இருந்தும் ஏன் தமிழ் பெண்களை பாதுகாக்க முடியவில்லை?
இந்திய வீட்டு திட்டத்தை பெறுவதற்கு அதிகாரிகள் பாலியல் லஞ்சம் கோருகிறார்கள் என்று இந்திய தூதரிடமே தமிழ்பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தமிழ்மக்கள் எல்லாம் இந்தி படியுங்கள் என்று அக்கறையாக கூறிய அந்த தமிழ் இந்திய தூதர் தமிழ் பெண்களின் இந்த பாலியல் வல்லுறவு முறைப்பாடு குறித்து அக்கறையின்றி இருக்கிறார்.
பொலிஸ் அதிகாரம் தமிழர் கையில் இல்லை என்பதால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சிலர் கூறுவதும் உண்மைதான்.
ஆனால் பொலிஸ் அதிகாரம் உள்ள சிங்களப் பகுதியிலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கத்தானே செய்கிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது? அதிகாரம் மட்டுமல்ல இவ்வாறான சம்பவங்களை தடுக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையும் எமது அரசியல் தலைவர்களுக்கு வரவேண்டும்.
ஒருபுறம் பொலிஸ் மூலம் அடக்குவதோடு மறுபுறம் இதற்குரிய சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
எமது தலைவர்கள் தமிழ் மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்வதில்லை. மாறாக ,
அடுத்த தேர்தலில் எப்படி பதவி பெறுவது?
எப்படி தமக்கு சம்பள உயர்வு பெறுவது?
எத்தனை சொகுசு வாகனம் இறக்குமதி செய்வது?
எந்த வெளிநாட்டு சென்று என்ன பட்டம் பெறுவது?
என்பன குறித்தே அக்கறை கொள்கின்றனர்.
மாபெரும் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றினை; சொந்தமாகக்கொண்ட தமிழினம் இன்று தன் இனப் பெண்களையே பாலியல் வல்லுறவில் இருந்து பாதுகாக்க முடியாமல் இருப்பது வெட்கம் மட்டுமல்ல வேதனையும் கூட.

No comments:

Post a Comment