Saturday, August 31, 2024

ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது

ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது, “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. உனக்கு சில எலும்பு துண்டு தருகிறேன்” நரி ஒரு செம்மறி ஆட்டிடம் சென்று சொன்னது “சிங்கம் உன் பிரச்னை எல்லாம் தீர்த்து உனக்கும் முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது” செம்மறி ஆடும் நரியை நம்பி சென்றது. செம்மறி ஆட்டைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் செம்மறி ஆட்டின் காதுகள் அறுபட்டாலும், அது தப்பித்து விட்டது. செம்மறி ஆடு நரியிடம் சொன்னது: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது” அதற்கு நரி சொன்னது: “சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்” செம்மறி ஆட்டுக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் செம்மறி ஆட்டைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: “நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது” நரி சொன்னது: “நீ அரியாசனத்தில் வசதியாக அமர வேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்” நரி செம்மறி ஆட்டை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் செம்மறி ஆட்டை பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: “பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப செம்மறி ஆட்டை அழைத்து வந்துவிட்டாயே. போய் செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா” நரி செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது. நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: “மூளை எங்கே?” நரி பதிலளித்தது: “அந்த செம்மறி ஆட்டுக்கு மூளை இல்லை, மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?” குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂

No comments:

Post a Comment