Tuesday, December 19, 2023

அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு.

அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு. குடியுரிமை உள்ளபடியால்தான் அவரால் இலங்கை கடவுச்சீட்டு பெற முடிந்தது. இலங்கை கடவுச்சீட்டு இருந்தபடியால்தான் அவரால் இந்திய விசா பெற்று விமானம் மூலம் இந்தியா சென்று சரிகமப நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தது. இதை உணர்ந்துகொள்ள முடியாத நடிகர் சத்யராஜ் அவர்கள் அசானிக்கு மட்டுமல்ல இலங்கையில் மலையக தமிழர் எவருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார். உண்மை என்னவெனில் இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை. அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையில் மலையக தமிழர் விரும்பிய கல்வி கற்க முடியும். அரச வேலை பெற முடியும். அவர்கள் அமைச்சராகவும் கவர்னராகவும் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் உரிய புள்ளி எடுத்தாலும் மருத்துவ கல்வி கற்க முடியாது. அரச வேலை பெற முடியாது. அமைச்சராகவோ கவர்னராகவோ வர முடியாது. இலங்கை அரசுக்கு மனசாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும். ஆச்சரியம் என்னவெனில் மலையக தமிழருக்கு குடியுரிமை உண்டு என்பது சத்யராஜ்க்கு தெரியவில்லை என்பதைவிட அந்த நிகழ்வில் பங்குபற்றிய யாருக்குமே தெரியவில்லையா என்பதுதான். இதுகூடப் பரவாயில்லை. 1984ல் மதுரை மருத்துவமனையில் ஒரு மருத்துவர் என்னிடம் இலங்கையில் இருந்து பஸ்சில் வந்தீர்களா அல்லது ரயிலில் வந்தீர்களா என கேட்டார். அவருக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல் இருக்கிறது என்பதுகூட தெரியவில்லை. இது உண்மையில் அவர்கள் தவுறு இல்லை. இத்தனை நாளாக நாம் இன்னும் எமது பிரச்சனைகளை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கவில்லை என்பது எமது தவறே.

No comments:

Post a Comment