Sunday, December 20, 2020

பதிவு செய்யாத கட்சியை தடை செய்ய முடியுமா?

•பதிவு செய்யாத கட்சியை தடை செய்ய முடியுமா? சுகாதார அமைச்சர் மந்திரித்த குடத்தை ஆற்றில் போட்டுப் பார்த்தார். பயன் இல்லை. கொரோனோ நோய்க்கு என்று ஒரு அமைச்சரை நியமித்து பார்த்தார்கள். பயன் இல்லை. என்ன செய்தும் கொரோனோவை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறைக்குள்ளேயே நாலு பேரை சுட்டுக் கொல்லும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. மக்களுக்கு வேலை இல்லை. அரச நிவாரணம் இல்லை. அதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகளை ஏற்க மக்கள் மறுக்கிறார்கள். அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் பொறுப்புவாய்ந்த அமைச்சரோ தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பேசுகிறார். தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்வதன் மூலம் கொரோனோவை எப்படி ஒழிக்க முடியும் என்று ஒரு அரசியல்வாதிகூட கேள்வி எழுப்பவில்லை. அதுமட்டுமன்றி தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எனவே பதிவு செய்யப்படாத கட்சியை எப்படி தடை செய்யப் போகிறார்கள் என்றும் புரியவில்லை. போராடும் சிங்கள மக்களின் கவனத்தை திருப்பி ஏமாற்றுவதற்காகவே இந்த மாதிரி இனவாதக் கருத்தை அந்த அமைச்சர் கூறியிருக்கிறார். இந்த உண்மை சாதாரண மக்களுக்கே நன்கு புரியக்கூடியது. எனவே தன்னை சாணக்கியன் என்று நம்பும் சம்பந்தர் ஐயா “ முதலில் கொரோனோவை ஒழியுங்கள். அப்புறம் தமிழ்தேசியகூட்டமைப்பை தடை செய்யலாம்” என கூறியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தர் ஐயாவும் “தமிழ்தேசிய கூட்டமைப்ரைப யாராலும் தடை செய்ய முடியாது” என்று பதில் கூறி அமைசரின் பேச்சுக்கு எண்ணெய் ஊற்றியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும்படி டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர்; கேட்டு கேட்டு களைத்துவிட்டனர். தமிழரசுக்கட்சி தலைவர்களான மாவை சேனாதிராசாவும் சம்பந்தர் ஐயாவுமே தமிழ்தேசிய கூட்டமைப்பபை பதிவு செய்ய தடை போட்டு வருகிறார்கள். இவ்வாறு தமிழ்தேசியகூட்டமைப்பை பதிவு செய்யவே விரும்பாத ஒத்துழைக்காத சம்பந்தர் ஐயா இப்போது யாராலும் தடை செய்ய முடியாது என்று வீரம் பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே. ஏமாறுவதற்கு மக்கள் இருக்கும்வரை இந்த அரசியல்வாதிகள் மாறி மாறி இனவாதம் பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

No comments:

Post a Comment