Friday, September 27, 2019

•“தற்கொலைகள்” குறித்து

•“தற்கொலைகள்” குறித்து
ஏன் அரசு அக்கறை கொள்வதில்லை?
என் வாழ்வில் தற்கொலை செய்த பலரின் உடல்களை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாராவது பார்த்திருந்தால் இவர்களை தற்கொலை செய்யவிடாமல் தடுத்திருப்பார்களே என்று எண்ணுவதுண்டு.
அவ்வாறு எண்ணிய என் கண் முன்னாலேயே ஒருவர் தற்கொலை செய்தபோது அதை தடுக்க முடியாமல் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் ஒன்று மதுரை சிறையில் நடந்தது.
திண்டுக்கல்லை சேர்ந்த மாணிக்கம் என்பவர் டவரில் எறி நின்றுகொண்டு எம்.ஜி.அர் வந்து தன்னைப் பார்த்தால்தான் இறங்குவேன் என்று அடம்பிடித்திருக்கிறார்.
“எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். இறங்கி வா பார்க்கலாம்” என்று பொய் கூறி ஒருவாறு அவரை டவரில் இருந்து இறக்கிய பொலிசார் அவருக்கு மெண்டல் எனக்கூறி மதுரை சிறையில் அடைத்து விட்டனர்.
அன்றில் இருந்து அவரை எல்லோரும் “டவர் மாணிக்கம்” என்றே அழைத்தனர். சிறையில் அவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் சிறையில் அவர் எந்த பிரச்சனையும் இன்றி நல்லபடியாகவே நடந்து கொண்டார்.
சிறையில் சிறைவாசிகளுக்கு ஒவ்வொரு வாரமும் சோப்பும் நல்லெண்ணையும் வழங்கப்படும். தனக்கு தரவில்லை என்று கோபம் கொண்ட டவர் மாணிக்கம் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த செல் இன் முன்னால் உள்ள உயரமான மரத்தில் ஏறிவிட்டார்.
ஜெயிலர் வந்து “ எல்லாம் தரலாம். இறங்கி வா” என்று கூறியும் அவர் இறங்க மறுத்துவிட்டார். “சுப்பிரண்டன் வந்து சொன்னால்தான் இறங்குவேன்” என்று அவர் கூறினார்.
சுப்பிரண்டன் பெயர் ராஜ்குமார். அவர் அப்போதுதான் மதுரை சிறைக்கு மாற்றம் பெற்று வந்திருந்தார். ஜெயிலர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சுப்பிரண்டன் வர மறுத்துவிட்டார்.
“ஒரு மெண்டலுக்கு இப்ப வந்தால் அப்புறம் எல்லாம் மெண்டலும் இதேமாதிரி மரத்தில் எறி நின்றுகொண்டு வா என்பார்கள். அப்புறம் ஒரு சுப்பிரண்டனுக்கு என்ன மரியாதை? என்பது அவர் பதிலாக இருந்தது.
அவரைப் பொறுத்தவரையில் மரத்தில் ஏறியவன் கொஞ்ச நேரம் கழித்து தானாகவே இறங்கி வந்துடுவான் என்று நினைத்திருந்தார் போலும்.
ஆனால் டவர் மாணிக்கம் இறங்கி வரவில்லை. மாறாக கொஞ்ச நேரம் கழித்து மரத்தில் இருந்து விழுந்தார். மிக உயரமான மரம் என்பதால் அவர் உடனே இறந்தும் விட்டார்.
என் கண் முன்னே நடந்த தற்கொலை இது. இதற்கு காரணமான சிறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பினேன். அதேபோல் அரசும் நடவடிக்கை எடுத்தது. அதிகாரி மீது அல்ல. மாறாக அவர் ஏறிய மரத்தை தறித்து நடவடிக்கை எடுத்தார்கள்.
“தற்கொலை செய்வது கோழைத்தனம். கடைசிவரை எதிர்த்து நின்று முயற்சி செய்ய வேண்டும்” என சிறுவயது முதல் எமக்கு போதிக்கப்படுகிறது.
இருப்பினும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
புலிகள் இயக்கம் தற்கொலை தாக்குதல் செய்தபோது அதனை இலங்கை அரசு முதல் ஜ.நா வரை அனைவரும் கண்டித்தனர்.
ஆனால் இன்று வருடத்திற்கு சுமார் 3000 பேர் இலங்கையில் தற்கொலை செய்கின்றனர்.
இது குறித்து இலங்கை அரசும் கவலைப்படவில்லை. ஜ.நா வும் அக்கறை கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு இலங்கையில் 2586 ஆண்களும் 677 பெண்களும் தற்கொலை செய்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யுத்த காலத்தில்கூட இந்தளவு தற்கொலைகள் நடக்கவில்லை. இன்று இது அதிகரித்துள்ளது.
யுத்தம் முடிந்தால் பாலும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் மாறாக மக்கள் தற்கொலை செய்வதுதான் அதிகரித்துள்ளது.
ஒருகாலத்தில் கல்வியில் முதன்மை மாவட்டமாக இருந்த யாழ் மாவட்டம் இன்று அதிகளவு சாராயம் விற்ற மாவட்டமாக விளங்குகின்றது.
கேரளாவில் இருந்து கஞ்சா போதைவஸ்து மூட்டை மூட்டையாக தினமும் வந்து யாழ்ப்பாணத்தில் இறங்குகிறது.
புலிகளுக்கு வந்த ஆயுதக் கப்பல்களை மடக்கி பிடித்த இலங்கை இந்திய அரசுகளால் போதைவஸ்து கடத்தும் வள்ளங்களை பிடிக்க முடியவில்லையாம்.
உண்மையில் அரசியல்வாதிகள் தங்களது சலுகைகள்மீது அக்கறை கொள்கினறனரேயொழிய மக்கள் நலன் மீது அக்கறை கொள்வதில்லை.
இதில் இலங்கை ஆட்சியாளர் மீது முழு குற்றத்தையும் சுமத்திவிட முடியாது. எமது தமிழ் தலைவர்களுக்கும் பங்கு , பொறுப்பு இருக்கிறது.
எமது தமிழ் தலைவர்கள் தமக்கு சொகுசு வாகனம் கேட்கும் அக்கறையில் ஒருசத வீதத்தைக்கூட மக்கள் நலனுக்காக கேட்பதில் காட்டுவதில்லை.
குறிப்பு- 10.09.2019 தற்கொலை செய்து கொள்வதினை தடுப்பது தொடர்பிலான சர்வதேச தினமாகும்.

No comments:

Post a Comment