Thursday, March 31, 2016

அன்று சோசலிசதமிழீழம் கேட்ட கவிஞர் காசிஅனந்தன் இன்று இந்து தமிழீழம் கேட்பது யாருக்காக?

அன்று சோசலிசதமிழீழம் கேட்ட கவிஞர் காசிஅனந்தன்
இன்று இந்து தமிழீழம் கேட்பது யாருக்காக?
செய்தி- "இந்து தமிழீழம்" அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று கவிஞர் காசி ஆனந்தன் அய்யா கோரிக்கை.
• முன்னர் "சோசலிச தமிழீழம்" அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று கோரிய காசி ஆனந்தன் அய்யா அவர்கள் தற்போது எதற்காக "இந்து தமிழீழம்" அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று கோரியுள்ளார்?
• "தமிழீழம்" என்னும் எந்தப் பிரிவினைக்கும் இந்தியா ஆதரவளிக்காது என்று உறுதியாக பல முறை தெரிவித்த பின்னரும் எதற்காக கவிஞர் காசி ஆனந்தன் அய்யா இவ்வாறு கோருகிறார்?
• தமிழீழத்திற்கு மட்டுமல்ல அதிகாரம் மிக்க சமஸ்டி தீர்வுக்கும்கூட இந்தியா வலியுறுத்தாத நிலையில் எதற்காக கவிஞர் காசி ஆனந்தன் அய்யா இப்படி கோருகிறார்?
• இந்தியா தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஆள்கையில் இலங்கையில் தமிழ்தேசிய இனத்திற்கு உதவி செய்யும் என்று கவிஞர் காசி ஆனந்தன் அய்யா எப்படி நம்புகிறார்?
• இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கு உதவி செய்துவரும் இந்திய அரசு தமிழீழம் அமைக்க உதவி செய்யும் என்று கவிஞர் காசி ஆனந்தன் அய்யா எப்படி நம்புகிறார்?
• தனது நாட்டு மீனவனைக் கொல்வதைக்கூட கண்டுகொள்ளாமல் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை செய்துவரும் இந்திய அரசு தமிழீழம் அமைய உதவும் என்று கவிஞர் காசி அனந்தன் அய்யா எப்படி எதிர்பார்க்கிறார்?
• இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு உதவி செய்யாத இந்திய அரசு ஈழத்தில் உள்ள தமிழ்மக்களுக்கு உதவும் என்று கவிஞர் காசி அனந்தன் அய்யா எப்படி நம்புகிறார்?
கவிஞர் காசி அனந்தன் அய்யா அவர்களே!
இலங்கை ராணுவம் கொலை பாலியல் வல்லுறவு செய்தபோது அதற்கு எதிராக கவிதைபாடிய நீங்கள் இந்திய ராணுவம் கொலை மற்றும் பாலியல் வல்லுறவு செய்தபோது ஒரு கவிதைகூட பாடாதது ஏன் என்று உங்களை நான் கேட்கப் போவதில்லை.
எங்களை எல்லாம் கவிதை பாடி தூண்டிவிட்டு நீங்கள் மட்டும் ஏன் இந்தியாவில் போய் இருந்துகொண்டீர்கள் என்று நான் உங்களை கேட்கப்போவதில்லை.
1977ல் எல்லோரும் ஒற்றுமையாக தமிழர்விடுதலைக் கூட்டணியில் நின்றபோது நீங்கள் மட்டும் எதற்காக தமிழரசுக்கட்சியில் இருந்து இராசதுரைக்கு எதிராக போட்டியிட்டீர்கள் என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை.
இலங்கை அரசுக்கு எதிராக புலி சீருடை அணிந்து போராடிய நீங்கள் இந்திய ராணுவத்திற்கு எதிராக சண்டை தொடங்கியவுடன் வள்ளம் எறி இந்தியாவுக்கு தப்பி சென்றது ஏன் என்று உங்களை நான் கேட்கப் போவதில்லை
மருத்தவபடிப்பிற்கு தேவையான புள்ளிகள் எடுத்தும் அகதி என்பதால் நந்தினிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உங்கள் மகள்கள் இருவரும் எப்படி மருத்துவம் படிக்க இந்திய அரசு அனுமதி தந்தது என்று உங்களை நான் கேட்கப் போவதில்லை
ஈழத் தமிழர்களுக்காக இந்து தமிழீழம் கேட்பதாக கூறும் நீங்கள் உங்கள் மகளுக்கு அனுமதி எடுத்ததுபோல் ஏன் அகதி மாணவி நந்தினிக்கு மருத்துவ கல்வி பெற உதவவில்லை என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை.
அப்பாவி அகதிகளை எல்லாம் பிடித்து சிறப்புமுகாமில் அடைக்கும் கியூ பிராஞ் பொலிஸ் புலிகள் சார்பாக ராஜீவ்காந்தியுடன் பேசிய உங்களை மட்டும் ஏன் சிறப்புமுகாமில் அடைக்கவில்லை என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை.
ஈழவேந்தன், சிவாஜிலிங்கம் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையே நாட்டைவிட்டு வெளியேற்றிய இந்தியஅரசு உங்களை மட்டும் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்து அரசியல்பேச எப்படி அனுமதிக்கின்றது என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை.
முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது ஏன் இந்திய அரசை கண்டிக்கவில்லை என்றோ அல்லது வயதான பெண்மணி என்றும் பாராமல் சிகிச்சை பெற வந்த பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு திருப்பி அனுப்பியபோது ஏன் மௌனமாக இருந்தீர்கள் என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை
இந்திய ஆக்கிரமிப்பை உணர்ந்த தமிழ் சிங்கள மக்கள் ஒன்றுபட்டு இந்திய அரசின் "எட்கா" ஒப்பந்தத்தை எதிர்க்கும் இவ் வேளையில் இதுவரை மௌனமாக இருந்த நீங்கள் இப்போது எதற்காக இந்திய அரசுக்கு ஆதரவாக கோரிக்கை வைக்கிறீர்கள் என்று நான் உங்களை கேட்கப்போவதில்லை
உங்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றேயொன்றுதான்.அது ,
• அகதிகளை பிடித்து அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் சிறப்புமுகாம்களை மூடும்படி உங்களால் கோர முடியாதது ஏன்?
• பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி உங்களால் அனைத்து தமிழக கட்சிகளிடமும் கோர முடியாதது ஏன்?
• சிறப்புமுகாம்களையே மூட விரும்பாத இந்திய அரசு இந்து தமிழீழம் அமைக்க விரும்புமா?

No comments:

Post a Comment