Tuesday, September 12, 2017

பிரசாந் ( Pirasanth Bro ) அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
10 hrs
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து இலங்கை வவுனியாவில் இருந்து பிரசாந் ( Pirasanth Bro ) அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
பாலன் தோழர் அவர்களால் எழுதப்பட்டு எம்மவர் கரங்களில் தவள இருக்கும் " ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" என்ற நூல் தொடர்பில் எனது விமர்சனத்தை முன் வைக்கிறேன்.
ஒரு போராளியாக தனது தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.
அந்த வகையில் " போராளிகள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல. இரத்தம் சிந்த வேண்டும் என்ற இலட்சியத்துடன் அலைபவர்களும் அல்ல. இரத்தம் இன்றி இழப்புமின்றி விடுதலை கிடைக்கும் என்றால் போராளிகளை விட மகிழ்ச்சியடைபவர்கள் வேறுயார் இருக்க முடியும்? " என்று கூறிச் செல்கின்றார்.
மேலும் உரிமை கிடைக்க வேண்டும் என்றால் அங்கு பலாத்காரத்தை ஓரளவேனும் பயன்படுத்த வேண்டும் என்று கூறிச்செல்வதுடன் இதற்கு உதாரணமாக கோழியையும் முட்டையையும் கூறுகின்றார்.
அங்கு பலாத்காரம் இல்லாவிட்டால் முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வருமா? என்று கூறுகிறார். இதற்கு பல உலக சம்பவங்களை எடுத்துக் காட்டுகின்றார்.
மேலும் போராட்டம் மக்கள் மயப்பட்ட வேண்டும் என்றும் யுத்த தந்திரங்கள் பலவற்றை கூறிச்செல்கிறார்.
எடுத்துக்காட்டாக மாவோ கூறிய " எதிரி முன்னேறும் போது நாம் பின்வாங்குவோம். எதிரி முகாமிடும்போது நாம் தொந்தரவு கொடுப்போம். எதிரி களைத்திருக்கும் போது நாம் தாக்குவோம். எதிரி பின்வாங்கும் போது நாம் துரத்துவோம்" என்பதைக் கூறலாம். மேலும் இது இந் நூலில் உள்ள ஒரு யுத்த தந்திரத்தின் ஒரு பருக்கையே.
ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் எமக்குள் உள்ள சாதீயம், தீண்டாமை, பிரதேச உணர்வுகளை நாம் தூர எறிந்துவிட்டு வடகிழக்கு மட்டுமன்றி மலையகம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழர்களும் ஈழத் தமிழராக ஓரணியில் திரள வேண்டும் என்ற நோக்கில் சற்றுக் கடுமையாக பல்வேறு ஆலோசனைகளை கூறிச் செல்கின்றார்.
இதனை இலங்கையில் சாதியம் தமிழர், சிங்களவர் மத்தியில் இருக்கிற போதிலும் வடக்கில் தீண்டாமை என்ற நாசமும் சேர்த்து இருக்கிறது" என்று கூறிச் செல்கின்றார்.
எதிர்காலத்திலும் இவ்வாறு பிரிவோமாகின் தமிழர் அழிவதை யாராலும் தடுக்க முடியாது என்ற வேதனை அவரின் மனதில் இருப்பதைக் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் நழுவல் போக்கினையும் , இரட்டை வேடத்தினையும் நடந்த சம்பவங்களினூடாக வெளிப்படையாகக் கூறிச்செல்கிறார்.
இதனை இந்திய மத்திய அரசு பாலஸ்தீன விடுதலையை, பங்களாதேஸ் விடுதலையை அங்கீகரித்த போதும் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்காது ஈழத்தை ஆக்கிரமிக்கும் வேலைகளையே செய்வதாக கூறிச்செல்வதனூடாகக் கண்டு கொள்ளலாம்.
மேலும் முதலாளித்துவ நாடுகளின் கபடத்தனமான செயல்பாடுகளை ஆதாரங்களுடன் பகிர்ந்துள்ளதுடன் அரச அடக்குமுறையினை கடுமையாக சாடியுள்ளதுடன் இதனை மாவோ கூறிய " அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது" என்ற எடுத்துக்காட்டையும் கூறிச் செல்கின்றார்.
மேலும் இந்திய அரசின் கபடத்தனமான தனது நலன்சார்ந்த நடவடிக்கைகளை ஈழத்தமிழரை காக்கிறேன் காக்கிறேன் என்ற மாயையினூடாக தமிழரின் வளங்களைச் சுரண்டும் வேலையினைச் சிறப்புடன் செய்வதனை பல உதாரணங்களினூடாகக் கூறிச் செல்கிறார்.
இதனை தோழர் தமிழரசனின் தீர்க்க தரிசன சிந்தனையுடன் ஒப்பு நோக்குகிறார்.
மேலும் தோழர் தமிழரசனின் வரலாற்றுப்பதிவுகளையும் கூறிச் செல்லும் நூலாகக் காணப்படுகிறது.
எனவே இந்த நூலின் வரவு என்பது இக்காலத்தில் இந்திய மத்திய அரசை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் அரசிவாதிகளுக்கும் விளிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று நம்புவதுடன் இதன் வரவு என்பது காலத்தின் கட்டாயதேவையாக இருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
நன்றி
த.பிரசாந்த்

No comments:

Post a Comment