Tuesday, December 19, 2023

ஈழம் வேறு. தமிழீழம் வேறு.

ஈழம் வேறு. தமிழீழம் வேறு. இரண்டும் ஒன்றே என்று சிலர் நினைப்பது தவறு. இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம். தமிழர் பிரிவினை கோரிய பகுதி தமிழீழம். இப்போது சிங்கள அரசும் இந்திய அரசும் ஈழம் என்ற சொல்லை முற்றாக ஒழிக்க முயலுகின்றன. ஈரோஸ் மற்றும் இபிஆர்எல்எவ் இயக்கம் கோரிய ஈழம் என்பது இவற்றைவிட வித்தியாசமானது. இது குறித்து ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபா அவர்களுடன் நடத்திய ஒரு உரையாடலை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 1982ம் ஆண்டு எமது தோழர் செல்லப்பா நாகராசா ( வாத்தி) அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். அவர் அப்போது சென்னையில் அடையாறு இந்திரா நகரில் தங்கியிருந்தார். அங்கு சில நாட்கள தங்கியிருந்தபோது லண்டனில் இருக்கும் தனது தோழர்களுடன் ரெலிபோனில் கதைப்பதற்காக நாபா வருவதுண்டு. லண்டனில் இருந்து வரும் ரெலிபோன் அழைப்பு நள்ளிரவில்தான் வரும் என்பதால் அதுவரை நாபாவிற்கு பேச்சு துணையாக நான் பேசிக் கொண்டிருப்பதுண்டு. அப்போதுதான் இந்த உரையாடல் நடைபெற்றது. நான் - EPRLF , EROSS இரண்டும் ஒரே கொள்கைதானே. அப்படியிருக்கையில் நீங்கள் எதற்காக EROSS லிருந்து பிரிந்தீர்கள்? நாபா - EROSS இன் தலைமை லண்டனில் இருக்கிறது. அதனால் நாம் பிரிந்தோம். நான் - அப்படியென்றால் EPRLF தலைமை நீங்கள் இந்தியாவில் இருப்பது சரியா? நாபா – ஆம். அது தவறுதான். விரைவில் இலங்கை சென்று அங்கிருந்து பணி செய்வேன். நான் - மற்ற இயக்கங்கள் கோரும் தமிழீழத்திற்கும் நீங்கள் கோரும் ஈழத்திற்கும் என்ன வித்தியாசம்? நாபா – மற்ற இயக்கங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளை மட்டும் கோருகின்றனர். நாம் மலையகத்தையும் சேர்த்து கோருகின்றோம். நான் - மலையக பகுதிக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடைப்பட்ட சிங்கள பகுதியையும் சேர்த்து நீங்கள் கோருவது சரியா? நாபா – அதற்காகத்தான் மலையகத்தில் பாதி பகுதியை சிங்களவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறோம். அதற்கு பதிலாக சிங்கள பகுதியான இங்கினியாக்கல பகுதிகளை நாம் எடுத்துக்கொள்கிறோம். நான். - இப்படி ஒரு மக்களின் பகுதிளை விட்டுக் கொடுக்கவும் இன்னொரு மக்களின் பகுதிகளை சேர்க்கவும் உங்களுக்கு அந்த மக்கள் அதிகாரம் தந்தனரா? அல்லது அந்த மக்களிடம் கேட்டீர்களா? நாபா – மௌனம்.

No comments:

Post a Comment