Sunday, July 23, 2017

பிரேமானந்த சுவாமிகளும் சுவிஸ் குமாரும்!

•பிரேமானந்த சுவாமிகளும் சுவிஸ் குமாரும்!
பிரேமானந்தாசுவாமி திருச்சியில் ஆச்சிரமம் வைத்திருந்தார். அங்கு இருந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்தார்.
இதனை தட்டிக் கேட்ட இளைஞர் ஒருவரை சித்திரவதை செய்து கொன்று புதைத்தார். நோயினால் இறந்ததாக இளைஞனின் பெற்றோர்களிடம் பொய் கூறினார்.
இறுதியில் இவரின் கொடுமைகள் பொறுக்க முடியாத இளம் பெண் ஒருவர் ஆச்சிரமத்தில் இருந்து தப்பியோடி சென்னையில் கம்யுனிஸ்ட் கட்சி மாதர் சங்கத்திடம் சரண் அடைந்தார்.
மாதர்சங்கம் அப் பெண்ணை அழைத்து சென்று வழக்கும்போடும்படி கேட்டபோது பொலிஸ் அதிகாரிகள் தயங்கினர்.
ஏனென்றால் அப்போது பிரேமானந்த சுவாமி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.
சசிகலாவுக்கு நள்ளிரவு நிர்வாண பூசை நடத்தியவர் என்றும் சசிகலாவின் ஊழல் பணம் இவரிடமே உள்ளது என்றும் அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
எனினும் மாதர் சங்கத்தின் போராட்டத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரேமானந்தசுவாமி தனது அரசியல் செல்வாக்கு காரணமாக பொலிஸ் அதிகாரிகளையே மிரட்டினார்.
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா என்று சம்பளம் பேசி ராம்ஜெத்மலானி என்ற பிரபல வழக்றிஞரை தனக்காக நியமித்தார்.
வழக்கு விசாரணையின் போது சாட்சிகளை விலைக்கு வாங்கினார். விலைக்கு வாங்க முடியாதவர்களை தமது அடியாட்கள் மூலம் மிரட்டினார்.
வழக்கை விசாரித்த பெண் நீதிபதியையே விலைக்கு வாங்க முயன்றார். எனினும் இறுதியில் இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது.
செசன்ஸ்கோட்டில் வழங்கிய இத் தீர்ப்பையே பின்னர் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தின.
இறுதியில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பிரேமானந்த சுவாமி கடலூர் சிறையிலேயே மரணமடைந்துவிட்டார்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் பிரேமானந்தாவின் பணம் பல மட்;டங்களில் பாய்ந்தாலும் மாதர்சங்க பெண்களின் உறுதியான போராட்டமே நீதி கிடைக்க வழி செய்தது.
இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வோடு இருக்க ஊடகங்களும் பெரிதும் துணை புரிந்தன.
இப்போது வித்யா வழக்கில் எதிரியான சுவிஸ் குமாரின் பணமும் பல உயர் மட்டங்களில் பாய்கிறது.
எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொல்லப்பட்ட வித்யாவுக்குரிய நீதியை பெற முடியும்.
சுவிஸ் குமாருக்காக ஒரு சட்டப் பேராசிரியரே பொய் சாட்சி சொல்ல முனைந்து அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஒரு உயர் பொலிஸ் அதிகாரி சுவிஸ்குமாரை காப்பாற்ற முயன்று நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளார்.
சில சாட்சிகள் பல்டி அடிக்கின்றனர். சில சாட்சிகள் நீதிமன்றத்திற்கு ஆஜராகாததால் வாரணட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திலேயே வித்யாவின் தாயார் எதிரிகளால் மிரட்டப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்களைக்கூட எதிரிகள் நீதிமன்ற வளாகத்தில் மிரட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் வித்யாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட இந்த வழக்கின் தீர்ப்பே எதிர்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
இல்லையேல் பணம் உள்ளவன் எல்லாம் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றுவிட்டு அதனை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
பிரேமானந்தாசுவாமி காமவெறியினால் தன் சீடர்களையே பாலியல் வல்லுறவு செய்தார். ஆனால் சுவிஸ் குமார் பிரோமானந்த சுவாமிகளைவிட பயங்கரமானவன்.
ஏனெனில் இவரின் வெளிநாட்டு வியாபாரத்திற்காக அப்பாவி ஏழை வித்யாக்கள் பலியாகின்றனர்.

No comments:

Post a Comment