Tuesday, March 22, 2016

•தமிழினி யாருக்காக புத்தகம் எழுதியுள்ளார்?

•தமிழினி யாருக்காக புத்தகம் எழுதியுள்ளார்?
போராட்டம் குறித்த எழுத்துகள் நிறைய வரவேண்டும். போராட்டத்தின் தவறுகளை இனம் காண அவை உதவ வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பமாகும்.
ஆனால் தமிழினி தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. மாறாக இலங்கை இந்திய அரசுகளுக்கே அவை பெரிதும் உதவுகின்றன.
தமிழினி இலங்கை, இந்திய அரசுகளின் நலனுக்காகவே எழதியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
தமிழினி தனது புத்தகத்தில் ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்கிறார். இதனால் மக்களுக்கு அழிவு என்கிறார்.
தமிழினி ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அவருக்கு ஆயதப் போராட்டம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்திருக்கவில்லை.
தந்தை செல்வா தலைமையில் அகிம்சை வழியில் போராடி எந்தவித தீர்வும் கிடைக்காத படியால்தானே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் நியாயமானது என்பதால்தானே தமிழ் மக்கள் அதற்கு தமது பூரண ஆதரவை வழங்கினார்கள்.
பிரபாகரனின் பிடிவாதமே இத்தனை அழிவுக்கும் காரணம் என்கிறார். பிரபாகரன் விட்டுக்கொடுத்திருந்தால் சமாதானம் மலர்ந்திருக்கும் என்று அவர் எழுதியுள்ளார்.
சரி. இவர் சொல்வது உண்மை என்றால் பிரபாகரனும் அவரது புலிகள் இயக்கமும் இன்றி 7 வருடம் கழிந்து விட்டனவே. ஏன் சமாதானத்தையும் தீர்வையும் இலங்கை, இந்திய அரசுகள் தரவில்லை?
பிரபாகரன் விட்டுக்கொடுத்திருந்தால் தீர்வு வந்திருக்கும் என்றால் பிரபாகரன் இல்லாத இந்த 7 வருடத்தில் ஏன் எந்த தீர்வையும் கொண்டு வரவில்லை?
வர்க்கப் போராட்ட வரலாற்றில் வன்முறையின்றி எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று மாபெரும் ஆசான் லெனின் கூறுகிறார். ஆனால் வன்முறையின்றி தமிழ் மக்கள் தீர்வு பெற வேண்டும் என்று தமிழினி கூறுகிறார்.
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்று தோழர் மாஓ சேதுங் கூறுகிறார். அதாவது மக்கள் அமைதியை விரும்பினாலும் அரசுகள் மக்கள் மீது யுத்தத்தைத் திணிக்கின்றன என்று அவர் கூறுகிறார். ஆனால் தமிழினி மக்களை அமைதியாக இருக்கும்படி போதிக்கிறார்.
மக்கள் எந்த வடிவில் போராட வேண்டும் என்பதையோ அவர்கள் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதையோ மக்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக மக்கள்மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளே அவற்றை தீர்மானிக்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட தீர்மானிக்க கூடாது என்கிறார் தமிழினி.
சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் ஜே.வி.பி இயக்கமும் அதன் தலைமையும் 1989ல் அழிக்கப்பட்ட போது 60 ஆயிரம் சிங்கள மக்களும் அழிக்கப்பட்டார்கள். ஆனால் ஜே.வி.பி ல் யாருமே அதன்பின்பு ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்று கூறவில்லை.
சிங்கள மக்களைக் கொன்ற அதே இலங்கை ராணுவம்தான் தமிழ் மக்களையும் ஆயிரக் கணக்கில் கொன்றுள்ளது. ஆனால் தமிழினி ஆயுதப் போராட்டமே இத்தனை அழிவுக்கும் காரணம் என்று அது தேவையில்லை என்கிறார்.
1972ல் மன்னம்பேரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து அவரை நிர்வாணமாக வீதியில் இழுத்து சென்று இறுதியாக அவரது பெண் உறுப்பில் வெடிகுண்டை வெடிக்க வைத்துக் கொன்ற அதே இலங்கை ராணுவம்தான் முள்ளிவாய்க்காலிலும் தமிழ் பெண்களை பாலியல் வல்லறவு செய்து கொலை செய்தது.
ஆனால் படுகொலை செய்யப்பட்ட மன்னம்பேரியோ அல்லது ஜே.வி.பியில் போராடிய எந்த பெண்ணுமே ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறவில்லை. ஆனால் தமிழினி ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்கிறார்.
இன்றும்கூட இந்தியாவில் சதீஸ்கரில் பெண்கள் ஆயதம் ஏந்திப் போராடுகிறார்கள். அங்கு இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்கிறது. ஆனால் அந்த பெண்கள் தமிழினி போல் ஆயதப் போராட்டம் தவறு என்று கூறவில்லை
குர்திஸ் இன பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள். பாலஸ்தீன பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள். அவர்கள் யாருமே தமிழினி போல் ஆயுதப் போராட்டமே அழிவிற்கு காரணம் என்று கூறவில்லை
இழப்பின்றி புரட்சி இல்லை. சீனப் புரட்சி ரஸ்சியப் புரட்சி எதுவுமே இழப்பின்றி வெற்றி பெறப்படவில்லை.
26 வருடங்கள் போராடி பல்லாயிரம் மனித இழப்புகளின் பின்னரே வியட்நாம் விடுதலை பெற்றது.
எனவே ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்பதோ அன்றி ஆயுதப் போராட்டம் அழிவைக் கொடுக்கும் என்று கூறி அதை வேண்டாம் என்பதோ மக்களின் விடுதலைக்கு உதவப் போவதில்லை. மாறாக மக்கள் தொடர்ந்தும் அடிமையாக இருக்கவே துண செய்யும்.
தமிழினியின் கூற்று தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்க உதவவில்லை. மாறாக இலங்கை, இந்திய அரசுகள் மக்களை தொடர்ந்தும் அடிமையாக வைத்திருக்கவே துணை செய்கின்றன.
தமிழினி இலங்கை இந்திய அரசுகளின் நலன்களுக்காகவே புத்தகம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment